இதுதாண்டா சீமான்! - பல்லிளிக்கும் தமிழ்த்தேசியம்




















குத்தறிவு, இனவுரிமை, ஈழ ஆதரவு என்று கலந்துகட்டி மேடைகளில் பட்டையைக் கிளப்புபவர் இயக்குனர் சீமான். தமிழ்நாட்டில் சேகுவாரா டி ஷர்ட் விற்பனை அதிகரிப்பதற்கான காரணகர்த்தா. பெரியாரும் பிரபாகரனும்தான் சீமானின் இரு கண்கள். பிரபாகரன் எப்படியோ போகட்டும், ஆனால் பெரியார் பெயரைச் சொல்லி இதுவரை அசிங்கப்படுத்தி வந்த சீமானின் முகமூடி இப்போது கொஞ்சம் கொஞ்சமாய் கிழிந்து வருகிறது. தம்பி படத்தில் கதாநாயகனின் வீட்டில் பசும்பொன் முத்துராமலிங்கம் என்னும் சாதிவெறியனின் புகைப்படத்தை பெரியாரோடு மாட்டி பெரியாரை அசிங்கப்படுத்தியது, காங்கிரசை ஆதரித்து கடந்த பாராளுமன்றத்தேர்தலில் பரப்புரை செய்தபோது, ‘‘ஈனசாதிப் பயலா இருந்தா காங்கிரசுக்கு ஓட்டுப்போடு’’ என்று பரப்புரை செய்து தனது ஆதிக்கச்சாதித் திமிரை நிரூபித்தவர்தான் இயக்குனர் சீமான். சமீபத்தில் ‘புதியதலைமுறை’ இதழில் கல்லூரி மாணவிகள் சீமானுடன் கலந்துரையாடும் கட்டுரை ஒன்று வெளியாகியிருந்தது.

அந்த உரையாடலில் ‘‘தமிழியம் பற்றிப் பேசும் நீங்கள் ஏன் தலித்தியம் பேசுவதில்லை?’’ என்று ஒரு கேள்வி. ‘‘எங்களை ஏன் மீண்டும் சேரிக்குள் தள்ளுகிறீர்கள்?’’ என்று போலி ஆவேசம் காட்டியிருந்தார் சீமான். நேற்று (30.10.09) பசும்பொன் முத்துராமலிங்கத்தின் பிறந்தநாளை முன்னிட்டு மய்யநீரோட்ட இடதுசாரிகள் உள்பட ஓட்டுக்கட்சிகள் அவர் சிலைக்கு மாலை போட்டு மரியாதை செய்து தங்கள் ஆதிக்கசாதி விசுவாசத்தை வெளிப்படுத்தின. அதில் இந்த வருடம் மரியாதையின் புதுவரவு ‘தமிழ்த்தேசியத் தம்பி’, ‘பெரியாரின் பேரன்’ சீமான். நேற்று இரவு மக்கள் தொலைக்காட்சி செய்திகளில் பலரும் முத்துராமலிங்க சிலைக்கு மரியாதை செய்த காட்சி ஒளிபரப்பப்பட்டது. மதுரை கோரிப்பாளையம் முத்துராமலிங்க சிலையில் மேலிருந்து மாலை போட்டபடி சிரிக்கிறார் பெரியாரின் பேரன். அவருக்குப் பின்னால் எல்லோரும் பட்டை போட்டுக்கொண்டு நின்றிருக்க, கறுப்புச்சட்டையும் நெற்றியில் திருநீறுக்கீற்றுமாக அட்டகாசமாக சிரிக்கிறார் ‘பகுத்தறிவு இயக்குனர்’.

தமிழ்த்தேசியம் என்பது ஆதிக்கசாதிகளின் தேசியமே என்று மீண்டும் நிரூபித்த இயக்குனர் சீமானுக்கு நன்றிகள். இப்படித்தான் சிவாஜிலிங்கம் எம்.பி கோவையில் முஸ்லீம்களின் மீது வன்முறை புரிந்த இந்துமக்கள் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றி, தமிழீழம் கிடைக்க வேண்டி பிள்ளையாருக்குத் தோப்புக்கரணம் போட்டார். சீமான் முதல் சிவாஜிலிங்கம் வரை தமிழ்த்தேசியவாதிகள் தங்கள் அரசியல் நலனுக்காக அடிப்படைவாதச் சக்திகளோடு கைகோர்த்துக்கொள்ளத் தயங்காதவர்கள். சீமானையும் சிவாஜிலிங்கத்தையும் நெடுமாறனையும் தங்கள் ஆதர்சமாக முன்னிறுத்தும் தமிழ்த்தேசியவாதிகள், ‘அதிகாரத்தை நோக்கி உண்மைகளைப் பேசுவதாய்’ப் பாவனை செய்யும் கண்ணீர்த்துளிக் கவிஞர்கள் பதில் சொல்வார்களா?



எனது முத்துராமலிங்க எதிர்ப்பு கட்டுரைகளுக்கு....

http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_15.html

http://sugunadiwakar.blogspot.com/2007/11/blog-post_09.html