எழுத்தும் இலக்கியமும் - புலியூர் முருகேசன்.

( வெண்மணியில் 44 தலித்துகள் உயிரோடு கொளுத்தப்பட்டதற்கு எதிர்வினையாக கோபாலகிருஷ்ண நாயுடுவை நக்சல்பாரிப் புரட்சியாளர்கள் அழித்தொழித்துப் பழிவாங்கிய கதையைப் புனைவின் சுவையோடு விளக்குகிறது பாட்டாளியின் 'கீழைத்தீ; நாவல். (புதியபயணம் வெளியீட்டகம்.) இந்த நாவலைப் படித்துக்கொண்டிருக்கும்போதே ராமச்சந்திரன் நாயரின் 'நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சியம்' தமிழ் மொழிபெயர்ப்பையையும் படிக்க நேரிட்டது. இவ்விரு நூற்கள் குறித்தும் விரிவாய் எழுத விருப்பம். இலக்கியம் என்றாலே எஸ்.ராமகிருஷ்ணன், ஜெயமோகன் என்று இணையத்தில் ஊடுகட்டும் இலக்கியப் பிரகஸ்பதிகள் கொஞ்சம் இந்தப்பக்கமும் கவனம் திருப்புதல் நலம்.)

இங்கே எதுவும் பொதுவாக இல்லை. இலக்கியமும் தான். பொதுவானதாக இருக்க முடியாது. ஒவ்வொரு படைப்பும் ஒரு சாராரின் நலன் சார்ந்தே பின்னப்பட்டிருக்கும். எனவே, அது பிறிதொரு சாராருக்கு எதிரானதாக இருக்கும். பன்முகத்தன்மை கொண்ட மனிதர்கள் நிரம்பிய, சாதிய இழிபழிகள் கொட்டிக்கிடக்கிற, மதச் சகதி வழிந்தோடுகிற, பொருளாதார ஏற்றத் தாழ்வுகள் கொந்தளிப்பாய்த் தெரிகிற நம் இந்திய, தமிழகச் சூழலில்-இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும், பொதுவான எவ்வித அடையாளம் பின்புலமும் அற்றவர்களாக, நுட்பமானவர்களாகச் சித்தரிப்பது ஆபத்து. இது பொய்யுரைப்பது.

ஏனெனில், எழுதும் எவனும் தன் வர்க்கம் சார்ந்தே இயங்க இயலும். எழுத்தின், மொழியின் நடையிலும், இலக்கியத்தனத்திலும் அந்தந்த வர்க்கச் சாயலே பெருமையுடன் பளிச்சிடும். 1968-டிசம்பர் 25ல் தஞ்சைமாவட்டம் கீழவெண்மணி பண்ணை ஆதிக்கப் பயங்கரவாதியாம் கோபால கிருஷ்ண நாயுடுவால் 44 உயிர்கள் எரித்துக் கொள்ளப்பட்டன. அரைப்படி நெல் கூலி உயர்வு கேட்டுப் போராடிய அந்த உழைக்கும் மக்களை எரித்துக் கொன்ற பண்ணை ஆதிக்கப் பயங்கரத்தைப் பற்றி அன்றைய தமிழக ‘இலக்கிய நுட்பம் தெரிந்த இலக்கியவாதிகள்’ எவரும் ஒரு மயிரைக்கூட எழுத்தில் பிடுங்கிப்போடவில்லை.

லா.ச.ரா சௌந்தர்ய உபாசகராகவும், தி.ஜானகிராமன் மோகமுள்ளில் தைத்துக் கொண்டும் இருந்தார்கள், மற்றும் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி எல்லோரும் அவரவருடைய பூணூலைத் தடவிக்கொண்டிருந்தார்களே தவிர வேறு எதுவும் அவர்களுக்குள் நிகழவில்லை. மொத்தத்தில் தமிழகத்தின் அன்றைய ‘இலக்கிய’ நுட்பம் தெரிந்தவர்களுக்குப் பண்ணை ஆதிக்கப் பயங்கரவாதத்தினால் எரிக்கப்பட்ட உயிர்களின் வலி தெரியவில்லை. அதனினும் கொடுமை ‘குருதிப்புனல்’ என்ற நாவலை நடந்த கொடுமைக்கு எதிராக ‘இந்திரா பார்த்தசாரதி’ எழுதி அதற்கு ‘சாகித்ய அகாடமி’ விருது பெற்றது.

ஆனால், சோலை சுந்தரப் பெருமாள், என்ற ‘இலக்கிய நுட்பம் தெரியாத’ எழுத்தாளர் எழுதிய ‘செந்தெல்’ என்கிற நாவல் எரிக்கப்பட்ட மக்களின் வேதனையை அந்த மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறது. விமர்சிக்கப்பட்ட மக்களின் வேதனையை அந்த மக்களின் மொழியிலேயே பதிவு செய்திருக்கிறது. (இவர் எழுதியிருப்பதில் ஒன்று கூட கவிதை இல்லை’ என்று ஜெயமோகனால் ‘இலக்கிய நுட்பத்துடன்’ விமர்சிக்கப்பட்டது) இன்குலாப்பின் பாடலும், கவிதையும் 44 உயிர்கள் எரிக்கப்பட்டதற்கெதிராகப் புலம்பி கோபத்தை காட்டுகிறது.

தாயின் கருணை என பொன்னி புனல் பாய்ந்தும்
தீயை அணைக்காத கொடுமை
தாயைக் குழந்தைகளைத் தீயின் கரங்களுக்குத்
தின்னக் கொடுத்து வைத்த கொடுமை

ஓயாக் கடலலை ஓய்வை விரும்பினும்
ஓயாதலைக்கழிக்கும் நினைவாய்
மாயாச் சினமிது மடியாத் துயரிது
வரலாறு காணாத கொடுமை

சமீபத்தில் 2007 டிசம்பர் 25 வெண்மணி நாளில் வெளிவந்திருக்கும் பாட்டாளியின் ‘கீழைத்தீ’ நாவலில் 44 உயிர்கள் எரித்துக் கொல்லப்பட்டதன் பின் எதிர்வினையாக நிகழ்த்தப்பட்ட கோபாலகிருஷ்ண நாயுடுவின் அழித்தொழிப்புவரை மிக விரிவாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அந்த உழைக்கும், ஒடுக்கப்பட்ட மக்களின் இத்தகைய வாழ்வு நுட்பம் பதிவுகளைல்லாம் தான் இலக்கியத் தன்மை கொண்டவை. தஞ்சைப் பூணூல் பண்ணையார்களின் குடும்பக் கதைகள் ஒதுக்கப்பட வேண்டியவையே.

ஏனெனில் லா.ச.ரா., தி.ஜா, அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி போன்றவர்களின் எழுத்துக்களில் ‘தஞ்சைப் பூணூல் பண்ணையாரின்’ வர்க்கப்பாசம் பொங்கி வழிகிறது. இன்குலாப், சோலை சுந்தரப் பெருமாள், பாட்டாளி போன்றோரின் எழுத்துக்களில் ‘இணக்கம் காண முடியாத வர்க்கப் பகைமை’ கோபாவேசமாய்க் கொந்தளிக்கிறது.

இலக்கியம் நமக்குள் ஆழமாக அந்தரங்கமாக உரையாடும் ஓர் அழகியல் செயல்பாடு என்பது பொய்ப்பூச்சு. அரசு, மதம், சாதி பொருளியல் காரணங்களால் நொய்மைப்பட்ட மக்களின் வாழ்வைப் பேசுவதும், அவர்தம் கோபத்தை நேர்த்தியாக வழி நடத்தி ஒரு அழகிய சமூக மாற்றத்திற்கு அவர்களைத் தயார் செய்வதும்தான் இலக்கியத்தின், இலக்கியவாதியின் சாpயான செயல்பாடு. இதை ஏற்றுக் கொள்ளும் தன்மையற்றவர்கள் சமூக மாற்றத்திற்குத் தடையாக இருப்பவர்கள்.

நன்றி: keetru.com/neythal/index.php

16 உரையாட வந்தவர்கள்:

  1. dondu(#11168674346665545885) said...

    //மற்றும் அசோகமித்திரன், ஞானக்கூத்தன், இந்திரா பார்த்தசாரதி எல்லோரும் அவரவருடைய பூணூலைத் தடவிக்கொண்டிருந்தார்களே தவிர..//

    இந்திரா பார்த்தசாரதி அவர்கள் எழுதிய குருதிப் புனலை படித்ததில்லையா?

    ஈ.வே.ரா. அவர்களது எதிர்வினைதான் என்ன?

    அன்புடன்,
    டோண்டு ராகவன்

  2. Raj Chandra said...

    >>அதனினும் கொடுமை ‘குருதிப்புனல்’ என்ற நாவலை நடந்த கொடுமைக்கு எதிராக ‘இந்திரா பார்த்தசாரதி’ எழுதி

    - சுகுணா...எந்தக் கோணத்தில் இதை சொல்கிறீர்கள் என விளக்க முடியுமா? நான் ஒரு முறைப் படித்த வரையில், எனக்கு அது கொஞ்சம் (தேவையற்ற) அறிவு ஜீவித்தனமான பார்வையில் அந்தக் கொடுமையைக் கையாண்டதாகத் தோன்றியது (வழக்கமான இ. பா கதைகள் வழியில்). பண்ணையார்களுக்கு வக்காலத்து வாங்கியதாக அல்ல.

    நன்றி,

  3. Raj Chandra said...

    மன்னிக்கவும்...புலியூர் முருகேசனின் கட்டுரையை மீள் பதிவு செய்திருப்பதை மறந்து நீங்கள் எழுதியதாகக் கேள்வி எழுப்பியுள்ளேன்...

  4. லக்கிலுக் said...

    அருமையான பதிவு. நீங்கள் எழுதி கீற்றில் வெளிவந்ததா? இல்லை வேறொருவர் எழுதியதா?


    //இலக்கியம் நமக்குள் ஆழமாக அந்தரங்கமாக உரையாடும் ஓர் அழகியல் செயல்பாடு என்பது பொய்ப்பூச்சு. //

    உண்மை. இலக்கியம் புரட்சிகளுக்கும் வித்திட்டிருக்கிறது.

    நல்ல பதிவுக்கு மீண்டும் மீண்டும் நன்றி!

  5. அசுரன் said...

    இந்த கட்டுரைக்கு நன்றி

    அசுரன்

  6. Unknown said...

    நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலோர்
    பார்பனர் அல்லர்.மூப்பனார்களும்,
    வாண்டையார்களும், கோபால கிருஷ்ண நாயுடுகளும் அங்கு அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த போது களத்தில் எதிர்த்தது கம்யுனிஸ்ட்கள்தான்.திகவோ
    திமுகவோ அல்ல. கூலி உயர்வு போராட்டத்தை அப்போதைய திமுக
    அரசு எப்படிக் கையாண்டது;போலிஸ்
    யாருக்கு ஆதரவாக இருந்தது? இவற்றுடன் பெரியார்
    விட்ட அறிக்கையைப் பற்றி விவாதிக்கலாமா. தி.ஜா,ஞானக்கூத்தன்,
    அசோகமித்திரன் எந்தப் பண்ணையாரை ஆதரித்து இந்த கொலை பற்றி எழுதினார்கள்.
    இ.பா ஒரு நாவல் எழுதினார்.இ.பா நிலபிரபுத்துவத்தை ஆதரித்தா எழுதினார்.தி.ஜா, ஞானக்கூத்தன்
    பண்ணையார்கள் அல்லர்.நகர்ப்புற
    நடுத்தரவர்க்கத்தைச் சேர்ந்தவர்கள்
    சுகுணா திவாகர் அறிக்கை
    விடாத/கண்டித்து எழுதாத கொலைகள்/அநியாயங்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும்.அந்த அடிப்படையில் அவரை விமர்சித்தால்
    தாங்குமா.
    இங்கு விமர்சிக்கப்பட வேண்டியவர்
    பெரியார்.அண்ணாத்துரையின் அரசும்
    கடுமையாக விமர்சிக்கப்பட வேண்டியது. இதை மறைத்துவிட்டு
    எதையாவது உளறினால் சரியாகி
    விடாது.

  7. மிதக்கும்வெளி said...

    டோண்டு,

    இந்திரா பார்த்தசாரதியின் குருதிப்புனல் கோபாலகிருஷ்ணநாயுடுவிற்கு ஆண்மை இல்லாதததே கொலைகளுக்குக் காரணம் என்று பிரச்சினையின் தீவிரத்தை நீர்த்துப் போகவைத்துத் திசைதிருப்பியது. வெண்மணிக் கொடுமையைப் பெரியார் கண்டித்தார். ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்ததே பெரியாரிடமிருந்த பிரச்சினை.

  8. மிதக்கும்வெளி said...

    லக்கி,

    கட்டுரையை எழுதியது புலியூர் முருகேசன்.

    சந்திரா,

    இ.பாவின் குருதிப்புனல் நேரடியாகப் பண்ணையார்களுக்கு வக்காலத்து வாங்கவில்லையென்றாலும் பிரச்சினையின் தீவிரத்தைக் கீழிறக்கியது.

  9. Anonymous said...

    // ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்ததே பெரியாரிடமிருந்த பிரச்சினை//

    ஈவெரா வின் சுய சாதிப்பாசம் தான் பிரச்சினை.

    உத்தாபுரம் பிள்ளைமார் வெறியர்களை நிங்கள் கண்டுகொள்ளாத்ததைப் போலவே ஈவெரா வும் அப்போது இருந்தார்

  10. யாத்ரீகன் said...

    >>> நம் இந்திய, தமிழகச் சூழலில்-இலக்கியத்தையும், இலக்கியவாதிகளையும், பொதுவான எவ்வித அடையாளம் பின்புலமும் அற்றவர்களாக சித்தரிப்பது.... இது பொய்யுரைப்பது. <<<

    Interesting perspective and its True ... can you also discuss about the at that time politicians & governments response to this issue ?

  11. அதி அசுரன் said...

    //நெல் உற்பத்தியாளர் சங்கத்தின் உறுப்பினர்களில் மிகப்பெரும்பாலோர்
    பார்பனர் அல்லர்.மூப்பனார்களும்,
    வாண்டையார்களும், கோபால கிருஷ்ண நாயுடுகளும் அங்கு அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த போது களத்தில் எதிர்த்தது கம்யுனிஸ்ட்கள்தான்.திகவோ
    திமுகவோ அல்ல.//

    மூப்பனார்களும்,வாண்டையார்களும், கோபால கிருஷ்ண நாயுடுகளும் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்த களத்தில் அவர்களை எதிர்த்துப் போராடியது கம்யுனிஸ்ட்கள் மட்டுமல்ல.திகவின் விவசாய தொழிலாளர் சங்கமும் தான். சாணிப்பால், சவுக்கடிகளைக் கொடுத்துக்கொண்டிருந்த கூட்டத்தை அதே பண்ணையில் கட்டிவைத்து அடி வாங்கியே பழக்கப்பட்டுவிட்ட தொழிலாளர்களை வைத்து பதிலுக்கு சவுக்கடி கொடுத்த வரலாறுகளை நன்கு தெரிந்துகொண்டு எழுதுங்கள். கம்யூனிஸ்ட்களை விட அதிகமாக பதிலடிகளில் இறங்கிய தி.க விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் நாகைப் பகுதிப் பொறுப்பாளர் தோழர் நாகை.பாட்ஷா இன்னும் வாழ்கிறார். நெடுங்காலம் அவைகுறித்த வழக்குகளை நடத்திவந்த அந்தத் தோழரிடம் வரலாறுகளைக் கேட்டுத் தெரிந்து கொள்ளுங்கள். இந்நிலை கீழத் தஞ்சை பகுதிகளில் மட்டும் தான்.

    மேலத்தஞ்சைப் பகுதிகளில் எந்தச் செங்கொடித் தோழரும் எட்டிப் பார்க்கவில்லை. அப்படியே ஓரிருவர் தென்பட்டாலும் அவர்கள் அங்கிருந்த பார்ப்பன மடங்களுக்குச் சொந்தமான நிலங்களில் போராட்டங்களைத் தொடங்கவில்லை. பார்ப்பனர்களிடமும், அவர்களது மடங்களுக்குச் சொந்தமான ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களிலும் பண்ணை அடிமைகளாய் இருந்த தொழிலாளர்களை மீட்டது திராவிடர் விவசாயத் தொழிலாளர் சங்கம் மட்டும்தான். சுமார் 1 இலட்சம் பேரை உறுப்பினர்களாகக் கொண்டு இயங்கிவந்த தி.வி.தொ.சங்கச் செயல்பாடுகளை / தோழர்களின் உழைப்பை மறைக்க வேண்டாம். மேலத்தஞ்சையில் பார்ப்பன மடங்களுக்கும் சைவ மடங்களுக்கு்ம் எதிராக இரத்தம் சிந்திப் போராடி அப்பகுதி விவசாயத் தொழிலாளர்களில் ஒருவராய் இன்றும் வாழ்கிறார் திருமங்கலக்குடி கோவிந்தராசன். கடந்தகாலப் பணிகளைக் காட்டி எம்.எல்.ஏ வாகவோ, எம்.பி யாகவோ, பொலிட்பீரோவாக மாறிடாமல் கும்பகோணம் அருகே உருக்குலைந்து கிடக்கும் குடிசையில் அமைதியாக, விளம்பரமில்லாமல் பெ.தி.க வில் பணியாற்றிவருகிறார்.

    தோழர் சுகுணாவிற்கு
    //வெண்மணிக் கொடுமையைப் பெரியார் கண்டித்தார். ஆனால் அதை வெறும் சட்டம் ஒழுங்குப் பிரச்சினையாகப் பார்த்ததே பெரியாரிடமிருந்த பிரச்சினை.//

    கம்யூனிஸ்ட்டுகள் அப்போது ஐக்கியமுன்னணி சார்பில் ஒரு ஆந்திரப் பார்ப்பனரை சென்னையில் முதல்வராக்குவதற்கு முயற்சி செய்தனர். பெரியார் அதை எதிர்த்தார். பார்ப்பனர் தான் ஆளவேண்டுமென்றால் இராஜாஜியைக் கூட ஏற்றுக்கொள்ள லாம். ஆந்திரப் பார்ப்பான் வேண்டாம் என பெரியார் எதிர்த்துள்ளார். அந்த அரசியல் சூழலில் தொடங்கப்பட்டது தான் திராவிட விவசாயத் தொழிலாளர் சங்கம். கம்யூனிஸ்ட் விவசாய சங்கங்களின் துரோகங்களை எதிர்த்துத் தான் உருவாக்கப்பட்டது. பல இடங்களில் இரண்டு சங்கங்களுக்கு மிடையே வெட்டுக்குத்துக்கள் நடைபெற்றுள்ளன. தி.க விவசாயத் தொழிலாளர்கள் கொலை செய்யப் பட்டும் உள்ளனர். பதிலுக்கு தி.க வும் வெட்டியுள்ளது. இரட்டைச் செம்பு இருந்த கள்ளுக்கடைகள் உடைத்து நொறுக்கப்பட்டிருக்கின்றன. இரட்டைக்குவளை உடைப்புகளும் நடந்துள்ளன. பண்ணையார்களையும், பார்ப்பன மடங்களின் நிலங்களிலும் வன்முறை வெடித்து இரத்தம் பரிமாறப்பட்டுத் தான் தி.க விவசாய அணி வளர்ந்துள்ளது. பெரியார் வன்முறைகளுக்கு எதிராக இருந்ததாக பழைய வரலாறுகள் சம்பவங்கள் நிருபிக்கவில்லை. 1957 இல் நீதிபதியின் மீது ஆசிட் அடித்தும் கத்தியால் குத்தியும் தப்பியோடிய ஆசிட் தியாகராசன் அய்யா அவர்களுக்காக பெரியார் தனது சொந்த வழக்கறிஞரை வைத்தே வாதாடியிருக்கிறார். பல சம்பவங்களைக் கூறலாம்.

    எனவே வெண்மணி குறித்த பெரியாரின் அறிக்கையை முழுமையாகப் புரிந்துகொள்ள வேண்டுமென்றால் 1952ஆண்டிலிருந்து தஞ்சைப் பகுதியின் வரலாறுகளை நாம் முழுமையாக அறியவேண்டும். கும்பகோணம் அய்யா ஆர்.பி.எஸ்.ஸ்டாலின், கோவிந்தராசன், நாகை பாட்ஷா ஆகியோரிடம் விரிவாகப் பேசவேண்டும்.மறைந்துகிடக்கும் வரலாறுகளை வெளிக்கொணர வேண்டும்.
    - அதி அசுரன்

  12. மிதக்கும்வெளி said...

    தோழர் அதி அசுரன்,

    தமிழகத்தில் அதிகமும் அவதூறுக்கு உள்ளாக்கப்பட்டவரும் திரித்தலுக்கு உள்ளானவரும் யாரென்று கேட்டால் தயங்காமல் 'பெரியார்' எனலாம். இன்னமும் பெரியார் மற்றும் அவர் இயக்கம் குறித்த உண்மைச் செய்திகள் ஆவணப்படுத்தப்படாததே இதற்கு அடிப்படைக் காரணம். நாம் முன்பே பேசியபடி குறைந்தபட்சம் தஞ்சைப் பகுதிகளில் நிலப்பிரபுக்களுக்கு எதிரான பெரியாரியக்கத்தவரின் செயல்பாடுகள் குறித்தாவது நாம் ஆவணப்படுத்தியே ஆகவேண்டும். மற்றபடி தொழிற்சங்கச் செயல்பாடுகளில் கம்யூனிஸ்ட் கட்சியினர், குறிப்பாக பி.ராமமூர்த்தியின் துரோகம் குறித்தும் நான் ஓரளவு வாசித்துள்ளேன்.

  13. Anonymous said...

    "தங்கள் படைப்பை எங்கள் வலைச்சிற்றிதழில் வெளியிடுவதில் வாசகர்களாகிய நாங்கள் பெருமைப்படுகிறோம்!"

    மானமிகு நறுமுகய்,
    சுதந்திர எழுத்துக்களை கொண்டாடும் தமிழ்மானம்

    "It is not about Freedom of Expression but it is all about Expression of Freedom!"

  14. megavannan said...

    thozhr ippodhu ennaal ungal web idhazhai vaasikka mudigiradhu. thodarndhu ezhudhungal

  15. வினவு said...

    படித்து விட்டீர்களா?

    நவ்வாப்பழம்: ஜெயமோகனுடன் ஒரு தத்துவவிசாரம்!

    http://vinavu.wordpress.com

    -Vinavu

  16. கவிதா | Kavitha said...

    சுகுணா திவாகர், இப்போது தான் பார்த்தேன்.. என்னுடைய பார்வைகள் பக்கத்தை தங்களின் ப்ளாக்'ல் இணைத்துள்ளீர்கள்.. மிக்க நன்றி... :)))