புலி ஆதரவு மற்றும் எதிர்ப்புப் பூச்சாண்டிகளும்....
தமிழீழ விடுதலைப்புலிகளின் அரசியல் பிரிவுச்செயலாளர் தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி மீண்டும் தமிழகத்தில் விடுதலைப்புலிகள் ஆதரவு xஎதிர்ப்பு என்னும் இருவேறுமுகாமகளிலிருந்தும் பலத்த விவாதங்களும் கண்டனங்களும் கிளம்பியிருக்கின்றன. தமிழ்ச்செல்வனின் மரணத்தையொட்டி நடைபெற்ற இரங்கல் ஊர்வலத்திற்குத் தமிழக அரசு தடைவிதித்திருந்தது.
இவ்வூர்வலத்தில் கலந்துகொள்வதாயிருந்த, தற்போது திமுக கூட்டணியிலிருக்கும் விடுதலைச்சிறுத்தைகளின் தலைவர் தொல்.திருமாவளவன் மட்டும் கலந்துகொள்ளவில்லை. மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, தமிழர் தேசிய இயக்கத்தலைவர் பழ.நெடுமாறன், தமிழ்தேசபொதுவுடைமைக் கட்சியின் தலைவர் மணியரசன் போன்றோர் தடையை மீறி ஊர்வலத்தில் கலந்துகொண்டு கைதாகியிருக்கிறார்கள். 'இந்திய அரசு தமிழர்களை ஏமாற்றிவிட்டது' என்றும் 'கருணாநிதி தமிழினத்திற்குத் துரோகம் செய்துவிட்டார்' என்றும் கர்ஜித்திருக்கிறார் வைகோ.
மறுபுறத்திலோ பெரியார் திராவிடர்கழகத்தினர் சுப.தமிழ்ச்செல்வனுக்கு இரங்கல் தெரிவித்து கோபியில் வைக்கப்பட்டிருந்த தட்டி, மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் கண்டனத்திற்குப் பிறகு காங்கிரசாரால் கிழிக்கப்பட, தமிழகத்தின் பல்வேறுபகுதிகளிலும் பெரியார் தி.க தோழர்கள் இளங்கோவனுக்கு எதிரான போராட்டத்தை முன்னெடுத்திருக்கிறார்கள்.
முதல்வர் கலைஞர் தமிழ்செல்வனுக்கு இரங்கல் விடுத்ததே சட்டவிரோதமானது என்று நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருக்கிறார் ஜெயலலிதா. ஆனால் இதுகுறித்து கேள்விகேட்பதற்குத் திராணியற்ற வைகோதான் கருணாநிதி மீது பாய்ந்திருக்கிறார். வைகோவைப் பொறுத்தவரை அவருக்கென்று இருந்த பல சாதகமான முகமூடிகள் கழன்றுவிழுந்திருக்கின்றன. பார்ப்பன எதிர்ப்பு, இந்துத்துவ எதிர்ப்பு ஆகிய சில திராவிட இயக்கபோக்கின் அம்சங்களையும் இழந்துவிட்ட வைகோவிற்கு மிஞ்சியிருப்பது புலி ஆதரவு அரசியல் வேடம் மட்டும்தான்.
ஆனால் அதிலும்கூட சமீபகாலமாகத் திருமாவளவன் போன்றவர்கள் வைகோவை விடவும் தீவிரமாகப் புலி ஆதரவு அரசியல் பேச ஆரம்பித்திருக்கிறார்கள். தன் கடைசிக் கோவணமும் கழற்றப்படுமோ என்னும் பதட்டம் வைகோவிற்கு.
நெடுமாறனைப் பொறுத்தவரை ஈழ ஆதரவு அரசியலில் தன் இடம் பறிபோய்விடக்கூடாது. புலிகளைத் தமிழகத்தில் யார் ஆதரித்தாலும் தான் மட்டுமே அவர்களுக்கு ஞானத்தந்தையாக விளங்கவேண்டும் என்னும் அரிப்பு உண்டு. நெடுமாறனின் தமிழ்த்தேசியக் கருத்தியல் தளம் வெள்ளாளக் கருத்தியலும் முதலாளியமுமே என்பதைச் சொல்லவேண்டியதில்லை. இதற்குப் பல உதாரணங்களைச் சொல்ல முடியுமென்றாலும் சமீபத்திய உதாரணம், நெடுமாறன் தலைவராய்ப் பங்குபற்றும் உலகத்தமிழர் பேரமைப்பு தமிழகத் தொழிலதிபர் பொள்ளாச்சி மகாலிங்கத்திற்கு 'உலகபெருந்தமிழர் விருது' வழங்கியிருப்பதைச் சொல்லலாம். (இப்போக்கைக் கண்டித்து அரங்கிலிருந்து ஆதித்தமிழர் பேரவை பொதுச்செயலாளர் தோழர் நீலவேந்தன் மற்றும் பெரியார்திராவிடர்கழகப் பொதுச்செயலாளர் தோழர் கோவை.கு.ராமகிருட்டிணன் ஆகியோர் வெளிநடப்புச் செய்திருக்கிறார்கள்.)
பொள்ளாச்சி மகாலிங்கம் வெளிப்படையான இந்துத்துவ ஆதரவாளர். ஆர்.எஸ்.எஸ் நடத்தும் ஷாகா கூட்டங்களுக்கு நிதியுதவி செய்பவர், இந்துத்துவத்தைப் பரப்புவதற்காகவே 'ஓம்சக்தி' என்னும் பிற்போக்கு இதழை நடத்திவருபவர். தொழிலாளர் விரோத மற்றும் உலகமயமாக்கல் ஆதரவுப் போக்கைக் கடைபிடித்துவருபவர். இவருக்கு விருது வழங்கி மகிழும் நெடுமாறனின் அரசியல் லட்சணம் எவ்வளவு கேவலமாயிருக்கும் என்பதை மீண்டும் மீண்டும் விளக்கத்தேவையில்லை.
ஒருபுறம் புலிகள் ஆதரவு, இளங்கோவனுக்கு எதிரான போராட்டம் ஆகியவற்றை நடத்தி வந்தாலும் மறுபுறம் இரட்டைக்குவளை உடைப்புப் போராட்டம் போன்ற சாதியொழிப்புப் போராட்டங்களைப் பெரியார் தி.க முன்னெடுத்து நடத்திவருகிறது. ஆனால் சாதியமைப்பிற்கு எதிராகவோ, இந்துசாதியத்தால் நாள்தோறும் ஒடுக்கப்பட்டுவரும் உள்ளூர்த்தமிழர்களுக்கு ஆதரவாகவோ ஒரு புல்லையும் பிடுங்கிப்போட்டதில்லை நெடுமாறன்.
இலங்கைத்தமிழர்களுக்கு உணவுபொருட்கள் போகவேண்டுமென்று உண்ணாவிரத நாடகம் நடத்தி தானே இலங்கைக்குச் சென்று உணவுபொருட்களை அளிக்கப்போவதாக சாகசவாத பயாஸ்கோப் ஓட்டும் நெடுமாறனுக்கு தமிழகத்தில் எத்தனை கிராமங்களில் ஊரிலிருந்து சேரிக்குத் தண்ணீர் வருவதில்லை என்பது தெரியுமா? தலித்துகள் வாயில் மலந்திணிக்கப்படுவது வெறுமனே செய்திகளாயிருந்தது மாறி, நிகழ்வுகளாக மாறிவருகின்றன. இதுகுறித்தெல்லாம் நெடுமாறனின் 'தமிழ்த்தேசியம்' கவலைப்படாதா?
இப்படியாக ஒருபுறம் வைகோ, நெடுமாறன் போன்றவர்கள் சாகசவாதப் படம் ஓட்டியே தங்கள் அரசியல் இருப்பைத் தக்கவைத்துக் கொள்ளமுயற்சிக்க மறுபுறம் புலிகள் எதிர்ப்புப் பிரச்சாரம் பார்பனப் பாசிஸ்ட்களாலும் காங்கிரசு தேசிய வெறியர்களாலும் முடக்கிவிடப்பட்டு வருகிறது.
புலி ஆதரவுப் போராளி வைகோவிற்கு தன் சகோதரி ஜெயலலிதாவை எதிர்த்துக் கேட்க துணிவில்லை. கருணாநிதியோ புலிகள் விசயத்தில் காங்கிரசைப் பகைத்துகொள்ள முடியாது. இனி என்ன நடக்கும்? வழக்கம்போல 'புலிகள் ஊடுருவல் புராணங்களை' தினமலர், துக்ளக், ஜெயா பார்ப்பனப் பாசிசக் கூட்டணி ஆரம்பித்துவிட்டது.
தனது கூட்டணியைத் தக்கவைத்துக்கொள்ளவும் 'சட்டம் ஒழுங்கை நிலைநாட்டவும்' கருணாநிதி தனது அரசு எந்திரத்தை 'முடுக்கிவிடுவார்'. இப்போதே 'தடை செய்யப்பட்ட இயக்கத்திற்கு ஆதரவாக' பிரச்சாரம் செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று டிஜி.பி அறிவித்துள்ளார்.
இன்னும் சிலதினங்களில் யாராவது அப்பாவி ஈழத்தமிழர் வெடிகுண்டுடன் 'கண்டுபிடிக்கப்பட்டு' கைது செய்யப்படுவார். 'புலிகளின் ஊடுருவல்' தடுத்து நிறுத்தப்படும். ஜெயலலிதா ஆட்சியில் சகல துவாரங்களிலும் பெவிகால் ஒட்டியிருக்கும் தமிழ்த்தேசிய வீராதிவீரன்கள், வீரபத்திரப் பேரன்கள் 'வீர முழக்கம்' செய்யத்துவங்கி விடுவார்கள். வைகோ, நெடுமாறன் மாதிரியான 'வாடகை மாவீரன்களுகு' தமிழ்நாடு முழுதும் பொதுக்கூட்டம் போட ஒரு நல்ல வாய்ப்பு.
தமிழ்நாடு முழுதும் ஆயிரக்கணக்கில் முகாம்களில் அடைத்துவைக்கபட்டிருக்கும் இலங்கை அகதித் தமிழர்கள் ஏற்கனவே 'நாயினும் கீழான வாழ்வு' வாழ்கின்றனர். அவர்களின் குறைந்தபட்ச வாழ்வுரிமையை உறுதிசெய்ய எந்த ஓட்டுபொறுக்கிக் கட்சிகளோ தமிழ்த்தேசிய மாவீரன்களோ முயற்சித்ததில்லை. இன்னும் சொல்லப்போனால் தமிழகத்தில் வசிக்கும் அகதித் தமிழர்கள் குறித்து புலிகளோ புலம்பெயர்ந்த தமிழர்களோ கூட கவலைப்பட்டதாகத் தெரியவில்லை. இனி நடக்கப்போகும் நாடகத்தில் அரசின் கடும் கண்காணிப்பிற்கும் ஒடுக்குமுறைக்கும் உள்ளாகப்போவது தமிழகத்தில் வசிக்கும் அப்பாவி இலங்கை அகதிகளே..ஆகமொத்தம் மீண்டும் தமிழகத்தில் தொடங்கப் போகிறது, 'ஆடு புலி புல்லுக்கட்டு' நாடகம்.