வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- இறுதிப்பகுதி
தமிழகத்திலிருந்து வைக்கத்துக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்ட பெரியார் 13.04.1924ல் வெளியிட்ட அறிக்கை:
ஸ்ரீமான் கே.நீலகண்ட நம்பூதியார் 4ம் தேதியிட்டு அனுப்பிய தந்தியில் என்னை உடனே புறப்பட்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். குளித்தலையில் கூடிய திருச்சி மகாநாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்ததால் புறப்பட முடியவில்லை. நான் முக்கியமாக அங்கு வந்துதான் ஆக வேண்டுமென்றால் நான் வருவதாகத் தந்தி கொடுத்தேன். பிறகு அனுப்பிய கடிதத்திலும் இதே விஷயத்தைத் தெரிவித்திருந்தேன்.
6ந்தேதி ஸ்ரீமான் ஜோசப்பும் எழுதியிருந்தார். நான் வரவேண்டுமென்பது தாங்கள் நினைத்தால் நான் வரச் சித்தமென்று பதில் அளித்தேன்.
12ந்தேதி இன்னொரு தந்தியை ஸ்ரீமான் நம்பூதிரிபாட் அனுப்பியிருந்ததில் வைக்கம் சத்தியாக்கிரக நிலைமையைப் பற்றி யோசிக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை (14.04.1924) கூடுவதாகவும், நான் விஜயம் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். அதே சமயத்தில் ஸ்ரீமான் டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர் கொச்சியிலிருந்து அனுப்பியுள்ள தந்தியில் நான் அங்கிருக்க வேண்டியது மிகவும் அவசியமென்றும், உடனே புறப்பட வேண்டுமென்றும், ஜோசப் கைதியானாரென்றும் கொச்சியில் தாம் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நான் இன்று ரெயிலில் வருவதாகவும், திருச்சூரில் என்னை ஸ்ரீமான் நம்பூதிரிபாத் சந்திக்கும் படிக்கும் பதில் தந்தி கொடுத்தேன்.
இரவு 7 மணிக்கு மூன்றாவது தந்தி கிடைத்தது. ’வைக்கத்தில் நிலைமை பயங்கரமாகவிருக்கிறது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு விட்டனர். 18 சத்தியாக்கிரகிகள் உண்ணாவிரதத்துடனிருக்கிறார்கள். நானும் வைக்கத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உடனே நான் கைது செய்யப்படுவேன் என்பது நிச்சயம். இயக்கத்தைத் தலைமை வகித்து நடத்துங்கள். தந்தி மூலம் யோசனை கூற வேண்டும்.’ இதற்கப்பால் நான் புறப்பட்டேயாக வேண்டுமென்று எண்ணமேற்பட்டுவிட்டது. இந்த நிலைமையை நானே வலுவில் விரும்பியதாக நினைக்க வேண்டாம். அத்தகைய எண்ணம் இல்லாமல் தடுக்கும் பொருட்டே நான் மேற்கண்ட சமாச்சாரத்தை வெளியிட்டேன். தமிழ் நாட்டில் நான் செய்யவிருக்கும் வேலைஅபரிமிதமாக இருக்கிறதென்பது தெரிந்த விஷயம். அதிலுள்ள பொறுப்புகளையும் கஷ்டங்களையும் அறிந்து கொண்டிருக்கிறேன். மிகவும் உபத்திரவமற்ற கதர் வேலைக்கு ஏற்படும் பல தடைகளும் இயக்கத்திலுள்ள இதர கஷ்டங்களும் என் மனத்திற்குத் தெரிந்தவைகளே. ஆனால் கேரள மாகாணத்திலிருந்து எனக்கு வந்திருக்கும் ஆக்ஞையை மீறி நடப்பதற்கில்லை. நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு விட்டது. அடக்குமுறை ஓங்கி நிற்கின்றது. தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் உட்பட பல சத்தியாகிரகிகள் இந்த அடக்குமுறைக்கு ஆளாகிவிட்டனர். இத்தகைய எண்ணங்கள் என் மனதில் எழுந்தன. நான் புறப்பட்டு விட்டேன். நானும் கைது செய்யப்படலாம். அது ஒரு பெரிய காரியமல்ல. தலைவர்களாகவிருந்தாலும் சரி, பிரச்சாரகர்களாகவிருந்தாலும் சரி, தொண்டர்களாகினும் சரி, எல்லாச் சாதியினரும் கேரளத்திற்குக் கூட்டமாக வந்துவிட வேண்டுமென்று நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன். தொண்டு செய்ய முடியாதவர்கள் பண உதவியாவது செய்யலாம்.
தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதி இருக்கின்றனர். தீண்டாமையை ஒழிப்பதற்காகக் கஷ்டப்படத்தயாரென்றும் அவர்கள் எழுதியிருக்கின்றனர். இதுதான் தகுந்த சமயம். இதை நழுவவிட்டு விடாதீர்கள். ஒவ்வொருவரும் இந்த உன்னத லட்சியத்திற்காக முன் வாருங்கள். (சுதேசமித்திரன் 15.04.1924)
மிகத்தெளிவாகவே பெரியார் தனது அறிக்கையில் கேரளத்திலிருந்து வந்த அழைப்பைக் குறிப்பிடுகிறார். அவர் தமிழகக் காங்கிரஸ் அமைப்பின் சார்பாகச் செல்வதும் உறுதியாகிறது. இந்த அறிக்கை காங்கிரஸ் இதழான சுதேசமித்திரனில் வெளியாவதும் கவனத்துக்குரியது. மேலும் வைக்கம் சென்றபிறகு ஈழவ தலைவர்களுடன் பெரியார் சந்திப்பு நடத்திய பின் வெளியிட்ட அறிக்கை 7.07.1924 இந்துவில் வெளியானது.
தமிழக அரசியலில் எந்த இடமும் இல்லாதவராகவும், எந்த அமைப்பின் சார்பின்றியும் சென்றவராகவும் ஜெயமோகனால் சுட்டப்படும் பெரியாரின் அறிக்கை காங்கிரஸ் இதழான சுதேசமித்திரனிலும் தேசிய இதழான இந்துவிலும் எவ்வாறு வெளியாகும் என்கிற கேள்வியை வாசகர்களின் அறிவிற்கே விட்டுவிடுகிறேன்.
ஜெயமோகன் வைக்கம் போராட்டம் குறித்து முன்வைத்த அவதூறுகளுக்கான மறுப்புகளுக்கு இந்த தரவுகளே போதுமானவை என்று நினைக்கிறேன். நான் முன்பே சொன்னபடி இந்த தரவுகளைத் தந்துதவியர் திரு..திருமாவேலன். காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக திரு. பழ.அதியமான் எழுதி வெளியான ஜார்ஜ் ஜோசப் நூலில் பெரியார் பற்றிக் கூறப்பட்ட கருத்துகளை மறுப்பதற்காக அவர் தேடிச் சேகரித்த தரவுகள் இவை. கே.பி.கேசவமேனனின் ‘பந்தனத்தில் நின்னு’ நூலில் உள்ள பக்கங்களை மலையாளத்திலிருந்து திருமாவேலனுக்காகத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்தவர் மலையாளியும் உலக சினிமா மீது ஆர்வம் கொண்டவருமான திரு.சிவன் அவர்கள். அலுவல்பணி நிமித்தம் தொடர்ச்சியாக எழுத முடியாதபோது இந்த தரவுகளைத் தட்டச்சு செய்து தந்தவர் எனது மனைவி திரு.ஜெயந்தி அவர்கள். (ஜெயமோகனை மறுக்க குடும்பத்தோடு உழைக்க வேண்டியிருக்கிறது((- ) இவர்களின் உழைப்பில்லையேல் இந்த தொடர் சாத்தியமாகியிருக்காது.
எனக்கு ஜெயமோகனின் தளத்தில் நின்று பேச விருப்பமில்லை. வாய்ப்புள்ளவர்கள் இந்த கட்டுரைகளை ஜெயமோகன் தளத்திற்குக் கொண்டு சென்று கேள்விகேட்கலாம். பார்ப்போம், அவர் பதில் என்ன சொல்கிறாரென்று.
இனி கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் ஜெயமோகன் எழுதியுள்ள கருத்துகள் குறித்துப் பார்ப்போம்.
(அழுத்தம் தரப்பட்டவை ஜெயமோவின் வார்த்தைகள்)
”வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.”
முதலாவதாக எல்லா இயக்கங்களுமே பரப்பியம் சார்ந்தவைதான். நான் ஒரு இயக்கம் ஆரம்பித்தால்கூட இரண்டாவதாக ஒரு ஆள் இணையவேண்டும் என்றால் பரப்பியம் செய்யத்தான் வேண்டும். பரப்பியம் உள்ள இயக்கம், பரப்பியல் இல்லாத இயக்கத்தின் வகைப்பாட்டு வினோதம் குறித்து ஜெயமோகன்தான் விளக்கவேண்டும். ‘பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது’ என்கிற திராவிட இயக்கம் குறித்த ஜெமோவின் கருத்து அவரது வரலாற்று அறியாமையைக் காட்டுகிறது. பெரியாரியக்கம் மட்டுமல்ல திமுகவும் கூட பொதுமேடைகளுக்கு அப்பால் பத்திரிகைகள், நாடகங்கள், சினிமாக்கள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வந்த இயக்கம். அன்று இந்தியாவின் மிக முக்கியமான தேசிய இயக்கங்களான காங்கிரசும் கம்யூனிஸ்டும் கூட திராவிட இயக்கங்கள் அளவிற்கு இதழ்கள் நடத்தியதில்லை என்பதும் மக்களுடன் ஓயாத உரையாடல் நடத்தியதில்லை என்பதும் கவனத்துக்குரியது. ஏறத்தாழ அய்ம்பதுக்கும் மேற்பட்ட இதழ்களை நடத்திவந்தன இவ்விரு இயக்கங்களும். சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான ராஜன்குறையின் கட்டுரையைப் படிப்பது மேலும் பல புரிதல்களுக்கு வழிவகுக்கும். “சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.” என்று ஜெமோ சொல்வது தனது அபிமானத்துக்குரிய சிவசேனாவைப் போலவே எல்லா இயக்கங்களையும் எடைபோடுகிறார் என்பதையே காட்டுகிறது.
”எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்”
இதுமாதிரியான நகைச்சுவைகள் உண்மையிலேயே ஜெயமோகனின் தனித்தன்மை என்றுதான் சொல்லவேண்டும். பவுத்தமும் சமணமும் உருவாக்கிய பட்டிமண்டபங்கள், விவாதக்களங்களுக்குப் பிறகு தர்க்கத்தைத் தமிழ்ப்பொதுவெளியில் கொண்டு போனவர் பெரியார்தான். பெரியாரின் மேடைகளில் எப்போதும் மாற்றுக்கருத்திற்கும் தர்க்கத்திற்கும் இடமுண்டு. சாதியுணர்வு, மதவுணர்வு, இறைநம்பிக்கை மட்டுமில்லாது மொழியுணர்வு, தேசபக்தி முதலிய கருத்தியல் நம்பிக்கைகளைக் கூட கேள்விக்குட்படுத்தியவர் பெரியார். பெரியாரின் தர்க்க அறிவிற்கும் சாதுரியத்திற்கும் பெரியாரின் மிகச் சில எழுத்துக்களைப் படித்திருந்தால் கூட போதுமானது. அவர் ஜெயமோகன் சொல்வதைப் போல உணர்ச்சியின்பாற்பட்டு பேசிய பொழுதுகள் மிகமிகச் சொற்பம். அதுவும் தன் வாழ்நாளின் இறுதியில் தனது செயல்பாடுகளின் மூலம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியவில்லை என்கிற கசப்புணர்வின் காரணமாக மட்டுமே சில சொற்கள் உதிர்ந்திருக்கும். எந்தவித மொழிப்பகட்டும் இன்றி உண்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டவை பெரியாரின் மேடைமொழி. அவரது எழுத்துக்களும் அவ்வாறனவையே என்பதைப் பெரியாரைப் படித்தவர்ளால் உணரமுடியும்.
“வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்”
“ காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும் ”
இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் உள்ள முரணைக் கவனியுங்கள். ’கருப்பு வெள்ளையாக இருமை எதிர்வுகளைக் கட்டமைத்து ஒற்றை மதிப்பீடுகளை நிறுவியவர் பெரியார்’ என்கிற அதே ஜெயமோகன்தான் ‘காந்தியைச் சனாதனவாதி என்ற பெரியார் காந்திதேசம் என்று பெயரிடச் சொன்னார்” என்கிறார். முதலாவதாக அவதூறின் முதற்பணியே கூற்றுகளையும் செயற்பாடுகளையும் வரலாற்றிலிருந்து பிய்த்து உருவி தனது விருப்பத்திற்கேற்ப கட்டமைப்பதுதான். பெரியார் எந்தெந்த சந்தர்ப்பங்களில் காந்தியோடு முரண்பட்டார், உடன்பட்டார் என்பதற்கு அவற்றின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை அறிய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் யாரை வேண்டுமானாலும் ‘முரண்பாடுகளின் மூட்டை’யாகக் கட்டமைத்துவிட முடியும்.
மேலும் பெரியாரும் திமுகவும் தான் தமிழர்களை வெறுப்பின் அரசியல்பாற் படாமல் காப்பாற்றியவர்கள். காந்திக்கு மட்டுமில்லை, திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பாரதியார், பெரியாரியக்கத்தின் பிரதான அரசியல் எதிரியும் ‘’திமுகவை மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கிவிடுவேன்” என்று சொன்ன ராஜாஜி தொடங்கி ராஜீவ்காந்தி வரை மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் செயல்பாட்டு ஆளுமைகளுக்கும் உரிய மரியாதையைச் செய்தது திமுக அரசு. கடந்துபோன காந்தியின் நினைவுநாளுக்காய்ப் பொதுக்கூட்டம் நடத்தியதுகூட பெரியார்திராவிடர்கழகம்தான். தமிழ் அறிவுச்சூழலைக் கணக்கிலெடுத்துக்கொண்டாலும் அம்பேத்க்ரையும் பெரியாரையும் முன்வைத்து பேசிய, பேசி வருகிற வ.கீதா, பிரேம், அ.மார்க்ஸ் , ராஜன்குறை போன்றவர்கள்தான் இப்போது காந்தி குறித்தும் மறுவாசிப்பு செய்து எழுதிவருகிறார்கள். இன்றைய நுகர்வுக்கலாச்சாரம், இந்துப்பாசிசத்தின் வெறுப்பு அரசியல், வெளித்தள்ளும் தேசியம் ஆகியவற்றிற்கான மாற்றாக காந்திய மதிப்பீடுகளை இவர்கள் முன்வைக்கத் தவறுவதுமில்லை. ஆனால் அதற்காக சாதியம் குறித்த அம்பேத்கரிய பெரியாரியப் பார்வைகள் முற்றாகத் தவறானவை என்றோ காந்தியை இருவரும் வில்லனாகத் தவறாகச் சித்தரித்தனர் என்று சொல்லத் துணியவுமில்லை. காந்திக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்குமான வரலாற்றுப் பங்களிப்பு இந்தியச்சூழலில் பாரியத்தன்மை கொண்டதும் காத்திரத்தன்மையானதுமாகும். அதேபோல் அவர்கள் இழைத்த தவறுகள் விவாதத்துக்கு உரியதும் படிப்பினைகளுக்காய் முன் கிடத்தப்படுவதுமாகும். இந்த வரலாற்றுப் பங்களிப்புகளை மறுப்பது வரலாற்றுக்கு இழைக்கிற துரோகம் மட்டுமில்லை, வாழ்க்கையின் இயங்கியலை மறுக்கிற குருட்டுத்தனமும் கூட. உண்மையில் காந்தியை ஹீரோவாக்க அம்பேத்கரையும் பெரியாரையும் வில்லனாகச் சித்தரிக்கும் வேலையை ஜெயமோகன் தான் வலிந்து செய்துவருகிறார். ஆனால் பாவம், உண்மையில் இது காந்திக்கே நல்லதில்லை ((-
"வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார்."
மற்றுமொரு சிரிப்பானை உதிர்க்க வேண்டியதுதான். பெரியார் எந்தளவுக்குத் தன் கருத்துக்களிலும் செயல்பாடுகளிலும் தீவிரமாக இருந்தாரோ அந்தளவுக்கு நிதானமாகவும் வெறுப்பாகத் தன் அரசியல் மாற்றப்படக்கூடாது என்பதில் உறுதியாகவுமிருந்தவர் . காந்திப்படுகொலையின்போது பார்ப்பனர்களை வன்முறையின் நிழல் தீண்டாது காத்தவர் பெரியார். இயக்கமும் இயக்கத்தோழர்களும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும் சூழல் வந்தபோது சிற்சில சமரசங்களையும் செய்துகொள்ளவும் அவர் தவறியதில்லை. எப்போதும் அவர் வன்முறை அரசியலை முன்வைத்தவரில்லை. சமயங்களில் மாற்று அரசியலுக்குத் தீங்கிழைக்கும் வகையில் கூட வன்முறை எதிர்ப்பு அரசியலைக் கடைப்பிடித்தார் என்பதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எனவே இது ஜெயமோகனின் வன்மம் சார்ந்த பரப்புரை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. அந்த வன்மம் எந்தளவுக்குச் செல்கிறது என்றால்,
’’இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.”
என்றும் ஜெயமோகனை எழுதத் தூண்டுகிறது. அவருக்கு இப்போதிருக்கும் திராவிடர் கழகம் பற்றி கூட ஏதாவது தெரியுமா என்பது ஒருபுறமிருக்க அண்மைய வரலாற்று நிகழ்வுகளையே மிகச்சுலபமாகத் திரித்துவிட முடியும் என்கிற அசாத்திய ‘நம்பிக்கை’ கொண்ட ‘ஞான அரக்கனை’ப் பாராட்டத்தான் வேண்டும். பெரியார் அறிவித்த போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், சிறைக்குச் சென்றவர்கள், அதனால் தமிழ்ச்சூழலிலும் அரசியல் வெளியிலும் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து அறிய ஜெயமோகன் ‘அதிகாரப்பூர்வ திக வரலாறுகளைக்’ கூட படிக்க வேண்டாம், அந்த காலத்தில் வெளிவந்த சுதேசமித்ரன் தொடங்கி கல்கி வரையான எதிர்நிலை இதழ்களைப் படித்தால் கூட போதும். 1957ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் அறிவித்தபோது தமிழகம் முழுக்க கைது ஆனவர்கள் போலீஸ் ஆவணங்களின்படியே 10,000 பேர்கள். 57ல் 10,000 பேர்கள் கைது ஆகும் அளவிற்கு ஒரு இயக்கம் இருந்தது என்றால் அது ‘குறுங்குழு’வா என்பதையும் மீண்டும் மீண்டும் வாசகர்கள் அறிவிற்கே விட்டுவிடுகிறேன். 1957ல் பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து சென்று ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகியிருந்தன, அவர் கணிசமான நபர்களைத் திராவிடர்கழகத்திலிருந்து பிரித்து சென்றிருந்தார் என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த பத்தாயிரத்தை அணுக வேண்டும்.
சாத்தியப்பட்டவரை பெரியாரை வாசித்தவன் என்றமுறையிலும் ஓரளவிற்கேனும் பெரியாரியக்க மற்றும் தி.மு.க வரலாற்றை அறிந்தவன் என்ர முறையால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஜெயமோகனுக்குப் பெரியார், திராவிட இயக்கம், தமிழக அரசியல் வரலாறு குறித்து விரிவான வாசிப்புகளோ, ஆழமான புரிதல்களோ அறிவோ கிடையாது. பொத்தாம்பொதுவாக மற்றவர்களின் அபிப்பிராயங்களைக் கடன்வாங்கி மட்டுமே அவர் கட்டிடம் எழுப்பி வருகிறார். அதனால்தான் குமரிமைந்தனைப் பெரியாரிஸ்ட் என்றும் பெரியார் எந்த அமைப்பின் சார்பாகவும் வைக்கம் செல்லவில்லை என்றும் அவரால் அபத்தமாக உளற முடிகிறது. மேலும் ஜெயமோகன் அவதூறு பரப்புகிற தன்மை மிக நுட்பமானது.
இந்த ‘வைக்கமும் காந்தியும்’ கட்டுரையையே எடுத்துக்கொள்வோம். காந்தி பற்றியும் பெரியார் குறித்தும் அவர் எழுதிய வரிகளை எண்ணிப் பார்த்தால் பத்துவரிகளுக்கு மேல் தாண்டாது. வைக்கம் போராட்டம் குறித்த கேரளப்பின்னணி வரலாறு குறித்து அவர் விரிவாக எழுதும்போதே அவரது வரலாற்றறிவு குறித்த ஒரு பிரமிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறார். பிறகு போகிற போக்கில் பெரியார் வைக்கம் வீரர் இல்லை என்று ‘நிறுவி’ அவதூறு செய்வது எளிதாகி விடுகிறது. அவர் முன் கேட்கப்பட்ட கேள்வியும் சரி, அவரது பதிவின் தலைப்பும் சரி, அவர் சொல்ல வந்ததாய் நம்பப்பட்ட கட்டுரையின் மய்யமும் சரி, ‘வைக்கம் போராட்டத்தில் காந்தி எதிர்நிலைப்பாடுகள் எடுத்ததாகப் பெரியார் சொன்னது சரியில்லை’ என்பதுதான். ஆனால் மீண்டும்கூட அந்த கட்டுரையை முழுவதுமாய்ப் படியுங்கள். அதற்கான ஆதாரங்களோ தரவுகளோ நிகழ்வுகளோ எதுவுமோ அந்த கட்டுரையில் இருக்காது. ரோசாவசந்த் ஒருமுறை எழுதியதைப் போல போகிற போக்கில் ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷத்தைக் கலக்கும் லாவகம் ஜெயமோகனுக்கு உண்டு.
மேலும் ஜெயமோகனின் நேர்மை குறித்தும் யோசியுங்கள். அந்த கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளில் 99 சதவிகிதம் ‘ஒரு பொய்யான வரலாற்றைக் கட்டவிழ்த்த, அம்பலப்படுத்திய மாவீரன் நீங்கள்’ என்கிற ரீதியில் பெரியாரிடமிருந்த பட்டத்தைப் பறித்து ஜெயமோகனை வைக்கம் வீரர் ஆக்கிய கடிதங்கள். அப்படியானால் பெரியாரியர் தரப்பிலிருந்து ஜெயமோகனுக்கு எந்த எதிர்வினையும் கடிதமும் வரவில்லையா? ஜெயமோகன் ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். “கேரளாவில்தான் பெரியார் போராடவில்லையே பின் ஏன் பெரியாறு அணை என்றும் பெரியாறு பூங்கா என்றும் பெயர் வைத்தார்கள்?” என்றும் அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்கிறது அந்த கடிதம். உடனே ’அது பெரியார் இல்லை பெரியாறுதான்’ என்று சிலப்பதிகாரத்திலிருந்து ஆதாரம் காட்டி வெண்ணெய்வெட்டி விளக்கம் தருகிறார் ஜெயமோகன். பெரியாரிஸ்ட்கள் இப்படித்தான் ‘கூமுட்டைத்தனமாக’ கேள்வி கேட்பார்கள் என்பதாக ஜெயமோகன் உருவாக்க முயலும் பிம்பம் அது. உண்மையில் அது வந்த கடிதமா, அல்லது உருவாக்கப்பட்ட கடிதமா என்று தெரியவில்லை. ஜெயமோகனின் ஆய்வுமுறை எப்போதும் நேர்மையானதில்லை.
நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார், ‘’ஜெயமோகன் சொல்கிற ’எல்லாவற்றையும்’ மறுக்கிறீர்களே” என்று. மற்ற விஷயங்களில் எப்படியோ பெரியார் குறித்தும் திராவிடர் இயக்கம் குறித்தும் ஜெமோ சொல்லிவருவதை மறுத்துத்தானாக வேண்டும். ஏனெனில் அவை அத்தனையும் கலப்பில்லாத அவதூறு பொய்கள். மேலும் ‘ம.பொ.சி வளராததற்குக் காரணம் காமராஜர்தான்” (சி.பா.ஆதித்தனாரும் குமரி அனந்தனும் வளராமல் போனதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை), ‘இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முடிவுரையை பிரகாஷ்காரத் எழுதக்கூடும் என நான் அஞ்சுகிறேன்” ( ஜெயமோகன் எதற்கு ‘அஞ்ச வேண்டும்?” ((- ) என்று போகிற போக்கில் அசட்டுத்தனமான வாக்குமூலங்கள், பழிபோடும் தீர்மானங்கள் ஆகியவை வரலாறு குறித்த ஒரு அரைகுறைப் பார்வையைத்தான் இலக்கிய வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. எனவேதான் சிறில், இது.
ஆனால் ஜெயமோகனின் அவதூறுகளை மறுக்க வேண்டுமானால் தனிப்பட்ட சுகுணாதிவாகராலோ, ராஜன்குறையாலோ, தமிழச்சியாலோ முடியாது. அதற்கு ஒரு இயக்கமே தொடங்க வேண்டும் ((- அல்லது ஒரு இணையதளமாவது தொடங்கி ஜெயமோகனுக்கு மறுப்பு எழுதுவதற்காக மட்டுமே எழுதவேண்டும் ((-. இவையெல்லாம் நகைச்சுவைக்காச் சொல்லப்படுபவை என்றாலும் பெரியார் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கான மறுப்பை சிறுவெளியீடாகவோ அல்லது விரிவான புத்தகங்களாகவோ கொண்டு வருவது குறித்து நண்பர்கள் யோசித்து வருகிறோம்.
பெரியார் என்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பது நாம் வழக்கமாகச் சொல்வதுதான், பெரியாருக்கும் உவப்பானதுதான். ஆனால் ஜெயமோகனிடம் ஒன்று மட்டும் சொல்ல விருப்பம், உங்கள் விருப்பத்திற்கு வரலாற்றைத் திரிக்கவோ பெரியார் குறித்த அவதூறுகளைப் பரப்பவோ முடியாது ஜெமோ. எல்லா அவதூறுகளையும் எதிர்கொள்ள என்னை மாதிரியான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.