பார்ப்பனத் தலைமை - உரையாடல்களுக்கான சில குறிப்புகள்

நீதிக்கட்சி என்றழைக்கப்பட்ட தென்னிந்தியநலவுரிமைச்சங்கம் வெறுமனே மிட்டாமிராசுதாரர்களின் அமைப்பாக மாறியபிறகு அதை மக்கள் இயக்கமாக மாற்றிய பெரியார் தன்னுடைய அமைப்புகளாகிய சுயமரியாதை இயக்கம் மற்றும் திராவிடர்கழகம் ஆகியவற்றில் பார்ப்பனர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்ளவில்லை. தன்னுடைய இயக்கத்தைப் பார்ப்பனரல்லாதார் இயக்கம் என்று அறிவித்தே நடத்திவந்தார்.

ஆனால் பெரியாரிடமிருந்து பிரிந்த அண்ணாதுரை இந்த நிலைப்பாட்டைக் கைவிட்டார். மேலும் தான் எதிர்ப்பது 'பிராமணியத்தையே' தவிர 'பிராமணர்களை' அல்ல என்றார். இந்த சந்தர்ப்பவாத நிலைப்பாட்டின் உச்சமாக ஒரு பார்ப்பனரே திராவிட இயக்கமொன்றின் தலைமைப்பொறுப்பிற்கு வந்தார். எனவே திராவிட இயக்கம் என்பது அடிப்படையில் பார்ப்பனல்லாதோர் இயக்கமல்ல. பெரியார் இயக்கம் மட்டுமே பார்ப்பனரல்லாதோர் இயக்கம். முதலில் இந்தப் புரிதல் அவசியம்.

பெரியார் பவுத்தத்தில் நாகார்ஜுனன் என்னும் பார்ப்பனரின் ஊடுருவலைக் காரணம் காட்டியே தன்னுடைய அமைப்பில் பார்ப்பனர்களை விலக்கிவைத்தார். பார்ப்பனர் எதிர்ப்பு என்னும் நிலைப்பாடுகொண்ட பெரியார் பார்ப்பன வெறுப்பாளராகச் செயல்பட்டவரில்லை.

இப்போது பார்ப்பனத் தலைமை என்னும் விஷயத்திற்கு வருவோம். திராவிடக்கட்சிகள் எவற்றிலும் பார்ப்பனர்கள் உறுப்பினர்களாகச் சேர்க்கப்படுவதோ அல்லது தலைமைக்கு வருவதோ தடைசெய்யப்படவில்லை. மேலும் இந்தியச் சாதிய சமூகத்தில் ஆதிக்கத்தின் உச்சியில் இருக்கும் பார்ப்பனர்களை எதிர்ப்பதும் விலக்கிவைப்பது என்பதும் தவிர்க்கமுடியாதது. பார்ப்பனரல்லாதார் அனைத்துப் பார்ப்பனர்களையும் தலித்துகள் அனைத்துத் தலித்தல்லாதாரையும் அய்யத்துக்குட்படுத்துவதும் தவிர்க்கமுடியாதது.

சரி, ம.க.இ.க தோழர்களின் விவாதத்திற்கு வருவோம்.பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களை விலக்கிவைப்பது என்பது பிறப்பின் அடிப்படையில் பார்க்கக்கூடிய வருணாசிரமப் பார்ப்பனீயப் பார்வைதானே என்பது அவர்களின் வாதம். பிறப்பினடிப்படையில் சாதிகளாகப் பிரிந்திருக்கும் சமூகம் அதே பிறப்பின் அடிப்படையில் அமைப்பாவதும், தனது பிறப்பை அடிப்படையாக வைத்துச் சில உரிமைகளுக்காக வாதாடுவதும் தவிர்க்கமுடியாதது. இட ஒதுக்கீடு என்பது இந்த அடிப்படையிலேயே நியாயப்படுத்தப்படுகிறது என்பதைத் தோழர்கள் அறிவார்கள்.

சில ஆண்டுகளுக்கு முன்பு ம.க.இ.க 'தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் சாதிகளுக்கு இட ஒதுக்கீட்டை ரத்துசெய்ய வேண்டும்' என்னும் நிலைப்பாட்டை முன்வைத்தது. அது சரியா, தவறா என்னும் விவாதத்திற்குள் இப்போது போகவில்லை. ஆனால் அவர்களுடைய நிலைப்பாட்டின்படியே தீண்டாமையைக் கடைப்பிடிக்கும் தேவர்சமூகத்திற்கு இடஒதுக்கீடு ரத்துசெய்யப்படுகிறது என்று வைத்துக்கொள்வோம். அதே தேவர் சமூகத்தில் பிறந்த ஒரு இடதுசாரிச்சிந்தனையாளருக்கும் பிறப்பைக் காரணம் காட்டியே இட ஒதுக்கீடு மறுக்கப்படுகிறது. இதை பிறப்பின் அடிப்படையிலான பார்ப்பனீயச் சிந்தனைதான் என்று சொல்லமுடியுமா?

இன்னொருபுறம் பார்ப்பன்ரல்லாத தலைமைகளே யோக்கியமான தலைமைகள் என்றும் சொல்லிவிடமுடியாது. திராவிடர்கழகங்களைப் போலவே பா.ம.கவும் பார்ப்பனர்களை உறுப்பினர்களாகச் சேர்த்துக்கொள்வதில்லை. ஆனால் பா.ம.க. இந்துத்துவக்கட்சிகளுடன் கூட்டமைத்துக்கொண்ட மற்றும் தலித்விரோத, தமிழ்த்தேசியப் பாவனையில் ஆணாதிக்க நிலைப்பாட்டை எடுத்ததையும் நாமறிவோம்.


மய்யநீரோட்டக் கட்சிகளையே விட்டுவிடுவோம். பெரியார்வழி வந்தவராகச் சிலரால் முன்நிறுத்தப்படும் வே.ஆனைமுத்துவை எடுத்துக்கொள்வோம். அவர் ஒரு நூலில் தன்னுடைய வாழ்க்கைக்குறிப்பில் தான் வன்னியர்சங்கத்தில் செயற்பட்டதைப் பெருமையாகப் போட்டுக்கொள்வார். சமீபத்தில் அவருக்கு நடத்தப்படட் பாராட்டுவிழாவில் வன்னியத்தலைவர் ஜெகத்ரட்சன் சார்பில் அவருக்குக் காசோலை அளிக்கப்பட்டது. இப்படிப் பல உதாரணங்களைச் சொல்லலாம்.

பெரியாரை அடுத்தகட்டத்திற்கு நகர்த்தும் பெரியார்திராவிடர்கழகத்தோழர்கள் கொளத்தூர்மணி, விடுதலைராசேந்திரன் போன்றோரும்கூட சமயங்களில் ம.க.இ.க மேடைகளில் பேசத்தயங்குவதில்லை.சங்கராச்சாரியார் விவகாரம், தில்லைக்கோயிலில் தேவாரம் ஓதுவது, பெரியார்சிலை உடைப்புப்பிரச்சினை ஆகியவற்றில் இரு இயக்கத்தோழர்களும் பலசந்தர்ப்பங்களில் இணைந்துபோராடுகின்றனர், மேடைகளைப் பகிர்ந்துகொள்கின்றனர். ம.க.இ.க பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகியவற்றில் உறுதியாக இருந்து தெருச்சண்டை போட்டு போலீசு நெருக்கடி உட்படப் பலவற்றையும் சந்தித்திருக்கிறது என்பதையும் கணக்கிலெடுத்துக்கொண்டே அதன்மீதான விமர்சனங்களை முன்வைப்பதே பொறுப்புவாய்ந்த செயலாகும். . எனவே பெரியார் இயக்கமாக இருந்தாலும் திராவிடக்கட்சிகளாக இருந்தாலும் முன்வைக்கப்படும் விமர்சனங்களை விமர்சனப்பூர்வமாக எதிர்கொள்ளவேண்டுமே தவிர விமர்சனங்களுக்கு முகங்கொடுக்காமல் வெறுமனே 'பார்ப்பனத்தலைமை' என்று பழிபோட்டுவிட்டு ஓடுவதும், 'பார்ப்பன எதிர்ப்பு' என்னும் கருத்தியல் ஆயதத்தைத் தங்கள் தவறுகளை மூடிமறைக்கப் பயன்படுத்துவதும் பெரியாரின் மொழியிலேயே சொல்வதாயிருந்தால் அறிவுநாணயமாகாது.

20 உரையாட வந்தவர்கள்:

  1. thiagu1973 said...

    மிக நல்ல பதிவு சுகுணா அவர்களே

  2. சந்திப்பு said...

    சுகுனா பெரியாரே பல கட்டங்களில் பார்ப்பனர்களோடு சமரசம் செய்துக் கொண்டுள்ளார் என்பதை பலரும் மறந்து விடுகின்றனர். உதாரணமாக. ராஜாஜி குறித்து அவர் கூறும் போது. அச்சாரியார் பார்ப்பனராக இருந்தாலும் அறிவாளி என புகழ்ந்துரைத்துள்ளார். எதற்காக? தற்போது பெரியார் திடல் இருந்த இடத்தை ராஜாஜி முதல்வராக இருந்த போது பெறுதற்காக என்று விமர்சிக்கப்படுகிறது. இங்கே விவாதிக்க வேண்டிய விசயம் என்னவாக இருக்கலாம் என்றால் பார்பனத் தலைமையா? பார்ப்பனர் அல்லாத தலைமையா என்பதல்ல பிரச்சினை? எந்த வர்க்கத்திற்கு ஆதரவாக இவர்கள் செயல்படுகிறார்கள். எந்த வர்க்கத்தோடு கூட்டு வைத்துக் கொள்கிறார்கள். எந்த வர்க்கத்தின் நலனை முன்னிறுத்துகிறார்கள் என்று விவாதித்தார் பல உண்மைகள் நாட்டுக்கு வெளிச்சம் போட்டு காட்டும். தி.க. வீரமணி உட்பட தன்னுடைய வர்க்க நலனை ஒளித்துக் கொள்ள சி.பி.ஐ.(எம்) மீது கூட இதுபோன்ற அவததூறை ஒருமுறை கட்டவிழ்த்து விட்டுள்ளார். அதாவது சி.பி.ஐ.(மனுதர்மா) என்று. அவர் சொல்லி விடுவதால் மட்டும் அது அந்த நிலைக்குப் போகப்போவதில்லை. இதுதான் பிரச்சினையே. இங்கே ம.க.இ.க. பற்றி விவாதிப்பதில் முதன்மையான விசயம் என்ன? முதலில் அது ஒரு இயக்கம் அல்ல. அது கலை இலக்கிய அமைப்பு. கம்யூனிச அமைப்பு அல்ல. இந்த கலை - இலக்கிய அமைப்பு அரசியல் கட்சி போல் அனைவர் மீதும் சேறு வாரி பூசுகிறது. இதனை இவர்கள் கம்யூனிசம் என்று தண்டாரோ தட்டுகிறார்கள். புரட்சி என்று வீராவேசம் காட்டுகிறார்கள். (இந்த புரட்சியாளர்கள் தன்னுடைய கட்சியின் பெயரை வெளியே சொல்லுவதே இல்லை. அதன் பெயரில் எந்த இயக்கமும் நடத்துவதே இல்லை.) மொத்தத்தில் இவர்களது செயல்பாடு என்பது உழைக்கும் வர்க்க ஒற்றுமையை சீர்குலைக்கும் தன்மைக் கொண்ட மனுதர்ம பார்வை கொண்டது என்று வேணும் ஆனால் விமர்சிக்கலாம்.

  3. குரல்கள் said...

    பாம்பும் சாகாமல் தடியும் நோகாமல் எழுதும் நிலை சுகுணா திவாகருக்கும் வந்தது தான் இந்த விவாதப்போக்கில் நடக்கும் மிகப்பெரிய காமடி

    //ம.க.இ.க தோழர்களின் விவாதத்திற்கு வருவோம்.பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களை விலக்கிவைப்பது என்பது பிறப்பின் அடிப்படையில் பார்க்கக்கூடிய வருணாசிரமப் பார்ப்பனீயப் பார்வைதானே என்பது அவர்களின் வாதம். பிறப்பினடிப்படையில் சாதிகளாகப் பிரிந்திருக்கும் சமூகம் அதே பிறப்பின் அடிப்படையில் அமைப்பாவதும், தனது பிறப்பை அடிப்படையாக வைத்துச் சில உரிமைகளுக்காக வாதாடுவதும் தவிர்க்கமுடியாதது. இட ஒதுக்கீடு என்பது இந்த அடிப்படையிலேயே நியாயப்படுத்தப்படுகிறது என்பதைத் தோழர்கள் அறிவார்கள்.//

    மிகச்சிறந்த திசைதிருப்பல்.
    "பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களை விலக்கிவைப்பது என்பது பிறப்பின் அடிப்படையில் பார்க்கக்கூடிய வருணாசிரமப் பார்ப்பனீயப் பார்வைதானே என்பது அவர்களின் வாதம்" - மேற்படி வாதம் தனது பார்ப்பனத் தன்மையை தூக்கிஎறிந்து விட்டு பார்ப்பனியத்தை எதிர்க்க களத்தில் முன்னனியில் நிற்கும் ஒரு நபரை அவரது பிறப்பினடிப்படையில் வித்தியாசப்படுத்தி சேறடிக்க முற்பட்டதை எதிர்த்து வைக்கப்பட்டது.. ஒட்டுமொத்தமாக பார்ப்பன சமூகத்தைக் கணக்கில் கொண்டு சொல்லப்பட்டதல்ல..

    இப்படி படு கேவலமாக திசை திருப்ப வேண்டிய ஒரு பரிதாபகரமான நிலைக்குப் போகவேண்டிய கட்டாயம் சுகுனாதிவாகருக்கும் ஏற்பட்டது வருந்தத்தக்கதே

  4. மிதக்கும்வெளி said...

    தோழர், சந்திப்பு

    பெரியார் எப்போதும் பார்ப்பனர்களோடு சமரசம் செய்துகொண்டவரல்ல. அதற்கான தேவையும் அவருக்கிருந்ததில்லை. மேலும் அவரது அமைப்பு ஒரு தேர்தல் சார்ந்த அரசியல் இயக்கமுமல்ல. ராஜாஜியை எப்போது பெரியார் பாராட்டினார் என்று குறிப்பிடுகிறீர்கள் என்று தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அதில் ஒரு தவறும் இருப்பதாகத் தோன்றவில்லை. ஒரு பார்ப்பனர் அறிவாளியாக இருக்கக்கூடாது என்பதில்லை. ராஜாஜியைப் பொறுத்தவரை தேசியவாதிகளே அவரை மூதறிஞர் என்று பாராட்டிவந்தனர். பெரியார் அவரைக் கடுமையாக விமர்சிக்கவே செய்தார். ஆனால் அவர்களிருவருக்குமான தனிப்பட்ட நட்பு தொடர்ந்தே வந்தது என்பது பலரும் அறிந்த ஒன்றுதான். அண்ணா அவர்கள்தான் ஆரம்பத்தில் ராஜாஜியைக் கடுமையாக விமர்சித்துப் பிறகு அவரோடு தேர்தல் கூட்டணி ஏற்படுத்திக்கொண்டு அவரைப் புகழ்ந்தார். பெரியார் திடலை பெரியார் என்ன ராஜாஜியிடமிருந்தா வாங்கினார்? பேசப்படுகிறது, சொல்லப்படுகிறது என்று சொல்வதற்குமுன் அதற்கான ஆதாரங்கள் என்ன என்பதைத் தயவுசெய்து தேட முயலுங்கள் தோழர். வர்க்கப்பிரச்சினை பற்றி நாம் பேசலாம். ஆனால் சி.பி.எம் வர்க்கப்பிரச்சினையை முன்னெடுக்கும் ஒரு கம்யூனிஸ்ட் கட்சி என்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. சி.பி.எம்மா ம.க.இ.கவா என்று ஒரு தட்டையான கேள்வி முன்வைக்கப்பட்டால் நான் நிசயமாக ம.க.இ.கவைத்தான் ஆதரிப்பேன். உண்மையில் அது சி.பி.எம்மைவிட புரட்சிகரத்தன்மை வாய்ந்ததென்றும் சி.பி.எம் ஒரு சந்தர்ப்பவாதக் கட்சி என்றும் நான் கருதுகிறேன். ம.க.இ.கவின் அரசியல் அமைப்பின் பெயர் என்று நீங்கள் கேட்பது அறியாமையினாலோ ஆர்வத்தினாலோ கேட்பதைப்போலத் தெரியவில்லை. உளவுத்துறைக்குக் காட்டிக்கொடுப்பது போன்ற தொனியே அதில் தொனிக்கிறது. இதுவரை நீங்கள் பி.ராமமூர்த்தி போன்ற கடைந்தெடுத்த பார்ப்பனத் தலைமையின் கருத்தியலோடேயே திராவிடக்கட்சிகள் மற்றும் தோழர்.பெரியாரையும் விமர்சனம் என்ற பெயரில் காய்ந்துவந்தீர்கள். (பி.ஆர் ஜீவாவிற்கு இழைத்த துரோகங்கள் குறித்து காவிரிப்பாதுகாப்புக்குழுவின் தலைவர் தோழர்.பூ.அர,குப்புசாமியின் நேர்காணல்களை வாசித்திருக்கிறீர்களா?) இப்போது நக்சல்பாரித் தோழர்களுக்கும் திராவிட இயக்கத்தவர்களுக்கும் பிரச்சினை என்றவுடன் குளிர்காய்ந்து நக்சல்தோழர்களை ஒழிக்கவும் எதிர்பை வலுப்படுத்தவும் நினைக்கிறீர்களே, ஆனால் அது செல்லுபடியாகாது என்றுதான் நினைக்கிறேன். உரையாடுவோம்.

  5. thiagu1973 said...

    சுகுனா,

    சந்திப்புக்கோ அவர் சார்ந்த கட்சிக்கோ,
    பார்பனியம் பற்றிய புரிதல் உண்டா
    சாதி படிநிலை அமைப்பு பற்றி கேட்டால் வர்க்கம்தான் முக்கியம்னு குதிச்சு ஓடிபோவார் .

    அவர் மக இக வின் அனைத்து கேள்விகளுக்கும் எங்க பதில் சொன்னார் . எங்கயாவது சந்து கிடைச்சா வந்து சிந்து பாடுவார்.

    அலோ சந்திப்பு உங்களுக்கு வெட்கமாயில்லை .

    ஒரு பொது தளத்தில் மக இக தோழர்களுடன் விவாதிக்க அழைத்தோமே ஏன் வரவில்லை.

    உங்கள் கேள்விகளை அந்த தோழர்கள் தளத்தில் ஏன் வைக்கவில்லை .

    கம்யூனிஸ்டுன்னா பயப்படாம பதில்சொல்லனும்யா ?
    நீ கம்யூனிஸ்டா

  6. Thamizhan said...

    பார்ப்பனர்களால் மிகவும் கொடுமைகள் அனுபவித்தவர்கள் மதிப்பிற்குரிய நடேசனார்,டி.எம்.நாயர் போன்றவர்கள்.பார்ப்பன்ரல்லாதார் உரிமைகள் பெறவேண்ட்ம்,படிக்கவேண்டும்,பதவிகள் பெறவேண்டும் என்பன முக்கியமாயின்.பார்ப்பனரல்லாதார்{Non Brahmin Movement)இயக்கம்தான் வலுப்பெற்று சேலத்திலே திராவிடர் கழகமாக அறிஞர் அண்ணாவினினாலேயே அண்ணாதுரை தீர்மான்மாகக் கொண்டு வரப்பட்டது.
    பின்னர் அண்ணா இன்வாரியானக் கட்டுமானத்தைக் குறைத்து நாட்டு வாரியாக திராவிட என்று முன்னேற்றக் கழகத்தை ஆரம்பித்து வி.பி.ராமன்கள் வர அனுமதித்தார்."ர்" என்னுமொரு எழுத்திலே சரித்திரமே மாறிவிட்டதை அனைவரும் அறிவோம்.
    பார்ப்பனத்தலைமைக்கும் நீர்த்துப் போகும் பெரியார் கொள்கைகட்கும் கம்யூனிசத் தலைவர்களின் கதையே போதும்.சிங்காரவேலரும்,இவருடைய வேகம் மிக அதிகம் என்று பெரியாராலேயே சொல்லப்பட்ட ஜீவாவும் என்ன ஆனார்கள்?தமிழர்கள் இழ்ந்தது அதிகம் காங்கிரசிலா அல்லது கம்யூனச்த்திலா என்று ஆலோசிக்க வேண்டிய அளவிலே பார்ப்பன்த் தலைமைகள் சுருட்டிக் கொண்டு விட்டனர்.
    பெரியார் திடல் வாங்கியது கோவை ஜி.டி.நாயுடு அவர்கள் மூலம்.செய்திகளை நன்கு அறிந்து கொள்ளாமல் குறைகூறும் அளவிற்கும்,கண்ட வார்த்தைகளை எழுத வேண்டிய நிலைமைக்கும் வந்து தோழர்கள் அவர்கள் மேல் இருக்கும் மரியாதையைக் குறைதுக் கொள்ளச் செய்வது வேதனையாக இருக்கிறது.
    வீச வேண்டியதை வீச வேண்டியவர்கள் மீது வீசாமல் தங்களால் முடிந்த அளவிற்கு நன்றியென்றால் என்ன என்பதே தெரியாத நமது சமூகத்திற்குச் செய்துவருபவர்கள்மீது வாரி இறைப்பது வீரமுமன்று,ஆம் விவேகமும் அன்று.

  7. உண்மை said...

    என்னைய வெச்சு காமெடி கீமெடி ஒன்னும் பன்னலியே?

  8. லக்கிலுக் said...

    //இங்கே விவாதிக்க வேண்டிய விசயம் என்னவாக இருக்கலாம் என்றால் பார்பனத் தலைமையா? பார்ப்பனர் அல்லாத தலைமையா என்பதல்ல பிரச்சினை? எந்த வர்க்கத்திற்கு ஆதரவாக இவர்கள் செயல்படுகிறார்கள். எந்த வர்க்கத்தோடு கூட்டு வைத்துக் கொள்கிறார்கள்.//

    வர்க்கம் என்ற வார்த்தையை இயந்திரகதியாய் இந்தியாவோடு பொருத்திப் பார்க்க வேண்டாம். தொழிற்புரட்சி மலர்ந்த ஐரோப்பாவுக்கு வேண்டுமானால் முதலாளி, தொழிலாளி என்ற இரு வர்க்கங்கள் இருந்திருக்கலாம்.

    பல்லாயிரம் ஆண்டுகளாக சாதி, மதக்கூறுகளாய் நூற்றுக்கணக்கான பிரிவுகளாய் பிரிந்திருக்கும் இந்தியாவுக்கும் அதே ஐரோப்பிய மார்க்ஸிய சிந்தனைகளை பொருத்தி செயல்படுவது பார்ப்பனீயத்துக்கு மறைமுக ஆதரவாய் திரும்புமே தவிர. அடித்தட்டு மக்களுக்கான போராட்டமாக அமையாது. பார்ப்பனர்கள் தொழிலாள வர்க்கம் என்ற முகமூடியை அணிந்து பல காலமாயிற்று.

  9. அசுரன் said...

    சரியானதொரு கட்டுரை மிதக்கும்வெளி,

    இடஓதுக்கீடு விசயத்தில் ம க இகவின் நிலைப்பாடு என்பதை சரியான புரிதலுடன் யாரும் எதிர்வினை தொடுக்கிறார்களா என்பது கேள்விக் குறியே. பெரும்பாலனவர்கள் பார்ப்ப்னியவாதிகளின் பார்வையுடன் மக இகவின் பார்வையை பொருத்திப்பார்க்கவே முயல்கிறார்கள். நீங்கள் அந்த தவறை செய்யவில்லை என்பது மகிழ்ச்சியே.

    ஒரு வேளை சரியான புரிதல் கிட்டும் வகையில் மக இக வாதங்களை முன் வைக்கவில்லையா என்று தெரியவில்லை. நான் படித்த சில கட்டுரைகள் எனக்கு திருப்தியளிப்பதாகவே இருக்கின்றன.

    உங்களது கேள்வியும் நியாயமாகவே தெரிகிறது.

    இது குறித்து இங்கு விவாதிக்க வேண்டாம் என்றே நீங்கள் குறிப்பிடுவதாலும், இது குறித்து விவாதம் செய்து இந்த பிரச்சனையை முன்னுக்கு கொண்டு வருவதை நானும் விரும்பாததாலும் இத்துடன் நிறுத்திக் கொள்கிறேன். இடஓதுக்கீடு விசயத்தில் பார்ப்ப்னியவாதிகளின் திட்டம் நிறைவேற மக இகவின் நடவடிக்கைகள் எந்த காலத்திலும் துணை நின்றதில்லை என்ற அளவில் இந்த பிரச்சனையை முன்னுக்குக் கொண்டு வர வேண்டிய தேவையிலலாமல் போகிறது.

    மற்றபடி திராவிட இயக்கங்கள் குறித்து தோழர்களிடையே நிலவும் கருத்து மயக்கத்தை சரியாகவே சுட்டிக் காட்டியுள்ளதை குறிப்பிட விரும்புகிறேன். சந்திப்பின் நிலைதான் பாவம். அவரும் எப்படியாவது குழம்பிய குட்டையில் மீன் பிடித்துவிடலாம் என்று கங்கனம் கட்டிக் கொண்டு வேலை செய்கிறார், நல்ல வேளை தோழர்கள் சுதாரிப்புடனே இருக்கிறார்கள்.

    அசுரன்

  10. Anonymous said...

    Thursday, June 28, 2007
    அ.மார்க்ஸ் -> அ.காந்தி

    'தீராநதி' ஜீன்-2007 இதழில், 'பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்' எனும் தொடரில், பேராசிரியர் அ.மார்க்ஸ் பகத்சிங் குறித்து ஒரு கட்டுரை எழுதியுள்ளார். மிகத் தாமதமாகவே அதனை படிக்க நேர்ந்தது. அ.மார்க்ஸின் பின்நவீனத்துவக் கருத்துக்கள் குறித்து எனக்கு பெரிதாக ஒன்றும் தெரியாது. அதே வேளை, இந்துத்துவம் குறித்து அவர் எழுதிய சில நூல்களையும், கட்டுரைகளையும் நான் வாசித்திருக்கிறேன். இந்துத்துவ எதிர்ப்பில் சித்தாந்தத் தளத்தில் அவர் எழுதியுள்ள நூல்கள், அவருடைய பங்களிப்பு குறிப்பிடத்தக்கது. ஆனால், அவரது இக்கட்டுரை, பகத்சிங்கை குறித்த அவரது பார்வை, மிகவும் வருத்தம் தருவதாக இருந்தது. நான் அறிந்த வரலாற்றுத் தகவல்களுக்கு முற்றிலும் மாறுபட்ட, சில தவறான தகவல்களை அவர் எழுதியுள்ளார். எனவே, கீழ்க்காணும் எனது எதிர்வினையை 'தீராநதி' இதழுக்கு அனுப்பியுள்ளேன். அதே வேளையில், பகத்சிங்கின் நூற்றாண்டில், பகத்சிங்கை குறித்து இருட்டடிப்பு செய்யப்படுவதற்கும், திரிக்கப்படுவதற்கும், பூசைப் படமாக, அரசியலற்ற வீரனாக வெற்றுச் சின்னமாக்கப்படுவதற்கும் இடையில், இப்படியேனும் ஒரு கட்டுரை வந்ததே என எனக்கு மகிழ்ச்சியே.

    அ.மார்க்சின் கட்டுரையை வாசிக்க:
    பக்கம் 1, பக்கம் 2, பக்கம் 3, பக்கம் 4, பக்கம் 5, பக்கம் 6, பக்கம் 7, பக்கம் 8, பக்கம் 9

    எனது எதிர்வினை:
    ----------------------------

    பேசாப் பொருளை பேசத் துணிந்தேன் :
    ஆனால், நிதானத்தோடும், நேர்மையோடும் பேசுங்கள் !

    தீராநதி ஜீன்-2007 இதழில், 'பேசாப் பொருளை பேசத் துணிந்தேன்' எனும் தொடரில், பேராசிரியர் அ.மார்க்ஸ் பகத்சிங் குறித்து எழுதியுள்ள கட்டுரைக்கு எதிர்வினையாக சில கருத்துக்களை முன்வைப்பது அவசியமெனக் கருதுகிறேன்.

    பகத்சிங்கின் 'பிராண்ட்' தேசபக்தி என ஓரிடத்தில் குறிப்பிடுகிறார் அ.மார்க்ஸ். அதனை புரிந்து கொள்ள, பகத்சிங்கின் நேதாஜி, நேரு மதிப்பீடு கட்டுரையின் அம்சங்களை சுட்டுகிறார். ஆனால், அவர் சுட்டுகிற கட்டுரையில், 'பிராண்ட்' தேசபக்தி எப்படி வெளிப்படுகிறது என அ.மார்க்ஸ் தான் விளக்க வேண்டும். முற்போக்கான கருத்துக்களை ஆதரிக்க முற்படுவது 'பிராண்ட்' தேசபக்தியோ?

    சாண்டர்ஸ் கொலையில் அறவியல் கேள்விகளை எழுப்பியும், இதே பொருளைப் பேசத் துணிந்த காந்தியவாதிகளான பட்டாபி சீத்தாராமையா, டி.பி. தாஸ் கூட 'துணியாத' அளவிற்கு வக்காலத்து வாங்கியும் நகர்கிறது கட்டுரை.

    முதலாவது, அ.மார்க்ஸ் எழுப்பும் அறவியல் கேள்விகள் குறித்தது. பகத்சிங்கின் மேற்கோளை சுட்டிக் காட்டி, அறங்களில் 'அற்பமானது', 'உன்னதமானது' என வேறுபாடு உண்டா எனக் கேட்கிறார். மேலும், தனது அறக் கருத்தாக "வன்முறையும், தனிநபர் கொலையும் மனிதரின் அடிப்படையான அற உந்துதலுக்கு(moral impulse) எதிரானவை " என்கிறார். அதனடிப்படையில், சுரண்டல் சமுதாயம் உருவாக்கும் 'பேரறத்தை'க்| காட்டிலும், மனிதர்களுக்கிடையில் நிலவும் 'சிற்றறம்' முக்கியமானதில்லையா என வினவுகிறார்.

    மனிதன், மனிதர்கள், அடிப்படை அறம், சிற்றறம், பேரறம்... வர்க்க சமூகம் நிலவுகிற வரை வர்க்கச் சார்பற்ற அறம் என ஒன்று உண்டா? அதனால் தான், பகத்சிங் ஆளும் வர்க்கம் போதிக்க விரும்பும் அறங்களை அற்பமானதென்றும், அர்த்தமற்றதென்றும் ஒதுக்கித் தள்ளுகிறார். ஜெனரல் டயர், கோபால கிருஷ்ண நாயுடு முதல் நரேந்திர மோடி, கேர்லாஞ்சி மிருகங்கள் வரையிலான 'மனிதர்கள்' மனிதர்களுக்கிடையிலான 'சிற்றற'த்தை மதிக்காத பொழுது, ஒடுக்கப்படும் 'மனிதர்கள்' அறபோதனைகள் பற்றி கட்டுரை வரைந்து கொண்டிருக்க வேண்டுமா? இந்த ஆளும் வர்க்க சேவை அறபோதனை, காந்தியத்தின் நகல் பிரதிதான். இப்படிப்பட்ட கருத்தை மொழிவதற்கு மார்க்ஸ் பெயரை ஏன் பின்னே சேர்த்துக் கொள்ள வேண்டும்? அ.காந்தி என மாற்றிக் கொள்ளலாம்.

    இரண்டாவதாக, சாண்டர்ஸ் கொலையில் யாரைக் கொல்ல தீர்மானித்தார்கள் என்பதில் முரண்ட்ட கருத்துக்கள் எழும்ப முக்கிய காரணம், அக் கொலை குறித்து தீர்மானிக்கப்பட்ட கூட்டத்தில் இரகசியம் கருதி, கூட்டக் குறிப்புகள் எடுக்கப்படாதது தான். யஷ்பாலின் நூலைத் தாண்டி, பதுக் நாத் மற்றும் சோகன் சிங் ஜோஷ் ஆகியோர் சொல்வதன் அடிப்படையில், பகத்சிங் நேரடியாக சோகன் சிங் ஜோஷிடம் சம்பவம் நடந்த அன்று இரவு சொன்னதைப் போல, 'அவர்கள் வேறொரு சாத்தானைத் தேடிச் சென்றார்கள், ஆனால் மற்றொரு சாத்தான் வெளிப்பட்டது' (பகத்சிங்கும், இதர முந்தைய புரட்சியாளர்களும், சோகன் சிங் ஜோஷ்)

    சில பத்திகள் கழித்து, சாண்டர்ஸ் போன்ற அப்பாவிகள் கொல்லப்படுவது குறித்து ஒரு திறந்த வாதத்தை தவிர்க்கக் கூடாது என அ.மார்க்ஸ் அறிவுறுத்துகிறார். 'அப்பாவி' என்ற சொல்லே தெளிவற்றது. 'பயங்கரவாதி' , 'தீவிரவாதி' , சிபிஎம் நந்திகிராமில் பயன்படுத்திய 'வெளியாள்' போன்ற சொற்களைப் போல வரையற்று பயன்படுத்தப்படும் சொல்லாகி விட்டது. புஷ்ஷும், பிளேரும் கூட இதே சொல்லைத்தான் பயன்படுத்துகிறார்கள். எனவே, அதனை மேற்கூறிய அ.காந்தியின் அற போதனையின் அடிப்படையில் பரிசீலிக்க முடியாது. லாலாஜி மீது ஸ்காட்டின் ஆணையின்படி, சாண்டர்ஸ் தடியடிப் பிரயோகம் நிகழ்த்தினான் என்பதுதான் இதுவரை வரலாற்றாசிரியர்கள் சொல்லியிருக்கும் செய்தி. அப்படியில்லை, அவன் பயிற்சியாளன்தான் என்றால், முற்றிலும் முரண்பட்ட இத்தகவலுக்கு அ.மார்க்ஸ் ஆதாரம் வழங்க வேண்டும்.

    அப்படியே சாண்டர்ஸிற்கும், லாலாஜியின் மீதான தடியடிப் பிரயோகத்திற்கும் எவ்விதத் தொடர்புமேயில்லையென நீங்கள் ஆதாரமே வழங்கினாலும், அங்கே இன்னொரு கேள்வி முளைக்கிறது. ஒரு நாட்டை ஆக்கிரமிக்கும் அன்னியப் படையின் கைக் கூலி போலிசுக்காரன், அல்லது போலிசுப் பயிற்சியாளன், ஒரு சம்பவத்தோடு தொடர்பில்லை என்பதானாலேயே எப்படி அப்பாவியாவான்? ஒரு வேளை ஆயிரக்கணக்கான அப்பாவிகள்தான் இன்று இராக்கிலும் ஆக்கிரமித்துக் கொண்டிருக்கிறார்களோ? அபு கிரைபிற்காக அதிலே சம்பந்தப்பட்ட அதிகாரிகளை மட்டும் லிஸ்ட் எடுத்துத் தான், இராக் மக்கள் தாக்க வேண்டுமோ? இல்லையென்றால் அது அற மீறலோ?

    மேலும், பகத்சிங்கை விடுதலை செய்யும் விசயத்தில், காந்தி நடந்து கொண்டதை பட்டியலிடும் அ.மார்க்ஸ், தாமே காந்தியின் கூற்றுக்கு ஆதரவாக மார்ச் 23 கடிதத்தை மட்டுமே குறிப்பிட முடியும் எனக் கூறுகிறார். (இதற்கும் அ. மார்க்ஸ் ஆதாரம் வழங்க வேண்டும்). பிறகு அவரே அது தும்பை விட்டு வாலை பிடிப்பது என்கிறார். இது காந்தியின் உண்மை, அகிம்சை நிலைபாடுகளின்படியிலான மனப் போராட்டத்தைக் காட்டுகிறதாம். ஏனென்றால், காந்திக்கு 'அகிம்சை' ஒரு மதமாக, ஒருங்கே அதன் சரியான, மோசமான அம்சங்களோடு ஒருந்ததாம்.

    சரி, ஒரு வாதத்திற்காக அப்படியே வைத்துக் கொள்வோம். இதே காந்தி-இர்வின் உடன்படிக்கை பேச்சுவார்த்தைகளின் பொழுதுதான், எல்லைப்புற மாகாணத்தில், சில கார்வாலி படை வீரர்கள் நிராயுதபாணியான மக்கள் மீது சட மறுத்தார்கள் என்பதற்காக, இராணுவக் கோர்ட்டில் விசாரிக்கப்பட்டு கடுங் காவல் தண்டனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். பேச்சுவார்த்தையில், சத்தியாக்கிரகத்தை(கவனிக்க, அவர்கள் சுட மட்டுமே மறுத்தார்கள், கலகத்தில் ஈடுபடவில்லை.) கடைபிடித்த இவ்வீரர்களை விடுதலை செய்ய காந்தி கோர வேண்டுமென மக்கள் வேண்டுகோள் விடுத்ததை, பட்டாபி சீத்தாரமையா, தனது இந்திய தேசிய காங்கிரசின் சரித்திரத்தில் குறிப்பிட்டுள்ளார் (ஆதாரம்: பகத்சிங்கும், அவரது காலங்களும், மன்மத் நாத் குப்தா).

    வன்முறையை பிரயோகித்த, தனக்கு சமதையாக வளர்ந்த பகத்சிங்கின் மீதான காழ்ப்புணர்ச்சி கூட 'மகாத்மா' காந்திக்கு மனப்போராட்டத்தின் காரணமாக இருந்து விட்டுப் போகட்டும். (மேலும், காந்தி காப்பாற்றுவாரென்று எதிர்பார்த்து பகத்சிங் குண்டு வீச முடிவெடுக்கவில்லை) ஆனால், சத்தியாக்கிரகத்தை பிரயோகித்த கார்வாலி வீரர்களைக் கூட காந்தி காப்பாற்றாமல் போனதற்கு, அவரது 'மதத்தின்' எந்தக் கோட்பாடு காரணமாக இருந்திருக்க வேண்டும், "வாடிக்கையாளரே நமது எசமானர் " என்ற உயர்ந்த கோட்பாட்டைத் தவிர? இல்லையென்றால், காந்தி-இர்வின் உடன்படிக்கையின் முக்கிய ஷரத்தாக, கீழ்ப்படிய மறுத்த போலிசு, இராணுவ வீரர்கள் ஆகியோர், அரசியல் கைதிகள் விடுதலைக்கான ஒப்பந்த வரம்புகளுக்குள் வர மாட்டார்கள் என ஏன் எழுதப்பட வேண்டும்? என்ன செய்ய, காந்தியை என்னதான் காப்பாற்ற முயன்றாலும், அவர் ஆளும் வர்க்கத்தின் ஆன்மாவாக (அந்தராத்மா) செயல்பட்ட வரலாறு சந்தி சிரிக்கிறதே.

    இறுதியாக, சிறையில் பாய் ரன்பீர் சிங்கின் முயற்சியால், பகத்சிங் மீண்டும் சீக்கிய அடையாளங்களுக்கு திரும்பியதாகவும், அவற்றை நீக்கிக் கொண்டதற்காக 'வெட்கப்பட்டதாகவும்', 'அறிந்ததாக’ குறிப்பிடுகிறார் அ.மார்க்ஸ். அவர் எப்படி, எங்கிருந்து அவ்வாறு 'அறிந்து' கொண்ட என அறிந்து கொள்ள ஆர்வப்படுகிறோம். ஏனென்றால் இந்த ரன்பீர் சிங் யாரென்று தெரியவில்லை. ஆனால், சிறையில் பாய் ரந்தீர் சிங் என்பவர் பகத்சிங்கின் நாத்திகக் கொள்கைகளால் ஆத்திரமுற்று, பகத்சிங்கை கர்வம் பிடித்தவன் எனச் சொல்ல, அதற்கு எதிர்வினையாக பகத்சிங் தனது இறுதி நாட்களில் எழுதிய கட்டுரைகளில் ஒன்று தான், புகழ்பெற்ற 'நான் நாத்திகன் - ஏன்?'. எனவே இத்தகவலை, ஆதாரம் வழங்கப்படாத வரை, எதிரிகள் கூட செய்யத் துணியாத அவதூறு என்று மட்டுமே சொல்ல முடியும். தயவு செய்து காலிஸ்தானி குண்டர்களின் ஆதாரங்கள் வேண்டாம், ஆனந்த் பட்வர்தன் அவற்றை ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருக்கிறார்.

    இவற்றையெல்லாம் தாண்டி, ஆற்றொழுக்கான நடையில், பகத்சிங்கின் எழுத்துக்கள் குறித்து கட்டுரையின் முன்பகுதியில் சிலாகித்து எழுதியிருப்பதற்கும், பகத்சிங் குறித்து படிக்க வேண்டுகோள் விடுத்தற்காகவும், அ.மார்க்சுக்கு எனது உள்ளார்ந்த பாராட்டுக்களும், நன்றிகளும். ஆம், பகத்சிங்கின் ஒவ்வொரு கட்டுரையையும் நாம் அவசியம் படிக்க வேண்டும். ஏனெனில் அவரை திருஉருவாக மட்டுமே நிறுத்தி, சவமாக்க முயலும் போலி கம்யூனிஸ்டுகளின் முகத்திரையை கிழிக்க அது மட்டுமே உதவும்.

    மேலும் படிக்க:



    புதிய கலாச்சாரத்தில் வெளிவந்த பகத்சிங் குறித்த கட்டுரை
    பகத்சிங்கின் எழுத்துக்கள் - புரட்சிகர இலக்கியம்
    பகத்சிங் மேற்கோள்கள்.

    from arasubalraj.blogspot.com

  11. மிதக்கும்வெளி said...

    குரல்கள்,

    என் பதிவின் மய்யத்தை நீங்கள் புரிந்துகொள்ளவில்லை(அ) தவறாகப் புரிந்துகொண்டிருக்கிறீர்கள் என்று நினைக்கிறேன். நீங்கள் சொல்லும் 'சேறுவீசும் முயற்சி' என்பதைக் கண்டித்திருக்கிறேன். அதேநேரத்தில் மாற்றுத்தரப்பின் நியாயங்களையும் சொல்லியிருக்கிறேன். பேசுவோம்.

    தியாகு,

    சந்திப்பை விமர்சிக்கவேண்டியதுதான். ஆனால் அதற்காக ஒருமையில் விளிக்கவேண்டாமே!

    லக்கிலுக்

    எனக்குத் தெரிந்து வாழ்க்கையில் இவ்வளவு 'புத்திசாலித்தனமாகப்' பின்னூட்டம் போட்டது இப்போதுதான்.((-

    அசுரன்

    இட ஒதுக்கீடு குறித்து ம.க.இ.க 'இட ஒதுக்கீடு -ஒரு மார்க்சிய லெனினியப் பார்வை' என்னும் வெளியீட்டை வெளியிட்டிருக்கிறது. அதில் எனக்குக் கருத்துமாறுபாடுகள் உள்ளன. விரைவில் எழுதலாமென்றிருக்கிறேன். நன்றி.

  12. மிதக்கும்வெளி said...

    பாவெல்,

    நான் நினைக்கு பாவெல் நீங்கள்தானா என்று தெரியவில்லை. பகத்சிங் குறித்து நிரம்பத் தரவுகள் அடங்கிய பின்னூட்டத்தை இட்டிருக்கிறீர்கள். இது ஒரு தனிப்பதிவாகவே இட வேண்டியது. எனக்கும் அ.மார்க்சின் கருத்தில் உடன்பாடில்லை. பகத்சிங் பிரச்சினையைப் பொறுத்தவரை காந்தி துரோகமே செய்தார். அதேபோல ஜாலியன்வாலாபாக் படுகொலைகளை நியாயப்படுத்தியவர் அன்னிபெசண்ட் அம்ம்மையார். தியாசபிகல் சொசைட்டிக்கும் இந்துத்துவவாதிகளுக்குமான தொடர்பு தனியாக ஆராயப்பட வேண்டிய ஒன்று.

  13. thiagu1973 said...

    அன்புள்ள சுகுணா,

    சந்திப்பை அம்மாதிரி ஒருமையில் விளித்ததுக்கு காரணம் என்னோட பிளாக்கில் அவர் செய்த அட்டூலியம் தான் . முதலில் என்னை நீ கம்யூனிஸ்டா நீ பயங்கரவாதி . உன் கட்சி என்ன கொள்கை என்ன என
    பல முறை ஒருமையில் அழைத்தார் அதுகூட பரவாயில்லை .இங்கே அழைத்ததுபோல ஒரு விவாதத்துக்கும்
    எமது தோழர்களோடு வரமறுக்கிறார்.
    அதனால் அந்த தோழன் மேல் எனக்கு இருந்த மரியாதை சரிந்தது.

    எந்த கட்சியை நீங்கள் சார்ந்திருந்தாலும் சரி அதை குறித்து கேள்விகளும் விமர்சணங்களும் எழும்போது ஓடி ஒளிந்தால் உங்கள் மரியாதையை நீங்களே குறைத்துகொள்வீர்கள் என்பதுதான் அர்த்தம் .

    வாய்ப்பளித்தமைக்கு நன்றி.

  14. said...

    திரு.சுகுணா,

    அலுவல் நெருக்கடிகளின் காரணமாக தாமதமாக பின்னூட்டமிடுகிறேன். இந்த பதிவினை பொறுத்தமட்டில் தோழர்.குரல்களினுடைய கருத்துதான் என்னுடையதும்.
    //பார்ப்பனர்களை எதிர்ப்பதும் விலக்கிவைப்பது என்பதும் தவிர்க்கமுடியாதது. பார்ப்பனரல்லாதார் அனைத்துப் பார்ப்பனர்களையும் தலித்துகள் அனைத்துத் தலித்தல்லாதாரையும் அய்யத்துக்குட்படுத்துவதும் தவிர்க்கமுடியாதது.// நடைமுறையில் இந்த கருத்தினுடைய நம்பகத்தன்மையை உங்களால் விளக்கமுடியுமா? பார்ப்பனரல்லாதார் அனைத்து பார்ப்பனர்களையும் எதிர்க்கிறார்களா? மதமாற்றத் தடைச் சட்டம் அமல்படுத்தப்பட்டவுடன் ஆர்.எஸ்.எஸ்க்கு முன்பாக துள்ளிகுதித்து ஆதரித்து கூட்டம் போட்டது யார் தேவர் சாதி வெறியர்கள்தானே, தலித்துகள் பார்ப்பனரல்லாத இடைநிலை ஆதிக்க சாதிகளால் ஒடுக்கப்படுவதில்லையா? மேலவளவில் பார்ப்பனனா அரிவாள் எடுத்து வீசினான், தீண்டாமையை கடைப்பிடிக்கும் இந்த சாதி வெறி பிடித்த நாய்களுக்கு நாங்களும் ஒடுக்கப்படுகிறோம் என்று சலுகையை பெற என்ன உரிமை இருக்கிறது. ஒரு இடதுசாரி முற்போக்கான தோழர் பிறப்பினடிப்படையாலேயே சலுகையை இழப்பாரே என்று கேள்வி எழுப்புகிறீர்கள், அவர் பிறந்திருக்கின்ற சாதி பெரும்பாண்மையாக தீண்டாமை கடைபிடிப்பவர்களை கொண்டிருக்கும் பட்சத்தில்தான் அவர் சலுகை இழக்கிறார், அவர் ஒருவர் சலுகையை இழக்கிறார் என்னும் காரணத்திற்காக பெரும்பாண்மை சாதி வெறியர்களுக்கு ஆதரவாய் பேச முடியுமா? தீண்டாமையை கடைபிடிக்கும் தனது சாதியை சேர்ந்தவர்களிடம் அந்த இடதுசாரி தோழர் போராட வேண்டாமா? அப்படி போராடிக் கொண்டிருக்கும் தோழர்களை காண வேண்டுமென்றால் ம.க.இ.கவிற்கு வாருங்கள் காட்டுகிறோம். மருதையன் பார்ப்பனர் என்பதை கண்டுபிடித்த நமது நண்பர்கள், 'தீண்டாமை கடைபிடிக்கும் சாதிகளுக்கு இடஒதுக்கீட்டை ரத்து செய்' என்ற எமது நிலைபாட்டோடு இயங்கும் எமது தோழர்களின் சாதியையும் தேடியிருப்பார்களானால் அதில் பிறப்பினடிப்படையில் ஆதிக்க சாதியில் பிறந்தவர்கள் எத்தனை பேர் என்பது புரிந்திருக்கும். இடஒதுக்கீடு என்பது சலுகைதானேயொழிய அதுவே சமூகமாற்றத்திற்கான தீர்வு அல்ல, இதனை புரிந்து கொண்டு சமூக மாற்றத்திற்காக சலுகையை துச்சமென தூக்கியெறிந்த எமது தோழர்களின் தொகை தெரியுமா உங்களுக்கு. இவ்வளவு ஏன் பிறப்பால் தலித்தாக பிறந்து சாதி ஒழிப்பு என்ற உன்னத நோக்கத்திற்காக தனது சான்றிதழ்களில் சாதியை போட மறுத்து இடஒதுக்கீட்டையும் இழக்கும் எமது தோழர்கள் என்ன ஏமாளிகளா. இல்லை, இதுதான் பாட்டாளி வர்க்க பண்பு சமுக மாற்றத்திற்கெதிராக சில சலுகைகள் முன்நிற்கும் போது அதனை உதறி எறிந்து விட்டு போராடுகிறார்களே இதுதான் பாட்டாளி வர்க்கப்பண்பு, சமூகத்தின் சூழல் கெட்டு நாறிக் கொண்டிருக்கும் போது ஊரே பற்றி எரியும் போது மென்பொருள் துறையில் தமக்கு மட்டும் ஐந்திலக்க சம்பளத்தில் வேலை கிடைக்கும் பட்சத்தில் அதற்கு சமரசப்படாமல் அதனை உதறிஎறிந்து கூட போராட ஒருவன் அணியமாகிறானே இதுதான் பாட்டாளி வர்க்க பண்பு. இது எல்லாவற்றையும் விட்டுவிட்டு பார்ப்பனரல்லாத ஆதிக்க சாதியினர் அப்படித்தான் ஒடுக்குவார்கள் ஆனால் பிறப்பனடிப்படையில் சலுகையை பெறவேண்டும் என்று சொல்வீர்களேயானால், அவர் ஏற்கனவே பிறப்பினடிப்படையில் ஒடுக்குகின்ற சலுகையை வர்ணாசிரமப்படி பெற்றிருக்கிறார்கள், அதனால் முழுமையாக ஒடுக்கப்படும் சாதிகளுக்கே இடஒதுக்கீடு செல்ல வேண்டும் என்பதே எமது பதில்..
    //'பார்ப்பன எதிர்ப்பு' என்னும் கருத்தியல் ஆயதத்தைத் தங்கள் தவறுகளை மூடிமறைக்கப் பயன்படுத்துவதும் பெரியாரின் மொழியிலேயே சொல்வதாயிருந்தால் அறிவுநாணயமாகாது.//
    எந்த தவறினை பார்ப்பன எதிர்ப்பு என்ற கருத்தியல் ஆயுதத்தை கொண்டு தோழர்கள் மூடிமறைக்கிறார்கள் என்று வெளிப்படையாக சொல்வீர்களேயானால் விரிவாக பேசலாம்..

    ஸ்டாலின்

  15. Anonymous said...

    மிதக்கும் வெளி,

    அ.மார்க்சின் பாரதி பற்றிய நிலைப்பாட்டிலும் கூட உங்களுக்கு விமர்சனம் உண்டா? இவ்வாறு அவர் மீதான விமர்சனங்களையே ஒரு பதிவாக போட்டால் உங்களை புரிந்து கொள்ள உதவும்

    பாவெல்

  16. Gopalan Ramasubbu said...

    //பெரியார் எப்போதும் பார்ப்பனர்களோடு சமரசம் செய்து கொண்டவரல்ல//

    1957 ல் நடைபெற்ற தேர்தலில், அறிஞர் அண்ணாவை எதிர்த்துக் காங்கிரஸ் கட்சியின் சார்பாகப் காஞ்சிபுரத்தில் போட்டியிட்டவர் டாக்டர் சீனிவாசன்..இவரை ஆதரித்துப் பேசியவர்களில் மிக முக்கியமானவர்களில் பெரியாரும் ஒருவர்.. டாக்டர் சீனிவாசன் பார்ப்பன சமுதாயத்தைச் சேர்ந்தவர்தான். :)

  17. சந்திப்பு said...

    சுகுனா நல்ல விவாதங்கள்... இரண்டு நாட்களாக நெட் பைபர் கட்டாகி விட்டதால் பதிவிடவும் முடியவில்லை. பதிலிடவும் முடியவில்லை. அநேகமாக திங்கட் கிழமை சரியாகி விடும் என கருதுகிறேன். விவாதத்தை தொடருவோம்.

  18. Arasu Balraj said...

    எனக்குத் தெரிந்து சந்திப்பினுடைய நெட்பைபர் நந்திகிராமோடு கட்டாகி விட்டது!

  19. அசுரன் said...

    தோழர் குரல்கள்,

    பொதுவாக சுகுணா திவாகருக்கு மாற்றுக் கருத்தை முன் வைக்கும் உங்களது வேகத்தை பாராட்டுகீறேன். குறிப்பாக சமீபத்தில் இங்கு வீரமணியை முன்னிட்டு நிகழ்ந்த விவாதஙக்ளில் உங்களது கவிதைகளும் ,கட்டுரைகளும் வீச்சாக போலி கருத்துக்களை கட்டுடைத்தன. இங்கு மிதக்கும் வெளிக்கு வைக்கப்பட்ட எதிர்வாதமும் மிக சரியானதாகவே இருக்கிற்து. இங்கு ஸ்டாலினுடைய விர்வான சரியான விம்ர்சனத்தை நாம் கவனிக்க வேண்டும்.

    @@@@
    "பிறப்பின் அடிப்படையில் பார்ப்பனர்களை விலக்கிவைப்பது என்பது பிறப்பின் அடிப்படையில் பார்க்கக்கூடிய வருணாசிரமப் பார்ப்பனீயப் பார்வைதானே என்பது அவர்களின் வாதம்" - மேற்படி வாதம் தனது பார்ப்பனத் தன்மையை தூக்கிஎறிந்து விட்டு பார்ப்பனியத்தை எதிர்க்க களத்தில் முன்னனியில் நிற்கும் ஒரு நபரை அவரது பிறப்பினடிப்படையில் வித்தியாசப்படுத்தி சேறடிக்க முற்பட்டதை எதிர்த்து வைக்கப்பட்டது.. ஒட்டுமொத்தமாக பார்ப்பன சமூகத்தைக் கணக்கில் கொண்டு சொல்லப்பட்டதல்ல..
    @@@

    ஆனால் சில இடங்களில் நமது நட்பு சக்தி எது, எதிரிகள் யார் என்பதை தெளிவுபடுத்தி வார்த்தைகளை வடிவமைப்பது சரியாக இருக்கும் என்பது எனது கருத்து.

    இந்த கட்டுரையில் திராவிட அரசியல் சார்பு கொண்ட தோழர்களின் மக இக குறித்த அரசியல் மாற்றுக் கருத்தையே வைத்துள்ளார் சுகுனா திவாகர். அதனை அவரிடம் பேசி விளக்குவதும், ஒரு சுமூகமான தீர்வு கிட்டாவிடில் அதனை தற்காலிகமாக பின்னுக்குத் தள்ளி பொது எதிரியை ஒடுக்க ஒன்றிணைவதுமே சரி என்று கருதுகிறேன். இது பொதுவாக புரட்சிக்ர அமைப்புடன் இணைந்து செயல்படும் மாற்று அமைப்புகளுக்குள்ளே இருக்கீற கருத்து வேறுபாடு போன்ற ஒன்றே. இதனை விமர்சிக்க கொஞ்சம் பெரிய வார்த்தைகளை பயன்படுத்திவிட்டீர்கள் தோழர்.

    'பாம்பும் சகாமல், படு கேவலமான நிலை' போன்ற வார்த்தை பயன்பாடுகள் தவறு என்று கருதுகிறேன். தோழர் குரல்கள் எனது விமர்சனத்தின் அடிப்படைய புரிந்து கொள்வார் என்று நம்புகிறேன்.

    நாம் செய்யப் போவது புதிய ஜனநாயக புரட்சி எனில் அதனை வெறுமே பாட்டாளி வர்க்கம் மட்டும் செய்து விடமுடியாது. அப்படியெனில் பாட்டாளி வர்க்க புரிதலுக்கு மாற்றுக் கருத்துக் கொண்ட நட்பு சக்திகளின் கூட்டணியின்றி ஒரு இஞ்சு கூட நகர முடியாது.

    சுகுணா தீவகரின் கருத்துக்களை அந்த அம்சத்தில் பார்ப்பதே சரி என்று கருதுகிறேன்,

    அவரது கட்டுரையும் அது போன்றதொரு புரிதலில் எழுதப்பட்டதாகவே உண்ர்கிறேன்.

    எனது விமர்சனம் குறித்து மாற்றுக் கருத்திருந்தால் தெரியப்படுத்துங்கள்.. தோழர் குரல்கள்.

    ********

    தோழர் சுகுனாதிவாகருக்கு,


    தோழர் ஸ்டாலின் சுட்டிக் காட்டிய படி 'பார்ப்பன எதிர்ப்பு' என்ற ஆயுதத்தைக் கொண்டு தமது தவறுகளை மூடி மறைப்பது என்று குறிப்பிட்டிருந்தீர்கள். இது யார் மீதான விமர்சனம் என்று தெரியவில்லை. அந்த குறிப்பிட்ட பத்தியை படிக்கும் போது அது மக இகவின் மீதான விமர்சனம் என்பது போல தெரிகிற்து. புரட்சிக்ர அமைப்புகளின் நல்ல நண்பர் என்ற வகையில் இந்த அம்ச்த்தில் தெளிவுபடுத்திவிடுவது நலம். மேலும் மக் இக தோழர்கள் மீதுதான் விம்ர்சனம் எனில் அதனை விரிவாக முன் வைத்து தவறுகளை திருத்திக் கொள்ள வழி ஏற்படுத்திக் கொடுப்பதே சரியாக இருக்கும்.

    அப்படியிலலவிடில் அது எதிரிகள் புரளி பேசவதற்க்கே உதவி செய்யும்
    அசுரன்

  20. குரல்கள் said...

    சுகுணா திவாகர், பதில் அளித்தமைக்கு நன்றி

    தோழர் அசுரன்,

    பொதுவாகச் சென்ற வாரச் வலைசூழலின் காரணமாக நான் ஒரு சில இடங்களில் நன்பர்களுக்கு எதிராகவே கடும்-வார்த்தைப் பிரயோகம் செய்யும்படியாகி விட்டது.
    :(

    மற்றபடி நீங்கள் விமர்சித்து சுட்டிக் காட்டியமைக்கு நன்றி!