இது பார்ப்பன தேசம்
மக்கள் தொலைக்காட்சி, தமிழன் தொலைக்காட்சி போன்ற ஊடகங்களுக்கு இலங்கை அரசு தடை விதித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பத்திரிகையாளர் சங்கமொன்று இலங்கைத் தூதரகத்தின் முன்பு நடத்திய ஆர்ப்பாட்டத்தில் சிங்களக்கொடியையும் ராஜபக்சேவின் உருவப்படத்தையும் எரித்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த தகவல் வெளியானது. ‘உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல்‘ என்று. நீதிமன்றத்தின் வாயில் முன்பு முன்னூறுக்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர். ‘பத்திரிகையாளர்கள்‘ என்று சொல்லாவிட்டால் அந்த வேட்டைநாய்களின் தடியடிக்கு இரையாவதிலிருந்து தப்பியிருக்க முடியாது. சுற்றிலும் குழுமியிருந்த மக்கள் கூட்டத்தை அடிக்கடி அடித்துக் கலைப்பதும் மக்கள் திரள் கலைந்து ஓடுவதுமாக ஒரே அமளிதுமளி. திடீரென்று நீதிமன்றத்தில் அடித்து நொறுக்குகிற ஓசை. காம்பவுண்ட் சுவர் வழியாக எட்டிப் பார்த்தால் வாகனங்களை அடித்து நொறுக்கிக்கொண்டிருந்தது போலீசு. சட்டம் ஒழுங்கை வழக்கறிஞர்கள் கெடுத்தார்கள் என்றுதான் தாக்குதல் என்றால் கார்க்கண்ணாடிகள் என்ன செய்தன? ஒருவழியாகப் போலிசின் வெறியாட்டம் நடந்து முடிந்து கமிஷனர் பேட்டிச்சம்பிரதாயமும் முடிந்து திரும்பும் வேளை. குடும்பநல நீதிமன்றத்தின் மொட்டைமாடியில் கால் உடைந்து ‘காப்பாற்றுங்கள்‘ என்று கதறிக்கொண்டிருந்தார் வழக்கறிஞர் ஒருவர். பத்திரிகையாள நண்பர்களும் பொதுமக்களும் ஒருவழியாக அவரைக் காப்பாற்றி இறக்கி வந்து ஆம்புலன்சில் ஏற்றினோம். ஆனால் இன்றைய தினத்தந்தியில் செய்தி வந்திருக்கிறது ‘அந்த வழக்கறிஞரைக் காப்பாற்றியது போலிசும் நீதிமன்றப் பணியாளர்களும்’ என்று.
எப்போது பார்த்தாலும் ‘பார்ப்பானைத் திட்டுகிறீர்களே’ என்று கேட்கும் நண்பர்களே, இப்போது சொல்லுங்கள். ‘யாருமே இல்லாத டீக்கடையில் டீ பார்ட்டி நடத்துகிற’ அரசியல் அனாதை சூனாசாமிக்கு ஆதரவாகத்தானே நடந்தது வழக்கறிஞர்கள் மீதான தாக்குதல் படலம்? ஆள்பலம் இல்லாத சு.சாமியால் லட்சக்கணக்கான உறுப்பினர்களைக் கொண்ட ஒரு இயக்கத்தின் தலைவர் கருணாநிதியை இயக்க முடிகிறதே! (இவ்வளவு பிரச்சினைக்களுக்கு மத்தியில் காந்திகண்ணதாசனுக்குக் கடிதம் எழுதுகிற கருணாநிதியை என்ன செய்வது?)
‘இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனத் தேசியம்’ என்கிற புரிதல் பெரியாருக்கு இருந்ததால்தான் அவரால் பிரிவினைக் கோரிக்கையை முன்வைக்க முடிந்தது. இந்தியத் தேசியம் என்பது பார்ப்பனியக் கருத்தியல், இந்தியத்தேசம் என்பது பார்ப்பனியக் கட்டமைப்பு. அதன் கருத்தியல் நிறுவனங்கள்தான் மத்திய அரசும் மாநில அரசுகளும். அந்த நிறுவனங்களின் எடுபிடிகளில் ஒருவர்தான் ‘சூத்திரத்தலைவர்‘ கருணாநிதி. இப்போது மக்கள் எழுச்சி இருக்கிறது, கனவாய், பழங்கதையாய் மங்கிப்போயிருந்த போராட்ட உணர்வு எழுந்திருக்கிறது. மறுபுறம் ரத்தப்பசியோடு ஆளும் நிறுவனங்களும் அதிகார வர்க்கமும் தயாராகவே இருக்கின்றன, இல்லாமல் போனதெல்லாம் ‘பெரியார்’ மட்டுமே.