கவிதை ஒன்றுகூடல் உரையாடல் நிகழ்வு இரண்டு




















இடம்: சென்னை AICUF அரங்கம்,

நாள்: 26 ஜுன் 2009, வெள்ளிக்கிழமை மாலை 4-9 மணிவரை

முற்றுப் பெறாத துர்க்கனவாய், தீராத நெடுவழித் துயராய், ஈழத்தின் வரலாறு நம்மை வதைத்தபடியே கடந்துபோகிறது. மரணத்திற்கு மத்தியிலும், நிலம் அகன்றும், வாழ்ந்தும், எழுதியும் வரும் ஈழத்தமிழ்க்கவிஞர்களின் கவிதைகள் குறித்த உரையாடலை தமிழக்கவிஞர்கள் இயக்கம் ஒருங்கிணைக்கிறது.


பன்முக வாசிப்பு

பெயல் மணக்கும் போது - அ.மங்கை
வ.ஐ.ச ஜெயபாலன்

எனக்கு கவிதை முகம் - அனார்
செல்மா பிரியதர்சன்

சூரியன் தனித்தலையும் பகல் - தமிழ்நதி
மனோன்மணி

இருள் யாழி - திருமாவளவன்
யாழன் ஆதி

பதுங்கு குழியில் பிறந்த குழந்தை - தீபச் செல்வன்
அரங்க மல்லிகா

தனிமையின் நிழற்குடை - த. அகிலன்
சுகுணா திவாகர்

புலி பாய்ந்தபோது இரவுகள் கோடையில் அலைந்தன - மஜீத்
சந்திரா

நாடற்றவனின் குறிப்புகள் - இளங்கோ
சோமிதரன்


கருத்தாளர்கள்
அ.மார்கஸ், சுகன், கெளதம சித்தார்த்தன், தாமரை மகேந்திரன், லதா ராமகிருஷ்ணன், யூமா வாசுகி

அனைவரும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டுகிறோம்.

கருணாநிதி ‘துரோகி’யான கதை
















உன்னதம் ஜூன் மாத இதழில் வெளிவந்த சில்வியா குண்டலகேசி என்பவரின் கட்டுரையிது. பொதுவாக ‘கருணாநிதி தமிழினத்துரோகியாக மாறிவிட்டார்’ என்றும் ‘திமுக தமிழின விரோதக் கட்சியாக மாறிவிட்டது’ என்றும் குற்றச்சாட்டுகள் வலுக்கும் காலம். ஆனால், இப்படிக் குற்றம்சாட்டுகிற பல ஈழத்தமிழ் நண்பர்களுக்கு திராவிட இயக்கத்தின் கருத்தியல் அடிப்படைகள் குறித்து அவ்வளவாய் அக்கறையில்லை. ஒரு மேலோட்டமான குற்றச்சாட்டை வைப்பதற்குப் பதில், திமுக இன்றைய சூழலில் அடைந்திருக்கும் பண்புமாற்றம் குறித்தும் குறிப்பாக அதன் அடிக்கட்டுமானத்தில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்தும் புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். அந்தவகையில் இந்த கட்டுரை உரையாடலுக்கான சில புள்ளிகளை வனைந்துள்ளது என்பதால் இதைப் பதிவிடுகிறேன். நன்றிகள் சில்வியாகுண்டலகேசிக்கும் உன்னதம் இதழுக்கும்.


அடிப்படைகளின் மரணம் : மாறிப்போன திராவிட இயக்க அரசியல் போக்குகள்



நடந்துமுடிந்த 15வது மக்களவைத் தேர்தல் முடிவுகள் சற்றே மிதவாத இடதுசாய்வுச் சிந்தனையாளர்களிடம் இரு பாரிய அதிர்ச்சிகளை உண்டுபண்ணியது.

1. ஈழத்தில் நிகழ்ந்த இனப்படுகொலைகளுக்குத் துணைபோன திமுக & காங்கிரசுக்கூட்டணி தமிழகத்தில் மகத்தான வெற்றி பெற்றது.

2. அப்பட்டமான அமெரிக்கச்சார்பு எடுத்து உலகமயமாக்கல் கொள்கைகளைத் தீவிரமாய்த் தொழிற்படுத்திய காங்கிரசுக்கட்சி முன்னைவிட வலிமையுடன் வென்றது.

பகுத்தறிவு, சமதர்மம், பார்ப்பன எதிர்ப்பு, தமிழின உணர்வு ஆகிய கருத்தாக்கங்களின் அடிப்படையில் தமக்கான அரசியலைக் கட்டமைத்தவர்களில் பெரும்பாலானோர் இந்த தேர்தலில் திமுகவிற்கு எதிரான நிலைப்பாடு எடுக்க வேண்டிய ‘சங்கடத்திற்கு’ உள்ளானார்கள். இதுவரை மார்க்சிய & லெனினியம் உட்பட தீவிர அதிகார எதிர்ப்பு அரசியல் பேசி வந்தாலும் இவர்களில் பலர் ஓட்டரசியல் என்று வரும்போது திமுகவையே ஆதரிப்பது என்னும் நிலைப்பாட்டையே கையெடுத்தவர்கள். ஆனால் முதன்முறையாக, திமுகவிற்கு எதிராக, அதுவும் இரட்டை இலைக்கு ‘கைநடுங்கியபடி’ வாக்களிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தைச் சூழல் உருவாக்கியது.. திமுக இத்தகைய ஒரு வாக்குவங்கியை இந்த தேர்தலில் இழந்தது. என்றபோதும் திமுக வென்றது என்றால் இந்த வாக்குவங்கி தீர்மானகரமான வாக்குவங்கியே அல்ல என்பதுதான் எதார்த்தம்.

தமிழகத்தில் திமுக வெற்றிபெற்றதற்குப் ‘பணநாயகம்’தான் காரணம் என்பதற்கு விரிவான ஆராய்ச்சிகள் தேவையில்லை. ஆனால் இந்தியா முழுவதும் இதையே காரணமாக நம்மால் முன்வைக்க முடியாது, அது சாத்தியமுமில்லை என்றபோது, காங்கிரசு வெற்றி பெற்றதற்கு என்ன காரணம்? எதிர் அரசியல் சக்திகள் இந்தியா முழுவதும் பலவீனமடைந்துள்ளார்களா? தமிழகத்தில் மாற்று அரசியல் சக்திகளின் பலம் என்ன, எதிர்காலம் என்ன போன்ற கேள்விகளை முன்னெழுப்பிப் பேச வேண்டிய தருணம். அதன் தொடக்கங்களில் ஒன்றாக ஒரு மகத்தான சமூக ஜனநாயக இயக்கமாக மலர்ந்த திராவிட இயக்கத்தின் அரசியல் பாதைகளில் ஏற்பட்ட பாரிய மாற்றங்கள், அவற்றின் போக்குகள், வெற்றி மற்றும் தோல்விகள், அவற்றிற்கான சமூக, அரசியல், பொருளாதாரச் சூழற்பின்னணிகள் ஆகியவை குறித்து விரிவாகப் பயில வேண்டியது அவசியம். குறிப்பாக திமுக தற்சமயம் அடைந்திருக்கும் பண்புமாற்றங்களைப் புரிந்துகொள்ள வேண்டியது இன்றைய சூழலில் மிகமுக்கியமாகிறது.

ஈழப்பிரச்சினையையட்டி திமுகவிற்கு ஏற்பட்ட நெருக்கடிகள், கருணாநிதியின் கூற்றுகள் மற்றும் செயல்பாடுகளைக் கூர்மையாக அவதானித்திருந்தால் ஒரு அற்புதமான கணத்தைக் கண்டடைய முடிந்திருக்கும். ஆனால், தமிழகத்தின் மாற்று அரசியல் சக்தியாக இயங்கும் சிறு சிறு குழுக்களின் கவனத்திலிருந்து அந்த கணம் பதியாமல் போனதும் கைநழுவிப் போனதும் வரலாற்று வினோதம்தான்.

ஈழத்தில் போர்நிறுத்தம் வேண்டி நாடாளுமன்ற உறுப்பினர்கள் பதவி விலகல், மனிதச்சங்கிலி, ஆர்ப்பாட்டங்கள், புதிய அமைப்பு தொடக்கம், உண்ணாவிரதம், ஒருநாள் வேலை நிறுத்தம் எனப் பலவற்றையும் தமிழ்ப்பொதுவெளியில் நிகழ்த்திக் காட்டிய கருணாநிதி ஒருகட்டத்தில் தனது அரசியல் இயலாமை குறித்து பகிரங்கமாக பிரகடனப்படுத்தினார். ‘‘ஒரு அண்டை நாட்டு விவகாரத்தில் தலையிடக் கூடிய அளவிற்கோ அதன் அரசியல் போக்கை மாற்றுவதற்கோ/ தீர்மானிப்பதற்கோ மாநில அரசு பலம் வாய்ந்தது அல்ல’’ என்பதுதான் கருணாநிதியின் கூற்றுகளின் சாராம்சம். (ஈழப்பிரச்சினையில், தனக்கும் உணர்வுகள் இருந்தாலும் மாநில அரசின் வரையறுக்கப்பட்ட அதிகாரங்களால் எந்த சாதனையையும் நிகழ்த்திக்காட்ட முடியாது’ என்பது கருணாநிதி மட்டுமில்லாது அன்பழகன் உள்ளிட்ட பல திமுக முன்னோடிகளால் திரும்பத் திரும்பச் சொல்லப்பட்ட கூற்று)

‘‘ஈழத்தந்தை செல்வா காலத்தில் செல்வநாயகம் தமிழக அரசியல் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு திரட்ட வந்தார். ஆனால் அப்போதே பெரியார், ‘ஒரு அடிமை எப்படி இன்னொரு அடிமைக்கு உதவ முடியும்?‘ என்று கேட்டார்’’ என்று தனது இயலாமைக்கான சாட்சியமாகப் பெரியாரை முன்னிறுத்தினார் கருணாநிதி. ‘பெரியார் அதிகார மய்யங்களில் அமர்ந்தவர் அல்ல. அவர் சமூகப்போராட்டம் நடத்திய அரசியல் ஆளுமை. அதிகார மய்யங்களிலிருந்து விலகி, ஆனால் மய்யங்களை அழுத்தப்படுத்தவதாகவே அவரது செயற்பாடுகள் அமைந்தன. மேலும் அவர் இந்தியத் தேசியக் கட்டமைப்பிலிருந்து விலகிய தனித்தமிழ்நாடு என்னும் கோரிக்கையை முன்வைத்து செயல்பட்டவர். ஆனால் கருணாநிதியோ அதிகார மய்யத்தில் பங்குபற்றிய மனிதர். இந்தியத் தேசியத்தோடு கருத்தளவில் முரண்படாத கட்சி அவருடையது. பெரியாரின் நிலையும் கருணாநிதிக்குக் கிடைத்திருக்கும் அதிகாரமும் சமதன்மை வாய்ந்ததுதானா?’’ என்கிற கேள்வி நியாயமாய் எழுப்பப்பட்டிருக்க வேண்டும்.

மேலும் பெரியார் அதிகார மய்யங்களிலிருந்து விலகியிருக்கக் காரணம் அதிகாரமய்யங்கள் கறைபடிந்ததாக இருந்ததால் மட்டுமல்ல, சமூகத்தில் நிலவும் அதிகாரமே அதிகார மய்யங்களிலும் நிலவுவதால் அதிகார மய்யங்களை நோக்கி நகர்வதால் எத்தகைய வலுவான சமூக மாற்றங்களை நிகழ்த்த முடியாது என்று நம்பியதாலும்தான். ஆனால் திமுகவோ, பாராளுமன்றப் பாதையின் வழியாகத் தாம் விரும்பும் சமுதாயத்தைப் படைக்க முடியும் என்று வாதிட்டே பெரியாரியக்கத்தினின்று பிரிந்து வந்தது. ஆனால், ‘தன்னால் இதற்கு மேல் ஒன்றும் செய்ய இயலாது’ என்று கருணாநிதி வெளிப்படையாக அறிவித்தது, திமுகவின் மகத்தான தோல்வியே என்பதையும் நாம் கவனங்கொள்ள வேண்டும். மேலும் திராவிட நாட்டுக்கோரிக்கையைக் கைவிட்ட திமுக, ‘அதற்கான காரணங்கள் அப்படியே இருக்கின்றன’ என்று முன்னறிவித்த காரணங்கள் இன்னும் அப்படியேதான் இருக்கின்றன என்பதுதான் கருணாநிதி கூற்றுக்களில் மறைந்திருக்கும் எதார்த்தம்.

இந்தியத் தேசியம் என்னும் பார்ப்பனக் கருத்தியலால் கட்டமைக்கப்பட்ட இந்திய தேசம் என்னும் பார்ப்பனக் கட்டமைப்பில் தமது இன உறவுகளைக் காப்பாற்றுவதற்கான அதிகாரம் கூட மாநில அரசுக்கு இல்லை என்று ஒரு மாநில முதல்வரே அறிவித்தபிறகு, அதைச் சாக்காக முன்னிட்டு இந்தியத் தேசியத்தின் கொடூரத்தையும் தனித்தமிழ்நாட்டின் அவசியத்தையும் முன்வைத்து தமிழ்த்தேசிய சக்திகள் ஒரு இயக்கத்தைக் கட்டியிருக்க வேண்டும். ஆனால் மாறாக, ‘‘நாங்கள் இந்தியா உடைவதை விரும்பவில்லை, ஆனால் அப்படி நடக்காமல் பார்த்துக்கொள்ளுங்கள்’’ என்றுதான் மெல்லிய குரலில் முனகினார்கள். பெரியாருடைய இடத்தையும் திமுக கைவிட்ட பிரிவினைக்கோரிக்கைக்கான இடைவெளியையும் இட்டு நிரப்புவதற்குப் பதிலாக தெரிந்தே தவறவிட்ட பாவத்தைச் செய்தவர்கள் தமிழ்த்தேசியவாதிகள்.

’திராவிட இயக்கம்’ என்கிற வரையறை திராவிடர் கழகம் தொடங்கி, திராவிடப் பெயர் தாங்கிய அனைத்துக் கட்சிகளையும் குறிக்கும் விளிப்புச்சொல்லாக ஆய்வாளர் முதற்கொண்டு சாமானியர் வரை பயன்படுத்தப்படுகிறது. பெரியாரியக்கங்களை விட்டுவிடுவோம், மய்யநீரோட்ட திராவிட அரசியற் கட்சிகள் என்று எடுத்துக்கொண்டால் திராவிட இயக்கத்திற்கான அடிப்படைகளை வரையறுத்த, மற்றும் அதைச் செழுமைப்படுத்திப் பேண வேண்டிய அதிகப்பொறுப்பு திமுகவிற்கே உண்டு.

கருத்தியலற்ற மந்தைகளை உருவாக்கியதே எம்.ஜி.ராமச்சந்திரனின் வெற்றியின் அடிப்படை. அது திராவிடக் கட்சிக்கான அடிப்படைகள் என்று எதையும் வெளிப்படையாக அறிவித்துக்கொண்டதுமில்லை, அதனாலேயே சமூக ஆய்வாளர்களாலும் மாற்று அரசியலாளர்களாலும் கருத்தியல் அடிப்படையில் அதிக விமர்சனங்களைச் சந்தித்ததுமில்லை. எம்.ஜி.ஆர் காலம் வரை கருத்தியல் அடிப்படைகளற்ற ஜனரஞ்சக இயக்கமாக இருந்த அதிமுக, ஜெயலலிதா என்கிற பார்ப்பனப் பெண்மணியின் தலைமை தாங்கிய காலத்தின்பின் படிப்படியான வலதுசாரி இயக்கமாக மாறிப்போனது. பார்ப்பன & தேவர் ஆதிக்கசாதிக்கூட்டே அக்கட்சியின் அரசியல் நிகழ்ச்சி நிரலையும் கருத்தியல் கட்டுமானங்களையும் தீர்மானிப்பதாக மாறிப்போனது வெளிப்படை.

ஆனால் திமுகவிற்கு சற்றுக்காலத்திற்கு முன்பு வரை இருந்த பிம்பங்கள் வேறு. படித்தவர்கள் அதிகம் வாக்களிக்கும் கட்சி, முக்குலத்தோர்களால் அதிகம் வாக்களிக்கப்படாத கட்சி, தமிழின உணர்வாளர்களால் ஆதரிக்கப்படும் கட்சி என்ற பிம்பங்கள் கடந்த பத்தாண்டுகளில் படிப்படியாக உதிர்ந்து வருகின்றன.

பார்ப்பனர்களுக்கு அடுத்தபடியாகத் தமிழகத்தில் ஆதிக்கச்சக்தியாய் முக்குலத்தோர் சாதி வளர்ந்து வருகிறது. இந்த சாதியின் விருப்பத்தேர்வாக எம்.ஜி.,ஆர் காலத்திலிருந்து அதிமுகவே இருந்து வந்தது. ஜெயலலிதா& சசிகலா நட்புறவிற்குப் பிறகு இதன் உச்சம் அதிகரித்தது. மேலும் தேவராதிக்கக் கருத்தியல் பிதாமகனாகிய பசும்பொன் முத்துராமலிங்கம் திராவிட இயக்கத்தின் மீது தீராத வெறுப்பு கொண்டவர். அண்ணா, கருணாநிதி போன்ற எளிய சாதிப்பின்னணி கொண்ட தலைவர்களைப் பொதுமேடையிலேயே சாதிவெறி கொண்டு வசைபாடியவர். திராவிட நாடு கோரிக்கை, தமிழுணர்வு, இந்துமத எதிர்ப்பு, இந்தித் திணிப்பு எதிர்ப்பு ஆகியவற்றை மூர்க்கமாக மறுத்தும் எதிர்த்தும் வந்தவர். அவரது மேடைப்பேச்சுகளைப் படித்தால் திராவிட இயக்கத்தின் மீதான அவரது ஆழ்மன வெறுப்பை உணரமுடியும். இதுவும் முக்குலத்தோர் சாதிகள் திமுகவை விலக்கி வைக்க மிக முக்கியமான காரணம்.

ஆனால் தற்பொழுதோ முக்குலத்தோர்கள் அதிகம் நிறைந்த திருமங்கலம் தொகுதியில் திமுக, அதிமுக கூட்டணியை வீழ்த்த முடிகிறது, மதுரை உள்ளிட்ட முக்குலத்தோர்கள் அதிகம் நிறைந்த தென்மாவட்டங்களில் அதிமுகவின் இடத்தைத் திமுக கைப்பற்ற முடிகிறது என்றால் அதன் அரசியல்& சமூக அடித்தளம் என்னவாக மாறியிருக்கிறது என்பதுதான் மிக முக்கியமாய் ஆராயப்படவேண்டியது..

பாரதிய ஜனதா கட்சி என்னும் அதிகாரப்பூர்வ இந்துத்துவ அரசியல் கட்சிகளோடு மற்ற தமிழகக் கட்சிகள் எளிதாகக் கூட்டு வைத்துக்கொண்டபோது திமுகவிற்கு இருந்த தயக்கம் நமக்குத் தெரியும். மேலும் பா.ஜ.கவோடு கூட்டு சேர்ந்ததற்காக அதிகம் விமர்சிக்கப்பட்ட திராவிடக் கட்சியும் திமுகதான். ஏனெனில் மிஞ்சியிருக்கிற திராவிட அரசியலின் அடிப்படைகள் திமுகவில்தான் இருக்கின்றன என்றும் அதைக் காப்பாற்ற வேண்டிய பொறுப்பும் மற்றெந்த திராவிடக் கட்சிகளை விடவும் திமுகவிற்குத்தான் உண்டென்றும் நாம் நம்பினோம்.

ஆனால் திராவிட அரசியலுக்கான அனைத்து அடிப்படைகளையும் திமுக இழந்து வருவது மட்டுமில்லாது, அது அதிமுகவின் பண்புகளை உள்வாங்கிக்கொள்ளும் கட்சியாக மாறி வருகிறது என்பதையும் நாம் புரிந்துகொள்ள வேண்டும். கருணாநிதியின் அதிகாரப் பசி, குடும்ப அரசியல், ஊழல்மயப்பட்ட தொண்டர்கள் என்பவை இத்தகைய பண்பு மாற்றத்திற்குப் பிரதான காரணங்கள் என்றாலும் இவை மட்டுமே காரணங்கள் என்று நம்புவது நம்மை நாமே ஏமாற்றிக்கொள்ளும் அயோக்கியத்தனம்..

நாம் முன்பே பேசியபடி உலகமயப் பாதிப்புகள் இந்த தேர்தல் முடிவுகளில் எதிரொலிக்கவில்லை. பிரம்மாண்டமான ஆண்குறியென கட்டமைக்கப்பட்ட தகவல் தொழில்நுட்பத்துறை வீழ்ச்சியடைந்ததும் ஏராளமான இளைஞர்கள் வேலை வாய்ப்புகளை இழந்ததும் காங்கிரசு ஆட்சியில்தான். ஆனால் காங்கிரசு முன்னைவிட வலிமையாக எழுந்துநிற்கிறது. பெயரளவிற்கேனும் இத்தகைய பொருளாதாரக் கொள்கைகளைக் கண்டித்து அரசியல் செயல்பாடுகளை மேற்கொண்ட மய்யநீரோட்ட இடதுசாரிக் கட்சிகள் தங்களின் செல்வாக்குப் பிரதேசங்களான கேரளாவிலும் மேற்குவங்கத்திலுமே பலத்த அடி வாங்குகின்றனர்.

தமிழ்நாட்டிலோ உலகமய எதிர்ப்புச் செயற்பாடுகளை மேற்கொள்ளுமளவிற்கு தேர்தல் இடதுசாரிகள் பலம் வாய்ந்தவர்கள் அல்ல. தலித் அமைப்புகளும் உலகமயத்தை ஏற்று சமரசம் செய்துகொண்டன. இத்தகைய போராட்டங்களை நடத்த வேண்டிய வரலாற்றுத் தகுதி திராவிட இயக்கத்திற்கு உண்டு. சமதர்மம் என்கிற சொல்லாடல் தமிழகத்தில் அதிகமாய்ப் புழக்கத்திற்கு வந்தது பெரியாரியக்கத்தால்தான். அண்ணாவின் படைப்புகளிலும் பார்ப்பன எதிர்ப்பை விட பண்ணையார் எதிர்ப்பு விஞ்சி நிற்பதை அவதானிக்க முடியும்.

ஆனால் இடைத்தட்டு சாதிகள் & இடைத்தட்டு வர்க்கங்கள் ஆகியவற்றின் பிரதிநிதியாக இதுவரை விளங்கிய திமுகவின் தலைமை மற்றும் செல்வாக்குள்ள ஆளுமைகள் இப்போது முற்றிலுமாக மேல்தட்டு வர்க்கத்தின் பிரதிநிதிகளாக மாறிப்போயினர். நாகூர் அனிபாவின் மேடைப் பாடல்களிலிருந்து ஜேடி ஜெர்ரி என்கிற தேர்ந்த விளம்பர இயக்குனர்களால் இயக்கப்பட்டதாக திமுகவின் பிரச்சார உத்தி இந்த தேர்தலில் மாறிப்போனது அதற்கு ஒரு எடுத்துக்காட்டு.

திமுக இதுவரை பேசிவந்த மொன்னையான கம்யூனிசத்தையும் அது கைகழுவிவிட்டது. அதன் சமூக அடித்தளங்களாக இடைநிலைச் சாதிகளும் ( இதுவும் கூட மென்மையான, குறைந்தளவிலான அதிகாரம் கொண்ட இடைநிலைச்சாதிகள் அல்ல, ஒரு வலிமையான அதிகார மய்யமாகத் திடப்பட்டிருக்கிற, வன்முறை மூலம் தமக்கான அதிகாரத்தை உறுதிப்படுத்திக்கொள்கிற இடைநிலைச்சாதிகள்) அதிகாரத் தொடர்புகளாகவும் பங்காளிகளாகவும் பார்ப்பன மற்றும் உயர்சாதியினரைக் கொண்டிருக்கிற கட்சியாகவும் மாறிக்கொண்டிருக்கிறது.

‘வடக்கு வாழ்கிறது, தெற்கு தேய்கிறது’ என்கிற வடவரெதிர்ப்பு முழக்கத்தை முன்வைத்த திமுகவின் தலைவர் கருணாநிதி, ‘வடக்கு வழங்குகிறது, தெற்கு வாழ்கிறது’ என்று சோனியாகாந்தி கலந்துகொண்ட கூட்டத்திலேயே பகிரங்கமாகப் பேசினார். தமிழ், தமிழுணர்வு ஆகிய விஷயங்களைக் கூட இப்போது கருணாநிதி அவ்வப்போது ரகசியமான குரலில்தான் பேசி வருகிறார். நாத்திகம் மாதிரியான விஷயங்கள் திமுகவிடமிருந்து எப்போதோ விடைபெற்றுக்கொண்டது. குறைந்தபட்சம் இதுமாதிரியான திமுகவின் அடிப்படை விஷயங்களைப் ‘பேசக்கூடிய நபராக’ கருணாநிதி இருக்கிறார் என்பதே திராவிட இயக்கம் என்ற பெயருக்கான கடைசி மரியாதையாகவும், திராவிட இயக்கச்சார்பு கொண்ட தமிழுணர்வாளர்களின் எஞ்சி நிற்கும் ஆறுதலாகவும் இருக்கிறது பரிதாபத்திற்குரிய உண்மை.

பெயரளவிற்கேனும் இருக்கிற கருத்தியல் அடிப்படைகளையும் ‘ஊத்திமூடி’ இப்போது ‘எல்லோருக்குமான’ ஜனரஞ்சகக் கட்சியாக மாறியிருக்கிற திமுக, கருணாநிதிக்குப் பிறகு கருத்தியல் அடிப்படைகள் ஏதுமற்ற, எந்த விமர்சனங்களுக்கும் பதில் சொல்லும் பொறுப்பற்ற தலைமைகளால் வழிநடத்தப்படும்போது அது வெகுவிரைவில் ஒரு வலதுசாரிக்கட்சியாக மாறிவிடுகிற அபாயமிருக்கிறது.

திமுக இப்போதெல்ல்லாம் அதிகம் ஊர்வலங்கள், மாநாடுகளை நடத்துவதில்லை. எழுச்சிமிக்க முழக்கங்களை முன்வைப்பதுமில்லை. ஆனால் பத்தாண்டுகளுக்கு முன்பு வரை திமுக ஊர்வலங்களில் முன்வைக்கப்பட்ட அய்ம்பெரும் முழக்கங்களை முன்வைத்து இன்றைய திமுகவின் நிலையையும் வாசகர்கள் ஒப்பிட்டு பார்த்துக்கொள்ளலாம்.

அண்ணா வழியில் அயராதுழைப்போம்!

ஆதிக்கமற்ற சமுதாயம் அமைத்தே தீருவோம்!

இந்தித்திணிப்பை என்றும் எதிர்ப்போம்!

வன்முறை தவிர்த்து வறுமையை வெல்வோம்!

மத்தியில் கூட்டாட்சி, மாநிலத்தில் சுயாட்சி!