முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களுக்குத் தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் : போதுமா இவை ? அ.மார்க்ஸ்

                                                        
ஈழத் தமிழர்கள்  பிரச்சினையில் ஜெயலலிதாவிடம்  நிறையவே மாற்றங்களைக் காணமுடிகிறது. “நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதற்கும், கொலை கொள்ளைகள் பெருகியதற்கும் ஈழத்தமிழர்களே காரணம். அவர்கள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என ஒரு காலத்தில் சட்ட மன்றத்தில் முழங்கிய ஜெயா இன்று அகதி முகாம்களிலுள்ள ஈழத்தவர்களின் நலன் நோக்கில் பல புதிய அறிவிப்புகளைச் செய்துள்ளார். ஆளுனர் உரையிலேயே தமிழக மக்களுக்குச் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதற் கட்டமாக சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் முதியோர், ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள்,  மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான ஓய்வூதியத் திட்டங்கள் முகாம்களிலுள்ள தமிழர்களுக்கு விரிவுபடுத்தப் படுவதற்கான உத்தரவு ஆகஸ்ட் முதல் தேதியன்று இடப்பட்டது. இதன்படி முகாம்களிலுள்ள 5544 ஈழத்தமிழர்கள் மாதந்தோறும் 1000 இந்திய ரூபாய்களை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
ஆகஸ்ட் 4 அன்று வெளியிடப்பட்ட வரவு செலவு அறிக்கையில் மேலும் பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. முகாம்களிலுள்ள வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 25 கோடி ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு, 10,000 ரூபாய்கள் சுழல் நிதியுடன் கூடிய 416 சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், முகாம்களில் உள்ளவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.     குடும்பத் தலைவருக்கு மாததோறும் 400 ரூபாயாக இருந்த உதவித் தொகை இனி 1000 ரூபாயாக்கப்படும். வயதுவந்த இதர உறுப்பினர்களுக்கான தொகை 288லிருந்து 750 ஆகவும் பன்னிரண்டு வயதிற்குட்பட்டோர்களுக்கான தொகை 400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் மாதந்தோறும் அளிக்கப்பட்டு வந்த 12 கிலொ அரிசி (சிறுவர்களுக்கு 6 கிலொ), 2 கிலொ சர்க்கரை, 6 லிட்டர் கெரசின் முதலியன மாற்றமின்றித் தொடரும்.
ஜெயா அரசின் இத்தகைய அறிவிப்புகளின் பின்னணி என்ன, எத்தகைய  நோக்கங்களுக்காக ஜெயா காய்களை நகர்த்துகிறார் என்கிற கேள்விகள் அரசியல் ரீதியில் முக்கியமானவைதான் என்றபோதிலும் 1994 தொடங்கி ஈழ அகதிகளின் பிரச்சினைகளைக் கூர்மையாகக் கவனித்து வருகிறவன் என்கிற வகையில் இந்த அறிவிப்புகள் வரவேற்கத் தக்கவை என்பதில் அய்யமில்லை. பெரிய அளவில் முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடவடிக்கைகள் இவை என்ற போதிலும் இத்தகைய நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதுமில்லை. அடிப்படையான சில அணுகல் முறைகளிலேயே மத்திய மாநில அரசுகள் சில மாற்றங்களச் செய்தாக வேண்டும். அவை:
      1.அகதிகள் பிரச்சினயில்  இந்திய அரசு கொள்கை அளவில்                  மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்,
      2.இருபது அண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலேயே வாழ நேர்ந்துள்ளவர்கள் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் இந்தியக் குடிமக்களுடன் சம உரிமை அளிக்கும் முகமாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள்,
      3.முகாம்களில் வாழ்பவர்கள் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெறும் நோக்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்.
இவற்றைச்  சற்று விரிவாகப் பார்ப்போம் :
1994ல் புலம்  பெயர்ந்த தமிழர்கள் மாநாடொன்றைத்  திருச்சியில் நடத்தினோம். உலக அளவில் புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பல கோணங்களில் ஆய்வு செய்த அம்மாநாடு தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும் சிறப்பாகக் கவனத்தில் கொண்டது. அம்மாநாட்டு மலரில் நானெழுதியிருந்த கட்டுரையில் இரண்டு அம்சங்களை வலியுறுத்தியிருந்தேன். அவை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அவை: 1) அகதிகள் தொடர்பான ஐ.நா அவையின் 1951ம் ஆண்டு உடன்பாடு மற்றும் 1967ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை. இதன் விளைவாக அகதிகளை விதி முறைகளின்படி நடத்தாவிட்டாலோ, கட்டாயமாக வெளியேற்றினாலோ யாரும் கேட்க முடியாது. நீதிமன்றத்தையும் அணுக முடியாது. ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி சுமார் ஒரு இலட்சம் ஈழ அகதிகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட போது இதே காரணத்தைச் சொல்லி ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் இதில் தலையிட மறுத்தது குறிப்பிடத்தக்கது. 2) அகதிகள் மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பாக தேசியக் கொள்கை ஒன்றை இந்திய அரசு இதுவரை உருவாக்கவில்லைஇதன் விளைவாக வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகிற அகதிகளும் வெவ்வேறு மாநிலங்களில் புகல் அளிக்கப்படும்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் ஏற்றத்தாழ்வுடன் அமைகின்றன. காஷ்மீர் மற்றும் திபேத்திய அகதிகளைக் காட்டிலும் அலட்சியமாகவும் குறைவான வசதிகளுடனும் ஈழத் தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதற்கான பின்னணி இதுவே. பல்வேறு துறைகளில் புதிய தேசியக் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்திய அரசு உடனடியாக அகதிகள் மறுவாழ்வுக்கான தேசியக் கொள்கை ஒன்றை, இன்று அகதிகள் தொடர்பாக உலக அளவில் உருவாகியுள்ள மனிதாயக் கண்ணோட்டங்களை உள்ளடக்கி உருவாக்க வேண்டும். அத்தோடு அகதிகள் தொடர்பான ஐ.நா அவையின் பிரகடனம், விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றிலும் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும்.
தமிழகத்திலுள்ள 26 மாவட்டங்களில் உள்ள 113 முகாம்களில் ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்ற 2006ம் ஆண்டில் நான்காம் முறையாக ஈழத்திலிருந்து பெரிய அளவில் அகதிகள் வரத் தொடங்கிய சூழலில் 19 மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள 11 முகாம்களைத் தேர்வு செய்து பார்வையிட்டு அறிக்கை ஒன்றை அளித்தோம். முகாம்களில் நிலைமைகள் மிக மோசமாக இருந்தன. தங்குவதற்கு எந்த வகையிலும் தகுதியற்ற வீடுகள், குடிநீர், கழிப்பறை முதலிய மிக அடிப்படை வசதிகளும் இல்லாமை, கொடுக்கப்படும் உதவித் தொகை கால் வயிற்றையும் கூட நிரப்ப இயலாத நிலை, கடுமையான போலீஸ் கண்காணிப்பு, வயிற்றுப் பிழைப்புக்காக வெளியே வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கடும் சுரண்டல், மாலை ஆறு மணிக்குள் முகாம்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம், வேறு முகாம்களிலுள்ள உறவினர்களைச் சந்திக்க வேண்டுமானால் அநுமதிக்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம், குளிப்பதற்கும், பிற தேவைகளுக்காகவும் திறந்த வெளிகளைப் பயன்படுத்த நேர்பவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் எல்லாவற்றையும் அறிக்கையில் பட்டியலிட்டிருந்தோம்.
2008ல் மீண்டும்  நான், புதுவை மக்கள் உரிமை  கூட்டமைப்புத் தலைவர்  கோ. சுகுமாரன், பாரீசிலிருக்கும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் சுகன் மற்றும் சில மனித உரிமை அமைப்பினர் எல்லோரும் கீழ்ப்புதுப்பட்டு, குள்ளஞ்சாவடி, விருதாசலம் ஆகிய ஊர்களிலுள்ள முகாம்களைப் பார்வையிட்டோம். குள்ளஞ்சாவடி முகாமிலிருந்த குழந்தைகள் காப்பகம் இருந்த அவலத்தையும் அங்கிருந்த குழந்தைகள் பசியோடிருந்த நிலையையும் பார்த்த சுகன் அப்படியே தரையிலமர்ந்து அழத் தொடங்கிவிட்டார். முதன்முறை நாங்கள் சென்றபோது ‘ஆஃபர்’ என்கிற தொண்டு நிறுவனம் சத்து மாவு, சிறு தீனிகள் முதலியவற்றை குழந்தைகளுக்கு வழங்கிவந்தது. இன்று அது நிறுத்தப் பட்டுள்ளது. சென்ற வாரம் கீழ்ப்புதுப்பட்டு முகாமிற்கு நானும் சுகுமாரனும் சென்றிருந்தோம். இன்றும் அதே நிலைதான். இது குறித்து ஆஃபர் அமைப்பின் தலைவர் சதிரகாசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கான வெளிநாட்டு உதவி நின்றுபோனதால் அதைத் தொடர முடியவில்லை என்றார்.
கீழ்புதுப்பட்டு முகாமில் உள்ளவர்கள் 1990ல் வந்தவர்கள். பெரும்பாலும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலருக்கு இங்கு வந்தபின் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு இந்திய நாட்டுப் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே உள்ளது. இதை வைத்துக்கொண்டு அவர்கள் பாஸ்போர்ட் வாங்க முடியாது.  இங்கே பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமானால் சாதிச் சான்றிதழ் வேண்டும். அகதிகளுக்கான அட்டை வைத்திருப்போர் சாதிச் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்ற போதிலும் பல பள்ளிகளில் அது வற்புறுத்தப்படுகிறது. தவிரவும் உயர் கல்வியில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 சத இட ஒதுக்கீடும் தற்போது  நிறுத்தப்பட்டு விட்டது. எனவே ஈழ அகதி மாணவர்கள் இங்குள்ள வசதிபடைத்த முன்னேறிய பிரிவு மாணவர்களிடம் போட்டியிட்டே இடம் பிடிக்க முடியும். மேற்படிப்புக்குப் போகாமல் வேலைக்குப் போகலாம் என்றால் ஒட்டுனர் உரிமம் முதலானவை இவர்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்து வந்தது. ஆட்டோ ஓட்டுகிற பல இளைஞர்கள் உரிமம் இல்லாமல் கடும் போலீஸ் தொல்லைக்கு உள்ளாயினர். முகாமிலுள்ள ஆண்களோ, பெண்களோ வெளியே உள்ள அகதிகளையோ, இந்தியக் குடிமக்களையோ திருமணம் செய்து கொண்டால் அப்படித் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அகதிச் சான்றிதழ் கொடுப்பதில்லை. எனவே கணவர் அல்லது மனைவியுடன் முகாமில் வசித்தாலும் அகதி உதவிகள் எதையும் அவர்கள் பெறமுடியாது. அதேபோல சுய உதவிக் குழுக்களை முகாம்களில் உள்ளவர்கள் உருவாக்கி நடத்தினால் அவற்றை இங்குள்ள வங்கிகள் அங்கீகரிப்பதில்லை.
இன்னொரு அவலத்தையும் எங்களிடம் அவர்கள் முறையிட்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிச் சுடுகாடுகள் உண்டு என்பதை அறிந்திருக்கலாம். முகாம்களிலுள்ளவர்கள் யாரேனும் இறந்து போனால் இங்கே உள்ள சுடுகாடுகளில் புதைக்கவோ, எரிக்கவோ அனுமதிக்காத நிலையும் சில இடங்களில் இருந்தது. முகாம்கள் அனைத்தும் வருவாய்த்துறை மற்றும் உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரைச் சிறைச்சாலைகளாகவே இன்று வரை உள்ளன. அருகிலுள்ள முனிசிபாலிடி அல்லது நகரசபை வசதிகள், குடிநீர் உட்பட எதுவும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
மனித உரிமை  அமைப்புகள் கொடுத்த அழுத்தங்கள், ஆஃபர் போன்ற அமைப்புகளின் வேண்டுகோள்கள் ஆகியவற்றின் விளைவாக இன்று இந்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சென்ற அரசு வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் சில நூறு பேர்களுக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைத் தூதரகக் கிளை ஒவ்வொறு மாவட்டமாகச் சென்று முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ்கள் அளித்தது. ஆனால் அது முழுமை பெறுவதற்குமுன் பாதியிலேயே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்  போலீஸ் கெடுபிடிகளும் சற்றுக் குறைந்துள்ளது.
இப்படியான சில தற்காலிகத் தீர்வுகளாகவன்றி  முகாம்களிலுள்ள ஈழத்தமிழர்களின்  இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க  வேண்டுமானால் முகாம்களிலும் வெளியிலும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு உடனடியாக இரட்டைக் குடியுரிமை அளிக்கப்பட வேன்டும். அப்போது இதர இந்தியக் குடிமக்களுக்கான எல்லா உரிமைகளும், எல்லாச் சலுகைகளும் இவ்வாறான சிறப்பு ஆணைகளின்றி தானாகவே அவர்களுக்கும் கிடைத்துவிடும். இந்திய அரசு வெளி நாட்டிலுள்ள வசதிமிக்க இந்தியர்களுக்கெல்லாம் இரட்டைக் குடியுரிமை வழங்கும்போது ஏன் ஈழத் தமிழர்களுக்கு வழங்கக் கூடாது? ஒரு வேளை நாட்டில் நிலைமைகள் உண்மையிலேயே சீராகிவிட்டதாகக் கருதும் பட்சத்தில் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இலங்கைக் குடியுரிமையைப் பயன்படுத்தி நாடு திரும்பலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு முன் இரட்டைக் குடியுரிமைக் கோரிக்கையை முன் வைத்தது குறிப்பிடத் தக்கது. ஏனோ அவர் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தவில்லை.
முகாம்களில் உள்ளவர்களுக்கும் இங்குள்ளவர்களுக்கும் பிரச்சினை நேரும்போதெல்லாம் போலீசாகட்டும் வேறு யாராக  இருக்கட்டும் அகதித் தமிழர்களைச் சமமாக நடத்துவதில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் கீழ்ப்புதுப்பட்டிலுள்ள புது முகாமிலிருந்து மூன்று வயதுக் குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போது குற்றவாளி தெரிந்திருந்தும் உள்ளூர் போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. முகாமிலிருந்தவர்கள் சாலை மறியல் செய்த பின்பும் நடவடிக்கையில்லை. சுகுமாரன் போன்றோர் தலையிட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. “என்ன இருந்தாலும் நாங்க அகதிங்கதானே” என்றார் ஒரு மூதாட்டி. இரட்டைக் குடியுரிமை மேற்குறிப்பிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்.
‘சிறப்பு  முகாம்கள்’ என்ற பெயரில்  தமிழக அரசு இரண்டு நிழற்  சிறைகளை நடத்தி வருகிறது. இயக்கத்தவர்கள் எனச் சந்தேகப்படுபவர்கள் இந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஒரு முறை இதில் அடைக்கப்பட்டால் பின் வெளியே வருவது அரிது. இன்னும் இந்த இரண்டு சிறைகளில் ஒன்றில் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்து பாதுகாப்புப் பிரச்சினை ஒன்றும் இல்லாத நிலையில் சிறப்பு முகாம்களையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து அங்குள்ளவர்களைச் சாதாரண முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்.
2010 ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி தமிழகத்திலுள்ள 113 முகாம்களிலும் 19,916 குடும்பங்களச் சேர்ந்த 73,251 பேர்கள் இருந்தனர். முகாம்களுக்கு வெளியே 11,478 குடும்பங்களைச் சேர்ந்த 32,242 பேர்கள் இருந்தனர். இவர்களில் சுமார் 1000க்கும் குறைவானவர்கள் போருக்குப்பின் நாடு திரும்பியுள்ளதாகவும்  2800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் இலங்கைப் பிரதிநிதி மிஷேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார். இங்குள்ளவர்களில் முகாம்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே மாதாந்திர உதவித் தொகைகள் தரப்படுகின்றன என்பது நினைவிற்குரியது. நாங்கள் முதன்முறை (2006) முகாம்களுக்குச் சென்றபோது குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் வெறும் 200 ரூபாய்களும், இதர வயது வந்தோருக்கு 144 ரூபாய்களும் மட்டுமே வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட அரிசி முதலான பொருட்களும் தரக் குறைவாகவும் அளவு குறைவாகவும் இருந்தன. மிக விரிவான விளக்கங்களுடனும், பரிந்துரைகளுடனும் எங்கள் அறிக்கை இருந்தது. வேறு சிலருங்கூட இந்த உதவித் தொகையை அதிகரிக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர். புதிதாகப் பதவி ஏற்றிருந்த கருணாநிதி அரசு இந்த உதவித் தொகைகளை இரட்டிப்பாக்கியது. அதை வரவேற்ற நாங்கள் எனினும் இது யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டதுபோலுள்ளது என்றோம். குடும்பத் தலைவர், மற்றவர்  என்று வேறுபாடில்லாமல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் குறைந்தபட்சம் 1050 ரூபாய்களாவது கொடுக்க வேண்டுமெனக் கோரினோம். இது 2006ல். இப்போதைய விலைவாசிக்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய்களாவது ஒவ்வொருவருக்கும் அளிக்க வேண்டும்.  குழு ஒன்றை அமைத்து எல்லா முகாம்களுக்கும் சென்று பார்த்து வீடு, கழிப்பிடங்கள், குடிநீர், மின்சாரம் முதலான எல்லா வசதிகளும் குறை நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.
இவை தவிர முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்குவது, கடவுச்சீட்டு வழங்குவது  முதலான கடமைகளைச் செய்ய  இலங்கை அரசை வற்புறுத்தும்  பணியை இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகளும், தமிழர் கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
புலம் பெயர்ந்து  வந்து இந்தியா போன்ற  நாடுகளில் அகதிகளாக வதிய நேர்ந்த யாருக்கும் அவர்களின்  உச்சபட்சக் கோரிக்கை நாடு திரும்புவதாகத்தான் இருக்கும். நாங்கள் சந்தித்த, சந்திக்கிற ஒவ்வொரு ஈழத் தமிழ் அகதியும் அதைத்தான் சொன்னார்கள், சொல்கிறார்கள். அத்தகைய நிலை ஏற்படும்வரை முகாம்களிலுள்ள ஈழ அகதிகள் குறைந்தபட்ச நிம்மதியுடன் வாழ இந்த அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

                                                                                                                                                             

  

முருகன், சாந்தன், பேரறிவாளன்: மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றி அ.மார்க்ஸ்


ராஜீவ்  காந்தி கொலை வழக்கில் மரண  தண்டனை விதிக்கப்பட்டிருந்த  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரது கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு, அவர்களத் தூக்கில் தொங்கவிட நாளும் (செப்டெம்பர் 9) நிர்ணயிக்கப் பட்ட சூழலில் தமிழகத்தில் இதற்கெதிராக வெடித்த போராட்டம் இன்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உயர் நீதிமன்றம் அவர்களைத் தூக்கிலிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. அவர்களது மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மத்திய, மாநில அரசுகளுக்குப் பதிலளிக்க இரண்டு மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சுமார் ஒரு மாத காலமாக, பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருந்த போதெல்லாம் மௌனம் காத்து வந்த முதல்வர் ஜெயலலிதா, கருணை மனுக்களை மறு பரிசீலனை செய்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க குடியரசுத் தலைவரை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்றை சகல கட்சி ஆதரவுகளுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.
இது ஒரு  தற்காலிகமான வெற்றிதான் என்றபோதிலும் வழக்கின் முடிவு மூவரின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாகவே அமையும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. இந்த வெற்றிக்குப் பின்னணியாகக் கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி அமைகிறது.
மத்திய  அரசைப் பொருத்தமட்டில் அது  இந்த மூவரைத் தவிர, பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண  தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவையும்  நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தது. எனினும் முருகன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் மட்டுமே உடனடியாக நிராகரிக்கப்பட்டன. இப்படியான ஒரு முடிவை குடியரசுத் தலைவர் ப்ரதீபா படீல் தன்னிச்சையாக எடுத்திருப்பார் எனச் சொல்ல முடியாது. சோனியாவுக்கு மிகவும் விசுவாசியான ப்ரதீபா, முந்தைய சில குடியரசுத் தலைவர்களைப் போல சுயேச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் அல்ல. ஆக, அப்சலின் கருணை மனுவை நிறுத்தி வைத்து மற்றவர்களின் மனுவை நிராகரித்த முடிவு சோனியா, மன்மோஹன், சிதம்பரம் என்கிற மட்டத்தில் எடுக்கப்பட்டதாகவே கருத இடமுண்டு. அப்சல் குருவின் மீதான வழக்கு முழுமையாக விசாரிக்கப்படவில்லை, தன்னைத் தற்காத்துக் கொள்ள அவருக்கு முழுமையாக வாய்ப்பளிக்கப் படவில்லை என்பது மனித உரிமை அமைப்புகளின் குற்றச்சாட்டு. தவிரவும் தண்டனையை உறுதி செய்த நீதிபதி ‘சமூகத்தின் கூட்டு மனத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காக’ இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டது இன்றுவரை கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஆனால் இந்தக் காரணங்களுக்காக அவரது கருணை மனு நிராகரிப்பு ஒத்தி வைக்கப்படவில்லை. மாறக, “அப்சலைத் தூக்கிலிட்டால் காஷ்மீர் மாநிலமே பற்றி எரியும்” என காஷ்மீர் முதல்வர் ஒமர் அதுல்லா எச்சரித்ததன் விளைவாகவே இன்று அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அப்படியெல்லாம் ஒன்றும்  நடக்காது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஈழ ஆதரவு அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றோடு  எதிர்ப்பு நடவடிக்கைகள் நின்றுவிடும் எனவும், ஜெயலலிதா எக்காரணம் கொண்டும் மரண தண்டனைக் குறைப்பை ஆதரிக்க மாட்டார் எனவும் மத்திய அரசு உறுதியாக நம்பியது. தவிரவும் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மனங்களை இயற்றியதன் மூலம் ஈழ ஆதரவு அமைப்புகள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மத்தியில் ஜெயா ஒரு நாயகியாக வலம் வரும் நிலைக்கு இதன் மூலம் ஒரு ‘செக்’ வைக்கவும் அது நினைத்தது.
மத்திய  அரசின் இரு நம்பிக்கைகளிலும் உண்மைகள் இருக்கவே செய்தன. தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கான எதிர்ப்புகளை தமிழ்த் தேசிய  அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்புகள், நக்சல்பாரி அரசியல் சார்ந்த  குழுக்கள் ஆகியனவே முன்னெடுத்தன. முருகன் உள்ளிட்ட மூவரின்  மரண தண்டனையை மட்டுமின்றி, மரண தண்டனையையே ஒழிக்க வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வரும் எங்களைப் போன்ற மனித உரிமை அமைப்புகளும் களம் இறங்கின. மனித உரிமை அமைப்புகளைப் பொருத்த மட்டில் அவைகளுக்குப் பின்னால் பெரிய ஆள் பலம் இல்லாத போதும் கருத்தியல் மட்டத்தில் அவற்றிற்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. இவை தவிர தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ஒன்றும் களம் இறங்கவில்லை. மாநில அளவுக் கட்சிகளில் எதிர்பார்த்தது போல பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன மட்டுமே தீவிர எதிர்ப்புகளில் இறங்கின.
அவசர கதியில்  தூக்கு நிறைவேற்றத்தை நோக்கி நிகழ்வுகள் நகர்ந்தபோது போராட்டம் தீவிரம் அடைந்தது. எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய அளவில் ஊடக ஆதரவு இருந்தது. காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் வலுமிக்க சக்தியாக இன்று தமிழகத்தில் உருவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது. தமிழகமெங்கும் எதிர்ப்பு அலைகள் பல்வேறு மட்டங்களில் எழுந்தன. மூன்று பெண் வழக்குரைஞர்களின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் எதிர்ப்பியக்கத்திற்கு இன்னொரு பரிமாணத்தைச் சேர்த்தது. மாணவர்கள் ஆங்காங்கு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். சேலம், கோவை போன்ற இடங்களில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். வழக்கம்போல வழக்குரைஞர்களின் ஆதரவும் பெரிய அளவில் இருந்தது. இந்நிலையில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த செங்கொடி தீக்குளித்த போது போராட்டம் இன்னொரு திருப்பு முனையை எட்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டி உருவானது போன்ற சூழல் மீண்டும் உருவாகக் கூடிய நிலை ஏற்பட்டது. எனவே காஷ்மீரே பற்றி எரியும் என்று சொன்ன அளவிற்கு இங்கு நிலைமை உருவாகாவிட்டாலும், எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய எதிர்ப்புகள் உருவாகவே செய்தன. 
ஜெயாவைப்  பொருத்த மட்டில் அவர் இயல்பில் மரண தண்டனைக்கு ஆதரவானவர். குற்றம், தண்டனை, அரசதிகாரம் முதலான அம்சங்களில் ரொம்பவும் பழமைக் (conservative) கருத்துக்களை உடையவர். நளினியின் மரண தண்டனைக் குறைப்பிற்கே எதிர்ப்புக் காட்டியவர். “உங்கள் கணவருடைய கொலை என்கிற ரீதியில் பிரச்சினையை அணுகக் கூடாது. ஒரு தேசத் தலைவரைக் கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டக் கூடாது” என சோனியாவிடமே சீறியவர். தண்டனைக் குறைப்பிற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை அவரை நோக்கித் தமிழ் அமைப்புகளால் வைக்கப்பட்ட போது இறுக்கமான மௌனமே பதிலாக அமைந்தது. சட்ட மன்றத்தில் இப்பிரச்சினையை டாக்டர் கிருஷ்னணசாமி எழுப்ப முனைந்தபோது அனுமதிக்கப்படவில்லை. அவர் வெளிநடப்புச் செய்தார். இது தொடர்பாக நெடுமாறன் முதலானோர் ஜெயாவைச் சந்திக்க முயன்றபோது இன்றுவரை அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில்தான்  தண்டனைக் குறைப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனச்  சொல்லி கருணநிதி, காயை ஜெயா பக்கம் நகர்த்தினார். வேறு வழியில்லாமல் ஜெயா பேச வேண்டியதாயிற்று. தண்டனைக் குறைப்பிற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது எனச் சென்ற 29ந் தேதியன்று அவர் கைவிரித்தபோது தமிழ் தேசிய இயக்கங்கள் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாயினர். அப்போதுகூட அவர் தண்டனைக் குறைப்பில் தனக்கு உடன்பாடு உண்டு, அதிகாரந்தான் இல்லை என ஒப்புக்காகக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. இறுதி அதிகாரம் மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றபோதிலும் அதற்கான அழுத்தத்தை மாநில அரசு கொடுக்க முடியும். கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னும் கூட மாநில அரசு முயற்சித்து தூக்கு ரத்தான வரலாறு உண்டு என்கிற கருத்தை அவர் கண்டு கொள்ளவில்லை.
எனினும் அடுத்த நாள் காலை தண்டனைக் குறைப்பு குறித்து அவரே ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார். இதன் மூலம் அவர் காயை மத்திய அரசை நோக்கி நகர்த்தியுள்ளார். ஈழ மற்றும் தமிழ் தேச ஆதரவு சக்திகளின் மத்தியில் மீண்டும் நாயகி ஆகியுள்ளார். அதே நேரத்தில் மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கருத்து ஏதும் சொல்லவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டு கருணை மனுக்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அளவோடு தீர்மானம் நின்றுள்ளது.
எப்படியோ  மத்திய அரசைப் பொருத்த மட்டில்  அதன் நோக்கம் நிறைவேறவில்லை. தீர்மானம் இயற்றியபோது சட்டமன்றத்துக்குள் அமைதி காத்த காங்கிரஸ் கட்சியினர் வெளியில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றத் தீர்மானம் எங்களைக் கட்டுப் படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை  அணுகி தண்டனை நிறைவேற்றத்தை  நிறுத்தி வைக்கும் முயற்சிகளும் கூடவே நடைபெற்றன. புகழ்பெற்ற வழக்குரைஞர்கள் ராம் ஜேத்மலானி, காலின் கொன்சால்வ்ஸ், வைகை ஆகியோர் மூவருக்காகவும் ஆஜராயினர். மரண தண்டனை அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.  குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்த நீண்ட கால தாமதத்தைக் கணக்கில் கொண்டு தூக்கை நிறுத்தி, ஆயுள் தண்டனையாக அதைக் குறைக்க வேண்டும் என்பதே வழக்குறைஞர்களின் வாதம். ஏற்கனவே குறைந்த பட்சம் மூன்று வழக்குகளில் நீண்ட கால தாமதத்தின் அடிப்படையில் மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இவ் வாதத்தை ஏற்று மனுவை அனுமதித்துள்ளது.
எனினும் “குற்றத்தின் தன்மை, சமகாலச்  சமூகத்தில் இத்தகைய தண்டனைக் குறைப்பு ஏற்படுத்தக் கூடிய  பாதிப்பு, மீண்டும் இது போன்ற  குற்றச் செயல்கள் நடைபெறும்  வாய்ப்பு ” ஆகியவற்றைக்  கணக்கில் கொண்டு கால தாமதத்தைப் பொருட்படுத்தாமல் தண்டனையை நிறைவேற்றலாம் என்கிற கருத்தையும் உச்ச நீதிமன்றம் முன்னதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நீதிமன்றம் எப்படியும் தீர்ப்பளிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு, குறிப்பாக இந்தப் பிரச்சினையை ஒட்டி ஏற்பட்டுள்ள எழுச்சி, ராஜீவ் கொலையில் கொலையை நடத்தியவர்களாகக் கருதப்படுபவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இன்று மரணித்துவிட்ட நிலையில் உடந்தையாய் இருந்தவர்கள் எனக் கருதப் படுபவர்களுக்கு இத்தகைய உச்சபட்ச தண்டனை தேவைதானா என்பது போன்ற கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற காரணங்களைப் புறக்கணித்துவிட்டு கால தாமதத்தைக் கணக்கில் கொண்டு மரண தண்டனை குறைக்கப் படுவதற்கான வாய்ப்பே அதிகமுள்ளது.
அப்படி  நடக்கும் பட்சத்தில் மரண  தண்டனை ஒழிப்பை நோக்கிய  பயணத்தில் இன்னொரு கல்லைக்  கடந்த நிலை ஏற்படும். சட்ட வரிகள் எப்படி அமைந்த போதும் கால வளர்ச்சியினூடாக அதற்கான  விளக்கங்கள் மாறி வருகின்றன. மரண தண்டனை காலங்காலமாக  இருந்து வருகிறது. எனினும் அது இன்றைய வடிவில் சட்டப் புத்தகங்களில் ஏற்றப்பட்டது 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில்தான். அதன்பின் ‘அரிதிலும் அரிதான’ குற்றங்களில் மட்டுமே மரணதண்டனை என்கிற விளக்கம் உருவானது. பின்னர் கால தாமதத்தைக் கருதி நீதிமன்றம் நினத்தால் தண்டனையக் குறைக்கலாம் என்றானது. இன்று மூவரின் மரண தண்டனையும் குறைக்கப்படும் பட்சத்தில் எந்த வழக்காயினும் காலதாமதம் ஆயின் தண்டனை நிறைவேற்றல் சாத்தியமே இல்லை என்கிற நிலை உருவாயின் அது வரவேற்கத் தக்கதே.
இன்று உருவாகியுள்ள எழுச்சி மற்றும் விழிப்புணர்வு  ஆகியன  மரண தண்டனையை முற்றாக  ஒழிக்கும் நிலையை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால்  மூவரின் தண்டனைகளும் குறைக்கப்பட்ட கையோடு மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் ஓய்ந்து விடக்கூடிய வாய்ப்பே அதிகமுண்டு.

இந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே அ.மார்க்ஸ்


இந்திய  அளவில் இன்றைய பேச்சு அண்ணா  ஹஸாரேதான். பத்திரிக்கைகளைப் புரட்டினால், தொலைக்காட்சியைத் திறந்தால், நகர வீதிகளில் நடந்தால் எங்கும் ‘அண்ணாஜி’தான். சென்னை வீதிகளில் இளைஞர்கள் மூவண்ணம் தீட்டிய முகங்களுடன் மூலைக்கு மூலை அண்ணாஜியின் போஸ்டர்களைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறார்கள். கல்லூரிகளில் மணவர்கள் மூவண்ணக் கொடிகளுடன் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அண்ணாவிடம் சமரசமாகி அவரது உண்ணாவிரதத்தை நிறுத்தாவிட்டால் கீழே குதித்துச் சாவேன் என உயரமான கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு ஒரு பையன் மிரட்டி ஊடகங்களில் இடம் பிடிக்கிறான்.
இன்னொரு பக்கம் ‘ட்விட்டர் அப்டேட்கள்’, குறுஞ்செய்திகள் இப்படியாக  அண்ணாவின் போராட்டத்திற்கு  ஆதரவு திரட்டப்படுகிறது. நகர்களெங்கும் தொங்குகிற ஆயிரக்கணக்கான ‘ஃப்ளெக்ஸ் போர்ட்கள்’ இந்த ஆதரவு இயக்கங்களுக்கு நிதி ஒரு பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
ஊழல் ஒழிப்புப்  போராட்டத்தில் அண்ணா குழுவிற்கு (டீம் அண்ணா) ‘வெளிவட்டத்தில்’ நின்று ஆதரவளித்து வருகிற அருணா ராய், ஹர்ஷ் மாந்தர் போன்றோர்,  “கோரிக்கை எல்லாம் நியாயந்தான். ஆனால் அதற்காக இத்தனை கெடுபிடிகள் தேவை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் நம்முடைய கருத்து மட்டுமே சரி என்பதாகக் கருதி இந்த அளவிற்கு நெருக்கடி கொடுப்பது தவறு” எனச் சொன்னவுடன், ‘உள்வட்டத்தில்’ இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர், “நாங்கள் எந்தக் கருத்தையும் யார் மீதும் திணிக்கவில்லை என்பதற்கு மக்கள் அளிக்கும் பேராதரவே சாட்சி” என அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர்.
அண்ணா ஹஸாரேக்கு  ஆதரவாக இன்று பெரிய அளவில் இந்தியாவின் நடுத்தரவர்க்கம்  திரண்டு நிற்கிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு இன்று நடத்தும் ‘பச்சை வேட்டை’, விவசாயிகள் தற்கொலை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மதக் கலவரத் தடுப்புச் சட்டம், மரண தண்டனை ஒழிப்பு…என எல்லா அரசியல் பேச்சுக்களையும் ஓரங்கட்டி, ‘ஜன் லோக்பால்’ என்னும் ஒரே முழக்கத்தை நடுநாயகமாக்கிவிட்ட இந்த ஆதரவுப் படையினர் யார்? இவர்களின் வர்க்க கருத்தியற் பின்னணி என்ன?
போரட்டக்  கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு  வந்து நிற்கும் மாணவர்கள், இளைஞர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் முன்னணியில் நிற்கும் ஆதரவு சக்திகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்தான். இந்திய மக்கள் தொகையில் 30 சதம் வரை நடுத்தரவர்க்கதினர் உள்ளதாகக் கணக்கீடுகள் சொல்கின்றன. இவர்கள் ஒருபடித்தானவர்கள் அல்ல. பலதரப்பட்ட பின்னணி உடையவர்கள். எனினும் இவர்களுக்கிடையில் பல பொதுமையான அம்சங்களும் உண்டு. இவற்றில் முதன்மையானது இன்றைய ஆட்சி முறையையும் நிறுவனங்களையும் பெரிய விமர்சனமின்றி நம்புவது. அடுத்து இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற கருத்தில் ஆட்சியாளர்களுடன் ஒத்துப் போவது. ஷாப்பிங் மால்கள், நால்வழிச் சாலைகள், மெட்ரோ ரயில்கள், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் பெருமையுறுவது. இவர்களின் ஒரே குறை இத்தகைய வளர்ச்சிக்குத் தடையாய் இங்கே லஞ்சமும் ஊழலும் இருக்கிறதே என்பதுதான்.
நடுத்தர வர்க்க மதிப்பீடுகளில் இன்று  மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதலான அரசு உயர் பதவிகளை லட்சியமாகக் கொண்டிருந்த இவர்களின் இன்றைய கவனம் கார்பொரேட் உயர் பதவிகளில் குவிகிறது. நாராயண மூர்த்தியும் நந்தன் நீல்கெய்னியும் தான் இன்று அவர்களின் ‘ரோல் மாடல்’கள். மார்க்சீயம், பெரியாரியம், அம்பேத்கரியம், மொழி வழித் தேசீயம் இவைகளிலிருந்து விலகியிருப்பது மட்டுமின்றி சாதி, மத அடிப்படையிலான அரசியல்களும்கூட காலத்துக்கு ஒவ்வாது என்பது இவர்களின் கருத்து. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. தாங்கள் விரும்பும் அரசியல் மாற்றங்களை செயல்படுத்த நீண்டகால அணிதிரட்டல்கள், அரசியல் செயல்பாடுகள், ஆயுதப் போராட்டங்கள் முதலியன தேவையில்லை, இவை தேவையற்ற விரயங்களுக்கே இட்டுச் செல்லும் என்பது இவர்களின் உறுதியான கருத்து.
இந்த இடத்தில்தான் காந்தி குல்லாயுடன் காட்சியளிக்கும்  அண்ணா ஹஸாரே இவர்களுக்குப்  பொருத்தமான தலைவராகிவிடுகிறார். யார் இந்த அண்ணாஜி? மஹாராஷ்ட்ர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இம் முன்னாள் இராணுவ வீரர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வது: 1965 இந்திய- பாகிஸ்தான் போரின்போது ‘க்ன்வாய்’ ஒன்றில் சென்று கொண்டிருந்தாராம். திடீரென எதிரிகள் பொழிந்த குண்டுகளில் எல்லோரும் செத்துப் போனார்களாம்- இவரைத் தவிர. “நம்மை மட்டும் கடவுள் ஏன் விட்டுவைக்க வேண்டும்? ஆண்டவன் நம்மிடம் எதையோ எதிர்பார்க்கிறான்” என்றுணர்ந்த அண்ணா, லஞ்ச ஊழல் முதலானவற்றை ஒழித்து மக்களை உய்விக்க விரதம் பூண்டாராம்.
இராணுவத்தில்  கிடைத்த ஓய்வு ஊதியப் பலன்களைக்  கொண்டு, சொந்த மாவட்டத்திலுள்ள  ‘ராலேகான் சித்தி’ என்கிற கிராமத்திலிருந்த கோவிலொன்றைப் புதுப்பித்து அதையே தன்  வாழ்விடமாக மாற்றிக்கொண்டார். ஏகப்பட்ட எளிமையான, ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து ஒரு முன்னுதாரணமான அற ஆளுமையாக ( Moral Authority) மக்கள் மத்தியில் உருப்பெற்றார். மழை குறைவான பஞ்சப் பிரதேசமான ராலேகான் சித்தி  கிராமத்தை சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்ட செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றிய வகையில் இன்று அவர் மிகப் பெரிய புகழுக்குரியவராகியுள்ளார். பத்ம பூஷன் முதலான பல தேசிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவரது முயற்சியை மாதிரியாகக் கொண்டு கிராம வளர்ச்சித் திட்டமொன்றை மஹாராஷ்ட்ர அரசு உருவாக்கியுள்ளது.
தமது மராட்டிய தேசியம் குறித்த பெருமை மிக்கவர்கள் மஹாராஷ்ட்ர மக்கள். பேஷ்வா ஆட்சி என்ற இந்துத்துவக் கோரிக்கை 19ம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற மாநிலம் அது. இந்த தேசீய- பிராந்தியப் பெருமையே பின்னர் சிவசேனா போன்ற வலதுசாரிப் பாசிச இயக்கங்களின் ஊற்றுக்கண்ணாய் அமைந்தது. சாதிக் கொடுமைகளுக்கு எதிரான பூலே மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள் உருவனதும் இம்மண்ணில்தான். அரசு உதவியை மட்டுமே நம்பியிராமல், மக்கள் தாமே ‘சிரமதானம்’ மேற்கொண்டு கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வழக்கம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உண்டு. இந்த மரபைப் பின்பற்றி மக்களைத் திரட்டி மழை நீரைத் தேக்குகிற சிற்றணைகளைக் கட்டி அவர்களின் வறுமையைப் போக்கியதோடு, பள்ளி, விடுதி எல்லாவற்றையும் உருவாக்கி மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டார் அண்ணா. இன்று அங்கே அவர் வைத்ததுதான் சட்டம். இவ்வாறு உருவான மரியாதையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர் தொடர்ந்து அந்தக் கிராமத்தை ஆண்டு வருகிறார்.
ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் அண்ணா, தேர்தல்களும் அரசியல் கட்சிகளும் கிராம ஒற்றுமையைக் குலைத்துவிடும் என இரண்டையும் அண்ட விடுவதில்லை. கடந்த 35 ஆண்டுகளாக அங்கே கிராம சபைகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. அண்ணா சொல்பவர்களே தலைவர்கள். அப்புறம் அங்கே திரையரங்குகள் கிடையாது. குடித்துவிட்டு கிராமத்திற்குள் நுழைபவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்படுவார்கள். குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம். கோயிலில் வைத்து தெய்வ சாட்சியாகவே முடிவுகள் எடுக்கப்படும்.
அந்த கிராமத்தில்  தங்கி ஆய்வு செய்த முகில் சர்மா என்கிற ஆய்வாளர் தலித்கள் மற்றும் பெண்களின் நிலைகளில்  பாரிய மாற்றங்கள் ஏதும்  நிகழ்ந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காடுகிறார். தற்போது  அண்ணா முன் மொழிகிற லோக்பால் மசோதா அதிகாரங்கள் பெரிதும் மையப்படுத்தப்பட்ட ஒரு  ‘சூப்பர்’ அதிகார அமைப்பாக இருக்கும் எனவும், காந்தியடிகள் கனவு கண்ட அதிகாரப் பரவலுக்கும்  அண்ணாவின் அணுகல்முறைகளுக்கும்  எள்ளளவும் தொடர்பில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக் கடுந்தண்டனையைப் பரிந்துரைக்கிறது இவரது மசோதா. ஒரு கூட்டத்தில் லஞ்சம் வாங்குபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்றார் அண்ணா. இது உன்களின் காந்தியக் கொள்கைக்கு விரோதமில்லையா எனக் கேட்டபோது, “ அதுதான் சொல்றேன். நமக்கு கந்தி மட்டும் போதாது. நமது லட்சிய மாதிரியா சிவாஜியும் இருக்கணும். அப்படித்தான் ஒரு முறை லஞ்சம் வாங்கின படேல் ஒருத்தரோட கையை சிவாஜி வெட்டினார்” என்று பதிலுறைத்தார். ஊழல் பேர்வழிகளின் கையை வெட்டணும், தலையை வாங்கணும் என்றெல்லாம் அவர் சொல்வது ஏதோ கோபத்தில் மட்டுமல்ல. அண்ணாவைப் பொருத்த மட்டில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமலிருந்தால் போதும். மற்றபடி மதவாதம், தீண்டாமை, உலகமயம் இவையெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. அதனால்தான் அவர் கூசாமல் நரேந்திர மோடியை ‘நல்ல நிர்வாகி’ எனப் பராட்டினார்.
அண்ணா ஹஸாரேயின்  உள் வட்டத்தைச் சேர்ந்த  சாந்தி பூஷன், பிரசாந்த்  பூஷன், சந்தோஷ் ஹெக்டே மூவரும்  நீதித் துறையைச் சார்ந்தவர்கள். முதலிருவரும் வழக்குரைஞர்கள். மூன்றாமவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் அலகாபாத் நீதி மன்றத் தீர்ப்பால் பதவி இழக்க இருந்த இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை அறிவித்து நீதித் துறையை ஒடுக்கித் தன் வழிக்குக் கொண்டு வந்த கதை நினைவிருக்கலாம். அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளுக்குப் பதவி உயர்வை மறுத்து, கீழே இருந்தவர்களை மேலுக்குக் கொண்டு வந்தார் இந்திரா. அப்படிப் பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான கே.எஸ். ஹெக்டேயின் மகன்தான் சந்தோஷ் ஹெக்டே. நெருக்கடி காலம் முடிந்து ஜனதா ஆட்சி வந்தபோது மீண்டும் நீதித்துறையைப் பலப்படுத்தி மேலுயர்த்துவதற்கென சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டவர்தான் சாந்தி பூஷன். அவரது மகன்தான் பிரசாந்த் பூஷன்.
உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து நீதித் துறையை பலப்படுத்தியதோடு மேலும் இரு மாற்றங்களை அவர் செய்தார். 1) பொது நல வழக்கு ( public interest litigation) அறிமுகப்படுத்தப் பட்டது. யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படுகிற பிறருக்காக அரசை எதிர்த்து வழக்குப் போடலாம். 2) அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் என்பது உணவு, கல்வி, இருப்பிடம், தூய்மையான சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கும் என விளக்கமளித்தது. இந்த அடிப்படையிலேயே இன்று பொது நல வழக்குகள் மூலமாக அழுத்தம் கொடுத்து கல்வி மற்றும் உணவு உரிமைச் சட்டங்களெல்லாம் இயற்றப்பட்டுள்ளன.
உள்வட்டத்தில் உள்ள இன்னொருவர் அர்விந்த்  கெஜ்ரிவால். இவர் ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி. இவர் பங்கு பெற்றுள்ள தொண்டு நிறுவனம் இச் சட்டத்தின் மூலம் பெற்ற பல்லாயிரக்கணக்கான தகவல்களைத் தொகுத்து ஆய்வு செய்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்மூலமாக இவர்களுக்கு ஏராளமான வெளிநாட்டு மற்றும் கார்பொரேட் நிறுவன உதவிகள் கிடைக்கின்றன என்றும், இந் நிறுவனங்களில் பல இந்தியாவின் கனிவளங்களைக் கொள்ளை அடித்து, சுற்றுச் சூழலை அழிப்பவை எனவும் குற்றம் சாட்டுகிறார் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய்.
ஆக நீதிமன்றங்கள், இருக்கிற சட்டங்கள் மற்றும் புதிதாய் இயற்றப்படும் சட்டங்கள் முதலானவற்றின் மூலமாகவே நாட்டின்  எல்லாக் குறைகளையும் போக்கி, சுபிட்சத்தை உருவாகிவிடமுடியும் என்கிற ஒருவகைச் சட்டவாதத்தை நம்புகிற நடுத்தர வர்க்க மனநிலைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவ் உள்வட்டத்தினர்.
பொது நல வழக்குகள், தகவல் அறியும்  உரிமை, சலகல அதிகாரங்க்ளும் குவிந்த லோக்பால் அமைப்பு  ஆகியவற்றின் மூலம் ‘ஒளிரும் இந்தியாவை’ உருவாக்கிவிடமுடியும் என நம்புகிற நடுத்தரவர்க்கத்திற்கு உண்ணாவிரதம், ஒத்துழையாமை முதலான காந்திய வழிகளை மட்டுமே பயன்படுத்தி, காந்தியத்திற்குச் சற்றும் பொருந்தாத கார்பொரேட் நகர்ப்புறக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த அண்ணா ஹஸாரே  சரியான தலைவராகப் பொருந்திப் போகிறார்.
சமீபகாலப் பெரு ஊழல்களுக்குக் காரணமான  அரசின் பொருளாதாரக் கொள்கைகள், கார்பொரேட்களுக்கு வழங்கப்பட்டுள்ள  அபரிமிதமான அதிகாரம், இதர  முக்கியமான பிரச்சினைகளான  மதவாதம், சாதீயம், பழங்குடி உரிமைகள், கல்வி/ மருத்துவம் முதலானவை வணிகமயமாதல், கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் உரிமைகளை பறித்தல் முதலான எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் லஞ்ச ஊழலைப் பிரித்து இவர்கள் அதை மட்டும் முதன்மைப்படுத்துகின்றனர். இப்படியான இயக்கங்களில் எளிதாக வலதுசாரி பாசிச சக்திகள்  உள்ளே நுழைந்து விடுவதே கடந்த கால வரலாறாக இருந்துள்ளது.  ஜெயப்பிரகாஷ் நாராயணின் நவ நிர்மாண் இயக்கத்தின் மூலம் மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர மோடி என்பதை மறந்துவிட முடியாது. இன்றும்கூட இந்துத்துவ வலதுசாரி சக்திகள்தான் அதிக அளவில் அண்ணா ஹஸாரேவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றனர்.
இந்தியாவை ஆட்டிப்படைக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று லஞ்ச ஊழல் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல்களை மன்னிக்க முடியாது.
ஆனால் பிரச்சினை  ஊழல்களோடு முடிந்துவிடுவதில்லை. ஊழல் ஒழிப்பைப் பிரதானப்படுத்தி மற்றவற்றிலிருந்து கவனத்தைத் திருப்புவது மிகவும் ஆபத்தானது என்கிற கருத்து அருந்ததி ராய் போன்ற  அறிவுஜேவிகளால் முன்வைக்கப்படுகிறது.