எனக்குத் தமிழில் மூன்று எழுத்தாளர்களைப் பிடிக்காது. சுந்தரராமசாமி, ஜெயமோகன், சுஜாதா. இதில் சுஜாதாவை அரசியல் காரணங்களுக்காக எனக்குப் பிடிக்காவிட்டாலும் அவரது எழுத்தில் உள்ள வெகுஜனத்தன்மையுடன் கூடிய சுவாரசியமும் விறுவிறுப்பும் பிடிக்கும். எனது அம்மா சுஜாதாவின் ரசிகை. அதனால் என் தம்பிக்கு கணேஷ் என்று பெயர் வைத்தார்.
என்னை ஏனோ அரசியலைத் தாண்டியும்கூட ஈர்க்க சு.ராவால் முடியவில்லை. சுந்தரராமசாமியின் எழுத்துக்களைப் படிக்கும்போதும் அவரது புகைப்படங்களைப் பார்க்கும்போதும் எனக்கு சாருஹாசன் ஞாபகம் வரும். தமிழ்ச்சினிமாவில் அதிகம் நீதிபதி வேடங்களை ஏற்று நடித்தவர் சாருஹாசன் அல்லது சாருஹாசன் அதிகம் ஏற்று நடித்த வேடங்கள் நீதிபதி வேடங்கள். சு.ராவும் அப்படித்தான். வாழ்க்கை குறித்து, எழுத்து குறித்து, கல்வி குறித்து தீர்ப்புகள் சொல்லிக்கொண்டேயிருப்பார். அவர் இளைஞர்களுக்கான எழுத்தாளர் அல்ல,மனதளவில் செத்துப்போன பிணங்களுக்கான எழுத்தாளர். சு.ராவின் டைரிக்குறிப்புகள், எழுத்தாளர்களுக்கு எழுதிய கடிதங்கள், கோவில் கும்பாபிகேஷ நன்கொடைச்சீட்டுகள், சுதர்சன் ஜவுளிக்கடை வரவுசெலவுக்கணக்கு என அனைத்தையும் ஆவணப்படுத்தும் காலச்சுவட்டின் முயற்சி வேறு சு.ரா மீது ஈடுபாடின்மையை ஏற்படுத்துகிறது. இன்னும் சு.ரா பயன்படுத்திய உள்ளாடைகள், சேவிங் கிரீம் ஆகியவை ஏலத்திற்கு வரும் நாளை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன். இப்போது சு.ராவைப் படிக்கும் அபாயத்திலிருந்து என்னை நான் விடுவித்துக்கொண்டாலும் சு.ராவைப் போலவே எழுதப் பழகி விட்ட நூறு பேராவது தமிழில் உருவாகிவிட்டார்கள். அந்த அபாயங்களைத்தான் அடிக்கடி எதிர்கொள்ள நேர்கிறது.
ஜெயமோகனின் எழுத்துக்கள் சு.ராவின் எழுத்துக்களுக்குச் சித்தப்பாமுறை. அலுப்பூட்டுகிற எழுத்துக்கள், போதனைகள், பிரகடனங்கள். விஷ்ணுபுரத்திற்குள் உள்நுழைய முடியாத நான் ’பின் தொடரும் நிழலின் குரல்’ முப்பது பக்கங்கள் படித்திருப்பேன். ஒரு லோக்கல் கம்யூனிஸ்ட் கட்சியின் நடைமுறை கூட அரியாது ஜெயமோகன் எழுதியிருந்தார். இதைத் தாண்டி சோவியத் யூனியன் கம்யூனிஸ்ட் கட்சி குறித்து விமர்சனம் வைக்கப் போகிறார் என்று சொன்னதும் புத்தகத்தை மூடி வைத்துவிட்டேன். ஒருவழியாக ‘ஏழாம் உலகம்’ நாவலை முடித்து தொலைத்தவுடன் அப்பாடா என்றிருந்தது. மண்ணுக்குச் சம்பந்தமில்லாத அந்நிய வாடை அடிக்கும் அரைகுறைப் பிரதி.
ஒரு மாதத்திற்கு முன்பு ரோசாவசந்திடம் பேசியபோது அவர் சொன்னார், ‘’போகிற போக்கில் ஜெமோவை இந்துத்துவவாதி என்று முத்திரை குத்திவிட்டுப் போவது சரியில்லை என்று (பின்னூட்டத்தில்) சிலர் சொல்கிறார்கள். உண்மையில் ஜெமோ நிறைய எழுதிக்கொண்டுதானிருக்கிறார். அதையெல்லாம் படிக்க வேண்டுமே சுகுணா” என்றார். நானும் அதிலிருந்து கிட்டத்தட்ட ஒருமாதம் ஜெயமோகனின் வலைப்பக்கத்தைத் தொடர்ச்சியாகப் படித்து வந்தேன்.
பிறகுதான் தெரிந்தது. ஜெயமோகனிடம் இருப்பது உழைப்பில்லை,வியாதி என்று. நீரழிவு வியாதி உடையவர்கள் அடிக்கடி சிறுநீர் கழிப்பதைப் போல் ஜெமோ எழுதிக்கொண்டேருக்கிறார். ஒன்றுக்கொன்று முரண்பட்ட அபிப்பிராயங்கள், மேலோட்டமான கருத்து உதிர்ப்புகள் என அத்தனையும் அபத்த உளறல்கள். ஜெமோ எழுதுவதை மறுக்கலாம் என்று தேடிப்பிடித்து வாசித்து வந்தால் அதற்குள் 35 கட்டுரைகள் (வாசகர் கடிதங்கள் மற்றும் பதில்கள் சேர்த்து) எழுதியிருப்பார் ஜெமோ.
எனக்கு விக்கிரமாதித்யனின் கருத்தியலில் கடுமையான விமர்சனங்கள் இருந்தாலும் கட்டுப்பாடுகளும் வரைவெல்லைகளும் அற்ற விக்கிரமாதித்யனின் வாழ்க்கை பிடிக்கும். அவர் அனாயசமாக கவிதைகள் எழுதிக்குவிப்பார். அவற்றில் ஒன்றிரண்டு தேறி விடும். ஆனால் தேறுவது மற்றும் தேறாமை குறித்து எந்த பதட்டமும் அவருக்கு இருக்காது. விக்கிரமாதித்யனின் கவிதைகள் ஆடு புழுக்கை போடுவதைப் போலிருக்கும். ஜெயமோகனோ யானை லத்தி போடுவதைப் போல் பாரம் பாரமாக இறக்குகிறார்.
ஜெயமோகன் எழுதும் எழுத்துக்கள் குறித்து எந்த பொறுப்பும் அவருக்கு இல்லை. எந்த விஷயம் குறித்தும் அடிப்படை தரவுகளை உரசிப் பார்த்தல் குறித்த அடிப்படை அறம் குறித்து அவருக்கு நம்பிக்கையிருப்பதாகத் தெரியவில்லை. இரண்டு உதாரணங்களைப் பார்ப்போம்.
பெரியார் குறித்த ஜெயமோகனின் அபிப்பிராயங்கள் மற்றும் அதற்கு ஆதாரமான கருத்துகள் குறித்து ஒரு ஆதாரபூர்வமான
மறுப்பு இது.
திராவிடர்கழகத்தில் சேர்ந்து ஒரு வருடமே ஆன, மிகச்சாதாரணமாக வீரமணி சொல்வதே வேதவாக்கு என்று நம்பிக்கொண்டிருக்கிற, ஒரு தி.க தொண்டனுக்குக் கூட தெரியும் குமரிமைந்தன் பெரியாரிஸ்ட் கிடையாது என்று. ஆனால் ஜெமோ எந்த வெட்கமும் இல்லாமல் இதைப் பதிந்து வைத்திருக்கிறார். இதற்கான மறுப்புகள் குறித்து அவர் எப்போதும் கவலைப்பட்டதில்லை. இதைப் பற்றி நாம் பேசினால் அதுகுறித்து எந்த கவலையுமற்று ‘அட்டாக் பாண்டி ஒரு காந்தியவாதியும் கூட’ என்று அடுத்த விஷயங்களைப் பேசி நகர்ந்து விடுவார்.
தேவர்ஜெயந்தி குறித்த அவரது கட்டுரையில் ‘நீதிக்கட்சி குற்றப்பரம்பரைச் சட்டத்தைப் பரப்பியது’ என்று எழுதியிருப்பார். இந்த கீழ்க்கண்ட கட்டுரை, அவருக்கான மறுப்பு இல்லை என்றாலும் நான் சமீபத்தில் படித்த மிகச்சிறந்த
கட்டுரை.
இதை எழுதிய அதி அசுரன் என்கின்ற தோழர்.தாமரைக்கண்ணன் ஒரு இலக்கியவாதி அல்ல. அவர் ஜெயமோகனின் ஒரு நாவலைக்கூட படித்திருக்கமாட்டார். பெரியார் திராவிடர்கழகத்தில் மாநில அளவில் பொறுப்பு வகிக்கும் அவர், தொடர்ச்சியாக களப்பணிகளில் ஈடுபட்டு வருபவர். தமிழகமெங்கும் இரட்டைக்குவளைகளைக் கணக்கெடுத்து அதற்கு எதிராக பெரியார் தி.க போராட்டம் நடத்தியது, குடியரசு தொகுப்பைக் கொண்டுவந்தது என பலவற்றில் அதி அசுரனின் பங்கு முக்கியமானது. சீமான், பசும்பொன் முத்துராமலிங்கம் சிலைக்கு மாலை போட்டது குறித்த சர்ச்சை எழுந்தபோது, கீற்றுக்கு அளித்த நேர்காணலில், “பெரியார் குற்றப்பரம்பரைச் சட்டத்திற்கு எதிராக எதுவும் செய்யவில்லை என்று முக்குலத்தோர் குற்றம்சாட்டுகிறார்கள்” என்று கூறியிருப்பார் சீமான். அதை மறுப்பதற்காக தனது களச்செயல்பாடுகளுக்கு மத்தியிலும் இவ்வளவு தரவுகளைத் திரட்டி தாமரைக்கண்ணனால் ஒரு கட்டுரை எழுதமுடிகிறது. ஆனால் ஜெயமோகன்....? அவருக்குத் தான் சொல்வது குறித்து ஆதாரபூர்வமாக நிரூபிக்க வேண்டிய எந்த அடிப்படை நேர்மையும் அறிவு நாணயமும் கிடையாது. கருத்துபொறுப்போ எழுத்துப்பொறுப்போ இல்லை. இப்படி பல விஷயங்களைச் சுட்டிக்காட்ட முடியும். ஜெயமோகன் உதிர்ப்பவை எல்லாம் மேலோட்டமான அபிப்பிராயங்கள்தான் என்பதற்கான உதாரணங்கள் அவரது வார்த்தைகளிலேயே உள்ளன.
/
ஒரு நாகரீக மனிதனைப்பொறுத்தவரை தலித்துக்கள் மீதான காழ்ப்போ விலக்குதலோ ஏற்கத்தக்கவை அல்ல என்ற நிலை இன்று உருவாகியிருக்கிறது. ஒரு சமூகத்தின் தார்மீகமான மையத்தில் உள்ளவர்கள் ஒன்றை ஏற்றுக்கொண்டால் காலப்போக்கில் மொத்த சமூகமும் அங்கே வந்துதான் ஆகவேண்டும். தலித் வெறுப்பு பிற்போக்கானது அசிங்கமானது ஆபத்தானது என்பதில் இன்று எவருக்கும் ஐயமில்லை.
இன்னமும் நம் சமூகத்தின் பெரும்பகுதி அங்கே வந்துசேரவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் வந்துகொண்டிருக்கிறது. அதிகபட்சம் ஒரு தலைமுறை ஆகலாம். ஒருவன் படிக்கும்தோறும் சிந்திக்கும் தோறும் இந்த வகையான காழ்ப்பிலிருந்து மீள்வான். மீள்வதைக் காண்கிறோம்
ஆனால் முற்போக்கான, பண்பட்ட, சமநிலையான, படித்த, நிதானமான, மனிதர்கள்கூட இங்கே பிராமண வெறுப்பை கக்கலாம் என்றாகியிருக்கிறது. பிராமண வெறுப்பைக் கக்கினால் உங்களை யாரும் பிற்போக்கானவர் என்றோ சாதிவெறிகொண்டவர் என்றோ சொல்லப்போவதில்லை. அது ஒரு வகையான முற்போக்காகவே இங்கே — தமிழகத்தில் மட்டும் – கருதபப்டுகிறது/ (அழுத்தம் என்னுடையது)
இது அரவிந்தன் நீலகண்டனின் ஒரு கடிதத்திற்கு ஜெயமோகன் அளித்த பதிலையொட்டி எழுந்த விவாதத்திற்கு ஜெமோவின் பதில் பின்னூட்டம். இது ஒரு வலதுசாரித் தன்மை வாய்ந்த வார்த்தைகள் என்பதையும் தாண்டி ‘தலித்துகள் மீதான வெறுப்பு கொஞ்சம் கொஞ்சமாக மாறிக்கொண்டிருக்கிறது’ என்னும் ஜெயமோகனின் வாதம் எவ்வளவு அரைவேக்காட்டுத்தனமானது என்பதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியா முழுக்க தலித் மக்களுக்கு எதிராக நிகழும் வன்முறைச் சம்பவங்கள் குறித்த புள்ளிவிவரங்களைக் காட்டியோ அல்லது ‘பிராமண வெறுப்பு’ குறித்த ஜெயமோகனின் கருத்துகளைச் சாதிவாரியாக அரசு மற்றும் தனியார்துறைகளில் அதிகமும் பங்குவகித்து வருபவர்கள் குறித்த சாதிவாரியான புள்ளிவிவரங்களைக் காட்டியோ இதனை மறுக்கலாம். ஆனால் பயன்...?
ஜெயமோகனுக்கு எப்போதும் உரையாடல்களை நிகழ்த்துவதிலோ அதனூடாக ஒரு சில நகர்த்தல்களை நிகழ்த்துவதிலோ நம்பிக்கையிருப்பதாக எனக்கு நம்பிக்கையில்லை. ரோசா வசந்த் ஜெயமோகன் குறித்த மேற்கண்ட உரையாடலின்போது சொன்ன வார்த்தைகள் இவை, ‘’நமக்கு குடிக்கணும், நண்பர்களோடு பேசணும், படிக்கணும். ஆனால் ஜெயமோகனுக்கு இதெல்லாம் கிடையாது போலிருக்கு. எழுதிக்கொண்டேயிருக்கிறார்”.
உண்மைதான் ரோசா. பிழைப்பிற்காய் வேலை செய்யலாம், குடிக்கலாம், வேட்டைக்காரன் படம் பார்க்கலாம், வெட்டுப்புலி நாவல் படிக்கலாம், ’அணுவளவும் பயமில்லை’யில் நீலிமாவைக் கண்டு ரசிக்கலாம். எழுதலாம், வாசிக்கலாம், சாத்தியப்பட்டவரையில் தனிப்பட்ட வாழ்க்கையில் பரிசோதனைகளை நிகழ்த்தலாம், எல்லோர் மீதும் அன்பைப் பொழியலாம்,. இந்த ஜெயமோகனோடு மல்லுக்காட்டும் கருமம் என்ன எழவிற்கு?
..