சாவின் வாரம்

இந்தவாரம் சாவுச்செய்திகளைச் சுமந்துவந்தது. சென்னையில் தொடங்கிய மரணத்தின் வாசனை கோவைக்குளிர்காற்றிலும் தொடர்ந்தது.

சென்றாவாரத்தின் துவக்கத்தில் முதலில் வந்தடைந்தது தோழர்.கலியபெருமாளின் மரணச்செய்தி. புலவர் கலியபெருமாள் என அனைவராலும் மரியாதையுடன் அழைக்கப்பட்ட கலியபெருமாள் நக்சல்பாரி அரசியலுக்காகவும் அழித்தொழிப்பிற்காகவும் தன்னை அர்ப்பணித்துக்கொண்டவர். இறுதியில் அவர் தமிழ்த்தேசிய அரசியல் எனத் தடம் மாறினாலும் மார்க்சியத்தின்மீது அடங்காத காதல் கொண்டிருந்தார். புரட்சிகரச்சிந்தனை கொண்ட பல இளைஞர்களுக்கு ஆதர்சமாய் விளங்கினார். அவருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிர்ப்பந்தத்தைக் காலம் வழங்கிவிட்டது.

வெள்ளி மதியம் சென்னையிலிருந்து திண்டுக்கல் கிளம்பும் வழியில் ஒரு நண்பர் தொலைபேசி மூலம் நகுலன் இறந்த செய்தியைச் சொன்னார். மனம் கனத்தது. சுந்தரராமசாமி போன்ற அரைவேக்காடுகளுக்குக் கிடைத்த மதிப்பு நகுலனுக்குக் கிடைக்கவில்லை. தப்புத்தப்பாய்த் தமிழ் எழுதி அதையே 'புதுஎழுத்து' என்று கொண்டாடப்படக்கூடிய அளவிற்கு மௌனி உயர்ந்ததற்குக் காரணம் அவர் பார்ப்பனராய் இருந்ததாலேயே. ஆனால் பார்ப்பானாய்ப் பிறந்தும் தனக்கான அங்கீகாரம் இல்லாமல் வாழ்ந்தவர் நகுலன். நனவின் தடங்களை அழித்து கடைசிக்காலத்தில் மறதியிலேயே பயணித்து ஒரு சிறுபிள்ளையாய் வாழ்ந்தவர். தமிழ் நகுலனை இழந்துவிட்டது.

நேற்று கோவையில் இருந்தபோது ஒரு நண்பரின் குறுஞ்செய்தி இன்னொரு மரணத்தை அறிவித்தது. பெரியாரியக்கங்கள் உட்பட அனைத்து இயக்கங்களிலும் பெண்கள் அமைப்புகள் கட்சிகளின் தொங்குசதையாகவே இயங்க, தனித்துவமிக்க பெண்கள் அமைப்பைக் கட்டிப் பணியாற்றியவர் தோழர்.ஓவியா. தனது 'தமிழின மகளிர் விடுதலை இயக்கம்' மற்றும் 'புதியகுரல்' இதழின் மூலம் பெண்ணியக் குரல்களை ஒலித்தவர். குறிப்பாகக் கலாச்சாரத்தளத்தில் பெண்விடுதலையைப் பேசியவர் அவர். அவரோடு வாழ்க்கையில் இணைந்து துணைநின்றவர் தோழர்.ஏ.பி. வள்ளிநாயகம். 'இந்துத்துவத்தின் வேரறுக்கும் உயிராயுதம்' என்று பெரியார் பற்றியும் மேலும் 'மானுடத்தின் அழகானவர்கள் தீண்டத்தகாதவர்கள்', 'குடிசையில்தான் மானுடம் வாழ்கிறது' என்பது போன்ற பலநூல்களை எழுதியவர். பெரியாரியம், அம்பேத்கரியம், பெண்ணியம், பவுத்தம் ஆகியவற்றைத் தனது அரசியல்நெறிகளாக ஏற்றுவாழ்ந்தவர். தலித்முரசு இதழில் தொடர்ச்சியாக பெரியார் தலித்துகளுக்குச் செய்த பணிகள், பவுத்தத்திற்கும் அம்பேத்கருக்குமான தொடர்பு, தலித் இயக்க முன்னோடிகள் ஆகியவைகள் குறித்து தொடர்ந்து எழுதிவந்தார். தொடர்ச்சியான புகைபிடிக்கும் பழக்கத்தாலோ என்னவோ அய்ம்பது வயதிற்குள்ளாகவே நெஞ்சுவலியால் பாதிக்கப்பட்டு நேற்று மரணமடைந்துவிட்டார். மாற்று அரசியல் தளம் தன் உறுப்புகளில் ஒன்றைத் துறந்துவிட்டது.

2 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    என்னமோ சொல்லுங்க....சாவிலும் சாதி, பரிசு-புகழிலும் சாதி.

  2. Anonymous said...

    வருத்தம் தரும் இழப்புகள்.
    ....
    ஏ.பி.வள்ளிநாயத்தின் இழப்பை உங்கள் பதிவினூடாகத்தான் முதன்முதலில் அறிகிறேன் :-(.