கர்ப்பம் vs பாலின்பம் மற்றும் பகுத்தறிவு குறித்த சில கருத்துகள்
ஓஷோ - பெரியார் : சில ஒப்பீடுகள் என்னும் பதிவிற்கான எதிர்வினைகள் கருத்தரித்தல் மற்றும் பாலுறவு இன்பம் குறித்த உரையாடல்களாக திரும்பியுள்ளன. அதுகுறித்த விவரங்களுக்குக் கீழ்க்கண்ட இடுகையைப் படிக்கவும்...
http://valaipadhivan.blogspot.com/2008/01/blog-post_23.html
ஓசோவும் பெரியாரும் ஒன்றுபடும் புள்ளிகளில் பாலியல் சுதந்திரம் மற்றும் கருவுறுதல் மற்றும் கருவுறுதலை மறுப்பது தொடர்பான பெண்ணுக்கிருக்கும் உரிமை ஆகியவை குறித்து கவனப்படுத்துவதே எனது நோக்கம். இது குறித்து, குறிப்பாகப் பெரியாரின் இந்நிலைப்பாடு குறித்த மேலும் சில எனது புரிதல்கள்.
பெரியார் குறித்துப் பலருக்கும் பல விமர்சனங்கள் இருந்தபோதும் அவரது பெண்னியச்சிந்தனைகள், குறிப்பாக இந்தியச்சூழலில் ஒப்பாரும் மிக்காருமில்லாதவை. எம்முன்மாதிரிகளுமற்றவை. பெண்ணியம் என்றாலே பெண்னுக்கான சொத்துரிமை, விதவைத்திருமணம் என்பதைத் தாண்டி பெண்னின் பாலியல் வெளி குறித்துப் பயணித்தவை அவரது சிந்தனைகள்.
மணவிலக்குச் சட்டத்தைக் கொண்டுவர அரசு தாமதித்தபோது, 'கல்யாணரத்துச்சட்டத்தை விரைவில் அரசாங்கம் கொண்டுவராவிட்டால் திருமணக் கூட்டங்களுக்குச் சென்று கல்யாண மறுப்புப்பிரச்சாரமும் புருசர்களுக்கும் ஸ்திரீகளுக்கும் பலதாரமணப் பிரச்சாரமும் செய்வேன்' என்று அரசை 'மிரட்டியவர்' பெரியார்.
இதே போன்ற இன்னொரு சந்தர்ப்பம்தான், கருத்தடையைப் பல்வேறு மத அமைப்புகளும் கலாச்சார அடிப்படைவாதிகளும் எதிர்த்த சூழலில் பெரியார் கருத்தடையை ஆதரித்துப் பிரச்சாரம் மேற்கொண்டது. இக்கட்டத்தில், குடும்பவிளக்கு, இருண்டவீடு, கண்ணகிப்புரட்சிக்காப்பியம் போன்ற அபத்தப்பிரதிகளை எழுதியவரும், தமிழ்த்தேசிய - ஆண்மய்யப்ப் பார்வைகளைக் கொண்டவருமான பாரதிதாசனும்கூட, 'காதலுக்கு வழிவைத்துக் கருப்பாதை சாத்தக் கதவொன்று கண்டறிவோம், இதிலென்ன குற்றம்?' என்று பாடிப் 'புரட்சிக்கவிஞர்' என்னும் பெயரைத் தக்கவைத்துக்கொண்டார்((-.
ஆனால் இத்தோடு மட்டும் பெரியார் நிற்கவில்லை. பெண்கள் குழந்தை பெறுவதை நிறுத்த வேண்டும் என்றார். அது வெறுமனே குடும்பக்கட்டுப்பாட்டுக்காக மட்டுமில்லை, பெண்ணின் சுயேச்சையான உரிமைகளை உறுதிசெய்யவும்தான் என்றார். மேலும் குழந்தைகளைப் பெறாமலிருப்பது பெண்னுக்கு மட்டுமான விடுதலையல்ல, அது ஆணுக்குமான விடுதலையே, ஆண்களுக்கும் மகிழ்ச்சியளிக்கும் விசயம் என்றார்.
ஒரு ஆண் நிறைய குழந்தை பெறுவதாலேயே, அயோக்கியனாகவும் ஒழுக்கக்கேடனாகவும் மாறிவிடுகிறான் என்றார். (இந்த இடத்தில் கருணாநிதி நினைவுக்கு வந்தால் நான் பொறுப்பில்லை.((- )
சரி பகுத்தறிவு குறித்த விசயத்திற்கு வருவோம்.
எது இயற்கையானது, இயற்கைக்கு மாறானது, இயற்கையோடு இணைந்து வாழ்வது, இயற்கைக்கு எதிராக (அ) இயற்கையை மீறிச்செல்வது என்பதற்கெல்லாம் காலகாலத்துக்குமான பொதுவறையரைகள் ஏதும் கிடையாது. கருவுறுதல் இயற்கையானதெனில் மலட்டுத்தன்மை என்பதும் இயற்கையானதுதான். அதை மருந்துகள் கொடுத்துக் கருவுற வைப்பதும் இயற்கைக்கு விரோதமானதுதான். பொதுவாக அறிவியல் என்பதே இயற்கையை மீறிச் சென்றதால்தான் சாத்தியமாயிற்று. எனவே இதில் எது பகுத்தறிவு, எது பகுத்தறிவில்லை என்று தட்டையான அணுகுமுறைகளைக் ( மீண்டும் செந்தழல் ரவி ((- ) கொண்டு தீர்மானிக்க முடியாது.
"Just because men cannot bear children, calling women to refuse to bear children is neither progressive nor scientific."
என்று எந்த அடிப்படையில் சுந்தரமூர்த்தி சொல்கிறார் என்று தெரியவில்லை. ஆனால் இங்கு பகுத்தறிவு குறித்து விவாதம் வந்ததால் சில கருத்துக்கள்.
பெரியாரை வெறுமனே வறட்டுத்தனமான பகுத்தறிவுச் சிமிழுக்குள் அடைப்பதன் விளைவுதான் ஆடு கோழித் தடைச்சட்டத்தை ஆதரிப்பது, சமண முனிவர்களின் நிர்வாணத்தை எதிர்ப்பது என்பதிலிருந்து பார்ப்பனீய மதிப்பீடுகள் குறித்து எவ்விதக் கேள்வியும் எழுப்பாது சிறுதெய்வழிபாடுகள் தொடர்பான நம்பிக்கைகளை மட்டும் கிண்டலடிக்கிற நடிகர் விவேக்கைப் 'பகுத்தறிவுவாதி' என்று கொண்டாடுவது வரை நீள்கிறது.
"The views of Periyar and Osho are certainly absurd from a scientific viewpoint even as it sounds progressive.....Just imagine an hypothetical situation in which all women in the world, with no exception, get this message at the same time and unanimously embrace this idea."
இதே சுந்தரமூர்த்தி கேட்ட கேள்விதான் ஒரு 'பகுத்தறிவுவாதி' கேட்கும் கேள்வி. ஆனால் பதில் சொல்கிற பெரியார் ஒரு 'பகுத்தறிவுவாதியாய்' நின்று சொல்லவில்லை. பெண்கள் கருப்பையை அகற்ற வேண்டுமென்று சொல்லும்போது 'மனித இனவிருத்தி அற்றுப்போகுமே?' என்று பகுத்தறிவுக் கேள்வி கேட்கப்பட்டபோது பெரியாரின் பதில்.
" மனிதஜீவராசிகள் அற்றுப்போனால், புல்பூண்டு, விலங்கு விருத்தியடையட்டுமே. இதுவரை விருத்தியடைந்த மனிதச் சமூகம் பெண்ணுக்கு என்ன செய்து கிழித்தது? எனக்கு மனிதச்சமூகம் விருத்தியடைவது குறித்துக் கவலையில்லை, பெண்ணின் விடுதலைதான் முக்கியம்'.
இங்குதான் பெரியாரிடம் பகுத்தறிவுவாதிகளின் தர்க்கங்களைத் தாண்டிப்போகிற அறவியல் ஆவேசமும் கவித்துவமும் மிளிர்கிறது. எனவே பெரியாரை வெறுமனே பகுத்தறிவுவாதி என மதிப்பிட்டுவிட முடியாது. (இது குறித்துக் கொஞ்சம் விரிவாக அ.மார்க்சின் 'பெரியார்?' நூலில் பெரியாரின் பகுத்தறிவை மதநீக்கம் என அ.மா அடையாளப்படுத்துவதை மறுத்து புதியகோடாங்கி இதழில் எழுதியிருக்கிறேன். மேலும் ஒரு வலைப்பதிவாளர் சந்திப்பின்பின்னான உற்சாகச்சந்திப்பில் நண்பர்கள் ஓசைசெல்லா, ரோசாவசந்த், ஓகைநடராசன் ஆகியோருடன் 'பெரியாரை ஒரு பகுத்தறிவுவாதி' எனச் சொல்லமுடியுமா?' என்ற போக்கில் தொடங்கிய உரையாடல் பாதியிலேயே நின்றுபோனது.)
அப்படியானால் பெரியாரின் 'பகுத்தறிவை' எப்படிப் புரிந்துகொள்வது? அது வெறுமனே ஆம், இல்லை என்னும் இருமைகளை அடிப்படையாகக் கொண்ட தருக்க முறையல்ல, மாறாக உரையாடலை மறுக்கும் இந்தியப் பார்ப்பனீய உளவியலுக்கு எதிராக எல்லாவித உரையாடல்களையும் சாத்தியப்படுத்துகிற, தீர்மானிக்கும் காரணிகளைப் புறத்திலிருந்து அல்லாமல் சுயேச்சையாக நிர்ணயிக்கிற, இறுக்கங்களற்ற நெகிழ்வுகளையுடைய திறப்பு. இப்படியும் சொல்லலாம், 'உனக்கு நீயே விளக்கு' என்ற பவுத்தத்தின் அறுபடாத கண்ணி.