வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்- 2

வைக்கம் போராட்டம் குறித்த குடி அரசு செய்திகள், பெரியாரின் கூற்றுகள் மட்டுமில்லாது சாமிசிதம்பரனார் எழுதிய ‘தமிழர் தலைவர்’ நூல், திராவிடர் கழகத்தலைவர் தோழர்.கி.வீரமணி மற்றும் மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர்.ஆனைமுத்து ஆகியோர் வைக்கம் குறிதது எழுதியுள்ள செய்திகளையும் தகவல்களையும் முன்வைத்தால் கூட ‘அது தி.கவின் அதிகாரப்பூர்வ வரலாறு’ என்று ஜெயமோகன் மறுக்கக்கூடும். ‘வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான செயல்பாடுகள்’ குறித்தும் காந்தியை விமர்சித்தும் தொடர்ச்சியாக ஜார்ஜ் ஜோசப் குடியரசு இதழில் எழுதி வந்தார். ஜார்ஜ் ஜோசப் குறித்த தகவல்களை திரு வி.கவின் வாழ்க்கைக்குறிப்புகள் 1,2, கோவை அய்யாமுத்துவின் எனது நினைவுகள், மபொசியின் ’விடுதலைப்போரில் தமிழகம்’, ஸ்டாலின் குணசேகரனின் ‘விடுதலை வேள்வியில் தமிழகம்’ ஆகிய நூல்களின் மூலம் அறிந்துகொள்ளலாம். இவர்கள் யாரும் ’அதிகாரப்பூர்வ தி.க வரலாற்றாசிரியர்கள்’ அல்ல. மட்டுமில்லாது இவர்களில் பலரும் காங்கிரஸ் சார்பு உடையவர்கள், பல்வேறு சந்தர்ப்பங்களில் பெரியாரோடு முரண்பட்டவர்கள். இந்திய விடுதலைப் போராட்டம் குறித்த வரலாற்று ஆய்வு நிகழ்த்த வேண்டும் என்றால் காந்தியின் தொகுப்புநூல்கள், பேச்சுகள், எழுத்துகள், சுயசரிதை, அவரது பிரகடனங்கள், வாக்குமூலங்கள், சிறைக்குறிப்புகள், அவரது சமகாலத்தோழர்களின் பதிவுகள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டுதான் ஆராய வேண்டும். அதை ‘அதிகாரப்பூர்வ காங்கிரஸ் வரலாறு’ என்று புறந்தள்ள முடியாது. அம்பேத்கர் குறித்த ஆய்வுக்கும் அஃதே. இவைகள் வரலாற்று ஆய்வின் அடிப்படைகள், ஆய்வாளரின் கடமைகளில் ஒன்று. ஆனால் அதைப் பற்றியெல்லாம் ஜெயமோகனுக்கு என்ன கவலை இருக்கப் போகிறது?

’அதிகாரப்பூர்வ தி.க வரலாறு’ அல்லாத, வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்த ஆதாரங்களைப் பார்ப்போம். இவை அனைத்தும் தமிழர்களால் எழுதப்பட்ட ஆவணங்கள் அல்ல. ஒரு ஆங்கிலேய அதிகாரி தவிர்த்த மற்ற அனைத்தும் மலையாளிகளால் எழுதப்பட்ட பதிவுகள். அவை கீழ்க்கண்டவை...

Eight Furlongs Of Freedom - T.K.Ravindran

Bandhanathilninnu - K.P.Kesava Menan

Kshetra Pravesanam - T.K.Madhavan

Proceedings Of Travancore Legislative Counsil - 1924, 1925.

Office Note Regarding The Vykom Satyagraha - 1924.

Life Of T.K.Madhavan - P.K.Madhavana.

இந்த ஆவணங்கள் அனைத்திலும் பெரியாரின் பங்களிப்பு விரிவாகப் பேசப்பட்டுள்ளது. வைக்கம் போராட்டம் குறித்த விரிவான ஆய்வு செய்த திருவனந்தபுரம் கேரள பல்கலைக்கழக வரலாற்றாசிரியர் டாக்டர் டி.கே.ரவீந்திரன் 1980ல் எழுதிய ’Eight Furlongs Of Freedom’ நூலில் வைக்கம் குறித்தும் பெரியார் குறித்தும் எழுதியவைகள் குறித்துப் பார்ப்போம்.

1924, ஏப்ரல் 9ம் நாள் ஏ.கே.பிள்ளை,கே.வேலாயுதமேனன், கே.கே.கேளப்பன், கே.ஜி.நாயர், ஜெபஸ்டின் போன்ற சத்தியாக்கிரகத்  தலைவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இதனால் போராட்டம் ஒரு பாரிய பின்னடைவைச் சந்திக்கிறது. போராட்டத்தை மீண்டும் தொடர கேரளாவுக்கு அப்பால் உள்ள சக்திகள் போராட்டத்திற்கு வரவேண்டிய சூழல் உருவாகிறது. இதுகுறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைத் தன் நூலில் சுட்டிக்காட்டுகிறார் ரவீந்திரன்.

‘’In fact the movement would have collapsed long ago but for the support it has received from the outside, though the question of opening this road is a pure domestic problem" ( page 63)

கேரளாவுக்கு வெளியிலிருந்து தலைவர்கள் வருவதைக் குறிப்பிடும் ரவீந்திரன், தனது நூலில் அது தொடர்பாக எழுதிய அடிக்குறிப்பு,

‘’ஈ.வெ.ராமசாமிநாயக்கர், அய்யாமுத்துக்கவுண்டர் மற்றும் எம்பெருமாள் நாயுடு போன்ற தமிழகத்தலைவர்கள் சத்தியாக்கிரகத்தில் பங்கேற்றுக் கைதுசெய்யப்பட்டனர். இதில் ஈ.வெ.ராமசாமி நாயக்கரின் பேச்சு திருவிதாங்கூர் மக்களை ஈர்ப்பதாக இருந்தது.” (பக்கம் 67)

“1924 ஏப்ரல் 14ஆம் நாள் காலையில் இரண்டு குழுவினருடன் ஈ.வெ.ராமசாமி நாயக்கர் வந்து சேர்ந்தார். வடக்கு, கிழக்கு தெருக்களில் ஈழவர்களை நுழைய அழைத்து வந்தார்” (பக் 88)

”சத்தியாக்கிரகிகளுக்கு ஆதரவும் பணமும் இயக்கத்தை நடத்தும் தலைமையும் சென்னையிலிருந்து கிடைத்தது. ஈ.வெ.ராமசாமி நாயக்கர்  இந்த இயக்கத்துக்குப் புத்துயிர் ஊட்டினார்.  கேரளாவுக்கு வருவதற்கு முன் அவர் தமிழ்நாட்டு மக்களுக்கு அறிக்கை வெளியிட்டார். உணர்வுபூர்வமான அறிக்கை அது.” (பக் 89)

’தமிழ்நாட்டு அரசியலில் எந்த இடமும் இல்லாத’, ‘தொண்டர்பின்புலம் இல்லாத’ பெரியார் எப்படி தமிழகமக்களுக்கு அறிக்கை விட முடியும், இரண்டு குழுவினருடன் வைக்கத்திற்கு வர முடியும் என்கிற கேள்விகளை ஜெயமோகன் வாசகர்களுக்கும் பொதுவான வாசகர்களுக்கும் முன்வைத்து இனி ரவீந்திரனின் புத்தகத்திற்கு மீண்டும் திரும்புவோம்.

‘’But the support the vaikom  satyagrahis received from madras, both in money and leadership, was very great and impressive." ( page 89).

வைக்கத்தில் கேரளத்தலைவர்களால் தொடங்கப்பட்ட போராட்டம், ஒரு பின்னடைவைச் சந்திக்கிறபோது அதை வழிநடத்தும் பொறுப்பு, அதாவது போராட்டத்திற்குத் தலைமையேற்க வேண்டிய கடப்பாடை தமிழகத்திலிருந்து வந்த பெரியார் ஏற்றுக்கொண்டார் என்பதை அழுத்தமாகப் பதிவு செய்கிறார் ரவீந்தரன். ஆனால் ஜெயமோகனோ, ‘பெரியார் கூட்டத்தில் கோரஸ் பாடினார்’ என்கிறார். ரவீந்திரன் தமிழரோ திராவிட இயக்க ஆதரவாளரோ அல்ல, மலையாளி. அவருக்குப் பெரியார் குறித்து மிகைப்பிம்பங்களைக் கட்டியமைக்க வேண்டிய எந்த அவசியமும் கிடையாது. இதையாவது ஜெயமோகன் ஒத்துக்கொள்வாரா? அல்லது தட்டிக்கழிக்க புதிய காரணங்களைக் கண்டுபிடிப்பாரா? ஒருவேளை ரவீந்திரன் குறித்துக் கூட ஜெயமோகன் ஏதாவது புதுக்கதை அவிழ்க்கக்கூடும். ஆனால் அன்றைய நிலையில் வைக்கம் போராட்டத்தால் திருவிதாங்கூர் சமஸ்தானத்துக்கு ஏற்பட்ட நெருக்கடி குறித்து திருவிதாங்கூர் கவர்னர் ஜெனரலின் ஏஜெண்டாக இருந்த சி.டபிள்யூ.இ.காட்டன் 1924, ஏப்ரல் 21 அன்று சென்னை ராஜதானி தலைமைச் செயலாளருக்கு எழுதிய கடிதத்தைப் பின் இணைப்பாகக் கொடுத்துள்ளார். இது ஒரு அரசு ஆவணம். யார் வேண்டுமானாலும் இதைச் சரிபார்த்துக்கொள்ளலாம்.

காட்டன் பெரியார் குறித்து எழுதிய கடிதத்தைப் பார்ப்போம்.

                                                                                          ( தொடரும்....)




சில குறிப்புகள் :

* வைக்கம் போராட்டம் குறித்த ஜெயமோகனின் அவதூறுகளுக்கான மறுப்பை மூன்றுபாகங்களாக எழுதத் திட்டமிட்டிருந்தேன். ஆனால் அது இன்னும் ஓரிரு பாகங்கள் பிடிக்கும் போலிருக்கிறது.

* இந்த கட்டுரைக்கான தரவுகளைத் தந்து உதவியர் திரு.ப.திருமாவேலன். அவருக்கு என் நன்றிகள்.

* பதிவில் வரும் ஆங்கில மேற்கோள்களைத் தட்டச்சியது நான் என்பதால் அதில் வரும் எழுத்துப்பிழைகள் மற்றும் இலக்கணப்பிழைகளுக்கு நானே பொறுப்பு.

17 உரையாட வந்தவர்கள்:

  1. Bruno said...

    தங்களின் இந்த கட்டுரை தொடருக்காக வாழ்த்துக்கள், நன்றிகள்

    ---

  2. Anonymous said...

    ஜெமோவின் கூற்றில் முக்கியமானது 'பெரியார் வைக்கம் போராட்டத்தை துவக்கினார்’ என்று தமிழ் பாடபுத்தகங்களில் குறிப்பிட்டிருப்பது திராவிடர் கழக பரப்பியல் பாணி என்பது.

    மாட்டைப் பற்றி கட்டுரை எழுதும்போது மரத்தைப் பற்றி எழுதிவிட்டு ‘அப்படிப்பட்ட மரத்தில் ஒரு மாடு கட்டப்பட்டிருக்கிறது’ என்று எழுதுவது உங்கள் பாணி.

  3. மிதக்கும்வெளி said...

    அய்யா அனானி,

    ஜெயமோகனின் கட்டுரையில் பாடப்புத்தகங்கள் பற்றியெல்லாம் ஒன்றும் குறிப்பிடப்படவில்லை. வைக்கம் போராட்டத்தில் பலரும் கலந்துகொண்டதைப் போல பெரியாரும் கலந்துகொண்டார், அதைத் தவிர அவருக்கு எந்த முக்கியத்துவமும் கிடையாது, போராட்டத்தில் கலந்துகொள்ளும்போது அவருக்கு தமிழக அரசியலில் எந்த இடமும் இல்லை, எந்த அமைப்பின் சார்பாகவும் அவர் கலந்துகொள்ளவும் இல்லை என்பதுதான். ஆனால் கேணி கூட்டத்தில் அதுகுறித்த மறுப்புகள் முன்வைக்கப்பட்டபோது ஜெயமோகனின் கிரேட் எஸ்கேப்தான் பாடப்புத்தகம் பற்றியது. தான் கட்டுரையில் எழுதிய அபத்தங்களுக்கு முன்வைக்கப்பட்ட மறுப்புகளுக்கு ஜெயமோகன் பதில் சொல்லட்டும், பிறகு பாடப்புத்தகங்கள் குறித்து நிதானமாகப் பேசலாம். ஒரு வாதத்திற்காக மிகைப்படுத்தப்படுவது திராவிட இயக்கத்தின் ‘பரப்பியல் பாணி’ (என்ன எழவு வார்த்தைடா இது?) என்றால் வரலாற்றைத் திரிப்பது, ஆதாரங்களை மறைப்பது, அவதூறுகளைப் பரப்புவது, கேட்ட கேள்விக்குப் பதில் சொல்லாமல் புதிதாக ஒன்று சொல்லி மழுப்புவது, வரலாற்றுப் பங்களிப்புகளை இருட்டடிப்பு செய்வது இவையெல்லாம் ஜெயமோகனின் ‘பரப்பியல் பாணி’ என்று சொல்லலாமா?

  4. ஜோ/Joe said...

    தங்களின் இந்த கட்டுரை தொடருக்காக வாழ்த்துக்கள், நன்றிகள்

  5. வால்பையன் said...

    அனானி!

    இது ஜெயமோகனிம் ஆரம்பம், பின் பெரியாருக்கும் தலித் விடுதலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை, பெண்ணிய விடுதலைக்கும் எந்த சம்பந்தமுமில்லை!
    ஏன் பெரியாருக்கும் தமிழகத்துக்குமுமே சம்பந்தமில்லை என்று எழுதுவார்!

    இவரது புழுகுமூட்டைகளை நாம் பார்த்து கொண்டிருக்க வேண்டுமா என்ன!?

    வைக்கம் என்ற ஊரில் பர வருடங்களாக பிரச்சனை இருந்து கொண்டே தான் இருந்தது, அதை சிலர் சிறு போராட்டங்கள் மூலம் கேட்டு கொண்டு தான் இருந்தனர்!
    கிட்டதட்ட இந்திய சுதந்தரத்திற்க்கு நாடெங்கும் நடந்த சிறு சிறு போராட்டங்கள் மாதிரி! எவ்வாறு எழுச்சி பெற்றது! மக்கள் திரண்டு வர என்ன பேச்சு காரணமாக இருந்தது, பிரச்சனை முற்று பெற என்ன காரணமாக இருந்தது என்பது தான் வரலாறு!

  6. பதி said...

    உங்களின் இந்த தொடருக்கு வாழ்த்துக்கள்...

  7. மு. சுந்தரமூர்த்தி said...

    சுகுணா,
    இந்தத் தொடரை எழுதுவதற்கான உங்கள் சிரத்தைக்கும், உழைப்புக்கும் மிக்க நன்றி.

    ஜெயமோகனும், அவருடைய hard core வாசகர்களும் முட்டாள்கள் அல்ல. ஆயிரம் பொய்கள் சொல்லியோ அல்லது ஒரே பொய்யை ஆயிரம் முறை திரும்பத் திரும்பச் சொல்லியோ பெரியாரை காலி செய்யும் அஜெண்டாவுடன் முனைப்புடன் செயல்படக்கூடிய விவரமான ஆசாமிகள். ஜெயமோகனின் வலையில் விழக்கூடிய விவரம் தெரியாத அப்பாவிகளையும், பகுத்தறியும் திறனின்றி உணர்ச்சியின்பாற்பட்டு சீமான் பின்னால் அணிவகுக்கும் ”பெரியார் பேரர்களையும்” ஒரே நேரத்தில் மீட்பதென்பது மிகப்பெரிய சவால் தான். அதை உங்கள் பதிவுகள் ஓரளவாவது சாத்தியமாக்கும் என்று நம்புகிறேன்.

  8. மதி.இண்டியா said...

    //தமிழ்நாட்டு அரசியலில் எந்த இடமும் இல்லாத’, ‘தொண்டர்பின்புலம் இல்லாத’ பெரியார் எப்படி தமிழகமக்களுக்கு அறிக்கை விட முடியும்,//

    அய்யோ காமடிங்க , ஏன் நாளைக்கு காலையில நீங்ககூட தமிழக மக்களுக்கு , ஏன் அகில உலக மக்களுக்கே ஒரு அறிக்கை கொடுக்கலாம் ,

    என்ன , அறிக்கை ரெடி பண்ணிடலாமா ?

    //இரண்டு குழுவினருடன் வைக்கத்திற்கு வர முடியும் என்கிற கேள்விகளை ஜெயமோகன் வாசகர்களுக்கும் பொதுவான வாசகர்களுக்கும் முன்வைத்து //

    இரண்டு குழு என்றால் குழுவுக்கு 10 லட்சம் பேரா ? 5 பேர் இருந்தாலும் குழுதாங்க ஜீவி,

    50 வருடம் கழித்து ,அப்போதைய திக தலைவர் - மானமிகு வீரமணியின் மகன் வயிற்று பேரன் தமிழகமே திகவின் பின் தான் இருந்தது என்று சொல்லாமலா போய்விடுவார் ?

  9. Anonymous said...

    ஜெயமோகன் தீடீரென இதை எழுதினார்.அதற்குக் காரணம் ஒரு வாசகர் கடிதம்.தமிழச்சி எழுதியதை வைத்து ஞாநி கேட்ட கேள்விகளுக்கு அவர் என்ன பதில் சொன்னார். ஞாநி பெரியார் வாழ்க்கை வரலாற்றை படமாக தொலைக்காட்சிக்கு எடுத்தார்.அதில் வைக்கம் காட்சிகள் உண்டு.ஜெயமோகன் சொல்வது உண்மை என்கிறாரா.ஜெயமோகனோ, டோண்டுவோ,மதி இண்டியவோ தமிழச்சியின் கட்டுரைகளுக்கு இதுவரை ஏன் பதில் எழுதவில்லை.
    காந்தியை பற்றி எழுதுகிறேன் என்ற பெயரில் அம்பேத்கர் பற்றி ஜெமோ எழுதியதும், வைக்கம் பற்றிய உண்மை என்ற பெயரில் பெரியார் குறித்து எழுதியதும் இன்னும் அம்பேத்கரும்,பெரியாரும் ஜெமோக்களுக்கு அச்சமூட்டுபவர்களாக இருப்பதைக் காட்டுகிறது. அதனால்தான் ஜெமோ இப்படி எழுதுகிறார்.இந்த அச்சம் ஜொமோவிற்கு மட்டுமல்ல டோண்டுகளுக்கும் இருக்கிறது.அதனால்தான் கேணிக் கூட்டத்தில் டோண்டு அப்படி பேசுகிறார், அதை தன் வலைப்பதிவிலும் எழுதுகிறார். அந்த அச்சத்தினை உங்கள் இடுகைகள் இன்னும் அதிகமாக்கினால் அதுவே வெற்றிதான்.

  10. Anonymous said...

    ’50 வருடம் கழித்து ,அப்போதைய திக தலைவர் - மானமிகு வீரமணியின் மகன் வயிற்று பேரன் தமிழகமே திகவின் பின் தான் இருந்தது என்று சொல்லாமலா போய்விடுவார் ’

    50 ஆண்டுகளுக்குப் பின்னும் பெரியார் பேசப்படுவார்.
    செப்டம்பர் 17ம் தேதி பிறந்த நாள்
    அனுசரிக்கப்படும்,பெரியாரிய இயக்கங்கள் இருக்கும்.அம்பேத்கர், பெரியார் இவர்களை தலைமுறை தலைமுறையாக மக்கள் கொண்டாடுவார்கள்.
    ஜெயமோகன் ஆயிரத்தோடு ஒன்றாக தமிழ் எழுத்தாளர் பட்டியலில் இடம் பெறுவார்.அதற்கு மேல் ஒரு மரியாதையும் அவருக்கு இருக்காது.

  11. Unknown said...

    hi
    pl remove the background hand image if you can .
    thanks

  12. Anonymous said...

    "The proof of the pudding is in the eating"

    தமிழகம் அளவிற்கு பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும் முன்னணி மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் பணியாற்றுகிறார்களா என்பது சந்தேகமே!

    எனினும் பெரியாரை ‘சமூக நீதி’க்குள் மட்டுமே அடக்க முடியாது.

    ஞானம் ஒளி புடலங்காய என்று யாரையும் குழப்பாமல், தனது வாழ்நாளின் இறுதி வரை எவ்வித சமரசத்திற்கும் உட்படுத்தாத இறைமறுப்பாளராக வாழ்ந்தது மட்டும் அவரது சாதனையல்ல.

    ஆனால், ஜெயமோகன் திரைப்படத்துறையினர் கதை வசனம் எழுத கொடுக்கும் ஐந்து லட்ச ரூபாய்க்காக தனது எழுத்தை சமரசம் செய்து கொண்டு, சிவாஜி எம்ஜிஆர் பற்றி தான் எழுதிய நகைச்சுவை கட்டுரைகளை அழித்தார்.

    அப்பொழுது அவர் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்களை வரிந்து கட்டிக் கொண்டு கண்டித்த வலைப்பதிவர்களை முட்டாள்களாக்கியதுதான் இந்த எழுத்தாளரின் சாதனை!

    எம்ஜிஆர், சிவாஜி பற்றி எழுத கூட இவருக்கு தைரியம் வந்தது, அவர்களின் ரசிகர்கள் இணையத்தை பாவிக்க்கும் வயதை கடந்தவர்கள் என்பதால்தான். அதே போன்று கமல், ரஜினி பற்றியும் எழுதியிருக்க முடியும்...எழுதினால் இவருக்கு அமெரிக்க செல்ல டிக்கட் எடுக்க யாரும் இருக்க மாட்டார்கள் என்பது அவருக்கு நன்றாகத் தெரியும்...

    இத்தனைக்கு பிறகும், இந்து மத வெறி கட்சிகள் தமிழகத்தில் வேர் விட முடியாததற்கு காரணம் பெரியாரின் செயல்பாடுகள்தான் காரணம்...ஆயினும் அவர்கள் பல்வேறு வடிவங்களில் தமிழகத்தின் மீதான தங்களது தாக்குதல்களைத் தொடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஜெயமோகனும் அந்த வடிவங்களில் ஒன்றுதான்.

    திராவிட அரசியல் என்பது உணர்வுபூர்வமான அரசியல் என்றால், பாரதமாதா கி ஜே என்றால் அங்கு என்ன அறிவா பொங்கி வழிகிறது!

  13. புருனோ Bruno said...

    //
    தமிழகம் அளவிற்கு பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும் முன்னணி மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் பணியாற்றுகிறார்களா என்பது சந்தேகமே!
    //

    இதில் என்ன சந்தேகம் !! விடை தெரிந்தது தானே

    சந்தேகம் இருந்தால் இங்கு பாருங்கள்

    தமிழக மருத்துவ பட்டமேற்படிப்பு மதிப்பெண் பட்டியல்

  14. புருனோ Bruno said...

    //தமிழகம் அளவிற்கு பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும் முன்னணி மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் பணியாற்றுகிறார்களா என்பது சந்தேகமே!
    //

    சந்தேகமே வேண்டாம். இந்த சுட்டியை பாருங்கள்

    தமிழகத்தில் அதிக மதிப்பெண் பெற்ற முதல் 500 மாணவர்களின் ஜாதி என்ன

  15. வஜ்ரா said...

    //
    தமிழகம் அளவிற்கு பிற்ப்படுத்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும், தாழ்த்தப்பட்ட வகுப்பினை சார்ந்தவர்களும் முன்னணி மருத்துவர்களாகவும், பொறியாளர்களாகவும், இந்தியாவின் வேறு எந்த மாநிலத்திலும் பணியாற்றுகிறார்களா என்பது சந்தேகமே!
    //

    தவறு.

    அனைத்து மாநிலங்களிலும் முற்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களாக வரும் பல சாதிகள் தமிழகத்தில் பிற்படுத்தப்பட்ட சாதிகள் (BC) பட்டியலில் உள்ளன.

    உண்மையான பிற்படுத்தப்பட்ட சாதிகள் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதிகள் (MBC) பட்டியலில் உள்ளன.

  16. Anonymous said...

    Please don't remove the background hand image. I like it.

  17. Anonymous said...

    மதி இந்தியா போன்றவர்கள் ஜெயமோகன் தனக்கு எட்டாத இடங்களில் சொறிய வைத்துள்ள சில அற்பர்கள். இவர்களின் கருத்துக்கள் என்கிற உளறள்களை நீங்கள் மதிக்க வேண்டாம் நண்பரே. ஜெயமோகன் என்ற மனிதவிரோதிக்கு எதிராக நாம் தொடர்ந்து போராட வேண்டியுள்ளது.