வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- இறுதிப்பகுதி


தமிழகத்திலிருந்து வைக்கத்துக்கு போராட்டத்தில் கலந்துகொள்ள புறப்பட்ட பெரியார் 13.04.1924ல்  வெளியிட்ட அறிக்கை:

ஸ்ரீமான் கே.நீலகண்ட நம்பூதியார் 4ம் தேதியிட்டு அனுப்பிய தந்தியில் என்னை உடனே புறப்பட்டு வரும்படிக் கேட்டுக் கொண்டிருந்தார். குளித்தலையில் கூடிய திருச்சி மகாநாட்டிற்குச் செல்ல வேண்டியிருந்ததால் புறப்பட முடியவில்லை. நான் முக்கியமாக அங்கு வந்துதான் ஆக வேண்டுமென்றால் நான் வருவதாகத் தந்தி கொடுத்தேன். பிறகு அனுப்பிய கடிதத்திலும் இதே விஷயத்தைத் தெரிவித்திருந்தேன்.
6ந்தேதி ஸ்ரீமான் ஜோசப்பும் எழுதியிருந்தார். நான் வரவேண்டுமென்பது தாங்கள் நினைத்தால் நான் வரச் சித்தமென்று பதில் அளித்தேன்.
12ந்தேதி இன்னொரு தந்தியை ஸ்ரீமான் நம்பூதிரிபாட் அனுப்பியிருந்ததில் வைக்கம் சத்தியாக்கிரக நிலைமையைப் பற்றி யோசிக்கப் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை (14.04.1924) கூடுவதாகவும், நான் விஜயம் செய்ய வேண்டுமென்றும் குறிப்பிட்டிருந்தார். அதே சமயத்தில் ஸ்ரீமான் டி.ஆர். கிருஷ்ணசாமி ஐயர் கொச்சியிலிருந்து அனுப்பியுள்ள தந்தியில் நான் அங்கிருக்க வேண்டியது மிகவும் அவசியமென்றும், உடனே புறப்பட வேண்டுமென்றும், ஜோசப் கைதியானாரென்றும் கொச்சியில் தாம் காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.

நான் இன்று ரெயிலில் வருவதாகவும், திருச்சூரில் என்னை ஸ்ரீமான் நம்பூதிரிபாத் சந்திக்கும் படிக்கும் பதில் தந்தி கொடுத்தேன்.
இரவு 7 மணிக்கு மூன்றாவது தந்தி கிடைத்தது. ’வைக்கத்தில் நிலைமை பயங்கரமாகவிருக்கிறது. தலைவர்கள் எல்லோரும் கைது செய்யப்பட்டு விட்டனர். 18 சத்தியாக்கிரகிகள் உண்ணாவிரதத்துடனிருக்கிறார்கள். நானும் வைக்கத்திற்குப் புறப்பட்டுக் கொண்டிருக்கிறேன். உடனே நான் கைது செய்யப்படுவேன் என்பது நிச்சயம். இயக்கத்தைத் தலைமை வகித்து நடத்துங்கள். தந்தி மூலம் யோசனை கூற வேண்டும்.’ இதற்கப்பால் நான் புறப்பட்டேயாக வேண்டுமென்று எண்ணமேற்பட்டுவிட்டது. இந்த நிலைமையை நானே வலுவில் விரும்பியதாக நினைக்க வேண்டாம். அத்தகைய எண்ணம் இல்லாமல் தடுக்கும் பொருட்டே நான் மேற்கண்ட சமாச்சாரத்தை வெளியிட்டேன். தமிழ் நாட்டில் நான் செய்யவிருக்கும் வேலைஅபரிமிதமாக இருக்கிறதென்பது தெரிந்த விஷயம். அதிலுள்ள பொறுப்புகளையும் கஷ்டங்களையும் அறிந்து கொண்டிருக்கிறேன். மிகவும் உபத்திரவமற்ற கதர் வேலைக்கு ஏற்படும் பல தடைகளும் இயக்கத்திலுள்ள இதர கஷ்டங்களும் என் மனத்திற்குத் தெரிந்தவைகளே. ஆனால் கேரள மாகாணத்திலிருந்து எனக்கு வந்திருக்கும் ஆக்ஞையை மீறி நடப்பதற்கில்லை. நெருக்கடியான நிலைமை ஏற்பட்டு விட்டது. அடக்குமுறை ஓங்கி நிற்கின்றது. தீண்டாமையை ஒழிக்கும் பொருட்டு ஸ்ரீமான் ஜார்ஜ் ஜோசப் உட்பட பல சத்தியாகிரகிகள் இந்த அடக்குமுறைக்கு ஆளாகிவிட்டனர். இத்தகைய எண்ணங்கள் என் மனதில் எழுந்தன. நான் புறப்பட்டு விட்டேன். நானும் கைது செய்யப்படலாம். அது ஒரு பெரிய காரியமல்ல. தலைவர்களாகவிருந்தாலும் சரி, பிரச்சாரகர்களாகவிருந்தாலும் சரி, தொண்டர்களாகினும் சரி, எல்லாச் சாதியினரும் கேரளத்திற்குக் கூட்டமாக வந்துவிட வேண்டுமென்று நான் விண்ணப்பித்துக் கொள்கிறேன். தொண்டு செய்ய முடியாதவர்கள் பண உதவியாவது செய்யலாம்.
தமிழ்நாட்டிலுள்ள தொண்டர்கள் ஒரு சத்தியாக்கிரக இயக்கத்தை எதிர்பார்த்துக் கொண்டிருப்பதாக எழுதி இருக்கின்றனர். தீண்டாமையை ஒழிப்பதற்காகக் கஷ்டப்படத்தயாரென்றும் அவர்கள் எழுதியிருக்கின்றனர். இதுதான் தகுந்த சமயம். இதை நழுவவிட்டு விடாதீர்கள். ஒவ்வொருவரும் இந்த உன்னத லட்சியத்திற்காக முன் வாருங்கள். (சுதேசமித்திரன் 15.04.1924)


 மிகத்தெளிவாகவே பெரியார் தனது அறிக்கையில் கேரளத்திலிருந்து வந்த அழைப்பைக் குறிப்பிடுகிறார். அவர் தமிழகக் காங்கிரஸ் அமைப்பின் சார்பாகச் செல்வதும் உறுதியாகிறது.  இந்த அறிக்கை காங்கிரஸ் இதழான சுதேசமித்திரனில் வெளியாவதும் கவனத்துக்குரியது. மேலும் வைக்கம் சென்றபிறகு ஈழவ தலைவர்களுடன் பெரியார் சந்திப்பு நடத்திய பின் வெளியிட்ட அறிக்கை 7.07.1924 இந்துவில் வெளியானது.

தமிழக அரசியலில் எந்த இடமும் இல்லாதவராகவும், எந்த அமைப்பின் சார்பின்றியும் சென்றவராகவும் ஜெயமோகனால் சுட்டப்படும் பெரியாரின் அறிக்கை காங்கிரஸ் இதழான  சுதேசமித்திரனிலும் தேசிய இதழான இந்துவிலும் எவ்வாறு வெளியாகும் என்கிற கேள்வியை வாசகர்களின் அறிவிற்கே விட்டுவிடுகிறேன்.

ஜெயமோகன் வைக்கம் போராட்டம் குறித்து முன்வைத்த அவதூறுகளுக்கான மறுப்புகளுக்கு இந்த தரவுகளே போதுமானவை என்று நினைக்கிறேன். நான் முன்பே சொன்னபடி இந்த தரவுகளைத் தந்துதவியர் திரு..திருமாவேலன். காலச்சுவடு பதிப்பகத்தின் சார்பாக திரு. பழ.அதியமான் எழுதி வெளியான ஜார்ஜ் ஜோசப் நூலில் பெரியார் பற்றிக் கூறப்பட்ட கருத்துகளை மறுப்பதற்காக அவர் தேடிச் சேகரித்த தரவுகள் இவை. கே.பி.கேசவமேனனின் ‘பந்தனத்தில் நின்னு’ நூலில் உள்ள பக்கங்களை மலையாளத்திலிருந்து  திருமாவேலனுக்காகத் தமிழுக்கு மொழிபெயர்த்துத் தந்தவர் மலையாளியும் உலக சினிமா மீது ஆர்வம் கொண்டவருமான திரு.சிவன் அவர்கள். அலுவல்பணி நிமித்தம் தொடர்ச்சியாக எழுத முடியாதபோது இந்த தரவுகளைத் தட்டச்சு செய்து தந்தவர் எனது மனைவி திரு.ஜெயந்தி அவர்கள். (ஜெயமோகனை மறுக்க குடும்பத்தோடு உழைக்க வேண்டியிருக்கிறது((- ) இவர்களின் உழைப்பில்லையேல் இந்த தொடர் சாத்தியமாகியிருக்காது.

எனக்கு ஜெயமோகனின் தளத்தில் நின்று பேச விருப்பமில்லை. வாய்ப்புள்ளவர்கள் இந்த கட்டுரைகளை ஜெயமோகன் தளத்திற்குக் கொண்டு சென்று கேள்விகேட்கலாம். பார்ப்போம், அவர் பதில் என்ன சொல்கிறாரென்று.

இனி கட்டுரையின் ஆரம்பத்தில் குறிப்பிட்ட, பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் ஜெயமோகன் எழுதியுள்ள கருத்துகள் குறித்துப் பார்ப்போம்.
(அழுத்தம் தரப்பட்டவை ஜெயமோவின் வார்த்தைகள்)

”வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.”

முதலாவதாக எல்லா இயக்கங்களுமே பரப்பியம் சார்ந்தவைதான். நான் ஒரு இயக்கம் ஆரம்பித்தால்கூட இரண்டாவதாக ஒரு ஆள் இணையவேண்டும் என்றால் பரப்பியம் செய்யத்தான் வேண்டும். பரப்பியம் உள்ள இயக்கம், பரப்பியல் இல்லாத இயக்கத்தின் வகைப்பாட்டு  வினோதம் குறித்து ஜெயமோகன்தான் விளக்கவேண்டும். ‘பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது’ என்கிற திராவிட இயக்கம் குறித்த ஜெமோவின் கருத்து அவரது வரலாற்று அறியாமையைக் காட்டுகிறது. பெரியாரியக்கம் மட்டுமல்ல திமுகவும் கூட பொதுமேடைகளுக்கு அப்பால் பத்திரிகைகள், நாடகங்கள், சினிமாக்கள் எனப் பல்வேறு தளங்களில் இயங்கி வந்த இயக்கம். அன்று இந்தியாவின் மிக முக்கியமான தேசிய இயக்கங்களான காங்கிரசும் கம்யூனிஸ்டும் கூட திராவிட இயக்கங்கள் அளவிற்கு இதழ்கள் நடத்தியதில்லை என்பதும் மக்களுடன் ஓயாத உரையாடல் நடத்தியதில்லை என்பதும் கவனத்துக்குரியது. ஏறத்தாழ அய்ம்பதுக்கும் மேற்பட்ட இதழ்களை நடத்திவந்தன இவ்விரு இயக்கங்களும். சமீபத்தில் நான் படித்த மிக முக்கியமான ராஜன்குறையின் கட்டுரையைப் படிப்பது மேலும் பல புரிதல்களுக்கு வழிவகுக்கும். “சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.” என்று ஜெமோ சொல்வது தனது அபிமானத்துக்குரிய சிவசேனாவைப் போலவே எல்லா இயக்கங்களையும் எடைபோடுகிறார் என்பதையே காட்டுகிறது.


”எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்”

இதுமாதிரியான நகைச்சுவைகள் உண்மையிலேயே ஜெயமோகனின் தனித்தன்மை என்றுதான் சொல்லவேண்டும். பவுத்தமும் சமணமும் உருவாக்கிய பட்டிமண்டபங்கள், விவாதக்களங்களுக்குப் பிறகு தர்க்கத்தைத் தமிழ்ப்பொதுவெளியில் கொண்டு போனவர் பெரியார்தான். பெரியாரின் மேடைகளில் எப்போதும் மாற்றுக்கருத்திற்கும் தர்க்கத்திற்கும் இடமுண்டு. சாதியுணர்வு, மதவுணர்வு, இறைநம்பிக்கை மட்டுமில்லாது மொழியுணர்வு, தேசபக்தி முதலிய கருத்தியல் நம்பிக்கைகளைக் கூட கேள்விக்குட்படுத்தியவர் பெரியார். பெரியாரின் தர்க்க அறிவிற்கும் சாதுரியத்திற்கும் பெரியாரின் மிகச் சில எழுத்துக்களைப் படித்திருந்தால் கூட போதுமானது. அவர் ஜெயமோகன் சொல்வதைப் போல உணர்ச்சியின்பாற்பட்டு பேசிய பொழுதுகள் மிகமிகச் சொற்பம். அதுவும் தன் வாழ்நாளின் இறுதியில் தனது செயல்பாடுகளின் மூலம் குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்த முடியவில்லை என்கிற கசப்புணர்வின் காரணமாக மட்டுமே சில சொற்கள் உதிர்ந்திருக்கும். எந்தவித மொழிப்பகட்டும் இன்றி உண்மையும் எளிமையும் நேர்மையும் கொண்டவை பெரியாரின் மேடைமொழி. அவரது எழுத்துக்களும் அவ்வாறனவையே என்பதைப் பெரியாரைப் படித்தவர்ளால் உணரமுடியும்.

“வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்”

“ காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும் ”


இந்த இரண்டு கூற்றுகளுக்கும் இடையில் உள்ள முரணைக் கவனியுங்கள். ’கருப்பு வெள்ளையாக இருமை எதிர்வுகளைக் கட்டமைத்து ஒற்றை மதிப்பீடுகளை நிறுவியவர் பெரியார்’ என்கிற அதே ஜெயமோகன்தான் ‘காந்தியைச் சனாதனவாதி என்ற பெரியார் காந்திதேசம் என்று பெயரிடச் சொன்னார்” என்கிறார். முதலாவதாக அவதூறின் முதற்பணியே கூற்றுகளையும் செயற்பாடுகளையும் வரலாற்றிலிருந்து பிய்த்து உருவி தனது விருப்பத்திற்கேற்ப கட்டமைப்பதுதான். பெரியார் எந்தெந்த சந்தர்ப்பங்களில் காந்தியோடு முரண்பட்டார், உடன்பட்டார் என்பதற்கு அவற்றின் பின்னால் உள்ள வரலாற்று நிகழ்வுகளை அறிய வேண்டும். அவ்வாறு இல்லாவிட்டால் யாரை வேண்டுமானாலும் ‘முரண்பாடுகளின் மூட்டை’யாகக் கட்டமைத்துவிட முடியும்.

மேலும் பெரியாரும் திமுகவும் தான் தமிழர்களை வெறுப்பின் அரசியல்பாற் படாமல் காப்பாற்றியவர்கள். காந்திக்கு மட்டுமில்லை, திராவிட இயக்கத்தவர்களால் கடுமையாக விமர்சிக்கப்பட்ட பாரதியார், பெரியாரியக்கத்தின் பிரதான அரசியல் எதிரியும் ‘’திமுகவை மூட்டைப்பூச்சியைப் போல நசுக்கிவிடுவேன்” என்று சொன்ன ராஜாஜி தொடங்கி ராஜீவ்காந்தி வரை மாற்றுக் கருத்தாளர்கள் மற்றும் செயல்பாட்டு ஆளுமைகளுக்கும் உரிய மரியாதையைச் செய்தது திமுக அரசு. கடந்துபோன காந்தியின் நினைவுநாளுக்காய்ப் பொதுக்கூட்டம் நடத்தியதுகூட பெரியார்திராவிடர்கழகம்தான். தமிழ் அறிவுச்சூழலைக் கணக்கிலெடுத்துக்கொண்டாலும் அம்பேத்க்ரையும் பெரியாரையும் முன்வைத்து பேசிய, பேசி வருகிற வ.கீதா, பிரேம், அ.மார்க்ஸ் , ராஜன்குறை போன்றவர்கள்தான் இப்போது காந்தி குறித்தும் மறுவாசிப்பு செய்து எழுதிவருகிறார்கள். இன்றைய நுகர்வுக்கலாச்சாரம், இந்துப்பாசிசத்தின் வெறுப்பு அரசியல், வெளித்தள்ளும் தேசியம் ஆகியவற்றிற்கான மாற்றாக காந்திய மதிப்பீடுகளை இவர்கள் முன்வைக்கத் தவறுவதுமில்லை. ஆனால் அதற்காக சாதியம் குறித்த அம்பேத்கரிய பெரியாரியப் பார்வைகள் முற்றாகத் தவறானவை என்றோ காந்தியை இருவரும் வில்லனாகத் தவறாகச் சித்தரித்தனர் என்று சொல்லத் துணியவுமில்லை. காந்திக்கும் அம்பேத்கருக்கும் பெரியாருக்குமான வரலாற்றுப் பங்களிப்பு இந்தியச்சூழலில் பாரியத்தன்மை கொண்டதும் காத்திரத்தன்மையானதுமாகும். அதேபோல் அவர்கள் இழைத்த தவறுகள் விவாதத்துக்கு உரியதும் படிப்பினைகளுக்காய் முன் கிடத்தப்படுவதுமாகும். இந்த வரலாற்றுப் பங்களிப்புகளை மறுப்பது வரலாற்றுக்கு இழைக்கிற துரோகம் மட்டுமில்லை, வாழ்க்கையின் இயங்கியலை மறுக்கிற குருட்டுத்தனமும் கூட. உண்மையில் காந்தியை ஹீரோவாக்க அம்பேத்கரையும் பெரியாரையும் வில்லனாகச் சித்தரிக்கும் வேலையை ஜெயமோகன் தான் வலிந்து செய்துவருகிறார். ஆனால் பாவம், உண்மையில் இது காந்திக்கே நல்லதில்லை ((-

"வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார்."

மற்றுமொரு சிரிப்பானை உதிர்க்க வேண்டியதுதான். பெரியார் எந்தளவுக்குத் தன் கருத்துக்களிலும் செயல்பாடுகளிலும் தீவிரமாக இருந்தாரோ அந்தளவுக்கு நிதானமாகவும் வெறுப்பாகத் தன் அரசியல் மாற்றப்படக்கூடாது என்பதில் உறுதியாகவுமிருந்தவர் . காந்திப்படுகொலையின்போது பார்ப்பனர்களை வன்முறையின் நிழல் தீண்டாது காத்தவர் பெரியார். இயக்கமும் இயக்கத்தோழர்களும் நெருக்கடிக்கு உள்ளாக்கப்படும் சூழல் வந்தபோது சிற்சில சமரசங்களையும் செய்துகொள்ளவும் அவர் தவறியதில்லை.  எப்போதும் அவர் வன்முறை அரசியலை முன்வைத்தவரில்லை. சமயங்களில்  மாற்று அரசியலுக்குத் தீங்கிழைக்கும் வகையில் கூட  வன்முறை எதிர்ப்பு அரசியலைக் கடைப்பிடித்தார் என்பதை நான் ஏற்கனவே எழுதியிருக்கிறேன். எனவே இது ஜெயமோகனின் வன்மம் சார்ந்த பரப்புரை என்பதைத் தவிர வேறெதுவுமில்லை. அந்த வன்மம் எந்தளவுக்குச் செல்கிறது என்றால்,

’’இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.”

என்றும் ஜெயமோகனை எழுதத் தூண்டுகிறது. அவருக்கு  இப்போதிருக்கும் திராவிடர் கழகம் பற்றி கூட ஏதாவது தெரியுமா என்பது ஒருபுறமிருக்க அண்மைய வரலாற்று நிகழ்வுகளையே மிகச்சுலபமாகத் திரித்துவிட முடியும் என்கிற அசாத்திய ‘நம்பிக்கை’ கொண்ட ‘ஞான அரக்கனை’ப் பாராட்டத்தான் வேண்டும். பெரியார் அறிவித்த போராட்டங்களில் கலந்துகொண்டவர்கள், சிறைக்குச் சென்றவர்கள், அதனால் தமிழ்ச்சூழலிலும் அரசியல் வெளியிலும் ஏற்பட்ட தாக்கங்கள் ஆகியவை குறித்து அறிய ஜெயமோகன் ‘அதிகாரப்பூர்வ திக வரலாறுகளைக்’ கூட படிக்க வேண்டாம், அந்த காலத்தில் வெளிவந்த சுதேசமித்ரன் தொடங்கி கல்கி வரையான எதிர்நிலை இதழ்களைப் படித்தால் கூட போதும். 1957ல் பெரியார் அரசியல் சட்ட எரிப்பு போராட்டம் அறிவித்தபோது தமிழகம் முழுக்க கைது ஆனவர்கள் போலீஸ் ஆவணங்களின்படியே 10,000 பேர்கள். 57ல் 10,000 பேர்கள் கைது ஆகும் அளவிற்கு ஒரு இயக்கம் இருந்தது என்றால் அது ‘குறுங்குழு’வா என்பதையும் மீண்டும் மீண்டும் வாசகர்கள் அறிவிற்கே விட்டுவிடுகிறேன். 1957ல் பெரியாரை விட்டு அண்ணா பிரிந்து சென்று ஏறத்தாழ பத்தாண்டுகள் ஆகியிருந்தன, அவர் கணிசமான நபர்களைத் திராவிடர்கழகத்திலிருந்து பிரித்து சென்றிருந்தார் என்பதையும் கவனத்தில் கொண்டு இந்த பத்தாயிரத்தை அணுக வேண்டும்.

சாத்தியப்பட்டவரை பெரியாரை வாசித்தவன் என்றமுறையிலும் ஓரளவிற்கேனும் பெரியாரியக்க மற்றும் தி.மு.க வரலாற்றை அறிந்தவன் என்ர முறையால் என்னால் உறுதியாகச் சொல்ல முடியும். ஜெயமோகனுக்குப் பெரியார், திராவிட இயக்கம், தமிழக அரசியல் வரலாறு குறித்து விரிவான வாசிப்புகளோ, ஆழமான புரிதல்களோ அறிவோ கிடையாது. பொத்தாம்பொதுவாக மற்றவர்களின் அபிப்பிராயங்களைக்  கடன்வாங்கி மட்டுமே அவர் கட்டிடம் எழுப்பி வருகிறார். அதனால்தான் குமரிமைந்தனைப் பெரியாரிஸ்ட் என்றும் பெரியார் எந்த அமைப்பின் சார்பாகவும் வைக்கம் செல்லவில்லை என்றும் அவரால் அபத்தமாக உளற முடிகிறது. மேலும் ஜெயமோகன் அவதூறு பரப்புகிற தன்மை மிக நுட்பமானது.

இந்த ‘வைக்கமும் காந்தியும்’ கட்டுரையையே எடுத்துக்கொள்வோம். காந்தி பற்றியும் பெரியார் குறித்தும் அவர் எழுதிய வரிகளை எண்ணிப் பார்த்தால் பத்துவரிகளுக்கு மேல் தாண்டாது. வைக்கம் போராட்டம் குறித்த கேரளப்பின்னணி வரலாறு குறித்து அவர் விரிவாக எழுதும்போதே அவரது வரலாற்றறிவு குறித்த ஒரு பிரமிப்பை வாசகனுக்கு ஏற்படுத்தி விடுகிறார். பிறகு போகிற போக்கில் பெரியார் வைக்கம் வீரர் இல்லை என்று ‘நிறுவி’ அவதூறு செய்வது எளிதாகி விடுகிறது. அவர் முன் கேட்கப்பட்ட கேள்வியும் சரி, அவரது பதிவின் தலைப்பும் சரி, அவர் சொல்ல வந்ததாய் நம்பப்பட்ட கட்டுரையின் மய்யமும் சரி, ‘வைக்கம் போராட்டத்தில் காந்தி எதிர்நிலைப்பாடுகள் எடுத்ததாகப் பெரியார் சொன்னது சரியில்லை’ என்பதுதான். ஆனால் மீண்டும்கூட அந்த கட்டுரையை முழுவதுமாய்ப் படியுங்கள். அதற்கான ஆதாரங்களோ தரவுகளோ நிகழ்வுகளோ எதுவுமோ அந்த கட்டுரையில் இருக்காது. ரோசாவசந்த் ஒருமுறை எழுதியதைப் போல போகிற போக்கில் ஒருகுடம் பாலில் ஒருதுளி விஷத்தைக் கலக்கும் லாவகம் ஜெயமோகனுக்கு உண்டு.

மேலும் ஜெயமோகனின் நேர்மை குறித்தும் யோசியுங்கள். அந்த கட்டுரைக்கு வந்த எதிர்வினைகளில் 99 சதவிகிதம் ‘ஒரு பொய்யான வரலாற்றைக் கட்டவிழ்த்த, அம்பலப்படுத்திய மாவீரன் நீங்கள்’ என்கிற ரீதியில் பெரியாரிடமிருந்த பட்டத்தைப் பறித்து ஜெயமோகனை வைக்கம் வீரர் ஆக்கிய கடிதங்கள். அப்படியானால் பெரியாரியர் தரப்பிலிருந்து ஜெயமோகனுக்கு எந்த எதிர்வினையும் கடிதமும் வரவில்லையா? ஜெயமோகன் ஒரு கடிதத்தை வெளியிட்டிருக்கிறார். “கேரளாவில்தான் பெரியார் போராடவில்லையே பின் ஏன் பெரியாறு அணை என்றும் பெரியாறு பூங்கா என்றும் பெயர் வைத்தார்கள்?” என்றும் அறிவுபூர்வமாகக் கேள்வி கேட்கிறது அந்த கடிதம். உடனே ’அது பெரியார் இல்லை பெரியாறுதான்’ என்று சிலப்பதிகாரத்திலிருந்து ஆதாரம் காட்டி வெண்ணெய்வெட்டி விளக்கம் தருகிறார் ஜெயமோகன். பெரியாரிஸ்ட்கள் இப்படித்தான் ‘கூமுட்டைத்தனமாக’ கேள்வி கேட்பார்கள் என்பதாக ஜெயமோகன் உருவாக்க முயலும் பிம்பம் அது. உண்மையில் அது வந்த கடிதமா, அல்லது உருவாக்கப்பட்ட கடிதமா என்று தெரியவில்லை. ஜெயமோகனின் ஆய்வுமுறை எப்போதும் நேர்மையானதில்லை.

நண்பர் சிறில் அலெக்ஸ் ஒரு கேள்வி கேட்டிருந்தார், ‘’ஜெயமோகன் சொல்கிற ’எல்லாவற்றையும்’ மறுக்கிறீர்களே” என்று. மற்ற விஷயங்களில் எப்படியோ பெரியார் குறித்தும் திராவிடர் இயக்கம் குறித்தும் ஜெமோ சொல்லிவருவதை மறுத்துத்தானாக வேண்டும். ஏனெனில் அவை அத்தனையும் கலப்பில்லாத அவதூறு பொய்கள். மேலும் ‘ம.பொ.சி வளராததற்குக் காரணம் காமராஜர்தான்” (சி.பா.ஆதித்தனாரும் குமரி அனந்தனும் வளராமல் போனதற்கு யார் காரணம் என்று தெரியவில்லை), ‘இந்திய மார்க்ஸியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முடிவுரையை  பிரகாஷ்காரத் எழுதக்கூடும் என நான் அஞ்சுகிறேன்” ( ஜெயமோகன் எதற்கு ‘அஞ்ச வேண்டும்?” ((- ) என்று போகிற போக்கில் அசட்டுத்தனமான வாக்குமூலங்கள், பழிபோடும் தீர்மானங்கள் ஆகியவை வரலாறு குறித்த ஒரு அரைகுறைப் பார்வையைத்தான் இலக்கிய வாசகர்கள் மத்தியில் ஏற்படுத்துகிறது. எனவேதான் சிறில், இது.

ஆனால் ஜெயமோகனின் அவதூறுகளை மறுக்க வேண்டுமானால் தனிப்பட்ட சுகுணாதிவாகராலோ, ராஜன்குறையாலோ, தமிழச்சியாலோ முடியாது. அதற்கு ஒரு இயக்கமே தொடங்க வேண்டும் ((- அல்லது ஒரு இணையதளமாவது தொடங்கி ஜெயமோகனுக்கு மறுப்பு எழுதுவதற்காக மட்டுமே எழுதவேண்டும் ((-. இவையெல்லாம் நகைச்சுவைக்காச் சொல்லப்படுபவை என்றாலும் பெரியார் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கான மறுப்பை சிறுவெளியீடாகவோ அல்லது விரிவான புத்தகங்களாகவோ கொண்டு வருவது குறித்து நண்பர்கள் யோசித்து வருகிறோம்.

பெரியார் என்பவர் விமர்சனத்திற்கு அப்பாற்பட்டவர் அல்லர் என்பது நாம் வழக்கமாகச் சொல்வதுதான், பெரியாருக்கும் உவப்பானதுதான். ஆனால் ஜெயமோகனிடம் ஒன்று மட்டும் சொல்ல விருப்பம், உங்கள் விருப்பத்திற்கு வரலாற்றைத் திரிக்கவோ பெரியார் குறித்த அவதூறுகளைப் பரப்பவோ முடியாது ஜெமோ. எல்லா அவதூறுகளையும் எதிர்கொள்ள என்னை மாதிரியான ஆயிரக்கணக்கான இளைஞர்கள் இன்னும் தமிழகத்தில் இருக்கத்தான் செய்கிறார்கள்.

வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும் 4

’வைக்கம் போராட்டத்தில் பலரும் போராடினார்கள். அவ்வாறு போராடியவர்களில் ஒருவர்தான் பெரியார். அவரது போராட்டத்திற்கோ, பங்களிப்பிற்கோ தனிச்சிறப்பான வரலாற்று முக்கியத்துவமில்லை. அவரது பங்களிப்பைத் தமிழகத்தில்தான் குறிப்பாக பெரியாரது அபிமானிகளும் திராவிட இயக்க ஆட்சியாளர்கள் மற்றும் ஆதரவாளர்களும்தான் மிகைப்படுத்தி விட்டார்கள். மற்றபடி வைக்கம் போராட்டம் குறித்த  கேரள வரலாற்றில் பெரியாருக்கு இடமே இல்லை’ என்பதுதான் ஜெயமோகன் எழுதியதன் சாராம்சம்.  ஆனால் உண்மையில் பெரியார் ‘கைதானவர்களில் ஒருவர்’ மட்டுமல்ல, அவரது கைது என்பது மற்றவர்களின் கைதிலிருந்தது வேறுபட்டிருந்தது என்பதைக் கேரள போராட்ட தளகர்த்தர்களில் ஒருவரான கே.பி.கேசவமனனின் வார்த்தைகளிலிருந்தே பார்த்தோம். அரசு ஒடுக்குமுறை பெரியார் மீது கடுமையாகப் பாய்ந்திருக்கிறது என்றால் பெரியாரின் போராட்டம் அரசுக்கு நெருக்கடியைக் கொடுத்தது என்பதையும் போராட்டத்திற்குப் பாரிய வலு சேர்த்தது என்பதையும் மிக எளிதாக யாரும் புரிந்துகொள்ள முடியும்.

இந்த இடத்தில் ஒன்றைச் சொல்லிக்கொள்வது நல்லது. பொதுவாக நான் பின்னூட்டங்களை மட்டறுப்பதில் கறார்த்தன்மை காட்டுவதில்லை. ஆனால் இந்த பதிவுகளுக்கு மட்டும் அப்படி ஒரு கறார்த்தன்மை இருக்கட்டும் என்று முன்பே முடிவு செய்துகொண்டேன். ஆனால் வரக்கூடிய பின்னூட்டங்களில் பெரும்பாலானவை  இன்றைய இலக்கிய வாசகர்களின் மொன்னைத்தனத்தைக் காட்டுகின்றன. ரஜினி மற்றும் அஜித் ரசிகர்கள் அளவுக்கு வீடு புகுந்து தாக்கவில்லையே தவிர, மற்றபடி மூர்க்கத்தனமான பின்னூட்டங்கள்தான் ஜெயமோகன் வாசகர்கள் தரப்பிலிருந்து வருகிறது. இன்னும் கொஞ்சம் நாகரீகமானவர்கள், ‘பாடப்புத்தகங்கள்,. அண்ணா, கருணாநிதி, திமுக’ பற்றியெல்லாம் கேள்வி கேட்டு முடிந்தவரை வைக்கம் போராட்டம் தொடர்பான விவாதத்தின் ஓர்மையைக் கலைத்து விவாதத்தைக் கடத்த விரும்புகிறார்களே தவிர, இங்கு முன்வைக்கப்பட்டிருக்கும் தரவுகள் குறித்து ஒரு வார்த்தையுமில்லை. ஜெயமோகன் எழுதியதன் சாராமத்தையே மறைத்து தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப ‘இதுதான் சாராமசம்’ என்று காட்ட விரும்புகிறார்கள். மேலும் ஜெயமோகன் தளத்திலும், கேணி சந்திப்பு தொடர்பாக எழுதப்பட்ட பதிவுகளிலும் உள்ள கடிதங்கள், பதிவுகள், எழுத்துகளைப் பார்த்தால், ஒருவர் ஜெயமோகனை ‘ஞான அரக்கன்’ என்கிறார். இன்னொருவர் ஜெயமோகனை நேரில் பார்த்த பரவசத்திலிருந்தே மீளவில்லை. இப்படியாக ஒரு மதமனநிலையிலிருந்து ஜெயமோகன் வாசகர்கள் மீள்வது கடினம் போலிருக்கிறது. ஆனால் அதுகுறித்துக்கூட கவலையில்லை. ஆனால் வைக்கம் போராட்டம் குறித்தும் பெரியாரியக்கம் குறித்தும் திமுக குறித்தும் ஜெயமோகன் முன்வக்கும் கருத்துகள் அதிகபட்சம் எண்பது ஆண்டுகளிலிருந்து நாற்பது ஆண்டுகாலம் வரை முந்தியுள்ள வரலாறுகள்தான். இந்த வரலாறு குறித்து ஜெயமோகனால் அனாயசமாகத் திரித்து அவதூறு செய்யமுடிகிறது என்றால் இந்த வரலாறுகளைத் தரவுகளை உரசிப்பார்த்து தெரிந்துகொள்ள வேண்டும் என்கிற பிரக்ஞை கூட இல்லாதவர்களாக இலக்கியவாசகர்கள் மாறியிருப்பது கவலையளிக்கிறது. புனைவு இலக்கியங்கள் மட்டுமே மனித வாழ்க்கையின் சிறப்பம்சங்கள் அல்ல, சமூக வரலாறும்தான் என்பதை இவர்கள் எப்போது உணர்வார்களோ?

‘பெரியார் தர்க்கத்தின் மொழியில் பேசியவர் இல்லை’ என்றும் ‘அவர் ஒரு குறுங்குழுவைத்தான் நடத்திவந்தார்’ என்றும் ‘காந்தியைப் போல அவர் ஒரு வரலாற்றின் குரல் இல்லை’ என்றும் ‘தமிழகத்தின் அரசியல் வரலாற்றில் அவருக்கு இடம் இல்லை’ என்றும் ஜெயமோகன் கூறுகிறார். ஆனால் நாம் முன்பு குறிப்பிட்ட அதே கேசவமேனன் மலேசியாவில் பெரியாரையும் நாகம்மையாரையும் சந்தித்ததை ஒட்டி ‘கடந்தகாலம்’ புத்தகத்தில் எழுதுவதைக் கவனியுங்கள்

”திராவிட கழகத் தலைவர் ஈ.வி.ராமசாமி நாயக்கர் நான் மலேசியாவில் இருந்தபோது அங்கு வந்திருந்தார். சுயமரியாதை இயக்கப் பிரசாரம் செய்து கொண்டு நாயக்கர் மலேயாவில் பல இடங்களிலும் சுற்றுப் பயணம் செய்தார். இரண்டு நாட்கள் அவரும் அவருடைய மனைவியும் எங்கள் இல்லத்தில் தங்கினார்கள். ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கு கொண்டவர்கள் என்ற முறையில் நாங்கள் அடிக்கடி பார்த்துப் பழக சந்தர்ப்பங்களிருந்திருக்கின்றன. பின்னர் நாயக்கர் காங்கிரஸிலிருந்து பிரிந்தது மட்டுமின்றி, காங்கிரஸிக்கு எதிரியாகவும் மாறினார். என்றாலும் எங்கள் தனிப்பட்ட நட்புறவுக்கு அது தடையாக இல்லை. மலேயாவில் திராவிட கழகத்தார் நாயக்கரின் அறுபதாவது ஆண்டு விழாவைக் கொண்டாடிய போது, அக்கூட்டத்துக்கு என்னைத் தலைமை தாங்க அழைத்தார்கள். தேசீயக் கருத்துக்களில் எங்களிருவருக்கும் இடையே ஒற்றுமை நிலவவில்லை எனினும், அவர் சமுதாய முன்னேற்றத்துக்கு ஆற்றி வரும் தொண்டைப் பாராட்டுவதற்குரிய வாய்ப்பாக அச்சந்தர்ப்பத்தை பயன்படுத்திக் கொண்டேன். நாயக்கர் பேச்சாற்றல் மிகுந்தவர். பொதுத் தொண்டாற்றும் திறனுடன், தலைமைப் பொறுப்புற்குரிய பண்பும் அவரிடம் இணைந்திருந்தன. நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக பொதுத் தொண்டாற்றி வரும் நாயக்கரை அவருடைய கருத்துக்களில் உடன்பாடு கொள்ளாதவர்கள் கூட அவர் ஒரு ஆற்றல் மிகுந்த தனிமனிதர் என்பதை ஒப்புக் கொள்வார்கள். (பக்.196)

வெவ்வேறு அரசியல்நிலைப்பாடுகளில் இருந்தபோதும் பெரியாரின் வரலாற்றுப் பங்களிபையும் ஆளுமையையும் ஒத்துக்கொள்ளும் அறவுணர்வு மனநிலை கேசவமேனனிடம் இருந்தது. ஆனால், முன் தீர்மானங்களையும் வெறுப்பின் வன்மத்தையும் கொண்ட ஜெயமோகனிடம் அதை எதிர்பார்க்க முடியுமா, என்ன?

கே.பி.கேசவமேனன் பெரியாரின் சிறைவாழ்க்கை குறித்து ‘பந்தனத்தில் நின்னு’ நூலில் எழுதுவதை அன்று காங்கிரசின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராஜாஜியின் அறிக்கையும் உறுதிசெய்கிறது. ராஜாஜியின் அறிக்கை இது:

“இப்பொழுது திருவனந்தபுரம் சிறைச்சாலையிலிருக்கும் சத்தியாக்கிரகக் கைதியான ஸ்ரீமான் ராமசாமி நாயக்கரை உணவு, இடவசதி முதலிய விஷயங்களில் சாமான்யக் கைதிகளைப் போல் நடத்துவதாக நம்பத்தகுந்த இடத்திலிருந்து எனக்குச் செய்தி கிடைத்திருக்கிறது. அவர் சிறை உடைகளை அணிகிறார். காலில் இரும்பு வளையம் போடப்பட்டிருந்தது. மற்ற சத்தியாக்கிரகக் கைதிகளிடமிருந்து பிரித்துத் தொலைவில் ஒரு தனி அறையில் அடைத்திருக்கிறார்கள். ஆயினும் ஸ்ரீமான் நாயக்கர் உற்சாகத்துடனிருந்து வருகிறார் என்பதை நான் சொல்லத் தேவையில்லை. அவருடன் நான் நெருங்கிப் பழகியிருப்பதால் அவரை நன்கறிவேன். அவர் செல்வத்தையும், அந்தஸ்தையும் துறந்து, சங்கடங்களை ஏற்றுக் கொண்ட தீர புருஷர். அவருடைய தூய்மையைப் பரிசோதிப்பதற்காக இத்தகைய சோதனைகள் செய்வதற்கு அவர் சந்தோஷப்படுகிறார். பிரிட்டிஷ் இந்தியாவில் நடத்தப்படும் தோரணைக்கு இது முற்றிலும் மாறுபட்டிருக்கிறது. இருந்தாலும் ஸ்ரீமான் நாயக்கர் விஷயத்தில் திருவாங்கூர் கவர்மெண்டார் தவறான வழியில் இறங்கி விட்டதாகத் தோன்றுகிறது. ஸ்ரீமான் நாயக்கருடைய அந்தஸ்து தெரியாமல் அவ்விதம் செய்யலாம். ஆனால் அது ஒரு சமாதானமாக முடியாது. மனச்சாட்சிக்காகச் சிறை செல்வோர் எத்தகையினராயினும் அவர்களைக் கண்ணியமாக நடத்த வேண்டும். அந்த ஜில்லாவை விட்டுப் போய்விடும்படி ஸ்ரீமான் நாயக்கருக்கு உத்தரவிட்டார்கள். சாந்தமாக அதை மீறி வந்தார்... இருந்தபோதிலும் பிரஷ்ட (வெளியேற்ற) உத்தரவின் நோக்கம் சம்பந்தப்பட்டவரைப் பாதுகாப்பில் வைத்திருப்பதால் நிறைவேறி விடுகிறது. ஆனால் அவருக்குக் கடுங்காவல் தண்டனை விதிப்பதும், இரும்பு விலங்குகள் போடுவதும், சிறை உடைகளைக் கொடுப்பதும், மற்றவர்களுடன் சல்லாபமில்லாமற் செய்வதும் நியாய விரோதமாகும். திருவனந்தபுரம் சிறையிலிருக்கும் தீரரைத் தமிழ்நாடு பாராட்டுகிறது... (சுதேசமித்திரன் 28.08.1924)


பின்னாட்களில் பெரியாரின் முதன்மை அரசியல் எதிரியாக மாறியவரும், பெரியாரைக் காங்கிரசுக்கு அழைத்துவந்தவருமான ராஜாஜி, பெரியாரின் நிலை குறித்து விடுகிற அறிக்கை, அன்று பெரியாருக்குத் தமிழகத்திலும் தமிழகக் காங்கிரசிலும் இருந்த செல்வாக்கைக் காட்டுகிறது. அவதூறுவாதிகளும் கண்மூடித்தனமான அவரது பின்பற்றாளர்களும் ஏற்றுக்கொண்டாலும் ஏற்றுக்கொள்ளாவிட்டாலும் பெரியார் உண்மையில் வைக்கம் வீரர்தான். அவரும் அவரது மனைவி நாகம்மையின் வருகையும் வைக்கம் போராட்டத்தில் மாபெரும் சலனத்தையும் தாக்கத்தையும் ஏற்படுத்தியது. முன்னணித் தளபதிகள் கைதுக்குப் பின் பெரியார் போராட்டத்திற்குத் தலைமை ஏற்று நடத்தியதையும் அதனால் போராட்டத்தின் இயங்குதிசை இன்னும் தீவிரமடைந்ததையும் அரசு ஒடுக்குமுறை வைக்கம் வீரராம் பெரியார் மீது பாய்ந்ததையும் அரசு ஆவணங்களும் கேரள பதிவுகளும் காட்டுகின்றன. ஜெயமோகன் எச்சி தொட்டு அழித்துவிட வரலாறு என்ன அவ்வளவு குழந்தைத்தனமானதா?

(தொடரும்...)



















.




வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்-3


திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் 1924, ஏப்ரல் 21 அன்று சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதம் இது.

”................ Sir,


..........



Mr. Ramasami Naicker arrived on that day from Erode to take charge of the campaign. If more determined attempts are made to push past the police picquets. Mr. Pitt has all arrangements in hand for the erection of harricades. His latest report suggests that Satyagrahists are deliberately provoking the rank and file of the police to lose their tempers but have failed dismally. Mr. S. Srinivasa Iyenger arrived from madras on the 17th and had an informat conference with the caste - Hindus which seems to have come to nothing, before proceeding to Trivandrum. The latest news is that Mr. Perumal Naidu has relieved Mr. Ramasami Naicker as O.C., Satyagraha Head - quarters." (page 288)

தமிழகத்திலிருந்து வைக்கத்திற்கு வந்த பெரியார்தான் அடுத்த கட்டமாகப் போராட்டத்தைத் தலைமை ஏற்பதற்கும் பரப்புரை செய்வதற்குமான பொறுப்பை மேற்போட்டுக்கொண்டார் என்பதை பேராசிரியர் டி.கே.ரவீந்திரனும் அவர் பின் இணைப்பில் காட்டும் காட்டனின் கடிதமும்  குறிப்பிடத் தவறவில்லை. ஆனாலும் இதனை எல்லாம் தந்திரமாய் மறைத்து, கொஞ்சமும் வெட்கமுமின்றி, ’’கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை” என்று கூசாமல் புளுகுகிறார் ஜெயமோகன்.

டி.கே.ரவீந்திரனின் புத்தகத்தைக் கூட விட்டுவிடுவோம். வைக்கம் போராட்டத்தில் முன்நின்ற கேரள தளகர்த்தர்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் தனது வாழ்க்கைப்பயணம் குறித்து ‘கடந்த காலம்’ என்ற நூலை எழுதியுள்ளார். இந்த புத்தகம் எழுத்தாளர் ராஜம்கிருஷ்ணன் மொழிபெயர்ப்பில் 1998ஆம் ஆண்டு நேஷனல் புக் டிரஸ்ட் பதிப்பகத்தால் தமிழிலும் வெளியிடப்பட்டது.  1886ல் பிறந்த கேசவமேனன் 1969ல் எழுதிய புத்தகம் ’கடந்தகாலம்’. வைக்கம் போராட்டம், மலேசியாவில் வழக்கறிஞர் பணி, பத்தொன்பது ஆண்டுகள் கழித்து இந்தியா வருகை, மாத்ருபூமி ஆசிரியர், 1951ல் இலங்கையில் இந்தியத்தூதராகப் பணி என பல்வேறு அனுபவங்களைச் சந்தித்த கேசவமேனன் இந்த புத்தகத்தை எழுதும்போது அவருக்கு வயது 83. ஆனாலும் மறக்காமல் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பை இப்படி குறிப்பிடுகிறார் கேசவமேனன்.

“இக்காலத்தில் வைக்கம் சத்தியாக்கிரகம் அகில இந்தியப் புகழ்பெற்றது. தமிழ்நாட்டிலிருந்து ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வைக்கம் வந்து சத்தியாக்கிரகம் செய்து திருவனந்தபுரம் சிறைக்கு வந்தார்” (பக்கம் 163).

அதோடு மட்டுமில்லை, ‘கடந்தகாலம்’ என்பது கேசவமேனனின் பல்வேறு வாழ்க்கை அனுபவங்களின் பதிவு என்றால், கே.பி.கேசவமேனனின் ‘பந்தனத்தில் நின்னு’ நூல் (தமிழில் ‘தளைகளை விட்டு’ என்று பொருள்) முழுக்க முழுக்க வைக்கம் போராட்டத்தைப் பற்றியது. மேலும் இதில் உள்ள சிறப்பு, இந்த புத்தகம் 1924ல் மாத்ருபூமி பதிப்பகத்தால் வெளியிடப்பட்டது. அதாவது வைக்கம் போராட்டம் நடந்துகொண்டிருந்தபோதே எழுதி வெளியிடப்பட்ட புத்தகம். இந்த நூலின் முன்னுரைக்கான தேதியில் 27.10.1924 என்று தேதி குறிப்பிடுகிறார் திரு கே.பி.கேசவமேனன்.  ‘போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை’ என்று ஜெயமோகனால் குறிப்பிடப்படும் பெரியார் குறித்த கேசவமேனனின் எழுத்து இது.

“ஸ்ரீமான் ஈரோடு ராமசாமி நாயக்கரும், சிவசைலம் முத்துசாமி என்ற பெயர் கொண்ட மற்றும் இரண்டு சத்தியாக்கிரக கைதிகளும் எங்களுடன் ஒன்றாக இருக்கவில்லை. நாயக்கருக்கு கடுங்காவல் தண்டனை விதித்திருந்தனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், ஈரோடு முனிசிபல் கவுன்சிலின் சேர்மனுமாக இருந்தவரும், ஒரு பெரும் பணக்காரரும், உத்தம தேசாபிமானியுமான நாயக்கரின் காலில் தளைகளும் (சங்கிலிகளும்), கைதிகளது தொப்பியும், முழங்கால் வரையிலான வேட்டியும், கழுத்தில் மரத்தாலியும் (மரக்கட்டையும்) மாட்டி, கொள்ளைக்காரர்கள் மற்றும் கொலைகாரர்களுடன் ஒன்றாக வேலைக்குச் செல்வதைக் கண்டு, கேரளத்தின் தீண்டாமை ஜாதிக்காரர்களது சுதந்திரத்துக்காக தமிழ் நாட்டின் ஒரு பெரிய மேற்குல இந்துவை இப்படிப்பட்ட தியாகத்துக்கு உந்திய சிரேஷ்டமான இயக்கத்தின் மகிமை எங்களுக்குப் புத்துயிர் தராதிருக்கவில்லை. நாயக்கரையும் மற்ற இருவரையும் 'பிரத்தியேகக் கைதிகளாக்கி' வைக்காதது குறித்து திருவிதாங்கூர் கவர்மெண்டுக்கு நாங்கள் அனுப்பிய கடிதத்துக்கு (நாங்கள்) விடுதலையாவது வரை பதில் எதுவும் கிடைக்கவில்லை. கவர் ஒட்டுவது தான் நாயக்கரது வேலை. சாதாரணக் கைதிகள் செய்வதை விட இரண்டு மடங்கு வேலையை நாயக்கர் தினமும் செய்து வந்தார். (பந்தனத்தில் நின்னு - மலையாளம்) பக்.76



இந்த வரிகளை நுட்பமாகப் படித்தால் நமக்கு இன்னொரு உண்மை விளங்கும். கேசவமேனன் வைக்கம் போராட்டம் தொடங்கிய முதல்நாளே கைது ஆகிறார். அவருக்குப் பின் கைது ஆகிய போராளிகளும் கூட ’பிரத்யேகக் கைதிகளாகத்தான்’ சிறை வைக்கப்பட்டிருக்கிறார்கள். ஆனால் பெரியாரும் அவரது தோழர்களும் மட்டும் தனிமைச்சிறையில் கால்களில் சங்கிலி கட்டப்பட்ட நிலையில் இருப்பதையும் சுட்டிக்காட்டுகிறார் மேனன்.

அயல்மாநிலம் தாண்டி தீண்டாமை ஒழிப்பிற்காய்ப் போராட வந்த பெரியார் குறித்து கேசவமேனன் கொண்டிருந்த அறத்தின்பாற்பட்ட மரியாதையையும் ஜெயமோகனின் சிறுமைக்குணத்தையும் ஒப்பிட்டுப்பார்த்தால் நீதியின் அருமை நமக்கு விளங்கும்

                                                                                    (தொடரும்...)

வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- 2

வைக்கம் போராட்டம் குறித்த குடி அரசு செய்திகள், பெரியாரின் கூற்றுகள் மட்டுமில்லாது சாமிசிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூல், திராவிடர் கழகத்தலைவர் தோழர்.கி.வீரமணி மற்றும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.ஆனைமுத்து ஆகியோர் வைக்கம் குறிதது எழுதியுள்ள செய்திகளையும் தகவல்களையும் முன்வைத்தால் கூட ‘அது தி.கவின் அதிகாரப்பூர்வ வரலாறு’ என்று ஜெயமோகன் மறுக்கக்கூடும். ‘வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான செயல்பாடுகள்’ குறித்தும் காந்தியை விமர்சித்தும் தொடர்ச்சியாக ஜார்ஜ் ஜோசப் குடியரசு இதழில் எழுதி வந்தார். ஜார்ஜ் ஜோசப் குறித்த தகவல்களை திரு வி.கவின் வாழ்க்கைக்குறிப்புகள் 1,2, கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள், மபொசியின் ’விடுதலைப்போரில் தமிழகம்’, ஸ்டாலின் குணசேகரனின் ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ ஆகிய நூல்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். இவர்கள் யாரும் ’அதிகாரப்பூர்வ தி.க வரலாற்றாசிரியர்கள்’ அல்ல. மட்டுமில்லாது இவர்களில் பலரும் காங்கிரஸ் சார்பு உடையவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியாரோடு முரண்பட்டவர்கள். இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று ஆய்வு நிகழ்த்த வேண்டும் என்றால் காந்தியின் தொகுப்புநூல்கள், பேச்சுகள், எழுத்துகள், சுயசரிதை, அவரது பிரகடனங்கள், வாக்குமூலங்கள், சிறைக்குறிப்புகள், அவரது சமகாலத்தோழர்களின் பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஆராய வேண்டும். அதை ‘அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வரலாறு’ என்று புறந்தள்ள முடியாது. அம்பேத்கர் குறித்த ஆய்வுக்கும் அஃதே. இவைகள் வரலாற்று ஆய்வின் அடிப்படைகள், ஆய்வாளரின் கடமைகளில் ஒன்று. ஆனால் அதைப் பற்றியெல்லாம் ஜெயமோகனுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?

’அதிகாரப்பூர்வ தி.க வரலாறு’ அல்லாத, வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம். இவை அனைத்தும் தமிழர்களால் எழுதப்பட்ட ஆவணங்கள் அல்ல. ஒரு ஆங்கிலேய அதிகாரி தவிர்த்த மற்ற அனைத்தும் மலையாளிகளால் எழுதப்பட்ட பதிவுகள். அவை கீழ்க்கண்டவை...

Eight Furlongs Of Freedom - T.K.Ravindran

Bandhanathilninnu - K.P.Kesava Menan

Kshetra Pravesanam - T.K.Madhavan

Proceedings Of Travancore Legislative Counsil - 1924, 1925.

Office Note Regarding The Vykom Satyagraha - 1924.

Life Of T.K.Madhavan - P.K.Madhavana.

இந்த ஆவணங்கள் அனைத்திலும் பெரியாரின் பங்களிப்பு விரிவாகப் பேசப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டம் குறித்த விரிவான ஆய்வு செய்த திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் டி.கே.ரவீந்திரன் 1980ல் எழுதிய ’Eight Furlongs Of Freedom’ நூலில் வைக்கம் குறித்தும் பெரியார் குறித்தும் எழுதியவைகள் குறித்துப் பார்ப்போம்.

1924, ஏப்ரல் 9ம் நாள் ஏ.கே.பிள்ளை,கே.வேலாயுதமேனன், கே.கே.கேளப்பன், கே.ஜி.நாயர், ஜெபஸ்டின் போன்ற சத்தியாக்கிரகத்  தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் போராட்டம் ஒரு பாரிய பின்னடைவைச் சந்திக்கிறது. போராட்டத்தை மீண்டும் தொடர கேரளாவுக்கு அப்பால் உள்ள சக்திகள் போராட்டத்திற்கு வரவேண்டிய சூழல் உருவாகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைத் தன் நூலில் சுட்டிக்காட்டுகிறார் ரவீந்திரன்.

‘’In fact the movement would have collapsed long ago but for the support it has received from the outside, though the question of opening this road is a pure domestic problem" ( page 63)

கேரளாவுக்கு வெளியிலிருந்து தலைவர்கள் வருவதைக் குறிப்பிடும் ரவீந்திரன், தனது நூலில் அது தொடர்பாக எழுதிய அடிக்குறிப்பு,

‘’ஈ.வெ.ராமசாமிநாயக்கர், அய்யாமுத்துக்கவுண்டர் மற்றும் எம்பெருமாள் நாயுடு போன்ற தமிழகத்தலைவர்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுக் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் பேச்சு திருவிதாங்கூர் மக்களை ஈர்ப்பதாக இருந்தது.” (பக்கம் 67)

“1924 ஏப்ரல் 14ஆம் நாள் காலையில் இரண்டு குழுவினருடன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வந்து சேர்ந்தார். வடக்கு, கிழக்கு தெருக்களில் ஈழவர்களை நுழைய அழைத்து வந்தார்” (பக் 88)

”சத்தியாக்கிரகிகளுக்கு ஆதரவும் பணமும் இயக்கத்தை நடத்தும் தலைமையும் சென்னையிலிருந்து கிடைத்தது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர்  இந்த இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டினார்.  கேரளாவுக்கு வருவதற்கு முன் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிக்கை வெளியிட்டார். உணர்வுபூர்வமான அறிக்கை அது.” (பக் 89)

’தமிழ்நாட்டு அரசியலில் எந்த இடமும் இல்லாத’, ‘தொண்டர்பின்புலம் இல்லாத’ பெரியார் எப்படி தமிழகமக்களுக்கு அறிக்கை விட முடியும், இரண்டு குழுவினருடன் வைக்கத்திற்கு வர முடியும் என்கிற கேள்விகளை ஜெயமோகன் வாசகர்களுக்கும் பொதுவான வாசகர்களுக்கும் முன்வைத்து இனி ரவீந்திரனின் புத்தகத்திற்கு மீண்டும் திரும்புவோம்.

‘’But the support the vaikom  satyagrahis received from madras, both in money and leadership, was very great and impressive." ( page 89).

வைக்கத்தில் கேரளத்தலைவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம், ஒரு பின்னடைவைச் சந்திக்கிறபோது அதை வழிநடத்தும் பொறுப்பு, அதாவது போராட்டத்திற்குத் தலைமையேற்க வேண்டிய கடப்பாடை தமிழகத்திலிருந்து வந்த பெரியார் ஏற்றுக்கொண்டார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ரவீந்தரன். ஆனால் ஜெயமோகனோ, ‘பெரியார் கூட்டத்தில் கோரஸ் பாடினார்’ என்கிறார். ரவீந்திரன் தமிழரோ திராவிட இயக்க ஆதரவாளரோ அல்ல, மலையாளி. அவருக்குப் பெரியார் குறித்து மிகைப்பிம்பங்களைக் கட்டியமைக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இதையாவது ஜெயமோகன் ஒத்துக்கொள்வாரா? அல்லது தட்டிக்கழிக்க புதிய காரணங்களைக் கண்டுபிடிப்பாரா? ஒருவேளை ரவீந்திரன் குறித்துக் கூட ஜெயமோகன் ஏதாவது புதுக்கதை அவிழ்க்கக்கூடும். ஆனால் அன்றைய நிலையில் வைக்கம் போராட்டத்தால் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் 1924, ஏப்ரல் 21 அன்று சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைப் பின் இணைப்பாகக் கொடுத்துள்ளார். இது ஒரு அரசு ஆவணம். யார் வேண்டுமானாலும் இதைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

காட்டன் பெரியார் குறித்து எழுதிய கடிதத்தைப் பார்ப்போம்.

                                                                                          ( தொடரும்....)




சில குறிப்புகள் :

* வைக்கம் போராட்டம் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கான மறுப்பை மூன்றுபாகங்களாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது இன்னும் ஓரிரு பாகங்கள் பிடிக்கும் போலிருக்கிறது.

* இந்த கட்டுரைக்கான தரவுகளைத் தந்து உதவியர் திரு.ப.திருமாவேலன். அவருக்கு என் நன்றிகள்.

* பதிவில் வரும் ஆங்கில மேற்கோள்களைத் தட்டச்சியது நான் என்பதால் அதில் வரும் எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகளுக்கு நானே பொறுப்பு.

வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்

சமீபத்தில் நடந்த ஜெயமோகனின் புத்தகவெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தபோது ஒரு மலையாள எழுத்தாளர் (பெயர் நினைவில்லை) ஜெயமோகன் குறித்து மலையாளத்தில் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்... ... ஜெயமோகனேதான். அப்போது அந்த மலையாள எழுத்தாளர் ஒரு நண்டு கதை கூறினார். ஒரு அரசன் ஓவியர் ஒருவரிடம் ஒரு நண்டை வரையுமாறு பணித்தானாம். அதற்கு அந்த ஓவியர் எடுத்துக்கொண்ட காலங்கள் பல ஆண்டுகள். ஏனெனில் செய்நேர்த்தியோடு வரைய வேண்டுமென்பதற்காகவாம். இதைக் கலைஞர்களின் அடையாளமாகச் சொன்னார் அந்த எழுத்தாளர். கதையோ நண்டோ பிரச்சினையில்லை. இதை ஜெயமோகனை வைத்துக்கொண்டு சொன்னதுதான் பிரச்சினை. அந்த அரசன் ஜெயமோகனிடம் நண்டைப் பற்றி எழுதச்சொன்னால் என்ன செய்திருப்பார் ஜெயமோகன்? நண்டு எப்படி தமிழர்களின் பொது உணவாக மாறாமல் போனது, நண்டை உண்பது குறித்த வெறுப்பிற்கும் ‘பிராமண’ எதிர்ப்பிற்கும் உள்ள ஒற்றுமைகள், உணவுச்சமநிலையைக் குலைத்த திராவிட இயக்கத்தின் சதி, குறிப்பாக ‘ஈ.வெ.ரா’வுக்கு அதிலிருந்த பங்கு குறித்தெல்லாம் ஒரே நாளில் 30 பக்கங்களை எழுதிக்குவித்திருக்கமாட்டாரா? அந்த மலையாள எழுத்தாள்ர் ஜெமோவின் முன்னிலையே நண்டு கதை சொன்னதைப் போன்ற நகைச்சுவைதான் கேணி அமைப்பு, ஜெயமோகனுக்கு ‘நம்மால் ஏன் விவாதம் செய்ய முடிவதில்லை” என்று பேச தலைப்பு கொடுத்தது.

ஜெயமோகனிடம் விவாதிக்கும்போது இரண்டு பிரச்சினைகள் வரும். (பல பிரச்சினைகள் வரும் என்பது வேறு விஷயம்)அவர் சொன்ன ஒரு கருத்தை வைத்து நாம் ஒரு கேள்வி எழுப்பினால், அவர் சொல்கிற பதில் நம்மை இரண்டாவது கேள்வி கேட்கத்தூண்டும். முதல்கேள்வி அம்போ என்று நிற்கும். இப்படியாக விவாதத்தைக் கடத்துவதில் ஜெயமோகன் மன்னன். இரண்டாவதாக நாம் ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டாலும் படுவோம், ஜெயமோகன் நிதானமாகவும் தந்திரமாகவும் அவதூறுகளை முன்வைக்கச் சளைக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் நமது உணர்ச்சிவசப்படலையே அவர் தன் ‘நியாயத்திற்கான’ சாதகமாகவும் ஆக்கிக்கொள்வார். வைக்கம் பிரச்சினை விவகாரத்திலும் அதுதான் நடந்தது, நடக்கிறது. முதலில் ஜெயமோகனின் ‘கருத்துக்களை’த் (அவரது வார்த்தைகளிலேயே) தொகுத்துக்கொள்வோம்.

* வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.

*எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்


*வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்

* காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும்

*வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.

* (வைக்கம்) போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை

*ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை

பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் ஜெயமோகன் வன்மத்துடன் உதிர்க்கும் கருத்துகள் குறித்தும் கட்டியெழுப்ப விரும்பும் பொய்கள் குறித்தும் பின்னால் பேசுவோம். முதலில் வைக்கம் போராட்டம் குறித்து...

ஜெயமோகன் உதிர்க்கும் அவதூறுகள் குறித்து தோழர் தமிழச்சி எழுதியுள்ள பதிவுகளே அவரை மறுக்கப் போதுமானவை.

''ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை" என்கிற வரிகளை எழுதுவதற்கு ஒருவர் தமிழகத்தின் சமூக வரலாறு தெரியாத அடிமுட்டாளாக இருக்க வேண்டும் அல்லது பச்சைப்பொய்யைப் பரப்பித் திரியும் அயோக்கியத்தனம் கொண்ட அவதூறுவாதியாக இருக்க வேண்டும். ஆனால் ஜெயமோகனின் சிறப்பே இவை இரண்டுமாக இருப்பதுதான். வைக்கம் போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்டபோது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். கேரளக் காங்கிரஸ் நடத்திய ஒரு போராட்டத்திற்கு அண்டை மாநில சக இயக்கத்தலைமையை அழைத்தது என்கிற வரலாற்றுப் புரிதல் கூட தன் வாசகனுக்கு இருக்காது என்பதில் ஜெயமோகனுக்குத்தான் எவ்வளவு அழுத்தமான ‘நம்பிக்கை’?

அந்த அதீத நம்பிக்கையில்தான் “அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை. அவருக்கு தொண்டர்பின்புலமும் அன்று இருக்கவில்லை” என்று ஜெயமோகனால் எழுதமுடிகிறது. ஒரு இயக்கத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் எவ்வாறு எந்த அமைப்பின் சார்பும் இல்லாமல கலந்துகொள்ள முடியும்? அப்படி கலந்துகொள்ளவேண்டிய சுயவிருப்பம் அல்லது நிர்ப்பந்தம் பெரியாருக்கு எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? இன்னொரு நகைச்சுவையைப் பாருங்கள், பெரியாருக்குத் தொண்டர்பின்புலம் இல்லையென்றால் அவர் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டில் இல்லை என்பதுதானே அர்த்தம்? தர்க்கம் குறித்தெல்லாம் ஜெயமோகன் பேசுவதை விடவும் அபத்தமானது வேறு எதுவும் இருக்க முடியுமா நண்பர்களே?

மேலும் ”கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை” என்று ஜெயமோகன் சொல்லும் பொய்க்கான மறுப்புகளாகத் தோழர் தமிழச்சி கேரளாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசியர் டி.கே.ரவீந்திரன் வைக்கம் போராட்டம் குறித்து எழுதியுள்ள ஆய்வுநூல், வைக்கம் போராட்டத்தின் தளகர்த்தாக்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் பெரியார் குறித்து தன் சுயசரிதையில் எழுதியுள்ள விஷயங்கள், வைக்கம் போராட்டத்தை நேரில் பார்த்து பார்வையிட்ட ஆங்கிலேய அதிகாரி சென்னை மாகாணத்தின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரியார் குறித்துக் குறிப்பிட்டுள்ளமை, கேரள அரசு வைக்கம் பொன்விழாவைக் கொண்டாடியபோது பெரியார் பெயரால் வளைவுகள் அமைத்தது என பல செய்திகளை முன்வைக்கிறார். இதற்கெல்லாம் ஜெயமோகனின் பதில் என்ன தெரியுமா?

"அது ‘அதிகாரபூர்வ’ திக வரலாறு. அதற்கான பதிலாக, உண்மைவிளக்கமாக, மிக அடிப்படையான எளிமையான வரலாற்றுத்தகவல்களைக் கொண்டு என் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. வைக்கம் போராட்டத்தின் பின்னணி, நிகழ்ந்த விதம், அதன் தரப்புகள் என்னால் சொல்லப்பட்டிருக்கின்றன" என்பதுதான். தமிழச்சி தரவுகளாக முன்வைத்தது எல்லாம் கேரள ஆளுமைகள் மற்றும் ஆங்கிலேய அதிகாரியின் தரவுகள். இது எப்படி ‘அதிகாரப்பூர்வ’ திக வரலாறு ஆகும் என்பது ஒருபுறம் இருக்க, ‘பெரியார் எப்படி வைக்கம் போராட்டத்தில் முக்கியத்துவமில்லாத பத்தோடு பதினொன்று ஆனார்’, ‘பெரியாருக்கு வைக்கம் போராட்டத்தின்போது தமிழகத்து அரசியலில் எந்த இடமும் இல்லை, தொண்டர் பின்புலம் இல்லை’, ’எந்த அழைப்பும் தொடர்புமில்லாமல் பெரியார் எப்படி தானாக அனாமத்தாக ரயில் ஏறி வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்’, ‘இன்றைக்கு இருக்கும் திகவைப் போலவே தமிழ்நாட்டு சிவசேனா கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அளவுக்கு அல்லது ஜெயமோகன் வாசகர் எண்ணிக்கை அளவுக்கே அவருக்கு இயக்கபலம் இருந்தது’, ‘பெரியார் எங்கே, எப்போது தர்க்கத்தைக் கழற்றிவிட்டு உணர்ச்சியின் மிகைமொழியில் பேசினார்’ என்பதற்கெல்லாம் ஜெயமோகன் எங்கேயும் ஆதாரங்களை வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான தலையீட்டைப் பெரியார் முன்வைத்ததை மறுப்பதற்குக் கூட ஜெயமோகன் எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் தமிழச்சி ’யங் இந்தியா’இதழில் காந்தி எழுதியதையும் ஜார்ஜ் ஜோசப் மறுத்து எழுதிய கடிதத்தையும் ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். வைக்கம் போராட்டத்தில் காந்தியின் நிலைப்பாடு என்ன என்று தெரிய காந்தியின் தொகுப்பு நூல்களிலேயே வைக்கம் போராட்டம் குறித்து காந்தி விரிவாகத் தன் ந்லைப்பாட்டை எழுதியுள்ளார். தயவுசெய்து ஜெயமோகன் வாசகர்கள் அதைப் படித்தால்கூட ஜெமோ எவ்வளவு பெரிய பொய்யர் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

’பெரியார் வைக்கம் போராட்டத்தில் பெரியளவு பங்களிப்பைச் செய்தவரில்லை’ என்கிற ஜெயமோகனின் பங்கு வரலாற்றுக்கு இழைக்கப்படும் துரோகம். தனது வாசகர்கள் எதையும் பரிசோதித்து அறிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அவரது ஆணவம், அவர்களது வாசகர்கள் முன் வைக்கப்படும் சவால். பெரியாருக்கு மட்டுமில்லை நாகம்மைக்கும் வைக்கம் போராட்டத்தில் பிரதானப் பங்கு உண்டு. பெரியாருக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நாகம்மை, திருமதி. மாதவன், திருமதி.ஜோசப் போன்ற போராளிகளின் மனைவிகளோடு இணைந்து மகளிர் கமிட்டியை உருவாக்கினர். அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று சத்தியாக்கிரகத்திற்கு பெண்களைத் திரட்டியதோடு மட்டுமில்லாது போராளிகளுக்கான உணவையும் சேகரித்தனர். 1924, மே 20 அன்று அவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகத்தின் விளைவாக நாகம்மையாரும் திருமதி மாதவனும் கைது ஆனார்கள். தான் வாழும் புலம் தாண்டி வந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடிப் போராடிய நாகம்மை என்னும் பெண்ணையும் தான் நம்பிய அரசியலுக்காக குடும்பத்தோடு அர்ப்பணித்த பெரியார் என்னும் மாபெரும் ஆளுமையையும் வ்ன்மத்தோடு கொச்சைப்படுத்துவது ஜெயமோகனின் வக்கிரமில்லையா?

‘எந்த முக்கியத்துவமில்லாமல் பத்தோடு பதினொன்றாகப் போராடினா ஈவெரா என்றால் அவரை ஏன் ஆறுமாத காலம் தனிமைச் சிறையில் அதுவும் கால்களில் சங்கிலியோடும் கைதி உடையோடும் சிறைவைப்பார்கள்?’ என்கிற கேள்வி அடிப்படை அறிவுள்ள யாருக்குமே தோன்றுமே, தன் வாசகனுக்கு அது தோன்றாது என்று ஜெயமோகன் கருதியது ஏன்? மேலும் ஒரு ஆதாரம்...

வைக்கம் வெற்றிக் கொண்டாட்டம்

"எங்களுக்குச் செய்த உபச்சாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும் தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள்ள காலம் வந்துவிடவில்லை". தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாக்கிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும். சத்தியாக்கிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விநோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரர் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாக்கிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறது.
சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாதென்பதுதான் அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள்.
மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும் ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள் போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக்காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும் அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பேனென்றும் சொன்னார்.
வைக்கம் சத்தியாக்கிரத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை உடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமாயிருந்தாலும் கிருஸ்துவ மதத்திற்காவது மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால் ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ளவேண்டும்.
இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருகின்றார்கள் அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.


மேற்கண்ட உரை, வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் 29.11.25 ஆம் தேதி ஆற்றிய பெரியார் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு. டிசம்பர் 6, 1925 குடியரசு இதழில் வெளியானது. ‘எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒருவரை’ போராட்ட வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் தலைமை உரை ஆற்ற அனுமதிப்பார்களா என்கிற கேள்வியை - பெரியாரின் வார்த்தைகளிலேயே சொல்வதாயிருந்தால் - மானமும் அறிவும் அறிவுநாணயமும் உடையவர்களின் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

இறுதியாக, இப்படியான கிடுக்கிப்பிடிக் கேள்விகள் எழ ஆரம்பித்ததும் ஜெயமோகனின் சமாளிப்பு இதுவாம், ‘பெரியார் வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியதாக பாடப்புத்தகங்கள் சொல்கின்றன’ என்பது. வைக்கம் போராட்டத்தைத் தான் தொடங்கியதாக பெரியார் எங்கும் சொன்னதில்லை. தான் போலிக்கையெழுத்து போட்டதை நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொள்ளும் நேர்மையும் அறத்துணிவும் பெரியாருக்கு உண்டு. ஜெயமோகன் தான் தனது நேர்மை குறித்த சுயவிசாரணையைத் தொடங்க வேண்டும்.

பாடப்புத்தகங்கள் என்பவை வரலாற்று ஆவணங்கள் அல்ல. அவை எப்போதும் முழு உண்மைகளைப் பேசியதில்லை. பெரியாரைப் பற்றி மட்டுமல்ல, ’1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்குக் கிடைத்தது சுதந்திரம் அல்ல, டொமினியன் அந்தஸ்துதான்’ என்பது தொடங்கி முழு உண்மைகளைச் சொன்னதில்லை. பெரியார் குறித்த பாடப்புத்தக ‘உண்மைகளை’ ஆராய வேண்டும் என்றால் காந்தி குறித்த பாடப்புத்தக ‘உண்மைகளை’யும் ஜெயமோகன் ஆராய வேண்டும். இரண்டாவதாக பாடப்புத்தகங்கள் மூலம் பெரியார் குறித்து மிகைப்பிம்பங்கள் எதுவும் எழுப்பப்பட்டதாகச் சொல்லமுடியாது.  இன்னும் சொல்லப்போனால் பெரியார் என்னும் கலக ஆளுமையின் பிம்பத்தைக் குறுக்கியமைத்தவையே தமிழ்ப்பாடப்புத்தகங்கள். மேலும் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்ததையே மறைக்கும் ஜெயமோகனுக்குப் பாடப்புத்தகங்கள் குறித்து விமர்சிக்க யோக்கியதை ஏதாவது இருக்கிறதா?

ஒரு உச்சகட்ட நகைச்சுவை கேளுங்கள், பெரியாரை ‘வைக்கம் வீரராக’ப் பிம்பம் கட்டியமைத்தவை திராவிட இயக்கங்கள், இன்னும் குறிப்பாக திமுக அரசும் அவற்றின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பாடப்புத்தகங்களும்தான் என்பது அவரது கருத்து. பாவம் ஜெயமோகன், இதுவே அவரது ’வரலாற்று அறிவைக்’ காட்டுகிறது. உண்மையில் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியதும் அவருக்கு ‘வைக்கம் வீரர்’ பட்டம் அளித்ததும் 1925ல் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னைமாகாணக் காங்கிரஸ் மாநாடுதான்.

(தொடரும்)