பீப் சாங்கும் தமிழ் இரட்டை மனநிலையும்

சிம்புவின் ‘பீப்’ பாடலில் உள்ள ஆபாசத்தைவிட முக்கியமானது தொடர்ச்சியாக சமீபகாலங்களில் பெண்களை வஞ்சகர்களாகச் சித்தரிக்கும் மனநிலைதான். பெண் வெறுப்பு என்பதற்குப் பட்டினத்தார் காலத்தில் இருந்து நமக்கு ஒரு நீண்ட மரபு இருக்கிறது. சிம்புவின் பெரும்பாலான படங்கள் பெண் வெறுப்பை முன்வைப்பவை. ‘மன்மதன்’ அதில் உச்சம். ‘பெண்கள் ஆண்களை எளிதில் கழட்டிவிடுபவர்கள்’ என்கிற கருத்து சமீபகாலமாக நகைச்சுவைக் காட்சிகள், பாடல்கள் வழியாகப் பரப்பப்படுகிறது. சந்தானத்தின் பெரும்பாலான வசனங்கள் இந்த வகையைச் சேர்ந்தவைதான். இவற்றுக்குத் திரையரங்களில் ஆரவாரத்துடன்கூடிய கைதட்டல்களும் கிடைக்கின்றன. ‘ரோமியோ ஜூலியட்’டில் ஜெயம் ரவி பேசக்கூடிய இத்தகைய வசனங்களுக்கும் ‘மாரி’ தனுஷின் வசனங்களுக்கும் இத்தகைய கைதட்டல்கள் குவிகின்றன. பெரும்பாலும் பி அண்ட் சி சென்டர்களில் இத்தகைய வசனங்களுக்குப் பெருத்த ஆதரவு இருப்பதை மறுக்கமுடியாது.
சிம்புவின் அப்பா டி.ராஜேந்தர் தமிழ் சினிமாவில் காதல் சோகத்தைப் பிழியப் பிழியக் கொடுத்தவர். ஆனால் அத்தனையும் ஆணின் சுயபச்சாதாபம் ஒலிக்கும் பாடல்கள். மின்சார ரயிலில் உடன் பயணிக்கும் கல்லூரித் தோழனைப் பிடித்திருந்தாலும்கூட, காதலுக்குச் சம்மதம் தெரிவிக்காத நாயகி. ‘ஒருதலை ராகம்’ காலகட்டத்தில் பெண்ணுக்கு அனுமதிக்கப்பட்ட வெளி என்பது மிகக்குறைவு. அப்போதுதான் பெண்கள் பெருவாரியாக வீட்டைத் தாண்டி வேலைக்குச் செல்லத் தொடங்கியிருந்த காலகட்டம். திருமணத் தேர்வோ பாலியல் தேர்வோ பெண்கள் கையில் இல்லாத காலகட்டம். அப்போது காதல் தோல்வி என்பது ‘குழந்தை பாடும் தாலாட்டாக’வும் ‘மேற்கில் தோன்றும் உதயமாக’வும் ‘இரவு நேரப் பூபாளமாக’வும் மட்டுமே இருந்தது. ‘நான் ஒரு ராசியில்லா ராஜா’ என்று காதல் தோல்வி அடைந்த ஆண் சுய பச்சாதபத்தில் புலம்பித் தவித்தான்.
ஆனால் சிம்புவின் காலம் முற்றிலும் வேறுபட்டது. பெண்களுக்கான வெளி விரிவடைந்திருக்கிறது. முற்றிலுமாக இல்லை என்றாலும் பாலியல் தேர்வு, திருமணத் தேர்வு ஆகியவற்றைத் தீர்மானிக்கக்கூடிய கணிசமான வெளி பெண்களுக்கு உருவாகியிருக்கிறது. சுயேச்சையான பெண்கள் உருவாகும் காலகட்டம் ஆண்களை அச்சுறுத்துகிறதோ என்று நினைக்கிறேன். தங்கள் ஆளுகைக்குக் கீழ் இருந்த பெண்கள் கொஞ்சம் மீறிப்போனாலும் அவர்களை ஏமாற்றுக்காரர்களாகச் சித்தரிக்க ஆண்மனம் துடிக்கிறது.
டி.ஆர் காலத்து காதல் தோல்விப் பாடல்கள் அனைத்தும் சோகப்பாடல்கள். ஆனால் இப்போதைய காதல் தோல்விப் பாடல்கள் சோகப் பாடல்கள் அல்ல. டாஸ்மாக்கில் குடித்து குத்தாட்டம் போடுகிற துள்ளலிசைப் பாடல்கள். ‘பூக்களைத்தான் பறிக்காதீங்க; காதலைத்தான் பிரிக்காதீங்க’ என்று காதலர்களின் பெற்றோர்களைக் குற்றம் சாட்டுபவையல்ல. முழுக்க முழுக்க பெண்களை வசைபாடுபவை இந்தப் பாடல்கள். நன்றாக யோசித்துப் பாருங்கள். காதலர்களைப் பிரிக்கிற வில்லத்தனமான பெற்றோர்களைக்கூட சமீபகால படங்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. ‘விண்ணைத் தாண்டி வருவாயா’, ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’, ‘வாசுவும் சரவணனும் ஒண்ணாப் படிச்சவங்க’ என்று இளைஞர்களைக் கவரும் பெரும்பாலான படங்களில் காதலின் வெற்றியையோ தோல்வியையோ தீர்மானிப்பவளாகப் பெண்ணே காட்டப்படுகிறாள். எனவே ‘அப்பாவி ஆண்களின் காதல் தோல்விக்குக் காரணம் மோசக்காரப் பெண்கள்’ என்கிற கதையாடல் உருவாக்கப்படுகிறது. இப்படியான கதையாடல் சமீபகாலமாகத்தான் உருவானது என்பது கவனிக்கத்தக்கது.
ஒருவேளை ஒரு பெண் ஆணைக் காதலித்து விட்டு கழட்டிவிட்டால்கூட அதில் என்ன தப்பு இருக்கிறது? பாலியல் தேர்வு, திருமணத் தேர்வு, காதல் தேர்வு ஆகியவை பெண்களுக்கு இருக்கக்கூடாதா என்ன? டி.ராஜேந்தர் காதல் தோல்வியில் மருகிக்கொண்டிருந்த காலகட்டத்தில்தான் ரெட்டைவால் குருவி, சிந்து பைரவி, சதிலீலாவதி என்று வரிசையாகப் படங்கள் வெளியாகின. மடக்கிப்போடுவதும் கழட்டிவிடுவதும் ஆண்களுக்கே உரித்தான உரிமையா என்ன? 
ஆனால் அதேநேரத்தில் தமிழ் சினிமா என்பது முற்றிலும் இப்படியான பழமைவாதப் பார்வையோடு மட்டும் இல்லை. எம்.ஜி.ஆர் காலம் தொட்டு கே.எஸ்.ரவிக்குமார், ரஜினி காலம்வரை ‘பொம்பளைன்னா இப்படி இருக்கணும், அப்படி நடக்கணும்’ என்கிற நான்சென்ஸ் குரல்களை இப்போதைய தமிழ் சினிமாக்களில் அதிகம் பார்க்கமுடியவில்லை. ‘பொம்பளை சிரிச்சாப் போச்சு’ என்று அபத்தமாகப் பேசிய தமிழ் சினிமாவில் பெண்கள் குடிப்பதே இயல்பாகக் காட்டப்படுகிறது. சிலகிலோமீட்டர்கள் தமிழ் சினிமா நகர்ந்திருந்தாலும்கூட சிம்பு போன்றவர்களால் இன்னும் ஆணாதிக்க, நிலப்பிரபுத்துவ மனநிலையிலிருந்து வெளிவரமுடியவில்லை. இது ஏதோ சிம்புவின் பிரச்னை மட்டுமில்லை. தமிழ்ச்சமூகத்தின் மனநிலைக்கே இப்படியான பிரச்னைகள் இருக்கின்றன.
80கள் தொடங்கி 90களின் இறுதிவரை பெரும்பாலான தமிழ் சினிமா டூயட் பாடல்களின் சாரம் ஒன்றுதான். ஆண் பெண்ணைப் பாலுறவுக்கு அழைப்பான். பெண்ணோ ‘எல்லாம் கல்யாணத்துக்கு அப்புறம்தான்’ என்பாள். இந்த ஒரே உரையாடலை வேறு வேறு வரிகளைப் போட்டு நம் பாடலாசிரியர்கள் எழுதியிருப்பார்கள். இப்படி டூயட் பாடல்களில் திருமணத்துக்கு முன்பான பாலுறவுக்கான ஆணின் கோரிக்கையை ரசித்த தமிழ்ச்சமூகம்தான், குஷ்பு ‘திருமணத்துக்கு முன்பான பாலுறவு’ குறித்துப் பேசியபோது கொதித்தெழுந்தது. விளக்குமாறுடன் குஷ்புவின் வீட்டுக்கு முன்பு குவிந்தது. தமிழகத்தின் பல்வேறு நீதிமன்றங்களில் வழக்குகள் தொடுக்கப்பட்டன. எல்லாம் கொஞ்சகாலம்தான். அடுத்த சில ஆண்டுகளிலேயே செல்வராகவன் ‘7ஜி ரெயின்போ காலனி’ படத்தில் திருமணத்துக்கு முன்பான பாலுறவைக் காட்சிப்படுத்தினார். போராடியவர்கள் எல்லாம் எங்கே போனார்கள் என்று தெரியவில்லை. இப்போதைய படங்களில் நாயகிகள் குடிப்பதோ, ஏ ஜோக் சொல்வதோ, திருமணத்துக்கு முன்பு பாலுறவு கொள்வதோகூட தமிழர்களால் இயல்பாக ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது. இன்னொருபுறம் ‘பெண்கள் காதலனை ஏமாற்றும் நயவஞ்சகர்கள்’ என்கிற பாடல்களையும் ரசிக்கிறது. இதுதான் தமிழ்ச்சமூகத்தின் இரட்டை மனநிலை.
‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தை எடுத்துக்கொள்வோம். அதில் உள்ள இரட்டை அர்த்த வசனங்கள் பலரால் கண்டிக்கப்படுகின்றன. நமது தெருக்கூத்தில் பபூன் பேசும் வசனங்களிலோ, கரகாட்டக் கலைஞர்களின் நடன அசைவுகளிலோ, வெண்ணிற ஆடை மூர்த்தி பேசும் வசனங்களிலோ, தீப்பொறி ஆறுமுகத்தின் மேடைப்பேச்சுகளிலோ இல்லாத ஆபாசமா அதில் இருக்கிறது? உண்மையில் ‘த்ரிஷா இல்லைனா நயன்தாரா’ படத்தின் பிரச்னையே வேறு.
படத்தின் நாயகன் ‘வெர்ஜின் ஆண்’. ‘நான் வெர்ஜின் ஆண். எனக்கு வெர்ஜின் பெண் வேண்டும்’ என்கிறான். ஆனால் அவனுக்கு ‘வெர்ஜின் பெண்’ணே கிடைக்கவில்லை. பிறகு அந்த ‘வெர்ஜின் பையன்’ பெண்களுக்கு சாபம் விடுகிறான். சரி, அவன் ஏன் வெர்ஜின்? அவனுக்கும் பாலுறவு கொள்ள சில சந்தர்ப்பங்கள் அமைகின்றன. ஆனால் ஒருமுறைகூட அவனால் அதை வெற்றிகரமாக ‘நிறைவேற்றமுடியவில்லை’. வேறு வழியில்லாமல் அவன் வெர்ஜினாக இருக்கிறான். அவனுக்குப் பாலுறவு தேவை. அது அவனுக்குக் கிடைக்கவில்லை. வேறுவழியில்லாமல் வெர்ஜினாக இருப்பவன், வெற்றிகரமாகப் பாலுறவு கொண்ட பெண்களைத் தூற்றி, சாபம்விடுகிறான். இந்த ‘வேறுவழியில்லாத வெர்ஜினிட்டி’தான் தமிழ்ச்சமூகத்தின் மனநிலையே. உண்மையில் இதுதான் ஆபாசம்.
சிம்பு போன்றவர்களுக்கோ ‘பெண்கள் ஆண்களை ஏமாற்றுகிறார்கள்’ என்ற மாபெரும் பிரச்னை தவிர உலகத்தில் வேறு எந்தப் பிரச்னையும் கிடையாது. ஒப்பீட்டளவில் பெண்களுக்குத் தங்கள் துணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்கிற வெளி கிடைத்திருக்கிறது என்று நான் மேலே கூறியது உண்மைதான். ஆனால் முழு உண்மையல்ல. நகரங்களில் பெண்களுக்கு தேர்வுக்கான வெளி உருவாகியிருக்கும் காலகட்டத்திலேயே சென்னைக்கு அப்பால் சாதி மீறிப் பெண்கள் காதலிப்பதால் கௌரவக்கொலைகள் நடக்கின்றன. ‘பெண்கள் சாதிக்குள்ளேயேதான் காதலிக்கவேண்டும்’ என்று சாதியத் தூய்மைவாதம் பேசும் புதுப்புது சாதித்தலைவர்கள் அவதாரம் எடுக்கிறார்கள். அவர்களுக்கு அந்தச் சாதியைச் சேர்ந்த கணிசமான இளைஞர்களின் ஆதரவு கிடைக்கிறது. இந்த உளுத்துப்போன பழமைவாத சாதியச் சிந்தனையை ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் என்று தொழில்நுட்பம் உருவாக்கிக்கொடுத்திருக்கும் நவீன ஊடகங்கள் வழியாக இளைஞர்கள் பரப்புகிறார்கள். இது எவ்வளவு மோசமான சூழல்? ஆனால் தமிழ் சினிமாவோ காதலைப் பிரிக்கும் வில்லத்தனமான பெற்றோர்களைக் காட்சிப்படுத்துவதைக்கூட கைவிட்டுவிட்டு ‘பெண்கள் வஞ்சகர்கள்’ என்று பாடித்திரிகிறது.
பீப் சாங்கை எதிர்க்கும் பெரும்பாலான போராளிகளும் இத்தகைய இரட்டைமனநிலை கொண்டவர்கள்தான். அவர்களுக்கு அந்தப் பாடலில் கெட்டவார்த்தை இடம்பெற்றிருப்பது ஒன்றுதான் பிரச்னை. அந்த பீப் மட்டும் இல்லாவிட்டால், பெண்களை வஞ்சர்களாகச் சித்தரிக்கும் நூற்றுக்கணக்கான பாடல்களில் இதுவும் ஒரு வெற்றிகரமான பாடல். ‘ஆபாசத்தை’ எதிர்ப்பது எளிதான ஒன்று. அதற்கு போலியான கலாசாரத் தூய்மைவாத மனநிலை இருந்தால் மட்டும் போதும். உண்மையில் இருப்பதிலேயே ஆபாசமானது தமிழ்ச்சமூகத்தின் போலியான இரட்டை மனநிலைதான்.

வெள்ளை யானை : பரிவுணர்ச்சியின் பிரமாண்டம்

‘வெள்ளை யானை’ நாவலைப் படிப்பதற்கு முன் ஜெயமோகனின் முன்னுரையைப் படித்தது என் தவறுதான். அந்த முன்னுரையைப் படித்து முடித்தபிறகு. பக்கச்சார்பான அரசியல் தீர்ப்பெழுதும் அந்த முன்னுரை, நாவல் குறித்த முன் தீர்மானத்தை உருவாக்கிவிடும் என்ற பயம் எழுந்தது. முன்னுரையில் ஜெயமோகன் சொல்லியிருக்கும் விஷயத்தின் சாராம்சம் இதுதான் :

1921ஆம் ஆண்டில் சென்னை பின்னி மில் வேலை நிறுத்தம் அறிவிக்கப்படுகிறது. அதுதான் இந்தியாவின் முதல் தொழிற்சங்க வேலைப்போராட்டம் என்று கருதப்படுகிறது. அந்தப் போராட்டத்தை காங்கிரஸ், நீதிக்கட்சி, இடதுசாரிகள் ஆதரிக்க, தலித் தலைவரான எம்.சி.ராஜாவோ, ‘‘தலித் தொழிலாளர்கள் அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ளக்கூடாது’’ என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத் தொடர்ந்து வேலைக்குப் போன தலித் தொழிலாளர்களை மற்ற தொழிலாளர்கள் தடுத்து நிறுத்த, மோதல் வெடித்தது. ‘புளியந்தோப்பு கலவரம்’ என்றழைக்கப்பட்ட அந்தத் தாக்குதலில் தலித் மக்கள் பெருவாரியாக வாழ்ந்த புளியந்தோப்புப் பகுதி குடிசைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. ஏராளமானவர்கள் இறந்தார்கள். இதைப் பற்றி திரு.வி.க. தன் சுயசரிதையில் குறிப்பிடுகிறார். ‘தலித்துகள் சென்னையின் மய்யப்பகுதியில் குடியிருப்பதுதான் கலவரத்துக்குக் காரணம்’ என்று கருதிய நீதிக்கட்சி சென்னையின் புறநகர்ப்பகுதிகளில் தலித் மக்களைக் குடியேற்றியது. ‘புளியந்தோப்பு தலித் குடியிருப்பு முழுமையாகவே காலி செய்யப்பட்டது. அங்கே முஸ்லீம்களைக் குடியேற்றுவது வழியாக இது நிகழ்த்தப்பட்டது. இன்று அது ஒரு முஸ்லிம் குடியிருப்பு’ என்கிறார் ஜெயமோகன். ஏன் தலித்துகள் இந்தப் போராட்டத்தைப் புறக்கணித்தார்கள் என்கிற கேள்வியில் இருந்துதான் ‘வெள்ளை யானை’ நாவலுக்கான புள்ளி தொடங்குகிறது. தலித் அறிஞரும் தொடர்ச்சியாக திராவிடர் இயக்கத்தைத் தலித் மக்களுக்கு எதிர்நிலையில் நிறுத்தி விமர்சித்து வந்தவருமான அன்பு பொன்னோவியத்துடனான ஜெயமோகனின் உரையாடல்தான் இந்த நாவலுக்கான விதை. ‘‘1878ல் சென்னை ஐஸ் ஹவுஸில் நடந்த வேலை நிறுத்தம்தான் முதல் தொழிலாளர் வேலை நிறுத்தம். அதை மேற்கொண்டது தலித்துகள். ஆனால் அது இடைநிலைச் சாதி கங்காணிகளாலும் பிரிட்டிஷ் ஆட்சியாளர்களாலும் முறியடிக்கப்பட்டது. அதைப்பற்றி திரு.வி.க. ஓரிரு வரிகள் எழுதியிருக்கிறார்’’ என்று ஜெயமோகனிடம் சொன்ன அன்புபொன்னோவியம், அதற்கான ஆவணங்களைத் தேடுவதாகவும் சொல்லியிருக்கிறார். அந்த ஐஸ் ஹவுஸ் போராட்டத்தில் ஏற்பட்ட கசப்பான அனுபவங்களின் அடிப்படையில்தான் பின்னி ஆலை வேலைநிறுத்தத்தைத் தலித்துகள் புறக்கணித்தார்கள் என்பது அன்பு பொன்னோவியத்தின் அனுமானம். மேலும் ஐஸ் ஹவுஸ் போராட்டத்தில் அயோத்திதாசப் பண்டிதரின் பங்களிப்பு இருந்திருக்கலாம் என்பதும் அவரது அனுமானம்.  இது ஜெயமோகன் முன்னுரையில் குறிப்பிட்டிருப்பது.

முதலில் ஒன்றைப் புரிந்துகொள்ளவேண்டும். நீதிக்கட்சி என்பது முற்றுமுழுதான முற்போக்கு விழுமியங்களைக் கொண்ட கட்சி அல்ல. ஆங்கிலேய ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்கள் வேலை வாய்ப்புகளிலும் அதிகார மய்யங்களிலும் பெற்றிருந்த அதிகப்படியான வாய்ப்புகளுக்கு எதிராக எழுந்த ஒரு கட்சி. பார்ப்பனர்களைப் போலவே பார்ப்பனரல்லாதோருக்கும் பிரதிநிதித்துவம் வேண்டும் என்பதையே முக்கியக் கோரிக்கையாகக் கொண்ட கட்சி. கட்சியின் தலைமையில் இருந்தவர்களில் பெரும்பாலானோர் மேட்டுக்குடி பணக்காரர்கள். எம்.சி.ராஜா, சிவராஜ் போன்ற தலித் தலைவர்களும் இருந்தார்கள். திரு வி.க.வின் பின்னி ஆலை வேலை நிறுத்தம் குறித்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு திராவிடர் இயக்கத்தின் மீது இதற்கு முன்பும் கடுமையான விமர்சனங்கள் வைக்கப்பட்டிருக்கின்றன. பார்ப்பனரல்லாதார் இயக்கத்துக்கு ஏற்பட்ட செல்வாக்கு அன்றைய காங்கிரஸிலும் பிரதிபலித்தது. காங்கிரஸும் தன்னை முற்றுமுழுதான பார்ப்பனக் கட்சி அல்ல, பார்ப்பனரல்லாதார் நலன்கள் குறித்து தங்களுக்கும் அக்கறை உள்ளது என்று காட்டிக்கொள்ளவேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. நீதிக்கட்சிக்குப் போட்டியாக காங்கிரஸ் ஆதரவில் ‘சென்னை மாகாண சங்கம்’ என்ற பார்ப்பனரல்லாதார் சங்கம் ஒன்றும் ஆரம்பிக்கப்பட்டது. அந்த சங்கத்தின் முக்கியமான மூன்று தலைவர்கள் ஈ.வெ.ரா.பெரியார், வரதராஜுலு (நாயுடு) மற்றும் திரு.வி.க. பல காங்கிரஸ் கூட்டங்களில் இவர்கள் மூவரும் பேசியபிறகுதான் ராஜாஜி பேசுவார் என்று பெரியார் ஒரு நேர்காணலில் குறிப்பிடுகிறார். ஒருகட்டத்தில் காங்கிரஸ் முற்றுமுழுதான பார்ப்பனர் கட்சி என்ற முடிவுக்கு பெரியாரும் வரதராஜுலுவும் வந்து சேர்கிறார்கள். சேரன்மாதேவி குருகுலப் போராட்டம், வகுப்புவாரிப் பிரதிநிதித்துவம் குறித்து பெரியார் கொண்டு வந்த தீர்மானம் தொடர்ச்சியாக காங்கிரஸ் மாநாடுகளில் தோற்கடிக்கப்பட்டவை ஆகியவை அவர்களை இந்த முடிவுக்குக் கொண்டுவந்தது. காங்கிரஸ் மாநாடுகளிலேயே பார்ப்பனர்களுக்கும் பார்ப்பனரல்லாதாருக்கும் தனித்தனி சமையல் நடந்தது என்றால் காங்கிரஸில் பார்ப்பன ஆதிக்கம் எந்தளவுக்கு வெளிப்படையாக இருந்தது என்பதைப் புரிந்துகொள்ளலாம். கடைசியாக காஞ்சிபுரத்தில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் பெரியாரின் வகுப்புவாரி பிரதிநிதித்துவத் தீர்மானம் விவாதத்துக்கே எடுத்துக்கொள்ளப்படாதபோதுதான் பெரியார் காங்கிரஸை விட்டு வெளியேறுகிறார். அந்த காஞ்சிபுரம் மாநாட்டின் தலைவராக இருந்தவர் திரு.வி.க. பெரியார், வரதராஜுலுவைப் போல காங்கிரஸ் பார்ப்பனரல்லாதார் நலன்களைப் புறக்கணிக்கிறது என்பதைத் திரு.வி.க. புரிந்துகொண்டாலும் தொடர்ந்து அவர் காங்கிரஸ்காரராகவே நீடித்தார். காந்தியின் தலைமை மற்றும் தேசிய விடுதலைப் போராட்டம் ஆகியவற்றின் மீது அவருக்கிருந்த நம்பிக்கை அதற்குக் காரணமாக இருந்திருக்கலாம். தொடர்ச்சியான நீதிக்கட்சி எதிர்ப்பாளராக இருந்த திரு.வி.க.வின் பின்னி வேலை நிறுத்தம் குறித்த குறிப்புகளில் இந்தப் பக்கச்சார்புகள் பிரதிபலித்திருக்க வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் நீதிக்கட்சியின் ஆட்சியே ஒட்டுமொத்தமாகத் தலித் விரோத ஆட்சி என்று சொல்லிவிடமுடியாது. ‘பஞ்சமர்கள் பேருந்துகளில் அனுமதிக்கப்படமாட்டார்கள்’ என்றே அக்காலத்தில் பயணச்சீட்டுகளில் அச்சடிக்கப்பட்டிருந்தது. அப்படிப் பயணச்சீட்டுகளை வினியோகிக்கும் பேருந்துகளின் உரிமம் ரத்து செய்யப்படும் என்று அரசாணை கொண்டுவந்தது நீதிக்கட்சி ஆட்சிதான்.

இத்தனையும் சொல்வதற்குக் காரணம் நீதிக்கட்சி குறைகளற்ற முற்போக்குக் கட்சி என்று நிறுவுவதற்கோ தலித்துகளை வெளியேற்றிய நீதிக்கட்சியின் செயல்பாடுகளை நியாயப்படுத்துவதற்கோ அல்ல. வரலாற்றில் தனக்குத் தேவையான சம்பவங்களைப் பிய்த்தெடுத்து, தோதான தீர்ப்பு எழுதுவது சரியானதுதானா என்று பரிசீலனை கோருவதற்குத்தான். மேலும் நீதிக்கட்சி வெளிப்படையாகவே பிரிட்டிஷ் ஆட்சியை ஆதரித்த கட்சி. அது ஏன் பிரிட்டிஷாரைப் பகைத்துக்கொண்டு தொழிலாளர் வேலை நிறுத்தத்தை ஆதரிக்க வேண்டும், தலித்துகளுக்கு எதிரான செயல்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்றெல்லாம் கேள்விகள் எழுகின்றன. இதற்கு திரு.வி.க.வின் சில குறிப்புகளை மட்டும் வைத்து முடிவுக்கு வராமல் மேலும் பல தரவுகளைச் சேகரித்து விரிவாக ஆராய வேண்டும். ஜெயமோகனே தன் முன்னுரையில் ‘‘நீதிக்கட்சியினர் உறுதியான பிரிட்டிஷ் ஆதரவாளர்கள் என்பதையும் எம்.சி.ராஜாவேகூட நீதிக்கட்சியில் பணியாற்றியவர் என்பதையும் கருத்தில் கொண்டால் பல குழப்பங்கள் வருகின்றன’’ என்கிறார். இப்படி பல ‘குழப்பங்களுக்கு‘ இடையே அவர் ஒரு ‘தெளிவான‘ முடிவுக்கு வருவதுதான் ஆச்சர்யம். அந்த முடிவு :

‘‘தலித் அரசியலும் தமிழ்த்தேசியம் அல்லது திராவிடத் தேசிய அரசியலும் கொள்ளும் முரண்பாடு அதன் ஆரம்பப்புள்ளியிலேயே இவ்வாறு வலுவாக வெளிப்பட்டுவிட்டபோதிலும்....’’ என்பது.

முதலில் நீதிக்கட்சி தமிழ்த் தேசியக் கட்சி அல்ல. அன்றைய சென்னை மாகாண நிலையைப் பிரதிபலிப்பதுபோல மலையாளிகள், தெலுங்கர்கள், கன்னடர்கள், தமிழர்கள் நிறைந்திருந்த கட்சி. திராவிட அடையாளம் என்பதும் நீதிக்கட்சிக்கு முன்பே உருவான ஒன்று. அத்தகைய அடையாளத்தை முன்வைத்தவர்களும் தலித்துகளே. இந்த வாக்கியமே அடிப்படையில் பிழையானது. எனக்கு இங்கே இன்னொரு முக்கியமான கேள்வி எழுந்தது. ஒரு தொழிலாளர் போராட்டம் முதன்முறையாக உருவாகும்போது எந்த அதிகாரமும் அற்ற தலித்துகள் அந்தப் போராட்டத்தில் பங்கேற்பதுதான் இயல்பு. ஒரு நிறுவனமயப்பட்ட தொழிற்சங்கத்தின் வேலைநிறுத்தப்போராட்டத்திலினின்று ஏன் தலித்துகள் விலகிப்போனார்கள் என்பதுதான் வரலாற்றில் மிக முக்கியமான புள்ளி. வர்க்க அடையாளமும் சாதி அடையாளமும் முரண்படுகிற புள்ளியில் இருந்துதான் இந்த வரலாற்றாய்வு தொடங்கியிருக்க வேண்டும். ஆனால் அது ஏன் நீதிக்கட்சி எதிர்ப்புப் புள்ளியிலிருந்து தொடங்குகிறது? ஜெயமோகனின் ‘வெள்ளையானை’ நாவலைக் கொண்டாடுகிற தலித் அறிவுஜீவிகள் மற்றும் எழுத்தாளர்களில் பெரும்பாலானோர் திராவிட அரசியலையும் பெரியாரியக்கத்தையும் தலித் அரசியலுக்கு எதிர்நிலையில் இருந்து விமர்சிப்பவர்கள். அதற்கான ஒரு அரசியல் வசதியாகத்தான் இந்த நாவல் கொண்டாடப்படுகிறது என்பதுதான் சூட்சுமம். 

எம்.சி.ராஜாவும் தலித் தொழிலாளர்களும் பின்னி வேலை நிறுத்தப் போராட்டத்திலிருந்து ஏன் விலகினார்கள் என்பதற்கான விரிவான ஆய்வுகள் மேற்கொள்ளப்படவேண்டும். 1878ல் நடந்த ஐஸ் ஹவுஸ் வேலை நிறுத்தப்போராட்டத்தில் தலித்துகளுக்கு ஏற்பட்ட கசப்பான அனுபவம்தான் இதற்குக் காரணம் என்பது அன்பு பொன்னோவியத்தின் அனுமானம். அவ்வளவே. அதேபோல் அயோத்திதாசர் இந்தப் போராட்டத்தில் நேரடியாகவோ மறைமுகமாகவோ ஈடுபட்டார் என்பதற்கும் எந்தத் தரவுகளுமில்லை. இதுவும் அன்பு பொன்னோவியத்தின் இன்னொரு அனுமானம். எனவே ‘வெள்ளை யானை’யை ஒரு வரலாற்று நாவல் என்று சொல்வதைவிட, அனுமானங்களின் மீது எழுப்பப்பட்ட வரலாற்றுப் புனைவு என்று சொல்லலாம். ஆனால் அனுமானங்களின் அடிப்படையில் ஒரு வரலாற்றுப் புனைவு எழுதுவது தவறு கிடையாது. ஏனெனில் வரலாற்றெழுதியலில் அனுமானங்களின் பங்கும் கணிசமானவை. இந்த நிலைகளை ஏற்றுக்கொண்டு ‘வெள்ளை யானை’யை மதிப்பிடலாம். ஆனால் முன்னுரையில் பின்னி வேலை நிறுத்தம், நீதிக்கட்சி குறித்தெல்லாம் ஜெயமோகன்  எழுதியிருக்கிறாரே தவிர, நாவல் அதைப்பற்றியது அல்ல. அது பஞ்சம் மற்றும் ஐஸ் ஹஸ் வேலை நிறுத்தத்தைப் பற்றியது. மேலும் முன்னுரையின் அடிப்படையில் நாவலை மதிப்பிடுவதோ முன் தீர்மானத்தோடு ஒரு நாவலை அணுகுவதோ வாசிப்பு அறம் அல்ல என்ற புரிதலோடு நாவலைப் படிக்கத் தொடங்கினேன்.

உண்மையில் நாவலின் முதல் அய்ம்பது பக்கங்கள் அப்படியே வாசகர்களை வாரிச் சுருட்டி உள்ளிழுத்துக்கொள்கின்றன. ஏய்டனின் பாத்திரப் படைப்பு மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டிருக்கிறது. அயர்லாந்து கீழ்நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்தவனாக, அதேநேரம் பிரிட்டிஷ் இந்தியாவில் தன் பின்னணியை மறைத்துக்கொள்ளும் வசதி கொண்ட ராணுவ உயரதிகாரியாக, இந்தியச் சாதியமைப்பின் புதிர்களை விளங்கிக்கொள்ள முடியாதவனாக, அது எல்லா அதிகாரங்களுக்கும் மேலாக இருப்பதைக் கண்டு மிரள்பவனாக, ஷெல்லியின் எழுத்துகளில் தோய்ந்துபோகிற கவித்துவ உள்ளத்தினனாக, ஏழைகளுக்கு இரங்கும் அதே நேரத்தில் சாரட்டில் இருந்து கீழே இறங்குவதற்கு ஓர் ஏழையின் முதுகைப் பயன்படுத்துவதில் உறுத்தல் இல்லாதவனாக, மரிஸாவிடம் காதலும் அதிகாரமும் பிரதிபலிப்பவனாக.....என பன்மைத்துவம் கொண்ட மிகச்சிறந்த பாத்திரமாக ஏய்டனை ஜெயமோகன் உருவாக்கியிருக்கிறார். ஏய்டனின் மனவோட்டங்களும் கூட மிகச்சிறப்பாக எழுதப்பட்டிருக்கிறது. ஏய்டனின் அயர்லாந்து வாழ்க்கை குறித்த சித்தரிப்புகள், ஒரு மொழிபெயர்க்கப்பட்ட செவ்வியல் நாவலைப் படிக்கும் உணர்வைத் தந்தது. அயர்லாந்திலிருந்து விடைபெறும் முன்பு, ஏய்டனுக்கும் அவனது தந்தைக்குமான கணங்கள் கவித்துவமானவை. 

‘ஆழமான பெருமூச்சு விட்டாலும் மனத்தின் எடை குறையவில்லை’ என்ற வரியைப் படித்ததும் புத்தகத்தை மூடிவைத்துவிட்டு, சில நிமிடங்கள் அந்த வரியைப் பற்றி யோசித்துக்கொண்டிருந்தேன். அந்த வரி என்னை ரொம்பவே பாதித்தது. நாவலின் பல பக்கங்களில் உள்ள ஏய்டனின் மனவோட்டம், புத்தகத்துக்குள்ளிருந்து இரண்டு கண்கள் நம்மை உற்றுப்பார்ப்பதைப் போன்ற உணர்வைத் தந்தன. அப்படியொரு கச்சிதமான பிரதிபலிப்பாக இருந்தது. அயர்லாந்து வாழ்க்கை, பலரும் குறிப்பிடுவதைப் போல செங்கல்பட்டுக்குச் செல்லும் வழியில் பஞ்சத்தைப் பற்றிய சித்தரிப்புகள், வானத்தில் பறக்கும் பறவைகளைப் பார்க்கும்போது பஞ்சத்தில் இறந்துகொண்டிருப்பவர்கள் நினைவுக்கு வரும் காட்சி ஆகியன குறிப்பிடத்தக்கன. அதேபோல் நாவலின் கடைசி அத்தியாயமும் என்னை வெகுவாகக் கவர்ந்தது. குறிப்பாக டாக்டர். சிம்ஸன் பாத்திரம். ஒருவேளை வெள்ளையானையின் அடுத்த பாகத்தை ஜெயமோகன் எழுதுவதாக இருந்தால் சிம்ஸன் பாத்திரத்திலிருந்து தொடங்கலாம் என்பது என் கருத்து.

ஆனால் நாவலின் தொடக்கப்பகுதியில் ஈர்க்கும் வருணனைகளும் விவரிப்புகளும் போகப்போக வாசிப்புச் சுமையாக மாறுகின்றன. ஒருகட்டத்தில் அலுப்புமேலிட, தேவைக்கு மேலான வர்ணனைகள், விவரிப்புகளைத் தவிர்த்துவிட்டு, கதையின் அடுத்த கண்ணி எங்கேயிருக்கிறது என்று தேடிப் பிடித்துப் படிக்கத்தொடங்கினேன். ஒரு கறாரான எடிட்டிங்கை மேற்கொண்டால் இந்த நாவலில் 100 முதல் 150 பக்கங்கள் வரை நீக்கலாம். ஆனால் எனக்கு புரியாத புதிராக இருந்தது நாவலில் காணப்படும் தலித் பாத்திரச் சித்தரிப்புகள். 

தலித் வரலாற்று நாவல் என்று சொல்லப்படுகின்ற, 408 பக்கங்கள் கொண்ட ‘வெள்ளையானை’யில் பெயரும் அடையாளமும் கொண்டு, பேசக்கூடிய தலித்துகள் மூன்றே மூன்றுபேர்கள்தான், காத்தவராயன், ஜோசப் மற்றும் கருப்பன். நாவலில் நூற்றுக்கணக்கான தலித்துகள் இருக்கிறார்கள். ஆனால் அத்தனையும் உடல்கள். பஞ்சத்தில் இறந்துகொண்டிருக்கிற உடல்கள் மட்டுமல்ல, ஐஸ் ஹவுஸில் பணிபுரிகிறவர்களும் உடல்கள்தான். எந்த உரையாடலும் உணர்ச்சிகளும் வாழ்க்கையின் நுட்பமான தருணங்களுமற்று உடம்பில் கொஞ்சம் சதையோடும் கண்களில் கொஞ்சம் ஆன்மாவுடனும் ஜெயமோகன் எழுத்துகளில் பதியப்படுவதற்காக ‘தொர தொர’ என்று இறைஞ்சிக்கொண்டிருப்பவர்கள். மூன்றே மூன்று தலித் பாத்திரங்களும்கூட, ஏய்டன், மரிஸா பாத்திரங்களுடன் ஒப்பிடும்போது எந்தவித பன்முகத் தன்மையும் அற்று, ஒரே அச்சில் வார்க்கப்பட்ட தட்டையான பாத்திரங்களாக இருக்கிறார்கள். பண்ணையார்களை நோக்கி எம்.ஜி.ஆர். பேசும் வசனங்களையொத்த மொழிகளைப் பேசுகிறார்களே தவிர வலியின் நுட்பமோ வாழ்வின் சிக்கலோ இழையோடும் மொழி இல்லை. அழகியபெரியவன், இமையம், பாமா போன்ற தலித் எழுத்தாளர்களின் படைப்புகளைப் படித்தவர்களுக்குத் தெரியும் இந்தப் பாத்திரங்களில் விடுபட்டிருக்கும் தலித்தியல்புகள்கள். மேலும் ஜெயமோகனின் ‘ஏழாம் உலகம்’ நாவலில் மாற்றுத்திறனாளி பிச்சைக்காரர்களுக்குள் நடைபெறும் உரையாடல்கள், வாழ்க்கையின் வெவ்வேறு தருணங்கள்கூட, பாவம் ஐஸ் ஹவுஸ் தொழிலாளர்களுக்கு வாய்க்கவில்லை. ஐஸ் அவுஸ் போராட்டம் குறித்த சித்தரிப்புகளும் ‘ஊருக்குள் ஒரு புரட்சி‘ சு.சமுத்திரத்தின் எழுத்தின் தரத்தைத் தாண்டவில்லை. நீளநீளமான விவரிப்புகளுக்கும் வர்ணனைகளுக்கும் கொடுக்கப்பட்ட முக்கியத்துவம், ஏய்டனின் பாத்திரத்தை உருவாக்குவதில் காட்டிய சிரத்தையை ஏன் தலித் பாத்திரச் சித்தரிப்புகளில் ஜெயமோகனால் செலுத்தமுடியவில்லை என்பது விளங்கவில்லை.

அதேபோல் மரிஸா பாத்திரத்தின் ‘திடுக்கிடும் திருப்பக்’ காட்சி. பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்திலிருந்து தற்காலம் வரை ஆங்கிலோ இந்தியச் சமூகம் பிற சமூகங்களுடன் பெரிதும் உறவுகளற்றதாய்த்தான் இருக்கிறது. ‘சட்டைக்காரிகள்’ என்று பிற சமூகங்கள் ஏளன மொழியில்தான் ஆங்கிலோ இந்தியர்களை அழைத்துவந்திருக்கிறது. ஆனால் மரிஸா, ‘‘என்றைக்கு நீ என் மக்கள்மீது காலைவைத்து மிதித்து இறங்குவதைக் கண்டேனோ அன்றே நான் உன்னைப் புரிந்துகொண்டேன்’’ என்று ஏய்டனிடம் சீறுவது அசல் சினிமாத்தனம். அவர் எப்படி தலித்துகளோடு தன்னைப் பொருத்தி உணர்கிறார்? அதற்கான அறிகுறிகளும் தர்க்கமும் நாவலில் இல்லவே இல்லை. இதேபோல் ஐஸ் ஹவுஸ் அதிகாரி பார்மரின் குணமாற்றமும் இன்னொரு செயற்கைத்தனம்.

நாவலில் நாயுடுகள். செட்டியார்கள், கோமுட்டிச் செட்டிகள், ரெட்டியார்கள், கொஞ்சம் பார்ப்பனர்கள் ஆகியோர் குறித்தும் அவர்களது ஆதிக்கம் குறித்தும் சித்தரிப்புகள் வருகின்றன. ஆனால் ஏய்டனின் மனவோட்டத்திலும் சரி, பிற பாத்திரங்களின் உரையாடலிலும் சரி இந்துமதச் சட்டகம் குறித்த எந்த உரையாடல்களோ சித்தரிப்புகளோ இல்லை. ஏய்டனுக்கும் பாதர் பிரண்ணனுக்கும் இடையிலான உரையாடல்களில்கூட இல்லை. இருவருமே கிறித்தவர்கள். ஒருவர் கிறிஸ்தவ மதப் போதகர். ஆனால் இந்துமதம் குறித்த எந்த உரையாடல்களும் ஏனில்லை? பெரும் எண்ணிக்கையிலான மக்கள் பஞ்சத்தில் செத்துக்கொண்டிருக்கும்போது துறைமுகங்களின் வழியாக பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு உணவுப்பொருட்கள் போய்க்கொண்டிருந்த அதே வேளையில்தான், தேவதாசி நடனங்களை ரசித்துக்கொண்டு கோயில்களில் ஆறுகாலப் பூஜைகளும் நடந்துகொண்டிருந்தன என்பதும் கவனம் கொள்ளவேண்டிய ஒன்று. ஆனால் அயோத்திதாசர் இந்து மதத்திலிருந்து பௌத்தத்துக்கு மாறுவதற்கான பகுதி சிறப்பாக எழுதப்பட்டுள்ளது. 

வாசகர்களிடம் நீதியுணர்ச்சியை ஏற்படுத்துவதற்காகத்தான் இந்த நாவல் எழுதப்பட்டதாக ஜெயமோகன் குறிப்பிடுகிறார். ஆனால் எனக்கென்னவோ இந்த நாவல் வாசகர்களிடம் பரிவுணர்ச்சியைத்தான் ஏற்படுத்தியிருப்பதாகத் தோன்றுகிறது. பரிவுணர்ச்சிக்கும் நீதியுணர்ச்சிக்கும் இடையில் வேறுபாடுகள் உள்ளன. பரிவுணர்ச்சி என்பது தன்னைப் பற்றிய உயர்வான மனநிலையிலிருந்து மேலிருந்து கீழ் பார்க்கும் உணர்ச்சி. ஆனால் நீதியுணர்ச்சியோ குற்றவுணர்ச்சியோடு தன்னிலை குறித்த விசாரணையை மேற்கொள்வதால் எழும் உணர்ச்சி. பஞ்சத்தால் பாவம் இத்தனை மக்கள் செத்தார்களே என்கிற பரிவுணர்ச்சியைத்தான் ‘வெள்ளை யானை’ குறித்து வரும் பெரும்பாலான விமர்சனங்களில் காணமுடிகிறது. மாறாக அதற்குத் தங்கள் சாதி இருப்பும் ஒரு காரணம் என்கிற குற்றவுணர்ச்சியை அவற்றில் காணமுடிவதில்லை. இருந்தபோதிலும் குறைந்தபட்சம் அத்தகைய பரிவுணர்ச்சியும்கூட ஏதோ ஒருவகையில் வரலாற்றுத்தேவையாக இருக்கிறது என்கிற அடிப்படையில் ‘வெள்ளை யானை’யைச் சாதகமாக மதிப்பிடலாம்.

முகாம்களிலுள்ள ஈழத் தமிழர்களுக்குத் தமிழக அரசின் புதிய அறிவிப்புகள் : போதுமா இவை ? அ.மார்க்ஸ்

                                                        
ஈழத் தமிழர்கள்  பிரச்சினையில் ஜெயலலிதாவிடம்  நிறையவே மாற்றங்களைக் காணமுடிகிறது. “நாட்டில் சட்டம் ஒழுங்கு கெட்டுப் போனதற்கும், கொலை கொள்ளைகள் பெருகியதற்கும் ஈழத்தமிழர்களே காரணம். அவர்கள் உடனடியாகத் திருப்பி அனுப்பப்பட வேண்டும்” என ஒரு காலத்தில் சட்ட மன்றத்தில் முழங்கிய ஜெயா இன்று அகதி முகாம்களிலுள்ள ஈழத்தவர்களின் நலன் நோக்கில் பல புதிய அறிவிப்புகளைச் செய்துள்ளார். ஆளுனர் உரையிலேயே தமிழக மக்களுக்குச் செயல்படுத்தப்படும் அனைத்து நலத்திட்டங்களும் முகாம்களிலுள்ள இலங்கைத் தமிழர்களுக்கும் நீட்டிக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. முதற் கட்டமாக சமூக நலத் துறையால் செயல்படுத்தப்படும் முதியோர், ஆதரவற்ற பெண்கள், ஆதரவற்ற விதவைகள்,  மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கான ஓய்வூதியத் திட்டங்கள் முகாம்களிலுள்ள தமிழர்களுக்கு விரிவுபடுத்தப் படுவதற்கான உத்தரவு ஆகஸ்ட் முதல் தேதியன்று இடப்பட்டது. இதன்படி முகாம்களிலுள்ள 5544 ஈழத்தமிழர்கள் மாதந்தோறும் 1000 இந்திய ரூபாய்களை ஓய்வூதியமாகப் பெறுவார்கள்.
ஆகஸ்ட் 4 அன்று வெளியிடப்பட்ட வரவு செலவு அறிக்கையில் மேலும் பல அறிவிப்புகள் செய்யப்பட்டுள்ளன. முகாம்களிலுள்ள வீடுகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு 25 கோடி ரூபாய்கள் நிதி ஒதுக்கீடு, 10,000 ரூபாய்கள் சுழல் நிதியுடன் கூடிய 416 சுய உதவிக் குழுக்களை உருவாக்குதல், முகாம்களில் உள்ளவர்களுக்கான மாதாந்திர உதவித் தொகையை இரு மடங்குக்கும் மேலாக அதிகரித்தல் ஆகியவை இதில் அடங்கும்.     குடும்பத் தலைவருக்கு மாததோறும் 400 ரூபாயாக இருந்த உதவித் தொகை இனி 1000 ரூபாயாக்கப்படும். வயதுவந்த இதர உறுப்பினர்களுக்கான தொகை 288லிருந்து 750 ஆகவும் பன்னிரண்டு வயதிற்குட்பட்டோர்களுக்கான தொகை 400 ஆகவும் உயர்த்தப்பட்டுள்ளது. மானிய விலையில் மாதந்தோறும் அளிக்கப்பட்டு வந்த 12 கிலொ அரிசி (சிறுவர்களுக்கு 6 கிலொ), 2 கிலொ சர்க்கரை, 6 லிட்டர் கெரசின் முதலியன மாற்றமின்றித் தொடரும்.
ஜெயா அரசின் இத்தகைய அறிவிப்புகளின் பின்னணி என்ன, எத்தகைய  நோக்கங்களுக்காக ஜெயா காய்களை நகர்த்துகிறார் என்கிற கேள்விகள் அரசியல் ரீதியில் முக்கியமானவைதான் என்றபோதிலும் 1994 தொடங்கி ஈழ அகதிகளின் பிரச்சினைகளைக் கூர்மையாகக் கவனித்து வருகிறவன் என்கிற வகையில் இந்த அறிவிப்புகள் வரவேற்கத் தக்கவை என்பதில் அய்யமில்லை. பெரிய அளவில் முகாம்களில் வாழும் தமிழர்களுக்கு ஆறுதல் அளிக்கும் நடவடிக்கைகள் இவை என்ற போதிலும் இத்தகைய நடவடிக்கைகளால் மட்டுமே அவர்களின் பிரச்சினைகள் தீர்ந்துவிடப் போவதுமில்லை. அடிப்படையான சில அணுகல் முறைகளிலேயே மத்திய மாநில அரசுகள் சில மாற்றங்களச் செய்தாக வேண்டும். அவை:
      1.அகதிகள் பிரச்சினயில்  இந்திய அரசு கொள்கை அளவில்                  மேற்கொள்ள வேண்டிய மாற்றங்கள்,
      2.இருபது அண்டுகளுக்கும் மேலாக முகாம்களிலேயே வாழ நேர்ந்துள்ளவர்கள் எதிர்கொள்ளும் புதிய பிரச்சினைகளைத் தீர்க்கும் நோக்கில் இந்தியக் குடிமக்களுடன் சம உரிமை அளிக்கும் முகமாகச் செய்ய வேண்டிய மாற்றங்கள்,
      3.முகாம்களில் வாழ்பவர்கள் குறைந்தபட்ச அடிப்படை வசதிகளைப் பெறும் நோக்கில் செய்யப்பட வேண்டிய மாற்றங்கள்.
இவற்றைச்  சற்று விரிவாகப் பார்ப்போம் :
1994ல் புலம்  பெயர்ந்த தமிழர்கள் மாநாடொன்றைத்  திருச்சியில் நடத்தினோம். உலக அளவில் புலம் பெயர்ந்துள்ள ஈழத் தமிழர்களின் பிரச்சினைகளைப் பல கோணங்களில் ஆய்வு செய்த அம்மாநாடு தமிழகத்தில் வாழும் ஈழத்தமிழர்களின் பிரச்சினைகளையும் சிறப்பாகக் கவனத்தில் கொண்டது. அம்மாநாட்டு மலரில் நானெழுதியிருந்த கட்டுரையில் இரண்டு அம்சங்களை வலியுறுத்தியிருந்தேன். அவை இன்னும் தீர்க்கப்படாமலேயே உள்ளன. அவை: 1) அகதிகள் தொடர்பான ஐ.நா அவையின் 1951ம் ஆண்டு உடன்பாடு மற்றும் 1967ம் ஆண்டு விருப்ப ஒப்பந்தம் ஆகிய இரண்டிலும் இந்திய அரசு இதுவரை கையெழுத்திடவில்லை. இதன் விளைவாக அகதிகளை விதி முறைகளின்படி நடத்தாவிட்டாலோ, கட்டாயமாக வெளியேற்றினாலோ யாரும் கேட்க முடியாது. நீதிமன்றத்தையும் அணுக முடியாது. ராஜீவ் காந்தி கொலையை ஒட்டி சுமார் ஒரு இலட்சம் ஈழ அகதிகள் கட்டாயமாக வெளியேற்றப்பட்ட போது இதே காரணத்தைச் சொல்லி ஐ.நா அகதிகள் உயர் ஆணையம் இதில் தலையிட மறுத்தது குறிப்பிடத்தக்கது. 2) அகதிகள் மற்றும் அகதிகள் மறுவாழ்வு தொடர்பாக தேசியக் கொள்கை ஒன்றை இந்திய அரசு இதுவரை உருவாக்கவில்லைஇதன் விளைவாக வெவ்வேறு நாடுகளிலிருந்து வருகிற அகதிகளும் வெவ்வேறு மாநிலங்களில் புகல் அளிக்கப்படும்போது அவர்களுக்கு அளிக்கப்படும் வசதிகள் ஏற்றத்தாழ்வுடன் அமைகின்றன. காஷ்மீர் மற்றும் திபேத்திய அகதிகளைக் காட்டிலும் அலட்சியமாகவும் குறைவான வசதிகளுடனும் ஈழத் தமிழர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருப்பதற்கான பின்னணி இதுவே. பல்வேறு துறைகளில் புதிய தேசியக் கொள்கைகளை உருவாக்கிக் கொண்டிருக்கும் இந்திய அரசு உடனடியாக அகதிகள் மறுவாழ்வுக்கான தேசியக் கொள்கை ஒன்றை, இன்று அகதிகள் தொடர்பாக உலக அளவில் உருவாகியுள்ள மனிதாயக் கண்ணோட்டங்களை உள்ளடக்கி உருவாக்க வேண்டும். அத்தோடு அகதிகள் தொடர்பான ஐ.நா அவையின் பிரகடனம், விருப்ப ஒப்பந்தம் ஆகியவற்றிலும் உடனடியாகக் கையெழுத்திட வேண்டும்.
தமிழகத்திலுள்ள 26 மாவட்டங்களில் உள்ள 113 முகாம்களில் ஈழ அகதிகள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். சென்ற 2006ம் ஆண்டில் நான்காம் முறையாக ஈழத்திலிருந்து பெரிய அளவில் அகதிகள் வரத் தொடங்கிய சூழலில் 19 மனித உரிமை ஆர்வலர்கள் அடங்கிய குழு ஒன்றை அமைத்து வெவ்வேறு மாவட்டங்களிலுள்ள 11 முகாம்களைத் தேர்வு செய்து பார்வையிட்டு அறிக்கை ஒன்றை அளித்தோம். முகாம்களில் நிலைமைகள் மிக மோசமாக இருந்தன. தங்குவதற்கு எந்த வகையிலும் தகுதியற்ற வீடுகள், குடிநீர், கழிப்பறை முதலிய மிக அடிப்படை வசதிகளும் இல்லாமை, கொடுக்கப்படும் உதவித் தொகை கால் வயிற்றையும் கூட நிரப்ப இயலாத நிலை, கடுமையான போலீஸ் கண்காணிப்பு, வயிற்றுப் பிழைப்புக்காக வெளியே வேலைக்குச் செல்ல வேண்டியவர்கள் மீது மேற்கொள்ளப்படும் கடும் சுரண்டல், மாலை ஆறு மணிக்குள் முகாம்களுக்குத் திரும்ப வேண்டிய கட்டாயம், வேறு முகாம்களிலுள்ள உறவினர்களைச் சந்திக்க வேண்டுமானால் அநுமதிக்காகப் பல நாட்கள் காத்திருக்க வேண்டிய கட்டாயம், குளிப்பதற்கும், பிற தேவைகளுக்காகவும் திறந்த வெளிகளைப் பயன்படுத்த நேர்பவர்கள் எதிர்கொள்ளும் அவலங்கள் எல்லாவற்றையும் அறிக்கையில் பட்டியலிட்டிருந்தோம்.
2008ல் மீண்டும்  நான், புதுவை மக்கள் உரிமை  கூட்டமைப்புத் தலைவர்  கோ. சுகுமாரன், பாரீசிலிருக்கும் வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கவிஞர் சுகன் மற்றும் சில மனித உரிமை அமைப்பினர் எல்லோரும் கீழ்ப்புதுப்பட்டு, குள்ளஞ்சாவடி, விருதாசலம் ஆகிய ஊர்களிலுள்ள முகாம்களைப் பார்வையிட்டோம். குள்ளஞ்சாவடி முகாமிலிருந்த குழந்தைகள் காப்பகம் இருந்த அவலத்தையும் அங்கிருந்த குழந்தைகள் பசியோடிருந்த நிலையையும் பார்த்த சுகன் அப்படியே தரையிலமர்ந்து அழத் தொடங்கிவிட்டார். முதன்முறை நாங்கள் சென்றபோது ‘ஆஃபர்’ என்கிற தொண்டு நிறுவனம் சத்து மாவு, சிறு தீனிகள் முதலியவற்றை குழந்தைகளுக்கு வழங்கிவந்தது. இன்று அது நிறுத்தப் பட்டுள்ளது. சென்ற வாரம் கீழ்ப்புதுப்பட்டு முகாமிற்கு நானும் சுகுமாரனும் சென்றிருந்தோம். இன்றும் அதே நிலைதான். இது குறித்து ஆஃபர் அமைப்பின் தலைவர் சதிரகாசனைத் தொடர்பு கொண்டு கேட்டபோது அதற்கான வெளிநாட்டு உதவி நின்றுபோனதால் அதைத் தொடர முடியவில்லை என்றார்.
கீழ்புதுப்பட்டு முகாமில் உள்ளவர்கள் 1990ல் வந்தவர்கள். பெரும்பாலும் மன்னார் பகுதியைச் சேர்ந்தவர்கள். இவர்களில் பலருக்கு இங்கு வந்தபின் திருமணமாகிக் குழந்தைகள் பிறந்துள்ளன. இந்தக் குழந்தைகளுக்கு இந்திய நாட்டுப் பிறப்புச் சான்றிதழ் மட்டுமே உள்ளது. இதை வைத்துக்கொண்டு அவர்கள் பாஸ்போர்ட் வாங்க முடியாது.  இங்கே பிள்ளைகளைப் பள்ளிகளில் சேர்க்க வேண்டுமானால் சாதிச் சான்றிதழ் வேண்டும். அகதிகளுக்கான அட்டை வைத்திருப்போர் சாதிச் சான்றிதழ் தர வேண்டியதில்லை என்ற போதிலும் பல பள்ளிகளில் அது வற்புறுத்தப்படுகிறது. தவிரவும் உயர் கல்வியில் அவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 2 சத இட ஒதுக்கீடும் தற்போது  நிறுத்தப்பட்டு விட்டது. எனவே ஈழ அகதி மாணவர்கள் இங்குள்ள வசதிபடைத்த முன்னேறிய பிரிவு மாணவர்களிடம் போட்டியிட்டே இடம் பிடிக்க முடியும். மேற்படிப்புக்குப் போகாமல் வேலைக்குப் போகலாம் என்றால் ஒட்டுனர் உரிமம் முதலானவை இவர்களுக்கு வழங்கப்படாத நிலை இருந்து வந்தது. ஆட்டோ ஓட்டுகிற பல இளைஞர்கள் உரிமம் இல்லாமல் கடும் போலீஸ் தொல்லைக்கு உள்ளாயினர். முகாமிலுள்ள ஆண்களோ, பெண்களோ வெளியே உள்ள அகதிகளையோ, இந்தியக் குடிமக்களையோ திருமணம் செய்து கொண்டால் அப்படித் திருமணம் செய்து கொண்டவர்களுக்கு அகதிச் சான்றிதழ் கொடுப்பதில்லை. எனவே கணவர் அல்லது மனைவியுடன் முகாமில் வசித்தாலும் அகதி உதவிகள் எதையும் அவர்கள் பெறமுடியாது. அதேபோல சுய உதவிக் குழுக்களை முகாம்களில் உள்ளவர்கள் உருவாக்கி நடத்தினால் அவற்றை இங்குள்ள வங்கிகள் அங்கீகரிப்பதில்லை.
இன்னொரு அவலத்தையும் எங்களிடம் அவர்கள் முறையிட்டனர். தமிழகத்தில் ஒவ்வொரு சாதிக்கும் தனித்தனிச் சுடுகாடுகள் உண்டு என்பதை அறிந்திருக்கலாம். முகாம்களிலுள்ளவர்கள் யாரேனும் இறந்து போனால் இங்கே உள்ள சுடுகாடுகளில் புதைக்கவோ, எரிக்கவோ அனுமதிக்காத நிலையும் சில இடங்களில் இருந்தது. முகாம்கள் அனைத்தும் வருவாய்த்துறை மற்றும் உளவுத்துறையின் கட்டுப்பாட்டில் இயங்கும் அரைச் சிறைச்சாலைகளாகவே இன்று வரை உள்ளன. அருகிலுள்ள முனிசிபாலிடி அல்லது நகரசபை வசதிகள், குடிநீர் உட்பட எதுவும் இவர்களுக்குக் கிடைப்பதில்லை.
மனித உரிமை  அமைப்புகள் கொடுத்த அழுத்தங்கள், ஆஃபர் போன்ற அமைப்புகளின் வேண்டுகோள்கள் ஆகியவற்றின் விளைவாக இன்று இந்நிலையில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. சென்ற அரசு வெளியிட்ட ஒரு ஆணையின் மூலம் சில நூறு பேர்களுக்கு ஓட்டுனர் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளன. இலங்கைத் தூதரகக் கிளை ஒவ்வொறு மாவட்டமாகச் சென்று முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ்கள் அளித்தது. ஆனால் அது முழுமை பெறுவதற்குமுன் பாதியிலேயே தற்போது நிறுத்தப்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலுக்குப் பின்  போலீஸ் கெடுபிடிகளும் சற்றுக் குறைந்துள்ளது.
இப்படியான சில தற்காலிகத் தீர்வுகளாகவன்றி  முகாம்களிலுள்ள ஈழத்தமிழர்களின்  இத்தகைய பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு கிடைக்க  வேண்டுமானால் முகாம்களிலும் வெளியிலும் உள்ள ஈழத் தமிழர்களுக்கு உடனடியாக இரட்டைக் குடியுரிமை அளிக்கப்பட வேன்டும். அப்போது இதர இந்தியக் குடிமக்களுக்கான எல்லா உரிமைகளும், எல்லாச் சலுகைகளும் இவ்வாறான சிறப்பு ஆணைகளின்றி தானாகவே அவர்களுக்கும் கிடைத்துவிடும். இந்திய அரசு வெளி நாட்டிலுள்ள வசதிமிக்க இந்தியர்களுக்கெல்லாம் இரட்டைக் குடியுரிமை வழங்கும்போது ஏன் ஈழத் தமிழர்களுக்கு வழங்கக் கூடாது? ஒரு வேளை நாட்டில் நிலைமைகள் உண்மையிலேயே சீராகிவிட்டதாகக் கருதும் பட்சத்தில் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் இலங்கைக் குடியுரிமையைப் பயன்படுத்தி நாடு திரும்பலாம். முன்னாள் முதல்வர் கருணாநிதி இரண்டாண்டுகளுக்கு முன் இரட்டைக் குடியுரிமைக் கோரிக்கையை முன் வைத்தது குறிப்பிடத் தக்கது. ஏனோ அவர் இந்தக் கருத்தை மீண்டும் வலியுறுத்தவில்லை.
முகாம்களில் உள்ளவர்களுக்கும் இங்குள்ளவர்களுக்கும் பிரச்சினை நேரும்போதெல்லாம் போலீசாகட்டும் வேறு யாராக  இருக்கட்டும் அகதித் தமிழர்களைச் சமமாக நடத்துவதில்லை. இரண்டு வாரங்களுக்கு முன் கீழ்ப்புதுப்பட்டிலுள்ள புது முகாமிலிருந்து மூன்று வயதுக் குழந்தை ஒன்று கடத்திச் செல்லப்பட்டுப் பாலியல் வன்முறைக்கு உள்ளாக்கப்பட்ட போது குற்றவாளி தெரிந்திருந்தும் உள்ளூர் போலீஸ் உடனடி நடவடிக்கை எடுக்கவில்லை. முகாமிலிருந்தவர்கள் சாலை மறியல் செய்த பின்பும் நடவடிக்கையில்லை. சுகுமாரன் போன்றோர் தலையிட்ட பின்னரே நடவடிக்கை எடுக்கப்பட்டது. “என்ன இருந்தாலும் நாங்க அகதிங்கதானே” என்றார் ஒரு மூதாட்டி. இரட்டைக் குடியுரிமை மேற்குறிப்பிட்ட பல பிரச்சினைகளுக்கும் தீர்வாக அமையும்.
‘சிறப்பு  முகாம்கள்’ என்ற பெயரில்  தமிழக அரசு இரண்டு நிழற்  சிறைகளை நடத்தி வருகிறது. இயக்கத்தவர்கள் எனச் சந்தேகப்படுபவர்கள் இந்தச் சிறைகளில் அடைக்கப்பட்டனர். ஒரு முறை இதில் அடைக்கப்பட்டால் பின் வெளியே வருவது அரிது. இன்னும் இந்த இரண்டு சிறைகளில் ஒன்றில் சிலர் அடைக்கப்பட்டுள்ளனர். போர் முடிந்து பாதுகாப்புப் பிரச்சினை ஒன்றும் இல்லாத நிலையில் சிறப்பு முகாம்களையும் தமிழக அரசு உடனடியாக ரத்து செய்து அங்குள்ளவர்களைச் சாதாரண முகாம்களுக்கு அனுப்ப வேண்டும்.
2010 ஏப்ரல் மாதக் கணக்கீட்டின்படி தமிழகத்திலுள்ள 113 முகாம்களிலும் 19,916 குடும்பங்களச் சேர்ந்த 73,251 பேர்கள் இருந்தனர். முகாம்களுக்கு வெளியே 11,478 குடும்பங்களைச் சேர்ந்த 32,242 பேர்கள் இருந்தனர். இவர்களில் சுமார் 1000க்கும் குறைவானவர்கள் போருக்குப்பின் நாடு திரும்பியுள்ளதாகவும்  2800 பேர் நாடு திரும்ப விருப்பம் தெரிவித்துள்ளதாகவும் ஐ.நா அகதிகள் ஆணையத்தின் இலங்கைப் பிரதிநிதி மிஷேல் ஸ்வாக் தெரிவித்துள்ளார். இங்குள்ளவர்களில் முகாம்களில் உள்ளவர்களுக்கு மட்டுமே மாதாந்திர உதவித் தொகைகள் தரப்படுகின்றன என்பது நினைவிற்குரியது. நாங்கள் முதன்முறை (2006) முகாம்களுக்குச் சென்றபோது குடும்பத் தலைவர்களுக்கு மாதந்தோறும் வெறும் 200 ரூபாய்களும், இதர வயது வந்தோருக்கு 144 ரூபாய்களும் மட்டுமே வழங்கப்பட்டது. கொடுக்கப்பட்ட அரிசி முதலான பொருட்களும் தரக் குறைவாகவும் அளவு குறைவாகவும் இருந்தன. மிக விரிவான விளக்கங்களுடனும், பரிந்துரைகளுடனும் எங்கள் அறிக்கை இருந்தது. வேறு சிலருங்கூட இந்த உதவித் தொகையை அதிகரிக்க வேண்டுமெனக் கோரியிருந்தனர். புதிதாகப் பதவி ஏற்றிருந்த கருணாநிதி அரசு இந்த உதவித் தொகைகளை இரட்டிப்பாக்கியது. அதை வரவேற்ற நாங்கள் எனினும் இது யானைப் பசிக்கு சோளப் பொரி போட்டதுபோலுள்ளது என்றோம். குடும்பத் தலைவர், மற்றவர்  என்று வேறுபாடில்லாமல் ஒவ்வொரு உறுப்பினருக்கும் குறைந்தபட்சம் 1050 ரூபாய்களாவது கொடுக்க வேண்டுமெனக் கோரினோம். இது 2006ல். இப்போதைய விலைவாசிக்கு குறைந்தபட்சம் 2000 ரூபாய்களாவது ஒவ்வொருவருக்கும் அளிக்க வேண்டும்.  குழு ஒன்றை அமைத்து எல்லா முகாம்களுக்கும் சென்று பார்த்து வீடு, கழிப்பிடங்கள், குடிநீர், மின்சாரம் முதலான எல்லா வசதிகளும் குறை நீக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும்.
இவை தவிர முகாம்களில் பிறந்த குழந்தைகளுக்குப் பிறப்புச் சான்றிதழ் வழங்குவது, கடவுச்சீட்டு வழங்குவது  முதலான கடமைகளைச் செய்ய  இலங்கை அரசை வற்புறுத்தும்  பணியை இலங்கையிலுள்ள மனித உரிமை அமைப்புகளும், தமிழர் கட்சிகளும் மேற்கொள்ள வேண்டும்.
புலம் பெயர்ந்து  வந்து இந்தியா போன்ற  நாடுகளில் அகதிகளாக வதிய நேர்ந்த யாருக்கும் அவர்களின்  உச்சபட்சக் கோரிக்கை நாடு திரும்புவதாகத்தான் இருக்கும். நாங்கள் சந்தித்த, சந்திக்கிற ஒவ்வொரு ஈழத் தமிழ் அகதியும் அதைத்தான் சொன்னார்கள், சொல்கிறார்கள். அத்தகைய நிலை ஏற்படும்வரை முகாம்களிலுள்ள ஈழ அகதிகள் குறைந்தபட்ச நிம்மதியுடன் வாழ இந்த அடிப்படைக் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும்.

                                                                                                                                                             

  

முருகன், சாந்தன், பேரறிவாளன்: மரண தண்டனை எதிர்ப்பாளர்களுக்கு மாபெரும் வெற்றி அ.மார்க்ஸ்


ராஜீவ்  காந்தி கொலை வழக்கில் மரண  தண்டனை விதிக்கப்பட்டிருந்த  முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரது கருணை மனுக்களும் நிராகரிக்கப்பட்டு, அவர்களத் தூக்கில் தொங்கவிட நாளும் (செப்டெம்பர் 9) நிர்ணயிக்கப் பட்ட சூழலில் தமிழகத்தில் இதற்கெதிராக வெடித்த போராட்டம் இன்று மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது. உயர் நீதிமன்றம் அவர்களைத் தூக்கிலிடுவதற்கு இடைக்காலத் தடை விதித்துள்ளது. அவர்களது மனுக்கள் விசாரணைக்கு ஏற்றுக்கொள்ளப்பட்டு, மத்திய, மாநில அரசுகளுக்குப் பதிலளிக்க இரண்டு மாத கால அவகாசம் தரப்பட்டுள்ளது. இன்னொரு பக்கம் சுமார் ஒரு மாத காலமாக, பிரச்சினை பற்றி எரிந்து கொண்டிருந்த போதெல்லாம் மௌனம் காத்து வந்த முதல்வர் ஜெயலலிதா, கருணை மனுக்களை மறு பரிசீலனை செய்து மரண தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க குடியரசுத் தலைவரை வற்புறுத்தும் தீர்மானம் ஒன்றை சகல கட்சி ஆதரவுகளுடன் சட்டமன்றத்தில் நிறைவேற்றியுள்ளார்.
இது ஒரு  தற்காலிகமான வெற்றிதான் என்றபோதிலும் வழக்கின் முடிவு மூவரின் மரண தண்டனையையும் ஆயுள் தண்டனையாகக் குறைப்பதாகவே அமையும் என்றே எதிர்பார்க்கப் படுகிறது. இந்த வெற்றிக்குப் பின்னணியாகக் கடந்த ஒரு மாத காலமாகத் தமிழகத்தில் ஏற்பட்டுள்ள எழுச்சி அமைகிறது.
மத்திய  அரசைப் பொருத்தமட்டில் அது  இந்த மூவரைத் தவிர, பாராளுமன்றத் தாக்குதல் வழக்கில் மரண  தண்டனை விதிக்கப்பட்ட அப்சல் குருவின் கருணை மனுவையும்  நிராகரிக்குமாறு குடியரசுத் தலைவருக்குப் பரிந்துரைத்தது. எனினும் முருகன் உள்ளிட்ட மூவரின் கருணை மனுக்கள் மட்டுமே உடனடியாக நிராகரிக்கப்பட்டன. இப்படியான ஒரு முடிவை குடியரசுத் தலைவர் ப்ரதீபா படீல் தன்னிச்சையாக எடுத்திருப்பார் எனச் சொல்ல முடியாது. சோனியாவுக்கு மிகவும் விசுவாசியான ப்ரதீபா, முந்தைய சில குடியரசுத் தலைவர்களைப் போல சுயேச்சையாக முடிவெடுக்கக் கூடியவர் அல்ல. ஆக, அப்சலின் கருணை மனுவை நிறுத்தி வைத்து மற்றவர்களின் மனுவை நிராகரித்த முடிவு சோனியா, மன்மோஹன், சிதம்பரம் என்கிற மட்டத்தில் எடுக்கப்பட்டதாகவே கருத இடமுண்டு. அப்சல் குருவின் மீதான வழக்கு முழுமையாக விசாரிக்கப்படவில்லை, தன்னைத் தற்காத்துக் கொள்ள அவருக்கு முழுமையாக வாய்ப்பளிக்கப் படவில்லை என்பது மனித உரிமை அமைப்புகளின் குற்றச்சாட்டு. தவிரவும் தண்டனையை உறுதி செய்த நீதிபதி ‘சமூகத்தின் கூட்டு மனத்தின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்வதற்காக’ இந்தத் தண்டனை வழங்கப்பட்டதாகக் குறிப்பிட்டது இன்றுவரை கடும் விமர்சனத்திற்குள்ளாகி வருகிறது. ஆனால் இந்தக் காரணங்களுக்காக அவரது கருணை மனு நிராகரிப்பு ஒத்தி வைக்கப்படவில்லை. மாறக, “அப்சலைத் தூக்கிலிட்டால் காஷ்மீர் மாநிலமே பற்றி எரியும்” என காஷ்மீர் முதல்வர் ஒமர் அதுல்லா எச்சரித்ததன் விளைவாகவே இன்று அது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அப்படியெல்லாம் ஒன்றும்  நடக்காது என மத்திய அரசு எதிர்பார்த்தது. ஈழ ஆதரவு அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றோடு  எதிர்ப்பு நடவடிக்கைகள் நின்றுவிடும் எனவும், ஜெயலலிதா எக்காரணம் கொண்டும் மரண தண்டனைக் குறைப்பை ஆதரிக்க மாட்டார் எனவும் மத்திய அரசு உறுதியாக நம்பியது. தவிரவும் இலங்கை அரசுக்கு எதிராகத் தீர்மனங்களை இயற்றியதன் மூலம் ஈழ ஆதரவு அமைப்புகள் மற்றும் தமிழ்த் தேசிய அமைப்புகள் மத்தியில் ஜெயா ஒரு நாயகியாக வலம் வரும் நிலைக்கு இதன் மூலம் ஒரு ‘செக்’ வைக்கவும் அது நினைத்தது.
மத்திய  அரசின் இரு நம்பிக்கைகளிலும் உண்மைகள் இருக்கவே செய்தன. தூக்குத் தண்டனை நிறைவேற்றத்திற்கான எதிர்ப்புகளை தமிழ்த் தேசிய  அமைப்புகள், ஈழ ஆதரவு அமைப்புகள், நக்சல்பாரி அரசியல் சார்ந்த  குழுக்கள் ஆகியனவே முன்னெடுத்தன. முருகன் உள்ளிட்ட மூவரின்  மரண தண்டனையை மட்டுமின்றி, மரண தண்டனையையே ஒழிக்க வேண்டுமெனத் தொடர்ந்து போராடி வரும் எங்களைப் போன்ற மனித உரிமை அமைப்புகளும் களம் இறங்கின. மனித உரிமை அமைப்புகளைப் பொருத்த மட்டில் அவைகளுக்குப் பின்னால் பெரிய ஆள் பலம் இல்லாத போதும் கருத்தியல் மட்டத்தில் அவற்றிற்கு ஓரளவு செல்வாக்கு உண்டு. இவை தவிர தேசிய அளவிலான அரசியல் கட்சிகள் ஒன்றும் களம் இறங்கவில்லை. மாநில அளவுக் கட்சிகளில் எதிர்பார்த்தது போல பா.ம.க, ம.தி.மு.க, விடுதலைச் சிறுத்தைகள் ஆகியன மட்டுமே தீவிர எதிர்ப்புகளில் இறங்கின.
அவசர கதியில்  தூக்கு நிறைவேற்றத்தை நோக்கி நிகழ்வுகள் நகர்ந்தபோது போராட்டம் தீவிரம் அடைந்தது. எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய அளவில் ஊடக ஆதரவு இருந்தது. காட்சி மற்றும் அச்சு ஊடகங்கள் வலுமிக்க சக்தியாக இன்று தமிழகத்தில் உருவாகியுள்ளது குறிப்பிடத் தக்கது. தமிழகமெங்கும் எதிர்ப்பு அலைகள் பல்வேறு மட்டங்களில் எழுந்தன. மூன்று பெண் வழக்குரைஞர்களின் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டம் எதிர்ப்பியக்கத்திற்கு இன்னொரு பரிமாணத்தைச் சேர்த்தது. மாணவர்கள் ஆங்காங்கு வேலை நிறுத்தங்களில் ஈடுபட்டனர். சேலம், கோவை போன்ற இடங்களில் சட்டக் கல்லூரி மாணவர்கள் ரயில் மறியல் போராட்டங்களில் ஈடுபட்டனர். வழக்கம்போல வழக்குரைஞர்களின் ஆதரவும் பெரிய அளவில் இருந்தது. இந்நிலையில் காஞ்சீபுரத்தைச் சேர்ந்த செங்கொடி தீக்குளித்த போது போராட்டம் இன்னொரு திருப்பு முனையை எட்டியது. இரண்டு ஆண்டுகளுக்கு முன் முத்துக்குமாரின் தீக்குளிப்பை ஒட்டி உருவானது போன்ற சூழல் மீண்டும் உருவாகக் கூடிய நிலை ஏற்பட்டது. எனவே காஷ்மீரே பற்றி எரியும் என்று சொன்ன அளவிற்கு இங்கு நிலைமை உருவாகாவிட்டாலும், எதிர்பார்த்ததைவிட மிகப் பெரிய எதிர்ப்புகள் உருவாகவே செய்தன. 
ஜெயாவைப்  பொருத்த மட்டில் அவர் இயல்பில் மரண தண்டனைக்கு ஆதரவானவர். குற்றம், தண்டனை, அரசதிகாரம் முதலான அம்சங்களில் ரொம்பவும் பழமைக் (conservative) கருத்துக்களை உடையவர். நளினியின் மரண தண்டனைக் குறைப்பிற்கே எதிர்ப்புக் காட்டியவர். “உங்கள் கணவருடைய கொலை என்கிற ரீதியில் பிரச்சினையை அணுகக் கூடாது. ஒரு தேசத் தலைவரைக் கொன்றவர்களுக்கு மன்னிப்புக் காட்டக் கூடாது” என சோனியாவிடமே சீறியவர். தண்டனைக் குறைப்பிற்கு  நடவடிக்கை எடுக்க வேண்டுமென்ற கோரிக்கை அவரை நோக்கித் தமிழ் அமைப்புகளால் வைக்கப்பட்ட போது இறுக்கமான மௌனமே பதிலாக அமைந்தது. சட்ட மன்றத்தில் இப்பிரச்சினையை டாக்டர் கிருஷ்னணசாமி எழுப்ப முனைந்தபோது அனுமதிக்கப்படவில்லை. அவர் வெளிநடப்புச் செய்தார். இது தொடர்பாக நெடுமாறன் முதலானோர் ஜெயாவைச் சந்திக்க முயன்றபோது இன்றுவரை அவர் அதற்கு இடம் கொடுக்கவில்லை.
இந்நிலையில்தான்  தண்டனைக் குறைப்பிற்கு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனச்  சொல்லி கருணநிதி, காயை ஜெயா பக்கம் நகர்த்தினார். வேறு வழியில்லாமல் ஜெயா பேச வேண்டியதாயிற்று. தண்டனைக் குறைப்பிற்கு மாநில அரசுக்கு அதிகாரம் கிடையாது எனச் சென்ற 29ந் தேதியன்று அவர் கைவிரித்தபோது தமிழ் தேசிய இயக்கங்கள் பெரிய ஏமாற்றத்திற்கு உள்ளாயினர். அப்போதுகூட அவர் தண்டனைக் குறைப்பில் தனக்கு உடன்பாடு உண்டு, அதிகாரந்தான் இல்லை என ஒப்புக்காகக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. இறுதி அதிகாரம் மத்திய அரசின் கையில்தான் உள்ளது என்றபோதிலும் அதற்கான அழுத்தத்தை மாநில அரசு கொடுக்க முடியும். கருணை மனு நிராகரிக்கப்பட்ட பின்னும் கூட மாநில அரசு முயற்சித்து தூக்கு ரத்தான வரலாறு உண்டு என்கிற கருத்தை அவர் கண்டு கொள்ளவில்லை.
எனினும் அடுத்த நாள் காலை தண்டனைக் குறைப்பு குறித்து அவரே ஒரு தீர்மானத்தைச் சட்டமன்றத்தில் இயற்றினார். இதன் மூலம் அவர் காயை மத்திய அரசை நோக்கி நகர்த்தியுள்ளார். ஈழ மற்றும் தமிழ் தேச ஆதரவு சக்திகளின் மத்தியில் மீண்டும் நாயகி ஆகியுள்ளார். அதே நேரத்தில் மரண தண்டனையே ஒழிக்கப்பட வேண்டும் என்றெல்லாம் கருத்து ஏதும் சொல்லவில்லை. தமிழக மக்களின் உணர்வுகளைக் கணக்கில் கொண்டு கருணை மனுக்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்கிற அளவோடு தீர்மானம் நின்றுள்ளது.
எப்படியோ  மத்திய அரசைப் பொருத்த மட்டில்  அதன் நோக்கம் நிறைவேறவில்லை. தீர்மானம் இயற்றியபோது சட்டமன்றத்துக்குள் அமைதி காத்த காங்கிரஸ் கட்சியினர் வெளியில் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். சட்டமன்றத் தீர்மானம் எங்களைக் கட்டுப் படுத்தாது என மத்திய சட்ட அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறியுள்ளார்.
நீதிமன்றத்தை  அணுகி தண்டனை நிறைவேற்றத்தை  நிறுத்தி வைக்கும் முயற்சிகளும் கூடவே நடைபெற்றன. புகழ்பெற்ற வழக்குரைஞர்கள் ராம் ஜேத்மலானி, காலின் கொன்சால்வ்ஸ், வைகை ஆகியோர் மூவருக்காகவும் ஆஜராயினர். மரண தண்டனை அளிக்கப்பட்டு கிட்டத்தட்ட 22 ஆண்டுகள் ஆகிவிட்டன.  குடியரசுத் தலைவரிடம் கருணை மனு அளிக்கப்பட்டு 11 ஆண்டுகளுக்கும் மேலாகிவிட்டன. இந்த நீண்ட கால தாமதத்தைக் கணக்கில் கொண்டு தூக்கை நிறுத்தி, ஆயுள் தண்டனையாக அதைக் குறைக்க வேண்டும் என்பதே வழக்குறைஞர்களின் வாதம். ஏற்கனவே குறைந்த பட்சம் மூன்று வழக்குகளில் நீண்ட கால தாமதத்தின் அடிப்படையில் மரண தண்டனை குறைக்கப்பட்டுள்ளது. நீதிமன்றம் இவ் வாதத்தை ஏற்று மனுவை அனுமதித்துள்ளது.
எனினும் “குற்றத்தின் தன்மை, சமகாலச்  சமூகத்தில் இத்தகைய தண்டனைக் குறைப்பு ஏற்படுத்தக் கூடிய  பாதிப்பு, மீண்டும் இது போன்ற  குற்றச் செயல்கள் நடைபெறும்  வாய்ப்பு ” ஆகியவற்றைக்  கணக்கில் கொண்டு கால தாமதத்தைப் பொருட்படுத்தாமல் தண்டனையை நிறைவேற்றலாம் என்கிற கருத்தையும் உச்ச நீதிமன்றம் முன்னதாக வெளிப்படுத்தியுள்ளது. எனவே நீதிமன்றம் எப்படியும் தீர்ப்பளிக்கக் கூடிய வாய்ப்பு உள்ளது. ஆனால் இன்று ஏற்பட்டுள்ள மனித உரிமைகள் குறித்த விழிப்புணர்வு, குறிப்பாக இந்தப் பிரச்சினையை ஒட்டி ஏற்பட்டுள்ள எழுச்சி, ராஜீவ் கொலையில் கொலையை நடத்தியவர்களாகக் கருதப்படுபவர்கள் எல்லோரும் ஏதோ ஒரு வகையில் இன்று மரணித்துவிட்ட நிலையில் உடந்தையாய் இருந்தவர்கள் எனக் கருதப் படுபவர்களுக்கு இத்தகைய உச்சபட்ச தண்டனை தேவைதானா என்பது போன்ற கருத்து ஆகியவற்றின் அடிப்படையில் மற்ற காரணங்களைப் புறக்கணித்துவிட்டு கால தாமதத்தைக் கணக்கில் கொண்டு மரண தண்டனை குறைக்கப் படுவதற்கான வாய்ப்பே அதிகமுள்ளது.
அப்படி  நடக்கும் பட்சத்தில் மரண  தண்டனை ஒழிப்பை நோக்கிய  பயணத்தில் இன்னொரு கல்லைக்  கடந்த நிலை ஏற்படும். சட்ட வரிகள் எப்படி அமைந்த போதும் கால வளர்ச்சியினூடாக அதற்கான  விளக்கங்கள் மாறி வருகின்றன. மரண தண்டனை காலங்காலமாக  இருந்து வருகிறது. எனினும் அது இன்றைய வடிவில் சட்டப் புத்தகங்களில் ஏற்றப்பட்டது 18ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் ஆட்சியில்தான். அதன்பின் ‘அரிதிலும் அரிதான’ குற்றங்களில் மட்டுமே மரணதண்டனை என்கிற விளக்கம் உருவானது. பின்னர் கால தாமதத்தைக் கருதி நீதிமன்றம் நினத்தால் தண்டனையக் குறைக்கலாம் என்றானது. இன்று மூவரின் மரண தண்டனையும் குறைக்கப்படும் பட்சத்தில் எந்த வழக்காயினும் காலதாமதம் ஆயின் தண்டனை நிறைவேற்றல் சாத்தியமே இல்லை என்கிற நிலை உருவாயின் அது வரவேற்கத் தக்கதே.
இன்று உருவாகியுள்ள எழுச்சி மற்றும் விழிப்புணர்வு  ஆகியன  மரண தண்டனையை முற்றாக  ஒழிக்கும் நிலையை நோக்கிச் செல்ல வேண்டும். ஆனால்  மூவரின் தண்டனைகளும் குறைக்கப்பட்ட கையோடு மரண தண்டனைக்கு எதிரான போராட்டம் ஓய்ந்து விடக்கூடிய வாய்ப்பே அதிகமுண்டு.

இந்திய அரசை நெருக்கி இறுக்கும் அண்ணா ஹஸாரே அ.மார்க்ஸ்


இந்திய  அளவில் இன்றைய பேச்சு அண்ணா  ஹஸாரேதான். பத்திரிக்கைகளைப் புரட்டினால், தொலைக்காட்சியைத் திறந்தால், நகர வீதிகளில் நடந்தால் எங்கும் ‘அண்ணாஜி’தான். சென்னை வீதிகளில் இளைஞர்கள் மூவண்ணம் தீட்டிய முகங்களுடன் மூலைக்கு மூலை அண்ணாஜியின் போஸ்டர்களைச் சுமந்து நின்று கொண்டிருக்கிறார்கள். கல்லூரிகளில் மணவர்கள் மூவண்ணக் கொடிகளுடன் வேலை நிறுத்தம் செய்கின்றனர். அண்ணாவிடம் சமரசமாகி அவரது உண்ணாவிரதத்தை நிறுத்தாவிட்டால் கீழே குதித்துச் சாவேன் என உயரமான கட்டிடம் ஒன்றில் ஏறிக்கொண்டு ஒரு பையன் மிரட்டி ஊடகங்களில் இடம் பிடிக்கிறான்.
இன்னொரு பக்கம் ‘ட்விட்டர் அப்டேட்கள்’, குறுஞ்செய்திகள் இப்படியாக  அண்ணாவின் போராட்டத்திற்கு  ஆதரவு திரட்டப்படுகிறது. நகர்களெங்கும் தொங்குகிற ஆயிரக்கணக்கான ‘ஃப்ளெக்ஸ் போர்ட்கள்’ இந்த ஆதரவு இயக்கங்களுக்கு நிதி ஒரு பிரச்சினை இல்லை என்பதை உறுதி செய்கின்றன.
ஊழல் ஒழிப்புப்  போராட்டத்தில் அண்ணா குழுவிற்கு (டீம் அண்ணா) ‘வெளிவட்டத்தில்’ நின்று ஆதரவளித்து வருகிற அருணா ராய், ஹர்ஷ் மாந்தர் போன்றோர்,  “கோரிக்கை எல்லாம் நியாயந்தான். ஆனால் அதற்காக இத்தனை கெடுபிடிகள் தேவை இல்லை. ஒரு ஜனநாயக நாட்டில் நம்முடைய கருத்து மட்டுமே சரி என்பதாகக் கருதி இந்த அளவிற்கு நெருக்கடி கொடுப்பது தவறு” எனச் சொன்னவுடன், ‘உள்வட்டத்தில்’ இருக்கும் அர்விந்த் கெஜ்ரிவால், சாந்தி பூஷன், பிரசாந்த் பூஷன், சந்தோஷ் ஹெக்டே ஆகியோர், “நாங்கள் எந்தக் கருத்தையும் யார் மீதும் திணிக்கவில்லை என்பதற்கு மக்கள் அளிக்கும் பேராதரவே சாட்சி” என அலட்சியமாகப் பதிலளிக்கின்றனர்.
அண்ணா ஹஸாரேக்கு  ஆதரவாக இன்று பெரிய அளவில் இந்தியாவின் நடுத்தரவர்க்கம்  திரண்டு நிற்கிறது. மாவோயிஸ்டுகளுக்கு எதிராக மத்திய அரசு இன்று நடத்தும் ‘பச்சை வேட்டை’, விவசாயிகள் தற்கொலை, தனியார் துறையில் இட ஒதுக்கீடு, மதக் கலவரத் தடுப்புச் சட்டம், மரண தண்டனை ஒழிப்பு…என எல்லா அரசியல் பேச்சுக்களையும் ஓரங்கட்டி, ‘ஜன் லோக்பால்’ என்னும் ஒரே முழக்கத்தை நடுநாயகமாக்கிவிட்ட இந்த ஆதரவுப் படையினர் யார்? இவர்களின் வர்க்க கருத்தியற் பின்னணி என்ன?
போரட்டக்  கவர்ச்சியில் ஈர்க்கப்பட்டு  வந்து நிற்கும் மாணவர்கள், இளைஞர்களை விட்டுவிட்டுப் பார்த்தால் முன்னணியில் நிற்கும் ஆதரவு சக்திகள் நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தினர்தான். இந்திய மக்கள் தொகையில் 30 சதம் வரை நடுத்தரவர்க்கதினர் உள்ளதாகக் கணக்கீடுகள் சொல்கின்றன. இவர்கள் ஒருபடித்தானவர்கள் அல்ல. பலதரப்பட்ட பின்னணி உடையவர்கள். எனினும் இவர்களுக்கிடையில் பல பொதுமையான அம்சங்களும் உண்டு. இவற்றில் முதன்மையானது இன்றைய ஆட்சி முறையையும் நிறுவனங்களையும் பெரிய விமர்சனமின்றி நம்புவது. அடுத்து இந்தியா பொருளாதார ரீதியாக வளர்ந்து கொண்டிருக்கிறது என்கிற கருத்தில் ஆட்சியாளர்களுடன் ஒத்துப் போவது. ஷாப்பிங் மால்கள், நால்வழிச் சாலைகள், மெட்ரோ ரயில்கள், தகவல் தொழில் நுட்ப வளர்ச்சி ஆகியவற்றில் பெருமையுறுவது. இவர்களின் ஒரே குறை இத்தகைய வளர்ச்சிக்குத் தடையாய் இங்கே லஞ்சமும் ஊழலும் இருக்கிறதே என்பதுதான்.
நடுத்தர வர்க்க மதிப்பீடுகளில் இன்று  மிகப் பெரிய மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. ஒரு காலத்தில் ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ் முதலான அரசு உயர் பதவிகளை லட்சியமாகக் கொண்டிருந்த இவர்களின் இன்றைய கவனம் கார்பொரேட் உயர் பதவிகளில் குவிகிறது. நாராயண மூர்த்தியும் நந்தன் நீல்கெய்னியும் தான் இன்று அவர்களின் ‘ரோல் மாடல்’கள். மார்க்சீயம், பெரியாரியம், அம்பேத்கரியம், மொழி வழித் தேசீயம் இவைகளிலிருந்து விலகியிருப்பது மட்டுமின்றி சாதி, மத அடிப்படையிலான அரசியல்களும்கூட காலத்துக்கு ஒவ்வாது என்பது இவர்களின் கருத்து. சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீட்டிலும் இவர்களுக்கு நம்பிக்கையில்லை. தாங்கள் விரும்பும் அரசியல் மாற்றங்களை செயல்படுத்த நீண்டகால அணிதிரட்டல்கள், அரசியல் செயல்பாடுகள், ஆயுதப் போராட்டங்கள் முதலியன தேவையில்லை, இவை தேவையற்ற விரயங்களுக்கே இட்டுச் செல்லும் என்பது இவர்களின் உறுதியான கருத்து.
இந்த இடத்தில்தான் காந்தி குல்லாயுடன் காட்சியளிக்கும்  அண்ணா ஹஸாரே இவர்களுக்குப்  பொருத்தமான தலைவராகிவிடுகிறார். யார் இந்த அண்ணாஜி? மஹாராஷ்ட்ர மாநிலம், அகமத்நகர் மாவட்டத்தைச் சேர்ந்த இம் முன்னாள் இராணுவ வீரர் தன்னைப் பற்றிச் சொல்லிக் கொள்வது: 1965 இந்திய- பாகிஸ்தான் போரின்போது ‘க்ன்வாய்’ ஒன்றில் சென்று கொண்டிருந்தாராம். திடீரென எதிரிகள் பொழிந்த குண்டுகளில் எல்லோரும் செத்துப் போனார்களாம்- இவரைத் தவிர. “நம்மை மட்டும் கடவுள் ஏன் விட்டுவைக்க வேண்டும்? ஆண்டவன் நம்மிடம் எதையோ எதிர்பார்க்கிறான்” என்றுணர்ந்த அண்ணா, லஞ்ச ஊழல் முதலானவற்றை ஒழித்து மக்களை உய்விக்க விரதம் பூண்டாராம்.
இராணுவத்தில்  கிடைத்த ஓய்வு ஊதியப் பலன்களைக்  கொண்டு, சொந்த மாவட்டத்திலுள்ள  ‘ராலேகான் சித்தி’ என்கிற கிராமத்திலிருந்த கோவிலொன்றைப் புதுப்பித்து அதையே தன்  வாழ்விடமாக மாற்றிக்கொண்டார். ஏகப்பட்ட எளிமையான, ஒழுக்கமான வாழ்வை வாழ்ந்து ஒரு முன்னுதாரணமான அற ஆளுமையாக ( Moral Authority) மக்கள் மத்தியில் உருப்பெற்றார். மழை குறைவான பஞ்சப் பிரதேசமான ராலேகான் சித்தி  கிராமத்தை சுற்றுச் சூழல் பாதுகாக்கப்பட்ட செல்வம் கொழிக்கும் பகுதியாக மாற்றிய வகையில் இன்று அவர் மிகப் பெரிய புகழுக்குரியவராகியுள்ளார். பத்ம பூஷன் முதலான பல தேசிய விருதுகள் அவருக்கு வழங்கப்பட்டுள்ளன. அவரது முயற்சியை மாதிரியாகக் கொண்டு கிராம வளர்ச்சித் திட்டமொன்றை மஹாராஷ்ட்ர அரசு உருவாக்கியுள்ளது.
தமது மராட்டிய தேசியம் குறித்த பெருமை மிக்கவர்கள் மஹாராஷ்ட்ர மக்கள். பேஷ்வா ஆட்சி என்ற இந்துத்துவக் கோரிக்கை 19ம் நூற்றாண்டில் எழுச்சியுற்ற மாநிலம் அது. இந்த தேசீய- பிராந்தியப் பெருமையே பின்னர் சிவசேனா போன்ற வலதுசாரிப் பாசிச இயக்கங்களின் ஊற்றுக்கண்ணாய் அமைந்தது. சாதிக் கொடுமைகளுக்கு எதிரான பூலே மற்றும் அம்பேத்கர் இயக்கங்கள் உருவனதும் இம்மண்ணில்தான். அரசு உதவியை மட்டுமே நம்பியிராமல், மக்கள் தாமே ‘சிரமதானம்’ மேற்கொண்டு கிராமத்தின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்துகொள்ளும் வழக்கம் மஹாராஷ்ட்ர மாநிலத்தில் உண்டு. இந்த மரபைப் பின்பற்றி மக்களைத் திரட்டி மழை நீரைத் தேக்குகிற சிற்றணைகளைக் கட்டி அவர்களின் வறுமையைப் போக்கியதோடு, பள்ளி, விடுதி எல்லாவற்றையும் உருவாக்கி மக்களின் மனத்தில் நீங்கா இடம் பிடித்துக் கொண்டார் அண்ணா. இன்று அங்கே அவர் வைத்ததுதான் சட்டம். இவ்வாறு உருவான மரியாதையையும் அதிகாரத்தையும் பயன்படுத்தி அவர் தொடர்ந்து அந்தக் கிராமத்தை ஆண்டு வருகிறார்.
ஒற்றுமையையும் ஒழுக்கத்தையும் வலியுறுத்தும் அண்ணா, தேர்தல்களும் அரசியல் கட்சிகளும் கிராம ஒற்றுமையைக் குலைத்துவிடும் என இரண்டையும் அண்ட விடுவதில்லை. கடந்த 35 ஆண்டுகளாக அங்கே கிராம சபைகளுக்கு தேர்தல் நடக்கவில்லை. அண்ணா சொல்பவர்களே தலைவர்கள். அப்புறம் அங்கே திரையரங்குகள் கிடையாது. குடித்துவிட்டு கிராமத்திற்குள் நுழைபவர்கள் மரத்தில் கட்டி வைத்து அடிக்கப்படுவார்கள். குடும்பக் கட்டுப்பாடு கட்டாயம். கோயிலில் வைத்து தெய்வ சாட்சியாகவே முடிவுகள் எடுக்கப்படும்.
அந்த கிராமத்தில்  தங்கி ஆய்வு செய்த முகில் சர்மா என்கிற ஆய்வாளர் தலித்கள் மற்றும் பெண்களின் நிலைகளில்  பாரிய மாற்றங்கள் ஏதும்  நிகழ்ந்துவிடவில்லை என்பதைச் சுட்டிக் காடுகிறார். தற்போது  அண்ணா முன் மொழிகிற லோக்பால் மசோதா அதிகாரங்கள் பெரிதும் மையப்படுத்தப்பட்ட ஒரு  ‘சூப்பர்’ அதிகார அமைப்பாக இருக்கும் எனவும், காந்தியடிகள் கனவு கண்ட அதிகாரப் பரவலுக்கும்  அண்ணாவின் அணுகல்முறைகளுக்கும்  எள்ளளவும் தொடர்பில்லை என்பதையும் சுட்டிக் காட்டுகின்றனர். ஊழல் குற்றச்சாட்டுகளுக்குக் கடுந்தண்டனையைப் பரிந்துரைக்கிறது இவரது மசோதா. ஒரு கூட்டத்தில் லஞ்சம் வாங்குபவர்களின் கையை வெட்ட வேண்டும் என்றார் அண்ணா. இது உன்களின் காந்தியக் கொள்கைக்கு விரோதமில்லையா எனக் கேட்டபோது, “ அதுதான் சொல்றேன். நமக்கு கந்தி மட்டும் போதாது. நமது லட்சிய மாதிரியா சிவாஜியும் இருக்கணும். அப்படித்தான் ஒரு முறை லஞ்சம் வாங்கின படேல் ஒருத்தரோட கையை சிவாஜி வெட்டினார்” என்று பதிலுறைத்தார். ஊழல் பேர்வழிகளின் கையை வெட்டணும், தலையை வாங்கணும் என்றெல்லாம் அவர் சொல்வது ஏதோ கோபத்தில் மட்டுமல்ல. அண்ணாவைப் பொருத்த மட்டில் நிர்வாகத்தில் ஊழல் இல்லாமலிருந்தால் போதும். மற்றபடி மதவாதம், தீண்டாமை, உலகமயம் இவையெல்லாம் பெரிய பிரச்சினை இல்லை. அதனால்தான் அவர் கூசாமல் நரேந்திர மோடியை ‘நல்ல நிர்வாகி’ எனப் பராட்டினார்.
அண்ணா ஹஸாரேயின்  உள் வட்டத்தைச் சேர்ந்த  சாந்தி பூஷன், பிரசாந்த்  பூஷன், சந்தோஷ் ஹெக்டே மூவரும்  நீதித் துறையைச் சார்ந்தவர்கள். முதலிருவரும் வழக்குரைஞர்கள். மூன்றாமவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி. சுமார் 35 ஆண்டுகளுக்கு முன்னால் அலகாபாத் நீதி மன்றத் தீர்ப்பால் பதவி இழக்க இருந்த இந்திரா காந்தி, நெருக்கடி நிலையை அறிவித்து நீதித் துறையை ஒடுக்கித் தன் வழிக்குக் கொண்டு வந்த கதை நினைவிருக்கலாம். அரசுக்கு எதிராகத் தீர்ப்பளித்த மூன்று நீதிபதிகளுக்குப் பதவி உயர்வை மறுத்து, கீழே இருந்தவர்களை மேலுக்குக் கொண்டு வந்தார் இந்திரா. அப்படிப் பதவி உயர்வு மறுக்கப்பட்டவர்களில் ஒருவரான கே.எஸ். ஹெக்டேயின் மகன்தான் சந்தோஷ் ஹெக்டே. நெருக்கடி காலம் முடிந்து ஜனதா ஆட்சி வந்தபோது மீண்டும் நீதித்துறையைப் பலப்படுத்தி மேலுயர்த்துவதற்கென சட்டத்துறை அமைச்சராக்கப்பட்டவர்தான் சாந்தி பூஷன். அவரது மகன்தான் பிரசாந்த் பூஷன்.
உரிய சட்டத் திருத்தங்களைச் செய்து நீதித் துறையை பலப்படுத்தியதோடு மேலும் இரு மாற்றங்களை அவர் செய்தார். 1) பொது நல வழக்கு ( public interest litigation) அறிமுகப்படுத்தப் பட்டது. யார் வேண்டுமானாலும் பாதிக்கப்படுகிற பிறருக்காக அரசை எதிர்த்து வழக்குப் போடலாம். 2) அரசியல் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமைகள் என்பது உணவு, கல்வி, இருப்பிடம், தூய்மையான சூழல் ஆகியவற்றையும் உள்ளடக்கும் என விளக்கமளித்தது. இந்த அடிப்படையிலேயே இன்று பொது நல வழக்குகள் மூலமாக அழுத்தம் கொடுத்து கல்வி மற்றும் உணவு உரிமைச் சட்டங்களெல்லாம் இயற்றப்பட்டுள்ளன.
உள்வட்டத்தில் உள்ள இன்னொருவர் அர்விந்த்  கெஜ்ரிவால். இவர் ஒரு தகவல் அறியும் உரிமைச் சட்டப் போராளி. இவர் பங்கு பெற்றுள்ள தொண்டு நிறுவனம் இச் சட்டத்தின் மூலம் பெற்ற பல்லாயிரக்கணக்கான தகவல்களைத் தொகுத்து ஆய்வு செய்துள்ளது. தொண்டு நிறுவனங்கள்மூலமாக இவர்களுக்கு ஏராளமான வெளிநாட்டு மற்றும் கார்பொரேட் நிறுவன உதவிகள் கிடைக்கின்றன என்றும், இந் நிறுவனங்களில் பல இந்தியாவின் கனிவளங்களைக் கொள்ளை அடித்து, சுற்றுச் சூழலை அழிப்பவை எனவும் குற்றம் சாட்டுகிறார் புகழ் பெற்ற எழுத்தாளர் அருந்ததி ராய்.
ஆக நீதிமன்றங்கள், இருக்கிற சட்டங்கள் மற்றும் புதிதாய் இயற்றப்படும் சட்டங்கள் முதலானவற்றின் மூலமாகவே நாட்டின்  எல்லாக் குறைகளையும் போக்கி, சுபிட்சத்தை உருவாகிவிடமுடியும் என்கிற ஒருவகைச் சட்டவாதத்தை நம்புகிற நடுத்தர வர்க்க மனநிலைக்கு மிகவும் பொருத்தமானவர்கள் இவ் உள்வட்டத்தினர்.
பொது நல வழக்குகள், தகவல் அறியும்  உரிமை, சலகல அதிகாரங்க்ளும் குவிந்த லோக்பால் அமைப்பு  ஆகியவற்றின் மூலம் ‘ஒளிரும் இந்தியாவை’ உருவாக்கிவிடமுடியும் என நம்புகிற நடுத்தரவர்க்கத்திற்கு உண்ணாவிரதம், ஒத்துழையாமை முதலான காந்திய வழிகளை மட்டுமே பயன்படுத்தி, காந்தியத்திற்குச் சற்றும் பொருந்தாத கார்பொரேட் நகர்ப்புறக் கலாச்சாரத்தை நடைமுறைப்படுத்த அண்ணா ஹஸாரே  சரியான தலைவராகப் பொருந்திப் போகிறார்.
சமீபகாலப் பெரு ஊழல்களுக்குக் காரணமான  அரசின் பொருளாதாரக் கொள்கைகள், கார்பொரேட்களுக்கு வழங்கப்பட்டுள்ள  அபரிமிதமான அதிகாரம், இதர  முக்கியமான பிரச்சினைகளான  மதவாதம், சாதீயம், பழங்குடி உரிமைகள், கல்வி/ மருத்துவம் முதலானவை வணிகமயமாதல், கருப்புச் சட்டங்களைப் பயன்படுத்தி மக்கள் உரிமைகளை பறித்தல் முதலான எல்லாப் பிரச்சினைகளிலிருந்தும் லஞ்ச ஊழலைப் பிரித்து இவர்கள் அதை மட்டும் முதன்மைப்படுத்துகின்றனர். இப்படியான இயக்கங்களில் எளிதாக வலதுசாரி பாசிச சக்திகள்  உள்ளே நுழைந்து விடுவதே கடந்த கால வரலாறாக இருந்துள்ளது.  ஜெயப்பிரகாஷ் நாராயணின் நவ நிர்மாண் இயக்கத்தின் மூலம் மேலுக்கு வந்தவர்தான் நரேந்திர மோடி என்பதை மறந்துவிட முடியாது. இன்றும்கூட இந்துத்துவ வலதுசாரி சக்திகள்தான் அதிக அளவில் அண்ணா ஹஸாரேவுக்கு வெளிப்படையாக ஆதரவு அளிக்கின்றனர்.
இந்தியாவை ஆட்டிப்படைக்கும் மிக முக்கியமான பிரச்சினைகளில் ஒன்று லஞ்ச ஊழல் என்பதில் யாருக்கும் ஐயம் இருக்க முடியாது. எக்காரணம் கொண்டும் அரசியல்வாதிகள் மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல்களை மன்னிக்க முடியாது.
ஆனால் பிரச்சினை  ஊழல்களோடு முடிந்துவிடுவதில்லை. ஊழல் ஒழிப்பைப் பிரதானப்படுத்தி மற்றவற்றிலிருந்து கவனத்தைத் திருப்புவது மிகவும் ஆபத்தானது என்கிற கருத்து அருந்ததி ராய் போன்ற  அறிவுஜேவிகளால் முன்வைக்கப்படுகிறது.

இது தீண்டாமை தேசம்!

ரீ.சிவக்குமார்
ஓவியங்கள் : மருது, ஸ்யாம்
தீண்டாமை என்பது பலருக்குச் சென்ற நூற்றாண்டின் கொடுங்கனவாகவே இருக்கும். 'இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்கிறாங்க?’ என்ற குரல்களுக்கும் 'சர்ட்டிஃபிகேட்டில் சாதி கேட்பதால்தான் சாதி இருக்கிறது’ என்கிற குரல்களுக்கும் தீண்டாமையின் வலியும் வடுவும் தெரியாது. இந்திய வரலாற்றுப் பாதை முழுக்கச் சேறு அப்பிய கால்களின் சுவடுகளாக இன்னமும் இருக்கிறது தீண்டாமை. அன்பு, மனிதாபிமானம், உபசரிப்பு என்று விழுமியங்களின் உறைவிடமாகக் கட்டப்பட்டு இருக்கும் கிராமங்களுக்கு விஷம் தோய்ந்த ஒரு கோரப் பல் இருக்கிறது என்பதை நம்புவதற்கு உங்களுக் குச் சிரமமாகத்தான் இருக்கும்!
சமீபத்தில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாநாட்டில் பேசிய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன், ''கடந்த தி.மு.க. ஆட்சி யில் தமிழகத்தின் சமூகக் கொடுமைகள், தீண்டாமை, மூடப்பழக்க வழக்கங்கள் குறித்து ஆய்வு செய்ய சமூகச் சீர்திருத்தக் குழு அமைக்கப்பட்டது. அதில் பேராசிரியர் மா.நன்னன், பொன்னம்பல அடிகள், நான் உள்ளிட்ட பலர் இடம் பெற்றோம். நான்கைந்து முறை பல்வேறு விஷயங்களை விவாதித்த அந்தக் குழு, பின்பு என்ன ஆனது எனத் தெரியவில்லை. அரசுக்கும் அறிக்கை ஏதும் அளிக்கவில்லை. எனவே, தற்போதைய அ.தி.மு.க. அரசு மீண்டும் அதே போன்ற ஓர் ஆய்வுக் குழுவை அமைக்க வேண்டும்!'' என்று வேண்டுகோள் விடுத்தவர், ''தமிழகத்தில் 85 வகையான தீண்டாமைக் கொடுமைகள் நிலவுகின்றன'' என்றும் கவலை தெரிவித்து இருக்கிறார்.
ஜி.ராமகிருஷ்ணனிடம் பேசியபோது, ''சமூகச் சீர்திருத்தக் குழு திருச்சி, ஈரோடு மாவட்டங்களில் தீண்டாமை குறித்து மக்கள் கருத்துக் கேட்புக் கூட்டங்களை நடத்தியது. ஆனால், ஒரு கட்டத்துக்கு மேல் அந்த முயற்சிகள் தொடரவில்லை. கோவை மாவட்டத்தில் மட்டும் 22 வகையான தீண்டாமை வடிவங்கள் இருக்கின்றன. ஒரு காலத்தில் கீழத்தஞ்சை மாவட்டத்தில் சவுக்கடி, சாணிப்பால் போன்ற தலித் மக்கள் மீதான வன்கொடுமைகளுக்கு எதிராக கம்யூனிஸ்ட்டுகள் போராடியதால், இப்போது அவை அங்கு இல்லாது ஒழிந்துவிட்டன. அது மாதிரியான செயல்பாடுகளை எல்லா இயக்கங்களும் மேற்கொள்ள வேண்டியது அவசியம்'' என்று வலியுறுத்தினார்.
85 வகையான தீண்டாமைகள் மட்டும் இல்லை, உண்மையில் தமிழகக் கிராமங்களில் 100-க்கும் மேற்பட்ட தீண்டாமைகள் உள்ளன. தமிழகத்தில் 12 மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் நிலவும் தீண்டாமைகள் குறித்து எவிடென்ஸ் அமைப்பு ஓர் ஆய்வை வெளியிட்டு இருக்கிறது. மதுரை, திண்டுக்கல், விருதுநகர், சிவகங்கை, தஞ்சை, நாகப்பட்டினம், சேலம், நாமக்கல், கடலூர், விழுப்புரம், கோவை, திருப்பூர் ஆகிய 12 மாவட்டங்களில் 213 கிராமங்களில் நடத்தப்பட்ட ஆய்வு முடிவுகள் இவை. அவற்றில் இருந்து சில மாதிரிகள் மட்டும் இங்கே...
 213 கிராமங்களில் 70 கிராமங்களில் ரேஷன் கடைகளில் சாதியப் பாகுபாடு நடைமுறையில் உள்ளது. 23 கிராமங்களில் தலித் மக்கள் ஆதிக்கச் சாதியினருடன் ரேஷன் கடைகளில் ஒன்றாக வரிசையில் நிற்க முடியாது. 31 கிராமங்களில் ஆதிக்கச் சாதியினருடன் வரிசையில் நின்றாலும் தலித்துகள் அவர்களைத் தொடக் கூடாது. 2 சதவிகித நியாய விலைக் கடைகள் மட்டுமே தலித் குடியிருப்புப் பகுதிகளில் உள்ளன. ஆதிக்கச் சாதியினர் வசிக்கும் பகுதிகளில் அமைந்திருக்கும் பிற ரேஷன் கடைகளுக்குத்தான் தலித் மக்கள் செல்ல வேண்டும்.
24.09.2009 அன்று கள்ளக்குறிச்சி அருகில் உள்ள தச்சூர் கிராமத்தைச் சேர்ந்த தலித் பெண் காசியம்மாள், ரேஷன் கடை வரிசையில் நிற்கும்போது அவரது கை, ஆதிக்கச் சாதிப் பெண்மணி மீது பட்டதற்காக அவர் பொது இடத்தில் மானபங்கப்படுத்தப்பட்டார்.
 தலித் மக்களின் பிணங்களை பொதுப் பாதையில் எடுத்துச் செல்ல முடியாது. ஆதிக்கச் சாதியினரின் குடியிருப்புகளின் வழியாக எடுத்துச் செல்ல முடியாது ஆகிய தீண்டாமைகள் மயானம் தொடர்பாக நிலவுகின்றன. தலித் மக்களுக்குத் தனிச் சுடுகாடும் மற்ற சாதியினருக்குத் தனிச் சுடுகாடும் இன்னும் பல கிராமங்களில் உண்டு.
02.01.2011 அன்று தேனி அருகில் உள்ள கூழையனூ ரில் ராஜு என்கிற தலித் பெரியவரின் சடலத்தைப் பொது சுடுகாட்டில் அடக் கம் செய்யக் கூடாது என்று ஆதிக்கச் சாதியினர் எதிர்ப்புத் தெரிவித்தனர். இது தொடர்பாக நடந்த மோதலில், 27.01.2011 அன்று சின்னாயி என்ற தலித் மூதாட்டி பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்டுக் கொல்லப்பட்டார். கூழையனூரில் அரசு அதிகாரிகளே உறுதிமொழிப் பத்திரம் ஒன்று எழுதி, தலித்களும் மற்ற சாதியினரும் தனித் தனி மயானங்களைப் பயன்படுத்த வேண்டும் என்று எழுதிக் கையெழுத் திட்டு உள்ளனர்.
67 சதவிகிதக் கிராமங்களில் சலூன் கடைகளில் தலித் மக்கள் மீது பாகுபாடு காட்டப்படுகிறது. 142 கிராமங்களில் தலித் மக்களுக்கு முடிவெட்டக் கூடாது என்று சாதிக் கட்டுப்பாடு உள்ளது. 13 கிராமங்களில் கத்தரிக்கோல், சீப்பு, கத்தி போன்றவை தலித்துகளுக்குத் தனியாகவும் மற்றசாதி யினருக்குத் தனியாகவும் பயன்படுத்தப் படுகின்றன. 25 கிராமங்களில் சலூன் கடை நாற்காலிகளில் தலித்துகள் அமரக் கூடாது.
12.01.2008 அன்று உத்தமபாளையம் மார்க்கையன்கோட்டை கிராமத்தில் தன் குழந்தைகளுக்கு முடி வெட்டுவதற்குச் சலூன் உரிமையாளர் மறுத்ததால் பெரியசாமி என்னும் தலித் எதிர்ப்புத் தெரிவித்து இருக்கிறார். அதனால் அவர் குழந்தைகள் முன்பே சாதி இந்துக்களால் தாக்கப்பட்டார்.
 68 சதவிகிதக் கிராமங்களில் பொதுக் குழாயில் நீர் எடுக்கவும் பொதுக் கிணற்றில் தண்ணீர் எடுக்கவும் தலித் மக்களுக்கு உரிமை இல்லை. 131 கிராமங்களில் தலித் மக்களுக்கும் சாதி இந்துக்களுக்கும் தனித் தனி நீர்நிலைகள் உள்ளன.
விழுப்புரம் மாவட்டம் பெரியசெவலை கிராமத்தில் 2009-ம் ஆண்டு சந்தோஷ்குமார் என்ற தலித் இளைஞர் பொதுக் கிணற்றில் குளித்ததற்காக 30 பேர் கொண்ட ஆதிக்கச் சாதிக் கும்பலால் தாக்கப்பட்டார்.
 சில கிராமங்களில் ஆரம்ப சுகாதார நிலையங்களில் டாக்டர்கள் தலித்துகளைத் தொட்டு மருத்துவம் பார்ப்பது இல்லை. மருத்துவமனை ஊழியர்களும் இத்தகைய தீண்டாமைகளைக் கடைப்பிடிக்கின்றனர்.
மதுரை கீரிப்பட்டியைச் சேர்ந்த தலித் பெண் வசந்தமாளிகை ஆரம்ப சுகாதார நிலையத்தில் பிரசவத்துக்காகச் சேர்க்கப்பட்டு இருந்தபோது, அங்கு இருந்த ஊழியர் கொண்டைஊசியால் பனிக்குடத்தைக் குத்தி சேதப்படுத்தி இருக்கிறார். கருப்பை முற்றிலும் சிதைந்த நிலையில் அகற்றப்பட்டது. சிறுநீரகக் குழாயில் ஓட்டை விழுந்து அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை!
 29 கிராமங்களில் பள்ளிகளில் தலித் மாணவர்களிடம் பாகுபாடு காட்டப்படுவதாக ஆய்வு தெரிவிக்கிறது. கோவையில் உள்ள ஒரு பள்ளி ஆசிரியர், தலித் மாணவர்களை மைனஸ் என்றும் மற்ற மாணவர்களை ப்ளஸ் என்றும்தான் அழைப்பாராம். சில ஆண்டுகளுக்கு முன்பு வரை தேனி அருகில் உள்ள எண்டப்புளி கிராமத்தில் தலித் சிறுவர்கள் பின் வரிசை இருக்கைகளில்தான் அமரவைக்கப்படுவார்களாம்.
 பேருந்துப் பயணம் மற்றும் பேருந்து நிறுத்தங்களிலும் சாதிப் பாகுபாடு உண்டு. பேருந்து நிறுத்தங்களில் உள்ள இருக்கைகளில் தலித்துகள் அமரக் கூடாது என்கிற கொடுமையும் உண்டு. ஆதிக்கச் சாதி சிறுவர்களை தலித் முதியவர்கள் மரியாதையோடு அழைப்பதும், தலித் முதியவர்களைக்கூட ஆதிக்கச் சாதிச் சிறுவர்கள் மரியாதை இல்லாமல் அழைப்பதும் இன்றும் பெரும்பாலான கிராமங்களில் உள்ள நடைமுறை!
 அஞ்சலகங்களில் தலித்துகள் நுழையக் கூடாது. தபால்காரர் தலித் குடியிருப்புக்குள் வர மாட்டார், தலித் குழந்தைகளுடன் ஆதிக்கச் சாதி குழந்தைகள் விளையாடக் கூடாது, பள்ளிக்கூடங்களில் தலித் குழந்தைகள் துப்புரவுப் பணியில் ஈடுபடுத்தப்படுவது என்று ஆரம்பப் பள்ளிக்கூடங்கள் முதல் அரசு அலுவலகங்கள் வரை தீண்டாமை அங்கீகரிக்கப்பட்ட கொடுமைதான் நிலவுகிறது.
 தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு மற்ற சாதி ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் ஒத்துழைப்பு கொடுக்க மறுப்பது, பல இடங்களில் தலித் பஞ்சாயத்துத் தலைவர்களுக்கு நாற்காலியில் அமர அனுமதி மறுப்பு போன்ற தீண்டாமைகளும் உள்ளன.
''இவை வெறுமனே 213 கிராமங்களில் மட்டுமே ஆய்வு செய்த முடிவுகள். இன்னும் ஆய்வுக்கு உட்படாத கிராமங்களும் மாவட்டங்களும் தமிழகத்தில் உள்ளன. தமிழகத்தில் தீண்டாமைக்கு உட்படாத கிராமங்களே கிடையாது என்பதை உறுதியாகச் சொல்ல முடியும். ஆனால், அரசிடமோ இதுகுறித்த முறையான புள்ளிவிவரங் களும் கிடையாது. சொல்லப்போனால், உண்மையை மறைக்கும் பொய் விவரங்களைத்தான் அரசு வெளியிடும். 2009-ல் தமிழகத்தில் 384 கிராமங்களில் மட்டுமே தீண்டாமை நிலவுவதாகச் சொன்ன தமிழக அரசு, 2010-ல் 174 கிராமங்களில்தான் தீண்டாமை நிலவுகிறது என்கிறது. இந்த தீண்டாமையை விசாரிப்பதற்காக பி.சி.ஆர்(1955), எஸ்.சி, எஸ்.டி. சட்டம் (1989) ஆகியவை வழி செய்கின்றன. ஆனால், இந்தச் சட்டங்களின் அடிப்படையில் பெரும்பாலும் நடவடிக்கைகள் எடுக்கப்படுவது இல்லை. 2010-ல் தீண்டாமை வன்கொடுமை தொடர்பாக வெறுமனே தமிழகம் முழுவதும் 1,050 வழக்குகள் மட்டுமே பதிவு செய்யப்பட்டு உள்ளன'' என்று வேதனை தெரிவிக்கிறார் 'எவிடென்ஸ்’ கதிர்.
தீண்டாமையை ஒழிப்பதற்கு என்று திருச்சியில் தீண்டாமை ஒழிப்பு அலுவலகம் இயங்குகிறது. ஆனால், அதனால் எந்தப் பயனும் இல்லை என்று கடந்த ஆண்டு ஆகஸ்ட் 15 அன்று தீண்டாமை ஒழிப்பு அலுவலகத்தை இழுத்து மூடும் போராட்டத்தை நடத்தியது பெரியார் திராவிடர் கழகம். தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இரட்டைக் குவளை முறையைக் கணக்கெடுத்து, இரட்டைக் குவளை உடைப்புப் போராட்டங்களையும் நடத்திய பெரியார் தி.க. சமீபத்தில் போராட்டம் நடத்திய இடம் கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியம்.
காலம் மாறினால் தீண்டாமை மாறும் என்பது நமது நம்பிக்கையாக இருந்தாலும் உண்மையில், காலம் மாற மாற... சாதியும் தீண்டாமையும் அதற்கேற்பத் தன் வடிவங் களை மாற்றிக்கொள்வதே யதார்த்தமாக இருக்கிறது. கோவை மாவட்டம் அன்னூர் ஒன்றியத்தில் உள்ள நல்லிசெட்டிபாளையம், அச்சம்பாளையம், அல்லிக்காரன் பாளை யம், செங்கப்பள்ளி, குருக்கிளையாம் பாளையம் கிராமங்களில் தலித் மக்கள் பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கக் கூடாது என்கிற 'மரபான’ தீண்டாமையோடு, அவர்கள் பொது இடங்களில் செல்போன் பேசக் கூடாது, பைக் ஓட்டக் கூடாது போன்ற 'நவீன’ தீண்டாமைகளும் தொடர் கின்றன.
1,000 பேரோடு பொதுக் குழாய்களில் தண்ணீர் பிடிக்கும் போராட்டத்தை நடத்திய பெரியார் தி.க. தலைவர் கொளத்தூர் மணி, ''இத்தகைய தீண்டாமைகளைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அன்னூர் காவல் ஆய்வாளர்,  சமூகநீதி மற்றும் மனித உரிமைப் பிரிவு உதவி ஆய்வாளர் இருவரும் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் 'அன்னூர் உள்வட்டத் தில் இரட்டைக் குவளை மற்றும் முடி திருத்த நிலையங்களில் தீண்டாமை இல்லை’ என்றும், இது தொடர்பாக 'தனிப்பட்ட நபர்கள் மீது எந்தவிதப் புகார்களும் வரவில்லை’ என்றும், 'அன்னூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட கிராமங்களில் அடிக்கடி தாழ்த்தப்பட்ட நபர்கள் உரிமைப் பிரச்னை தொடர்பாக, தணிக்கை செய்யப்பட்டு வருவதாக’வும் எழுதியுள்ளனர். ஏப்ரல் 19-ம் தேதி, உயர் நீதிமன்றம் தீண்டாமை தொடர்பான வழக்கு ஒன்றில் அளித்த தீர்ப்பில் 'எந்தப் பகுதியில் தீண்டாமை இருக்கிறதோ, அந்த மாவட்ட எஸ்.பி-யையும் கலெக்டரையும் சஸ்பெண்ட் செய்ய வேண்டும்’ என்று தெளிவா கக் கூறியுள்ளது. ஆனால், இதுவரை அப்படியான எந்த நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை. சட்டங்களின் மூலமாகவே மட்டுமே தீண்டாமையை ஒழித்துவிட முடியாது என்றாலும், கடுமையான சட்டங்களும் இத்தகைய சாதிப் பாகுபாட்டை ஒழிக்க ஒரு வழிதான்!'' என்கிறார் கொளத்தூர் மணி.
தலித் மக்களின் பிரச்னைகளுக்காகக் குரல் கொடுக்க வேண்டிய தலித் கட்சிகள், அந்தப் பிரச்னைகளைக் கைவிட்டு தேர்தல் அரசியல், தமிழ்த் தேசியம் எனத் திசை திரும்பும் அவலம் ஒருபுறம், மற்ற ஓட்டுக் கட்சிகளோ ஆதிக்கச் சாதியின் வாக்கு வங்கிக்காக தலித் மக்களின் பிரச்னைகளைப் பேச மறுக்கும் துயரம் மறு புறம். இவற்றுக்கு இடையில்தான் தலித் மக்கள் தங்கள் மீது திணிக்கப்பட்டு இருக்கும் சாதிய இழிவோடு வாழ வேண்டி இருக்கிறது.
இத்தகைய தீண்டாமைகளைக் கணக்கில் எடுத்துக்கொள்ளாமலேயே '2020-ல் இந்தியா வல்லரசு’, இளைஞர்களே கனவு காணுங்கள், மனித முகம்கொண்ட உலகமயமாக்கம், தகவல் தொழில்நுட்ப யுகம், இலவசத் திட்டங்கள் என்கிற குரல்களைக் கேட்கும்போது,
'ஒங்க தலைவன் பொறந்தநாளு போஸ்டர் ஒட்டவும் - ஒங்க
ஊர்வலத்தில தர்ம அடியை வாங்கிக் கட்டவும் -எங்க
முதுகு நீங்க ஏறும் ஏணியாகவும் - நாங்க
இருந்தபடியே இருக்கணுமா
காலம் பூராவும்?
சதையும் எலும்பும் நீங்க வச்ச தீயில் வேகுதே - உங்க
சர்க்காரும் கோர்ட்டும் அதில எண்ணையை ஊத்துதே
எதை எதையோ சலுகையினு அறிவிக்கிறீங்க - நாங்க
எரியும்போது எவன் மசுரைப் பிடுங்கப் போனீங்க?’

என்கிற இன்குலாப்பின் 'மனுசங்கடா’ பாடல் வரிகள்தான் நினைவுக்கு வருகின்றன!
                                                (ஆனந்த விகடன் - 03.08.11)

எனது புத்தக வெளியீட்டு விழா

கருப்புப்பிரதிகள் வெளியீடாக வெளிவந்திருக்கும் எனது புத்தகம் ‘பெரியார்: அறம், அரசியல், அவதூறுகள்’ நூல் வெளியீட்டுவிழா, வரும் 29.03.11, செவ்வாய் அன்று சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில் நடைபெற உள்ளது. தோழர்கள் கலந்துகொள்ள வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறேன்.

கருப்புப்பிரதிகள் வெளியீடாக எனது புத்தகம்

நண்பர்களுக்கு...

கருப்புப்பிரதிகள் பதிப்பகத்தின் வெளியீடாக எனது புத்தகம் ‘பெரியார் - அறம், அரசியல், அவதூறுகள்’ வெளியாகியுள்ளது. இது எனது முதல் கட்டுரைத்தொகுப்பு. பெரியார் குறித்து பல்வேறு சந்தர்ப்பங்களில் எழுதப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு இது.

தொடர்புக்கு : கருப்புப்பிரதிகள், பி55, பப்பு மஸ்தான் தர்கா, லாயிட்ஸ் சாலை, சென்னை - 600 005.

 அலைபேசி : 9444272500

நண்பர்கள் வாசித்து கருத்து சொல்லும்படி வேண்டுகிறேன்.

            உரையாடல் தோழமையுடன்...

சுகுணாதிவாகர்






2006 தீபாவளியையொட்டித் தமிழகத்தில் அதிகமான தாதாப் படங்கள் வெலிவந்தன. இவை பெரும்பாலும் 'சிட்டி ஆப் த காட்' என்கிற மேற்கத்தியப் படத்தின் தழுவல் என்று பரவலாக பேசப்பட்டது.
தினத்தந்தி குழுமத்திலிருந்து வெலிவரும் 'கோகுலம் கதிர்' என்கிற மாத இதழ் 'தாதாக்களின் பிடியில் தமிழ்ச்சினிமா' என்று தலைப்பட்டு இந்த தாதாப் படங்களை விமர்சித்திருந்தது. 'புதிய பார்வை' என்னும் நடுவாந்திர இலக்கியப்பத்திரிகையும் 'தமிழ்ச்சினிமாக்களில் தாதாக்கள்' என்ற தலைப்பில் இதையொட்டிய விமர்சனங்களை முன்வைத்தது. என்கவுண்டர்களை நியாயப்படுத்தும் போலீஸ்சினிமாக்கள் குறித்து இத்தகைய கடுமையான விமர்சனங்கள் வருவதில்லை என்பதிஅ நாம் அவதானிக்கலாம்.
திரைவன்முறை குறித்து அலறும் இந்த மனோபாவத்திற்கு அடிப்படையாக நான் கருதுவது
1. போலீஸ்காரர்களிடம் அடிவாங்காத, சாதி/மத/ இனக்கலவரங்களால் பாதிக்கப்படாத அல்லது குறைந்தபட்சம் அதைப் பார்த்தேயிராத நடுத்தர வர்க்கமனம் மட்டுமே இந்த திரை வன்முறையைக் கண்டு அலறுகிறது.
2. இந்தியச்சமூகம் என்பதே வன்முறையானதுதான். ஆனால் அந்த வன்முறை கட்புலனாகாத வன்முறை. அரூவமான வன்முறைக்குப் பழக்கப்பட்டுப் போயிருக்கும் இந்தியமனம் தூலமான வன்முறையைக் கண்டதும் அதைப் புரிந்துகொள்ளமுடியாமல் (அ) ஏற்றுக்கொள்ள முடியாமல் அலருகிறது.
தமிழில் முதன்முதலில் என்கவுண்டரை அறிமுகப்படுத்தியது சீவலப்பேரி பாண்டி. அதற்கு முன்னும்கூட ஏராளமான போலீஸ் சினிமாக்களும் தாதா சினிமாக்களும் வந்திருந்தபோதிலும் அவையெல்லாம் தமிழ்ச்சினிமாவின் கமர்சியல் பார்முலாவுக்குள் அடங்குபவை. நாலு தாதாப் படங்கள் வெற்றிபெற்றால் தொடர்ச்சியாக தாதாப் படங்கள் வருவதும் ஆறு போலிஸ் படங்கள் வெற்றிபெற்றால் அடுத்தடுத்து போலீஸ் படங்கள் வருவதுமே தமிழ்ச்சினிமாவின் சூத்திரவிதி.
முதன்முதலாக என்கவுண்டர்ஸ்பெசலிஸ்ட் என்கிற சொல்லாடலைத் தமிழ்த்திரையில் அறிமுகப்படுத்தி அதை நியாயப்படுத்தியதும் கௌதம்மேனனின் 'காக்க காக்க'. போலிஸ் ஆவி உடலில் புகுந்த கௌதமின் அடுத்த படமாகிய 'வேட்டையாடு விளையாடு' படமும் இதேவகைப்பட்டதே.
போஒலிஸ்காரர்கள் தாதாகக்ளால் துன்புறுவது, மிரட்டப்படுவது, போலிஸ் என்கவுண்டர்களை தன்போக்கில் தீபாவளித் துப்பாக்கி போல சகட்டுமேனிக்குச் சுட்டுப்போடுவதுமாக கௌதமின் படங்கள் அடிப்படைத் தர்க்கங்களையும் தொலைத்தவை. வேட்டையாடு விளையாடு படத்தில் ராகவன் என்னும் போலிச் அதிகாரியின் முதல்மனைவியை எம்.எல்.ஏவின் ஆட்கள் கொலைசெய்துவிட கொஞ்சமும் நம்பவியலாது அந்த எம்.எல்.ஏவை சுட்டுக்கொல்லும் காட்சியை உதாரணமாகச் சொல்லலாம்.
அவரது இரண்டு படஙக்ளுக்கும் பாரதூரமான வித்தியாசங்கள் இல்லை. மு7தல் படத்தில் கதாநாயகனின் பெயர் அன்புச்செல்வன் என்ற நல்ல தமிழ்ப்பெயரென்றால் இரண்டாவது படத்தில் வில்லன்களின் பெயர்கள் அழகிய தமிழ்ப்பெயர்கள், அந்தப் படத்தில் ஜோதிகா காதலி என்றால் இந்தப் படத்தில் இரண்டாம் காதலி என்பதுபோன்ற சில்லறை விஷயங்களைத் தவிர.
ஹாரிச்ஜெயராஜின் இசை, தாமரையின் கவித்துவ வெளிகளுக்கு அழைத்துச்செல்லும் வரிகள் என்பதைத் தவிர்த்துவிட்டால் அடிப்படைத் தர்க்கங்களுமற்ர சினிமாகக்ள்தா கௌதமுடையவை.
பட்டியல், ஆச்சார்யா, புதுப்பேட்டை, டான்சேரா என்னும் நான்குப் படங்களை இப்போதைக்கு உரையாடலுக்கு எடுத்துக்கொள்ளலாம்.
இவற்ரில் காணப்படும் சில ஒற்றுமைகள்
1. இந்தப் படங்கள் என்கவுண்டரின் பின்னுள்ள மோசடியையும் வன்முறையையும் தோலுரிக்கின்றன.2. தாதாக்கள் உருவாவதற்கான நியாயமான சூழல் காரணங்களை விபரிக்கின்றன.3.

சிறப்பு கரகாட்டம் : வரவணையான்

முத்துதமிழினி : நாட்டாமை (சிலபல பஞ்சாயத்துகளைச் செய்துவருவதால்..)
அசுரன் : நான் சிவப்பு மனிதன்
லிவிங்ஸ்மைல் : ஆறு (சமீபத்தில் வந்த தமிழ்ப்படங்களிலேயே இந்த படத்தில்தான் அதிகமான கெட்டவார்த்தைகள் இருந்ததாகச் சொல்கிறார்கள். (சும்மா ஒரு ஜாலிக்குத்தான், கோபப்பட்டு என்னை அரெ யொஉ அ .. என்றெல்லாம் கெட்டவார்த்தையில் திட்டிவிடாதீர்கள்)
நெ தெ பெஒப்லெ : பாரதவிலாஸ்
இட்லிவடை ; கேண்டீன் இன்சார்ஜ்
ஞானவெட்டியான் :
ஈழபாரதி : புலியாட்டம்
வஜ்ரா, கால்கரிசிவா, சமுத்ரா : ராம், ஹேராம், இந்து, கோவில், சாமி, தூரத்து 'இடி'முழக்கம்
ஜெயராமன் : அய்யர் தி கிரேட்
டோண்டு ராகவன் : நான் அவனில்லை
விடாதுகருப்பு : திராவிடன், தமிழன்
குழலி ; தமிழிசை

''மதுவிலக்கு மாபெரும் முட்டாள்தனம்”* - பெரியாரை முன்வைத்து...

காந்தியாரின் அழைப்பை ஏற்று மதுவிலக்கிற்காகத் தனக்குச் சொந்தமான அய்ந்நூறு தென்னைமரங்களை வெட்டிச் சாய்த்தவர்”, “கள்ளுக்கடை மறியலில் ஈடுபட்டு தானும் தனது குடும்பத்தினரும் கைதானவர்” - இப்படியாகவே பெரியார் குறித்த வழமையான பிம்பங்கள் பாடப்பொத்தகங்கள் தொடங்கி அவர் வாழ்க்கை வரலாற்றை விபரிக்கும் திரைப்படம் வரை கட்டப்பட்டிருக்கின்றன. ஆனால் உண்மை நேருக்குமாறாய் இருக்கிறது. பெரியாரின் ஆரம்பகால காங்கிரஸ் ஈடுபாட்டு வாழ்க்கையைக் கழித்துவிட்டுப் பார்த்தால் 1937 தொடங்கி தன் இறுதிக்காலம் வரை - 1973- பெரியார் மதுவிலக்கிற்கு எதிரானவராகவே இருந்தார். அவருடைய வார்த்தைகளிலேயே சொல்வதாக இருந்தால் “இன்றைய மதுவிலக்கு ஒரு விஷ நோய் பரவல் போன்ற பலன் தருகின்றது. அது தொற்று நோய் போலவும் கேடு செய்கின்றது. கடுகளவு உலகறிவு உள்ளவர் எவரும் மதுவிலக்கை ஆதரிக்கமாட்டார்கள் என்பது எனது கருத்து, முடிந்த முடிவு. இதை யார் சொல்கிறார் என்றால் மதுவிலக்கு பிரச்சாரத்தில் ஈடுபட்டு இணையற்ற ஈடற்ற பிரச்சாரகர் என்று காந்தியாலும், இராஜாஜியாலும் பட்டம் பெற்று தனது நிலத்தில் இருந்த 500 தென்னை மரங்களை வெட்டிச் சாய்த்தவன் ஆகிய இராமசாமி (நான்) சொல்கிறேன். (விடுதலை 18.3.71)
இப்போது தமிழ்ச்சூழலில் மீண்டும் மது மற்றும் மதுவிலக்கு குறித்த விவாதங்கள் மேலெழும்பியுள்ளன. மதுவை அனுமதிப்பது என்ற பெயரில் தமிழகத்தில் கள் தடை செய்யப்பட்டு அயல்நாட்டு மதுவகைகளை அரசே விற்கிறது. ’கல்விக்கூடங்களை தனியாரிடம் விட்டுவிட்டு மதுக்கடைகளை அரசு நடத்தலாமா?” என்கிற கேள்விகள் ஒருசாராரால் எழுப்பப்படுகின்றன. பா.ம.க தலைவர் ராமதாஸ் உள்ளிட சிலர் தமிழக அரசு மதுவிலக்கைக் கொண்டு வரவேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். இன்னொருபுறம் ஜெயலலிதாவின் அதிமுக ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்ட டாஸ்மாக்கின் தொழிலாளர்கள் நிலையோ சொல்லுந்தரத்தக்கது அல்ல. எட்டுமணி நேரத்திற்கு மேற்பட்ட வேலைநேரம், குறைவான ஊதியம் என அரசால் அங்கீகரிக்கப்பட்ட கொத்தடிமை முறைக்கு உட்பட்டு அல்லலால் உழலும் டாஸ்மாக் தொழிலாளர்கள் தங்களது கோரிக்கைகளை வலியுறுத்திப் போராட்டப் பதாகைகளைத் தூக்கியுள்ள நேரமிது. ராமதாஸ், டாஸ்மாக் ஊழியர் என இருவரையும் எதிர்கொள்வதற்கு தமிழக முதல்வர் கருணாநிதியின் வழக்கமான தந்திரமாக ”விரைவில் தமிழகத்தில் மதுவிலக்கை நடைமுறைப்படுத்துவது குறித்து அரசு பரிசீலித்து வருகிறது” என்கிற அறிவிப்பு. “அயல்நாட்டு மதுவகைகளை அரசே விற்கும்போது கள்ளை ஏன் அனுமதிக்கக்கூடாது?” என்கிற நியாயமான கேள்விகளும் கோரிக்கைகளும் போராட்ட அறிவிப்புகளும் பனைவிவசாயத் தொழிலாளர்கள், கொங்குவேளாளர்கள், நாடார்கள் போன்ற தரப்பிடமிருந்து எழுந்துள்ளன. நடந்து முடிந்த உலகத்தமிழ் செம்மொழி மாநாட்டிலேயே கள் விற்கப்படும் என்கிற தமிழ்நாடு கள் இயக்கத்தின் அறிவிப்பினைத் தொடர்ந்து, அவர்களை அழைத்துப் பேசிய கருணாநிதி மீண்டும் தனது தந்திரங்களை மேற்கொண்டார். ‘முடிந்தவரை பிரச்சினையை ஒத்திப்போடுதல்’என்பதே மதுவிலக்குப் பிரச்சினையில் கலைஞரின் அணுகுமுறையாக இருக்கிறது. அடுத்துவரக்கூடிய ஆட்சி யாருடையதாக இருந்தாலும் அவர்கள் சந்திக்கக்கூடிய முக்கியமான பிரச்சினைகளில் ஒன்றாக மதுவிலக்கு, டாஸ்மாக், கள் தொடர்பான பிரச்சினைகள் இருக்கும். தமிழ்ப்பொதுவெளியில் ஒன்றோடு ஒன்றாய் ஊடாடியும் விலகியும் நடக்கும் நிகழ்வுகள் குறித்து பெரியார் அவ்வப்போது தனது நிலைப்பாட்டை உறுதிசெய்துள்ளார். இதுபோலவே மதுவிலக்கு குறித்த பெரியாரின் நடைமுறைகளை அறிந்துகொள்வதும் அதுகுறித்து உரையாடுவதும் நமக்கு வேறுசில பார்வைகளை நல்கக்கூடும்.
மதுவிலக்கு தமிழகத்தில் அமல்படுத்தப்பட்ட தொடக்க காலம் முதலே பெரியார் வலியுறுத்திய சில அடிப்படைகள் இன்றைக்கும் பொருந்திவரக்கூடியவை. அவைகளைக் கீழ்க்கண்டவாறு தொகுத்துக்கொள்ளலாம்.
1. ஒரு பிரதேசத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால், மது அனுமதிக்கப்பட்ட இன்னொரு பிரதேசத்தை நாடிச் சென்று குடிப்பது என்பது மதுநுகர்வோரின் வழக்கம்.
2. பெரும்பாலும் உடலுழைப்பும் மதுவும் தொடர்புடையதாய் இருக்கின்றன. பெரும்பாலான உடலுழைப்புத்தொழிலாளர்கள் மது அருந்தும் வழக்கத்தை மேற்கொண்டிருக்கின்றனர். உடலுழைப்பை ஒருபுறம் அனுமதித்துவிட்டு அவர்களிடமிருந்து மதுப்போத்தல்களை மட்டும் தட்டிப் பறிப்பது அநீதியானது.
3. மதுவை அரசு தடைசெய்யும்போது இயல்பாகவே போலி மதுவும் கள்ளமதுவும் வரத்தான் செய்யும். இது மதுநுகர்வோரின் செலவை அதிகரிக்கத்தான் செய்யும்.
இத்தகைய அடிப்படைகளை அவர் பல்வேறு அரசுகளிடமும் வலியுறுத்திவந்தார். முதன்முதலாக 1937ல் ஒரு பரிசோதனை முயற்சியாக சேலம் ஜில்லாவில் மட்டும் ராஜாஜியால் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. இதன் விளைவுகளைப் பெரியாரே சொல்கிறார்,
”சேலம் ஜில்லாவில் உள்ள தொழிலாளிகள், குடிப்பழக்கமுள்ள ஏழை முதல் பணக்காரர் வரையுள்ள குடிகாரர்கள் ஆகியவர்கள் கண்டிப்பாய் வேறு ஜில்லாக்களுக்கு குடி போய்விடுவார்கள் அல்லது அந்த ஜில்லா எல்லைக்கே குடி வந்து விடுவார்கள். இந்த இரண்டும் செய்ய இயலாதவர்கள் குடி கிடைக்கும் ‘புண்ணிய சேத்திரங்களுக்கு’ அடிக்கடி யாத்திரை புறப்பட்டு பொருளாதாரத்தில் நசிந்து போவார்கள். (குடியரசு 3.10.1937)” பெரியார் சொன்னதுதான் அன்று நடந்தது. இன்றும் கூட தமிழகத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டால் அதுதான் நடக்கும். எனவே இத்தகைய பயனற்ற முட்டாள்தனத்தைக் கண்டித்த பெரியார், “கனம் ஆச்சாரியாருக்கு தனது ஜில்லாக் கிழவிகளிடம் பெயர் வாங்க வேண்டும் என்ற பைத்தியமே இந்த யோசனையற்ற காரியத்திற்கு காரணமாகும்.” (கு.அ.3.10.1937) என்று ராஜாஜியைக் கிண்டலடிக்கவும் செய்தார். ‘மது என்பது மனிதவாழ்க்கையில் குறிப்பாக தொழிலாளர்களிடமிருந்து பிரிக்க முடியாதது” என்பதைக் காந்தியைக் கொண்டே மேற்கோள் காட்டினார் பெரியார்.
”சரீர பலத்தை சதா உபயோகித்து கஷ்டமான தொழில் செய்பவர்கள் கண்டிப்பாய் 100க்கு 90 பேர்கள் கள் குடிக்காமல் இருக்கவே மாட்டார்கள். இதற்கு தோழர் காந்தியார் வாக்கே ஆதாரமாகும். அதாவது 1931ஆம் வருடம் ஜுன் மாதம் 12ம் தேதி தோழர்கள் காந்தியார், பட்டேல், முஸ்லிம் காந்தி ஆகிய அப்துல்கபார்கான் ஆகியவர்கள் பரோடா சமஸ்தானத்தில் சென்றிருக்கையில் மதுவிலக்கு சம்பந்தமாய் அவர்களது வரவேற்பில் எழுந்த பிரச்சனைக்கு பதிலளிக்கும் போது காந்தியார் கூறியதாவது, “கதர் இல்லாமல் வெறும் மதுவிலக்கு ஒருநாளும் வெற்றி பெறாது. கள்ளு, சாராயக் கடைகளை மூடி விடுவது நம்முடைய வேலையல்ல. கள்ளு, சாராயக் கடைகள் மூடப்பட்டு விட்டாலும் இப்போது இருப்பதைப் போலவே திருட்டுத் தனமாய் கள் குடியும், சாராயக் குடியும் நடந்து கொண்டுதான் இருக்கும். குடி வழக்கம் நிற்க வேண்டும் என்றால் குடிகாரர்களுக்கு இலகுவான கைத்தொழில் கற்றுக் கொடுத்தால் தான் நிறுத்த முடியும். இல்லையாகில் அவர்கள் தாங்கள் குடிக்கும் வழக்கத்தை ஒரு நாளும் விட மாட்டார்கள். பெரிய தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களுக்கு தங்களது களைப்பையும், ஆயாசத்தையும் தீர்த்துக் கொள்ள மதுபானம் வேண்டியதாய் இருக்கிறது. நான் தென்னாப்பிரிக்காவில் இருந்தபொழுதும் வேலை செய்து களைத்துப் போனவர்களுக்கும் வெகு அன்புடன் சாராய வகைகள் வாங்கிக் கொடுத்து வந்திருக்கிறேன். அங்கு (தென்னாப்பிரிக்காவில்) என்னுடன் இருந்த கூலிகளுக்கும் அவர்கள் சாராயம் கேட்ட பொழுதெல்லாம் நானே கடைக்குப் போய் சாராய வகைகளை வாங்கி வந்து பிரியமாக கொடுத்திருக்கிறேன். மிருகங்களைப் போல் வேலை செய்யும் உழைப்பாளிகளுக்கு மது பானங்கள் அவசியமாய் வேண்டியிருக்கிறது” என்று கூறியிருக்கிறார். இந்த விதமான நிர்பந்தத்தையும் அவசியத்தையும் பெற்ற சாதனமான மதுவை ஒரு உத்தரவில் ஒரு நாளில் நிறுத்திவிடுகிறேன் என்பது அறிவுடைமையும் அனுபவ ஞானமுடைமையும் ஆகுமா என்று கேட்கிறோம்” (குடியரசு 3.10.37)
மேலும் ராஜாஜியின் மதுவிலக்கு நடைமுறைப்படுத்தலுக்குப் பின்னாலிருந்த அரசியல் நோக்கத்தையும் பெரியார் சுட்டிக்காட்டுவது சிந்திக்கத்தக்கதாய் உள்ளது. “மதுவிலக்கு திட்டத்தை சென்னை மாகாணம் தான் முதன்முதல் ‘அமுலுக்கு’ கொண்டு வந்தது. அது இராஜாஜியின் (ஆச்சாரியாரின்) முதல் மந்திரி ஆட்சிக்காலமாகும். மதுவிலக்கு திட்டத்தை அமுலாக்க ஆச்சாரியார் உச்சரித்த போதே அதை நான் இது ஒரு சூழ்ச்சி திட்டம் என்று சொன்னேன். குடியரசு பத்திரிக்கையிலும் மதுவிலக்கின் இரகசியம் என்பதாக எழுதி வந்திருக்கிறேன். அந்த சூழ்ச்சியின் விளக்கம் என்னவென்றால் அப்போது கல்விக்கு ஆக மது(கலால்) வரும்படியில் ஒரு பாகத்தை அரசாங்கம் நீண்டநாளாக செலவழித்து வந்திருக்கிறது. ஆச்சாரியர் 1937ல் முதல் மந்திரியாக வந்தவுடனே பார்ப்பனர் அல்லாத மக்கள் கல்வி பெற்று வருவதை ஒழிக்க வேண்டும் என்கின்ற கெட்ட எண்ணத்தின் மீதே அதை (மதுவிலக்கு சட்டத்தை) ஆரம்பிக்கிறார் என்று எழுதினேன். (அதை இன்றும் அன்றைய குடியரசு இதழில் பார்க்கலாம்.)
எதற்காக கல்வியை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு அப்போது வந்தது என்று கேட்கலாம். நம் நாட்டில் அன்று சுமார் 150 வருஷ காலமாக வெள்ளையர் (பிரிட்டிஷ்) ஆட்சி நடந்து வந்திருந்தும் 1900-வது ஆண்டு வரை சென்னை மாகாண மக்கள் 100க்கு 7 பேர்களே எழுத படிக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள். அதே காலத்தில் கேரளாவில் 100க்கு 30க்கும் மேற்பட்ட மக்கள் கல்வி கற்றிருந்தார்கள். ஆனால் பிரிட்டிஷ் ஆட்சியில் பிரிட்டிஷ் இந்தியா இயங்கும் 100க்கு 7பேர்களுக்கு மேல் கல்வி கற்பிக்கப்படவே இல்லை. காங்கிரஸும் வெகு ஜாக்கிரதையாகவே கல்வி வளராமல் இருக்கும்படியே பார்த்துக் கொண்டு வந்தது. ஆனாலும் அதே சமயத்தில் பார்ப்பனர் மாத்திரம் எங்கும் 100க்கு 100பேர் ஆண் பெண் அடங்கலும் கல்வி கற்பிக்கப்பட்டவர்களாகவே இருந்தார்கள். இந்த நிலையில் ஜஸ்டிஸ் கட்சி பதவிக்கு வந்தவுடன் கல்வி விஷயத்தில் கவனம் செலுத்த வேண்டும் என்பது 1920ஆம் ஆண்டில் சென்னை மாகாணம் முழுமைக்கும் கல்விக்கு ஆக ஆண்டு ஒன்றுக்கு ஒரு கோடியே நாற்பது லட்ச ரூபாய் ஒதுக்கி வைத்து செலவு செய்து வந்ததை ஆண்டு ஒன்றுக்கு நாளாவட்டத்தில் இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கி வைத்து ஆரம்ப கல்வியை அதிகப்படுத்தினார்கள். அதன் பயனாய் 100க்கு 7பேர் வீதம் படித்து வந்த மக்கள் ஜஸ்டிஸ் ஆட்சியில் 100க்கு 10 பேர் அளவில் படிக்கும்படி நேர்ந்தது. இந்த நிலையில் காங்கிரஸ் கட்சி 1937ல் ஆட்சிக்கு வந்தது. இராஜாஜி முதல் மந்தரி ஆனார். அவர் மந்திரி ஆனவுடன் ஜஸ்டிஸ் கட்சி மந்திரி ஆட்சியில் பார்ப்பனர் அல்லாத மக்கள் எந்தெந்த துறையில் முன்னேறியிருக்கிறார்கள், அதை எப்படி ஒழித்து பழைய நிலைக்கு கொண்டு வருவது என்பது பற்றி சிந்தித்தார். அச்சிந்தனையானது பார்ப்பனர் அல்லாத மக்கள் ஜஸ்டிஸ் கட்சி ஆட்சியின் பயனாய் கல்வித் துறையிலும், சர்க்கார் உத்தியோகத் துறையிலும் சிறிது முன்னேறி இருக்கிறார்கள் என்பதை கண்டுபிடித்தார். அதன் மீது இதற்கு என்ன செய்து இந்த முன்னேற்றத்தை ஒழித்து நிரந்தரமாக தடுத்து வைப்பது என்று சிந்திக்க ஆரம்பித்தார். முதலாவதாக கல்வியைத் தடுப்பது அவசரம் என்று கண்டார். அந்தப்படியே கல்வியைத் தடுக்க இரண்டு வழிகள் கண்டு பிடித்தார். அவற்றுள் ஒன்று சிறுபிள்ளை (குழந்தை)களை இந்தி கட்டாயப்பாடமாக படித்து பரீட்சையில் தேற வேண்டும் என்று நிபந்தனை ஏற்படுத்தி இந்தியைக் கட்டாயப்பாடமாக ஆக்கினார். இரண்டாவதாக பிரைமரி பள்ளிகளை குறைக்க வேண்டியது என்று கண்டுபிடித்து 2500 பள்ளிகளை மூடினார். இந்தப்படி பள்ளிகளை மூடி வேண்டுமானால் அதற்கு காரணம் காட்ட வேண்டுமே என்று கருதி நீண்ட யோசனைக்குப் பிறகு சர்க்கார் வரும்படியை குறைத்துக் காட்டி பள்ளிகளை மூட வேண்டும் என்பதற்காக கல்விக்கு ஆக செலவு செய்து வரும் இனமாகிய கலால் இலாகாவின் வரும்படியை குறைத்துக்காட்ட மதுவிலக்கை மேற்கொண்டார். (விடுதலை 29.11.62)”
ராஜாஜியால் மூடப்பட்ட 2500 ஆரம்பப்பள்ளிகள் காமராஜர் ஆட்சியில்தான் திறக்கப்பட்டன என்பதும் அதன் பின்னணியில் பெரியார் இருந்தார் என்பதும் நாம் அறிந்ததே. காமராஜர் ஆட்சிக்காலத்திலும் நடைமுறையில் இருந்த மதுவிலக்கைப் பெரியார் எதிர்த்துவந்தார். ”மதுவிலக்கு என்பது உயிர்ச்சத்துள்ள மதுவை விலக்கிவிட்டு விஷ சத்துள்ள மதுவை குடிகாரர்களுக்கு உதவுவது போலாகும் என்றும் சொன்னேன். மதுவிலக்கு என்பது மது அருந்துபவர்கள் மது கடைகளுக்கு போய் அருந்துவதற்குப் பதிலாக அவர்கள் இருக்கும் இடத்திற்கு மது தானே தேடிக் கொண்டு வரும்படி செய்வதாகும் என்றும் சொன்னேன். மதுவிலக்கினால் ஜாக்கிரதையான குடிப்பழக்கம் உள்ளவர்கள் தான் கஷ்டப்பட நேரிடுமே ஒழிய சாதாரண குடிகாரர்களுக்கு கும்மாளம்தான் என்றும் சொன்னேன். ”(விடுதலை 29.11.62) என்று தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறார். 1963ல் கும்பகோணத்தில் நடைபெற்ற மது ஆதரவாளர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பெரியார், ‘கள்ளுக்கடைகளில் கள் விற்க அனுமதிப்பது கூட சரியான தீர்வு இல்லை” என்று வலியுறுத்தினார். முதலில் தென்னந்தோப்பில் விற்கப்பட்டிருந்த கள் வணிகப்பொருளாக கடைகளுக்கு விற்பனைக்கு வந்தபிறகுதான், அதில் ஊமத்தை இலை, கஞ்சா இலை போன்றவற்றைச் சேர்த்து அதன் தன்மை விஷமாக்கப்பட்டது என்று கூறும் பெரியார், “மதுவிலக்கை ரத்து செய்ய வேண்டும் என்று சொல்லும் நான் பழையபடி கள்ளுக்கடையை திறக்க வேண்டும் என்று சொல்லவில்லை. ஆரம்பத்தில் சொன்னபடி தோப்பில் கள் விற்க வேண்டும். கள்ளை விஷமாக்கிவிடும் முறையை தடுத்துவிட வேண்டும். (மது ஆதரவாளர்களின் மாநாட்டில் - விடுதலை 1.2.1963)” என்றும் வலியுறுத்தினார். அண்ணாவின் ஓராண்டு ஆட்சிக்காலத்திலும் பெரியாரின் கருத்து இதுவாகவே இருந்தது. “மது அருந்துவதை தடுக்க இதுவரை செய்து வந்த எந்த முயற்சியும் வெற்றி பெறவே இல்லை. சர்க்காருக்கு வரும்படி குறைந்தது. குடிக்கிறவனுக்கு அதிகச் செலவு ஏற்பட்டது. காலி பசங்களுக்கும் அயோக்கியர்களுக்கும் பிழைப்பிற்கு மது உற்பத்தி தொழில் ஏற்பட்டு வளர்ச்சி அடைந்தது என்பதல்லாமல் மது விலக்கால் யாதொரு பயனும் ஏற்படவில்லை” (விடுதலை 9.11.68). மேற்கண்ட காலகட்டங்களில் ராஜாஜியின் ஆட்சிக்காலம் தவிர மற்ற இரு ஆட்சிக்காலங்களான காமராஜர் ஆட்சிக்காலம் மற்றும் அண்ணா ஆட்சிக்காலம் என்பவை பெரியாரால் ஆதரிக்கப்பட்ட ஆட்சிகள் என்பன குறிப்பிடத்தக்கவை. ஆனாலும் பெரியாரின் கொள்கைக்கு எதிராகவே இவ்விரு ஆட்சிகளும் மதுவிலக்கு விஷயத்தில் நடந்துகொண்டன என்பதும் தான் ஆதரித்த ஆட்சிகள் என்பதாலேயே மது குறித்த தன்னுடைய கொள்கைகளைக் கைவிட பெரியார் தயாராக இல்லை என்பதும் கவனிக்கத்தக்கது.
அண்ணாவின் மறைவிற்குப் பிறகு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்ற கலைஞர் கருணாநிதி ”மதுவிலக்கை நீக்குவது குறித்து அரசு பரிசீலிக்கும்” என்று இன்றைக்குப் போலவே அன்றும் அறிவித்தார் (ஆனால் சூழல் முற்றிலும் தலைகீழ்). ஆனால் வழக்கம்போக கருணாநிதி உடனடியாக அதை நடைமுறைக்குக் கொண்டுவரவில்லை. அப்போது பெரியார், “ இந்த ஆட்சியை கண்ணை மூடிக் கொண்டு ஆதரிக்க வேண்டியது நமது கடமையாகும். ஒரு காரியத்தில் நமக்கும் அவர்களுக்கும் கருத்து வேறுபாடு உண்டு. மதுவிலக்கு விஷயத்தில் ஒரு நிலையான கருத்து இல்லை. நம் நாட்டிற்கு தேவையில்லாதது மதுவிலக்கு என்றாலும், நம்முடைய கலைஞர் பூச்சாண்டி காட்டி வருகிறார். ஒரு நாளைக்கு திறக்கிறேன் என்கிறார். ஒரு நாளைக்கு திறக்கமாட்டேன் கட்டாயம் தீவிரமாக அமல் நடத்துவேன் என்கிறார்....முன்னேற்றக் கழகத்திலும் சிலர் சாராயம் காய்ச்சுகிறார்கள். பலர் குடிக்கிறார்கள். போலீசிலும் 100க்கு 30 பேருக்கு மேல் மது அருந்துகின்றார்கள்”(விடுதலை 21.10.69) என்று வெளிப்படையாகவே கிண்டலடித்தும் கண்டித்தும் பேசினார். மேற்கண்ட பெரியாரின் பேச்சு திருச்சியில் திராவிடர்கழகம், திராவிட முன்னேற்றக்கழகம் ஆகியவைகளின் சார்பில் பெரியாரின் 91வது ஆண்டு பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்ட மேடையில் பேசியது என்பதையும் இப்படியாக ’மதுவிலக்கு குறித்த கலைஞர் பூச்சாண்டி’யின் வயது 41 என்பதும் கவனிக்கத்தக்கது. ஒருவழியாக அதே கலைஞரே 1971ல் தமிழகத்தில் மதுவிலக்கை நீக்கினார். ஆனால் பிறகு அது கள்ளுக்கடைகளை ஒழிப்பதாகவும், அயல்நாட்டு மதுவகைகளை மட்டுமே அனுமதிப்பாகவும் ஆகிப்போனது. அதன் விளைவாக இயற்கையான உணவாகவும் மதுவாகவும் உள்ள கள் தமிழக மக்களுக்கு மறுக்கப்பட்டதும் குடியின் செலவு அதிகரிக்கப்பட்டதும் மதுவின் விற்பனை தமிழக அரசின் வருமானத்தை மட்டுமல்லாமல் ஆளுங்கட்சிக்காரர்களே மதுபானத் தொழிற்சாலைகளைத் தொடங்கி நடத்துவதனால் அவர்களின் வருமானமும் விஜய்மல்லய்யா போன்ற சாராயப்பெருமுதலாளிகளின் கல்லா இருப்பும் உயர்வதும் விளைவுகளாயின. இத்தகைய ‘மதுவிலக்கு ஒழிப்பு’ என்பது பெரியாரின் விருப்பமாக நிச்சயமாக இருந்திருக்க முடியாது.
ஏனெனில் மதுவிலக்கு என்பது எப்போதும் ஏதேனும் ஒரு படிநிலை பேதத்தைக் காப்பாற்றி வந்ததைப் பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் ராஜாஜியால் கொண்டு வரப்பட்ட ‘மதுவிலக்கு’ அப்பாவி உழைக்கும் மக்களுக்குத்தானே அல்லாது ஆங்கிலேயர்களுக்கு அல்ல. ஆகவே, “மதுபான விசயமாய் வெள்ளையருக்கு அளிக்கும் சலுகை இந்தியர்களுக்கு அடியோடு கூடாது என்பதை நாம் ஒப்புக்கொள்ள முடியாது.”(கு.அ.3.10.1937) என்று கூறிய பெரியார், பிற்பாடு ‘பர்மிட்’ உள்ளவர்கள் குடிக்கலாம் என்று ஆகிப்போன நடைமுறை குறித்தும் வருந்திக் கண்டித்தார். ”பார்ப்பான் எப்படி சாதி ஒழிக்கப்படக்கூடாது என்று சட்டம் செய்து கொண்டானோ அது போல் போலீசாரும், அயோக்கியரும் பிழைக்க ஒரு வழி கொடுக்கலாம் என்று மதுவை தடை செய்து சட்டம் செய்து கொண்டான். அதை ஒரு சிபாரிசாகத் தான் கொள்ளவேண்டும்” (விடுதலை 16.2.69) என்றவர் உடலுழைப்பிற்கு விதிக்கப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்கள் உள்ளிட்ட ஏழை உழைக்கும் மக்களின் குடிப்பழக்கமே அவமானகரமாகச் சமூகத்தால் பார்க்கப்பட்டதையும் சரியாகச் சுட்டிக்காட்டினார். ’’மது ‘கீழ்’ ஜாதியார் என்பவர்களே பெரிதும் அருந்துவதால் அது குற்றம் குறை சொல்லத்தக்கதாக ஆகிவிட்டது. (விடுதலை 16.2.69)”, “நான் கீழ் ஜாதி என்பதை எப்படி ஒப்புக் கொள்வதில்லையோ அப்படித்தான் குடிகாரன் குற்றவாளி என்பதையும் மனைவி தவிர மற்ற பெண்களுடன் காதல் நடத்துபவன் குற்றவாளி என்பதையும் ஒப்புக்கொள்வதில்லை. (விடுதலை 16.2.69)” என்றார்.
பெரியாருக்கு எப்போதும் மது அருந்தும் பழக்கம் இருந்ததில்லை. சிறுவயதில் தான் ‘மைனர்’ வாழ்க்கை வாழ்ந்ததைக் குறிப்பிடும் பெரியார், மது அருந்தும் பழக்கத்திலிருந்து மட்டும் விலகியிருந்தார். தன் மைனர் வாழ்க்கையின் போது தனது குடிநுகர் நண்பர்களே வாயில் மது ஊற்றியபோதும், தான் குடிக்கவில்லை என்பதையும் பெரியார் குறிப்பிட்டிருக்கிறார். ஆனால் தான் குடிக்காதபோதும் ‘குடி என்பது அடிப்படை உரிமை’ என்பதைப் பெரியார் வலியுறுத்த தயங்கவில்லை. மது குறித்த பெரியாரின் கீழ்க்கண்ட கருத்துகள் ஆச்சரியகரமானவை.
மது தடைப்படுத்தப்பட்ட நாடு அடிமை நாடேயாகும். (விடுதலை 16.2.69)
“ஒரு மனிதனைப் பார்த்து நீ உன் மனைவியிடம் கலவி செய்யக் கூடாது என்று சொல்வதற்கும் நீ மது அருந்தக் கூடாது என்று சொல்வதற்கும் என்ன பேதம் என்று கேட்கின்றேன்.” (விடுதலை 18.3.71)
“மது விலக்கு என்பது ஒரு அதிகார ஆணவமே ஒழிய மனிதத் தன்மை சேர்ந்ததல்ல என்பதை எங்கு வேண்டுமானாலும் நிரூபிக்க தயார்.” (விடுதலை 18.3.71)
”மது அருந்துவது உணவைப் போல் மனித ஜீவ சுபாவம், மனித உரிமை என்றும் கூறலாம். வேத புராண தர்மங்களைப் பார்த்தால் விளங்கும். மது விலக்கு என்பது கொடுங்கோலாட்சியின் கொடுங்கோண்மையே ஆகும். பார்ப்பனர்கள் மாடு அறுக்கக் கூடாது, மாடு தின்னக் கூடாது என்று கூறுவதற்கும் அரசாங்கம் மது அருந்தக் கூடாது, யோக்கியமான மது உற்பத்தி வியாபாரம் கூடாது என்பதற்கும் என்ன பேதம் என்று கேட்கிறேன்.” (விடுதலை 9.11.68)
”தீபாவளிக்கு லீவு விடுவது எவ்வளவு முட்டாள் தனமோ அதை விட இரண்டு பங்கு முட்டாள் தனம் மதுவிலக்கு எடுக்கமாட்டேன் என்று பிடிவாதமாக இருப்பதுமாகும்.” (விடுதலை 21.10.69)
எல்லோருக்குமான ஒழுக்கம், எல்லோருக்குமான அறம், எல்லோருக்குமான நீதி என்னும் பெருங்கதையாடலை எப்போதும் பெரியார் மறுத்தவர். சுயேச்சை அறங்களும் சார்புநீதியும் தான் அவர் எப்போதும் வலியுறுத்தி வந்தது. ஒழுக்கத்தின் பேராலும் கலாச்சாரத்தின் பேராலும் வலியுறுத்தப்பட்ட நியதிகளின் பின்னாலிருந்த அரசியலையும் பேதத்தையும் அநீதியையும் வன்முறையையும் அடிமைத்தன்னிலையாக்கத்தையும் பெரியார் அளவுக்குத் தோலுரித்தவர்கள் இந்திய அளவிலேயே யாருமில்லை என்று சொல்லலாம். கற்பு, ஒழுக்கம், காதல், பலதார மணம், குழந்தைப்பேறு, திருமணம் ஆகியவை குறித்த பெரியாரின் கருத்துக்கள் எந்தளவு துணிச்சலானவையோ அந்தளவு குடி குறித்த பெரியாரின் கருத்துக்களும் தைரியகரமானவை. ’குடிகாரர்கள் அயோக்கியர்கள்’ என்கிற பொதுப்புத்தியிலிருந்தும் விலகி மிதந்து வெளியேறி நிற்பவை பெரியாரின் சிந்தனைகள்.
’’மது அருந்துபவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்பற்றவர்கள் என்றும் மது அருந்தாதவர்கள் எல்லோரும் யோக்கிய பொறுப்புடையவர்கள் என்றும் கருதிவிடக்கூடாது. மனிதத்தன்மைக்கு மது அருந்துவது இழுக்கு என்று கருதக்கூடாது....குடிப்பழக்கமில்லாதவர்களில் எத்தனை யோக்கியமற்றவர்கள், கைசுத்தமற்றவர்கள், சமுதாயத்திற்குக் கேடானவர்கள் இருக்கிறார்கள். இவர்களைவிட மது அருந்துபவர்கள் கேடர்கள் அல்ல. மது அருந்துவது சட்டவிரோதம் என்று சொல்லலாம். லஞ்சம் வாங்குவதுகூட சட்டவிரோதம்தான். லஞ்சம் வாங்கப்பட்டவர்கள் எல்லாம் சமுதாயத்தில் தள்ளப்பட்டவர்களா? தண்டிக்கப்பட்டவர்களா? (விடுதலை 16.2.69)”
மதுவை அனுமதிப்பதை வலியுறுத்தி வந்தபோதிலும் மக்களுக்குக் கெடுதியற்ற தரமான மது வழங்கப்பட வேண்டும் என்பதையும் நல்ல மதுபானத்தைப் பெற்று அருந்துவது அனைவரின் உரிமை என்பதையும் வலியுறுத்தவும் பெரியார் தயங்கவில்லை. அளவான குடி, மகிழ்வான வாழ்க்கை என்பதும் பெரியாரின் பரிந்துரைகளில் ஒன்றாக இருந்தது.
“பொதுவாக மது அருந்துவதையே குற்றமென்று சொல்லிவிட முடியாது. கெடுதி உண்டாக்கும் படியானதும் பொருளாதாரத்திலும் அறிவியலிலும் கேடு விளைவிக்கும்படியானதுமான மதுபானமே இன்று விலக்கப்பட வேண்டியது ஆகும் அதைத்தான் நாம் மதுவிலக்கு என்பதே ஒழிய மதுவையே அடியோடு எப்போதும் யாரும் வெறுக்கவில்லை.” (கு.அ. 3.10.1937)
”மதுவிலக்கை ஒழித்துவிட்டு மது ஆட்சி என்பதாக ஏற்பாடு செய்து மதுவினால் கேடில்லாமல் அதிக செலவில்லாமல் எவ்வளவு குடித்தாலும் அதனால் உடலுக்கும், புத்திக்கும், குடும்பத்திற்கும் கேடு வராமல் பாதுகாப்பளிக்கலாம். மது ஆட்சி என்பது கர்ப்ப ஆட்சி - பர்த் கன்ட்ரோல் என்பது போல் குடி ஆட்சி - டிரிங்க் கன்ட்ரோல் என்பதாக நடத்தலாம். இதனால் உடலுழைப்பாளிகள் நலம் பெறுவார்கள். பழைய கள், புளிச்ச கள் இருக்கவிடக்கூடாது. சுகாதார (நாணயமான) அதிகாரிகளை வைத்து மதுக்கடை மதுவை பரிட்சீத்து சோதனை செய்யவேண்டும். சர்க்கார் அதில் அதிக வரும்படி எதிர்பார்க்கக்கூடாது என்பவைகளை கவனித்தால் மது மக்களுக்கு நன்மை பயப்பதாகலாம்” (விடுதலை 29.11.62)
”தலைசிறந்த நாகரிக மக்கள் நாட்டில் மது அருந்துவது மற்றவர்கள் கவனிப்பே இல்லாத சர்வ சாதாரண அவசிய செய்கையாக வழக்கமிருந்து வருகிறது. நமது நாட்டு ஜனநாயக ஓட்டு முறை, தேர்தல் முறை இருந்து வருகிற கூடாத காரியத்தை விட மது அருந்துவதும் அதன் பயனும் கேடான காரியமா என்று கேட்கிறேன்.” (விடுதலை 9.11.68)
”100 ஆண்டு 75 ஆண்டுகளுக்கு முன்பு மது குற்றமற்ற ஒரு சாதனமாகத் தான் இருந்தது. அரசாங்கம் மதுவை அரசாங்க வியாபாரப் பொருளாக ஆக்கினதுடன் அரசாங்கமே மது வியாபாரம் செய்ய ஆரம்பித்த பிறகுதான், மது அருந்துவது (குடி) கெட்டது என்று சொல்லும்படி ஆகிவிட்டது. மது வியாபாரிகள் மதுவுக்குள் இயற்கை போதையைவிட அதிக போதை ஏற்படும் படியான பக்குவம் செய்ததால் மதுவால் கெடுதி என்று சொல்லும்படியான நிலை ஏற்பட்டுவிட்டது.”(விடுதலை 9.11.68)
மதுவிலக்கு குறித்த பெரியாரின் கருத்துக்களைப் பரிசீலிக்கும்போது இன்றைய நிலை குறித்தும் யோசிக்க வேண்டியிருக்கிறது. 1937 குடியரசு இதழில் காந்தியின் கருத்தாக பெரியார் கூறுவதைப் பரிசீலித்தால், ‘உடலுழைப்பின் காரணமாகவே மது அருந்த வேண்டியிருக்கிறது. எனவே வேலையை லகுவாக்க வேண்டும்’ என்று காந்தி கருதியதைப் புரிந்துகொள்ளலாம். ஆனால் காந்தியின் கருத்துக்கு மாறான சூழலே இன்றையதாக இருக்கிறது. இன்று உடலுழைப்பு குறைந்திருக்கிறது. மூளை உழைப்பு அதிகரித்திருக்கிறது. 90களுக்குப் பின்னான பொருளாதார மாற்றம் மற்றும் பணிச்சூழல் மாற்றம் கிட்டத்தட்ட அனைத்துத்துறைகளிலும் கணினியை அழைத்து வந்திருக்கிறது. புதிய யோசனைகளும் மூளைச்சிந்தனைகளுமே தேவையாகவும் அதிக வருமானத்தை ஈட்டித் தருபவையாகவும் உள்ளன. ஆனால் உடலுழைப்பைப் போலவே மூளை உழைப்பும் மன உளைச்சல், எல்லைகளும் பகலிரவு வித்தியாசமற்ற வேலைநேரங்கள் என மதுவை நாட வைக்கின்றன. குடி என்பது பத்து ஆண்டுகளுக்கு முன்பிருந்ததை விட இப்போது அதிகரித்திருக்கிறது என்பதும் வெறுக்கும் மனநிலையிலிருந்து மாறி அனுமதிக்கப்பட்டதாகவும் ஏற்கத்தக்கதாகவும் மாறியிருக்கிறது என்பதே எதார்த்தமாயிருக்கிறது. வார இறுதி மதுவிருந்துகளும் கார்பரேட் அலுவலகங்களின் பார்ட்டிகளும் கலாச்சாரத்தின் ஓரங்கமாக ஓரளவு மாறியிருக்கின்றன.
இன்னொருபுறம் உடலுழைப்புத் தொழிலாளர்களும் நடுத்தர வர்க்கத்தினரும் மதுநுகர அரசு மதுக்கடைகளையே நம்பியுள்ளனர். சனி இரவு எந்த மதுக்கடை வாசல் முன்பும் ‘கிளம்பிற்றுகாண் தமிழ்ச்சிங்கக் கூட்டம்’ என்று பேரளவிலான கூட்டத்தைக் காண இயலும். ஆனால் அரசு குடிநுகர் மக்களின் நலத்தைக் கவனத்தில் எடுத்துக்கொள்வதில்லை என்பதோடு குறைந்தபட்சம் ஒரு வாடிக்கையாளராகக் கூட அவர்களை மதிக்கவோ பொருட்படுத்தவோ தயாராக இல்லை. சுகாதாரமும் கவனிப்புமற்ற மதுக்கூடங்கள், கோரப்படும் மதுவிற்குப் பதிலாக ஏதேனும் ஒன்றைத் தலையில் கட்டுவது, சுகாதாரமற்ற மது என்று அரசின் மதுவிற்பனை அநீதிகளைச் சொல்லிக்கொண்டே போகலாம். பெரியார் வலியுறுத்தியதைப் போல ‘தோப்புகளில் கள் விற்பது’ என்கிற நடைமுறை இன்றைக்குச் சரிவருமா என்று தெரியவில்லை. ஆனால் ‘மது அருந்துவது மனித உரிமைகளில் ஒன்று’ என்கிற பெரியாரின் கருத்தை ஒத்துக்கொள்பவராயிருந்தால் ‘பெரியார் ஆட்சி நடத்துவதாக’ப் பெருமைப்பட்டுக்கொள்ளும் கலைஞரிடம் ‘மதுவிலக்கை அமல்படுத்துவது என்கிற பூச்சாண்டி காட்டலை நிறுத்தக்கோருவதும்’, கள்ளுக்கடைகளைத் திறக்க வலியுறுத்துவதுமே நமது கடமையாக இருக்க முடியும்.

* - தலைப்பு 29.11.1962 விடுதலையில் பெரியார் எழுதிய தலையங்கம்.


 (நன்றி : லும்பினி)