தொலைவு



ஒரு துரோகிக்கும்
மாவீரனுக்குமான தொலைவு
அடையாளத்துக்காய்
நாய் சிறுநீர் பெய்துபோகும்
இருமின்கம்பங்களுக்கிடையிலான
தொலைவுதான்.
அந்த மின்கம்பங்களில் ஏதாவதொன்றில்தான்
என் அக்கா
விபச்சாரி என்று பெயர்மாட்டப்பட்டு
கொலைசெய்யப்பட்டிருந்தாள்.

13 உரையாட வந்தவர்கள்:

  1. Anonymous said...

    பின்னவீனத்துவம் ?

  2. லிவிங் ஸ்மைல் said...

    ..தான்... ம் மும் தான்...


    காசா பணமா...?!

    எப்பிடி எச்சா ஒரு ஆச்சர்யக் குறியும் சேத்துடம்ல...

  3. Anonymous said...

    சுகுணா திவாகர்

    ஒன்றைப் பட்டறிவுடன் உணர்ந்து எழுதுவதொன்று; மாதிரியாகப் பாவனை செய்து எழுதுவதொன்று. ஷோபா சக்தி இது போன்ற கவிதை எழுதுவதற்கும் (ஷோபா சக்தி கவிதை எழுதினால் ;-)) சாருநிவேதிதா போன்ற பாவனையாளர் எழுதுவதற்கும் வித்தியாசமுண்டு. இது கலகக்காரனாக வாழ்வதற்கும் கலகக்காரனாகப் பாவனை செய்வதற்குமுள்ள வித்தியாசம். (ஷோபா சக்தி இப்போதெல்லாம் தமிழகக்கலகக்காரர்களுக்குமட்டுமல்ல, தமிழகப்பெருந்தீனிப்பத்திரிகையாளர்களுக்கான நளினம் பொருந்திய சரிந்த தொப்பியுடனான செந்நிற 'சே' குவேரா மாதிரியான செவ்விகள் கொடுக்கத் தொடங்கிவிட்டாரென்பதும் அதன்மூலம் உடைக்கப்போன பிம்பங்களாகவே உருவாக்கப்படும் நோக்கிலே காலடி வைத்திருக்கின்றாரென்பதும் என் தனிப்பட்ட கருத்து; அண்மையிலே தீராநதிக்குக் கொடுத்த கலகக்காரர் செவ்வியும் சில ஆண்டுகளின் முன்னால் சென்னை வந்திருந்தபோது சந்திலே உட்கார்ந்து கொடுத்த படத்தோடு விகடனுக்குக் கொடுத்த செவ்விக்கும் அதிக வித்தியாசமில்லை. அவருடைய சத்தியகடதாசி வலைப்பக்கத்திலேகூட, புதிதாக எழுதுவதில்லை. அறுவடை செய்த பிம்பங்களிலே அசைபோட்டு, செரிமானம் பண்ணிக்கொண்டிருக்கிறார்). உங்களைப் போன்ற பல இணையக்கலகக்காரர்களின் நண்பர் சாரு நிவேதிதா ஒரு குரங்காட்டி என்றுதான் சொல்வேன். கூடுகிற கூட்டத்துக்கேற்ப சொற்குரங்கை வைத்து, "குத்துக்கரணம் அடிடா ராமா; போடுடா ராஜா பல்டி; ஐயா சரித்த குல்லாவுக்குள்ளே ஆட்டம் முடிய ஐந்து காசு போடுவார்; அம்மா ஜோராய் கைதட்டுவார்" கோணலாட்டம் ஆட்டுவதை முழு அல்லது முதன்மைத்தொழிலாகக் (தனக்கே நேர்மையாக எழுதுவது அவரது துணைத்தொழிலாகவிருக்கட்டும்) கொண்டிருக்கின்றார். ஒரு முறை தான் போகாத நியூ மெக்ஸிகோ மாநிலத்தின் நகரொன்றிலே தான் மற்றைய எழுத்தாளர்களைச் சந்திக்க நேர்ந்தால் என்று அவருடைய 'நடிகர்- எழுத்தாளர்' ஒப்புவமை விளையாட்டுபோல எழுதியிருந்தார். போகாத நியூ மெக்ஸிக்கோவின் நகரொன்றிலே ஏன் சந்திக்க விழையவேண்டும்? சென்னையிலே ஒரு மூலையிலே அதே எழுத்தாளரைச் சந்திக்கக்கூடாதா? இதுமட்டுமல்ல, அவருக்கு வாசித்த ஒரு நூலின் நாயகனாக, அல்லது அதிலேயிருப்பதையெல்லாம் தானே செய்திருப்பதாக 'சார்ந்ததின் வண்ணமாகி' சொல்லைச் சிதறடிக்கும்" விளையாட்டு - அது சில கலகக்காரர்களை அண்ணாந்து பார்க்கும் விசிறிகளிடம் ஒரு கவருபிம்பத்தைத் தரலாம் - ஆடுவதே அவரைத் தன்னை ஒரு கட்டுட்டைப்பாளராக, - முரண்நகையாக - கட்டுமானிக்க உதவுகின்றது. (சாராமல் ஒன்று; எம் ஜி சுரேஷின் நல்ல செவ்வி வந்திருக்கும் தீராநதியிலேகூட, சண்முகம் சிவலிங்கம், எஸ். வி. ராஜதுரை ஆகியோர் கட்டுடைத்தல் என்ற பதத்தினைப் பயன்படுத்தி, இருபத்தைந்து ஆண்டுகாலத்தின்பின்னால், இப்போது புதிதாக அடைப்புக்குறிகளுக்குள்ளே deconstruction என்பதைப் போட்டு, நிர்-நிர்மாணம் என்று கொலை செய்யும் தீராநதி எப்படியான விளிம்புநிலைச்சஞ்சிகையென்று ஆண்டவனுக்கே வெளிச்சம்; அடிமைகளுக்கல்ல ;-))

    இருக்கட்டும்.ஆனால், 'கொரில்லா', 'ம்' என்பவற்றிலே ஷோபா சக்தி மின்கம்பங்களிலே கட்டிக்கொலை செய்வது குறித்துச் சொல்வதிலேயிருக்கும் நேர்மை சந்தேகிக்கப்படமுடியாது; ('ம்' என்பது 'கொரில்லா'வின் சிறப்பினையிட்டு வந்த க்லகக்காரர்முகத்தின்பின்னான எச்சவெளியீடு என்பது என் தனிப்பட்ட கருத்து; அதிலே 'நிறமி' என்பவள் வெறுமனே ஒரு ஆரம்பத்துக்கும் முடிவுக்குமான சேர்ப்புத்தான். 'கொரில்லா' என்பதுகூட அவரது முன்னைய ஐரோப்பிய சஞ்சிகைகளிலே - தற்போது, பாலபாரதி பின்னவீனத்துவம் குறித்து உள்ளிட்ட கட்டுரை வெளிவந்த 'அம்மா' சஞ்சிகை உட்பட- வந்த சிறுகதைகளை வாசித்தவர்களுக்கு 'மீண்டும் வாசிக்கும்' மெல்லிய உணர்வினை அவ்வப்போது வாசிப்பிலே தரும்). அவர் கொரில்லாவிலே பயன்படுத்தும் 'தூசணம்' கலகக்காரன் வேண்டுமென்றே பயன்படுத்த எண்ணும் 'தூசணம்' ஆகத் தெரியாது. அவ்வகையிலே அவரது நேர்மை அவரின் எழுத்தளவிலே சிலாகிக்கத்தக்கது. அதேபோலவே, சாருநிவேதிதாகூட பாலியற்றொழில் செய்கின்றவர்களைக் குறித்து அக்கா, அம்மா என்று துணிந்து ஒரு கவிதையை எழுதுவதையிட்டு - அப்படியாக பாலியற்றொழிலிலே தன் குடும்பத்தினர் ஈடுபடவேண்டிய நிலைமையிருந்ததைக்கூட அவர் தன்னைப் பற்றி ஒன்னொரு சுற்று ஒளிப்படலமாக்கவே செய்கிறாரென சந்தேகமுண்டு - ஒரு நியாயத்தைக் காணலாம். அதையும் பாராட்டலாம்.

    இப்போது, உங்களின் அண்மைக்கவிதைகளைக் கவனிப்போம்; (இவற்றிலொன்றின் உடனடித்தூண்டல் எதிர்வினையே அண்மையிலே உங்கள் துவக்கினைத் தூக்கும் கவிதை குறித்து அந்நேரத்திலே வந்ததைக் கிறுக்கியதும் அடிக்காமல், திருத்தாமல் அங்கே பின்னூட்டமாகப் போடவேண்டியதற்குமான காரணங்கள். அண்மையிலே, கோவி கண்ணன், நாமக்கல் சிபி, சிறில் அலெக்ஸ் ஆகியோரின் காதலர் தினக்கவி தையல்களுக்கும் "அநாநி :-)" 'கவி' தைத்தத்துப் போட்டதும் கிட்டத்தட்ட இதேபோன்ற ஒரு காரணமென்றே கொள்ளலாம்.) எனக்குப் புரியாதது ஒன்று; குழந்தமை துவக்கினால் அழிதல், மின்கம்பத்தண்டனை-மாவீரர்-விபசாரி (இப்பதம் தனிச்செயற்பாட்டின்போது துருத்தினாலுங்கூட, கவிதை சொல்லவரும் கருத்தினைக் குறித்து இஃது அவசியமெனக் கொள்ளலாம்; இதுதான் ஷோபா சக்தி 'தூசணம்' கதையிலே கலகத்தினைச் செயற்பாட்டாகப் பயன்படுத்துவதற்கும் விளிம்புநிலைச்சொற்களென்று சொல்லி, கலகக்காரன் போலாகிப் பாவனை செய்ய மட்டும் பயன்படுத்த விழைவதிலேயும் இருக்கும் வித்தியாசம்) என்று கவிதை எழுதுகின்றீர்கள். இது தமிழ்நாட்டிலே உங்களைச் சுற்றி நிகழ்கின்றதா? நிகழாவிடத்து, இது பாவனை பண்ணுதலாக, மிகவும் செயற்கைத்தனமாகத் தோன்றவில்லையா? இப்படியான அதீத 'விளிம்புநிலைக்கலகக்காரர்' முகத்துக்கும் விடுதலைப்புலிகளின் ஒவ்வொரு செய்கையினையும் நியாயப்படுத்தும் 'வலைப்போராளி'களுக்கும் என்ன வித்தியாசம்? அண்மையிலே பூங்காவிலே தோன்றிய உங்கள் எதிர்வினையொன்றிலே, உங்கள் ஏப்ரஹாம் குறித்த கட்டுரையின் ஒரு வரி - அவரின் குடிப்பழக்கம் குறித்தது - விடப்பட்டது, "அறவியல்சார்ந்த காரணத்தினாலே நீக்கப்பட்டிருக்கலாம்" என்று குறித்திருந்ததை வாசிக்க நேர்ந்தது. இதையிட்டு, குடிப்பது என்பதைக்கூட கட்டுமைத்தனமான அறவியலை எதிர்க்கும் கலகக்காரர்தனமாக எண்ணிக்கொள்கிறீர்களோ எனத் தோன்றியது.


    உங்களினதும், பொட்'டீ'க்கடை, வரவனையான், ராஜாவனஜ், ஆழியூரான் ஆகியோரின் பதிவுகளிலே வரும் பல கருத்துகளோடு தனிப்பட்டவளவிலே எனக்கு முற்றாக உடன்பாடுண்டு. ("உன் தனிப்பட்ட கருத்தினை யார் கேட்டார்?" என்றாலும் நியாயமுண்டேயாயினுங்கூட, இங்கே என் எதிர்வினை உங்களைச் சாடுவதென்றே எழுதப்படுவதாகத் தோன்றிவிடக்கூடாதென்பதாலே சுட்டவேண்டியிருக்கின்றது) ஆனால், சில சந்தர்ப்பங்களிலே, கலகக்காரனாக இயல்பிலே அமைந்து வாழ்வதற்கும் கலகக்காரன்_போல்மை செய்வதற்குமான வேறுபாட்டினைக் குறித்த உங்கள் கருத்தினை அறிய விருப்பமேற்படுவதுண்டு. இங்கே அதற்கான சந்தர்ப்பம் கிடைத்ததெனத் தோன்றியது. அதனாலே, எழுதினேன். (இப்படியாக, பின்னூட்டம் எழுதுவதுகூட இப்போது செய்வதில்லை; ஏனெனில், பதிவாளர்களுடன் சண்டைபிடிப்பதே பதிவுலகிலே என்னைக் கலகக்காரன் ஆக்குதலோ என்று எனக்குப் படுவதால்.) உங்கள் பதிலினைக் கண்டு மீண்டும் தொடர எண்ணம்?

  4. குழலி / Kuzhali said...

    //ஒன்றைப் பட்டறிவுடன் உணர்ந்து எழுதுவதொன்று; மாதிரியாகப் பாவனை செய்து எழுதுவதொன்று.//

    //கலகக்காரனாக இயல்பிலே அமைந்து வாழ்வதற்கும் கலகக்காரன்_போல்மை செய்வதற்குமான வேறுபாட்டினைக் குறித்த உங்கள் கருத்தினை அறிய விருப்பமேற்படுவதுண்டு.
    //
    பெயரிலி நிறைய முறை யோசித்திருக்கிறேன், இதையே சற்று மாற்றி தலித் பற்றி எழுதுவதற்கு தலித்தாக பிறந்திருந்தால் மட்டுமே முடியும் என்று கூட யோசித்திருக்கிறேன், தலித் பற்றி தலித் அல்லாதவர்கள் எழுதக்கூடாதா? அப்படியெழுதினால் அது போலித்தன்மையானதா என்றெல்லாம் குழம்பியிருக்கிறேன், உண்மைதான் தலித் பற்றி தலித் எழுதுவதற்கும் பிறர் எழுதுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது, பசியோடிருப்பவன் அதை சொல்வதற்கும் பசியோடிருப்பவனை பார்த்து அதை பிறர் சொல்வதற்கும் உள்ள வித்தியாசம் தான் தலித் எழுதுவதற்கும் தலித்தை பற்றி பிறர் எழுதுவதற்கும் உள்ள வித்தியாசம், ஆனால் அதே சமயத்தில் தலித்தை பற்றி பிறர் எழுதுவதற்கு தகுதியில்லையென்றோ தவறென்றோ அது போலித்தனமானது என்றும் சொல்லிவிடமுடியாது, இரண்டிற்கும் வித்தியாசம் உண்டு ஆனால் அதற்காக போலித்தனம் என்று கூற இயலாது.

    பசியைப்பற்றியும், வன்கொடுமைகளைப்பற்றியும் தமக்கு ஏற்படாமல் நிலபுலன்கள் இருந்தும் பணக்கார வளமையான வாழ்க்கை எதிரில் இருந்தும் புரட்சியாளர்களாக வாழ்ந்து விளிம்புநிலை மக்களுக்காக போராடியவர்களை எங்கெங்கோவெல்லாம் தேடத்தேவையில்லை தமிழகத்திலேயே புலவர் கலியபெருமாள், தமிழரசன், வாட்டாக்குடி இரணியன் என்று ஒரு பெரிய பட்டியலே உண்டு, கடைசியாக வீரப்பனோடு சேர்ந்து கொண்டு ராஜ்குமார் கடத்தல் நடத்திய மாறன் புரட்சி இயக்கங்களில் சேருவதற்கான எந்த வறுமை சூழலோ, போர் சூழலோ இல்லாத ஒரு கிராமத்து நிலவுடமையாளரின் கடைசி செல்ல மகன் தான், இவர்களெல்லாம் புரட்சியாளர்கள் எனலாமா? அல்லது புரட்சியாளர்களாக பாவித்துக்கொண்டவர்கள் எனலாமா?

    மற்றபடி நீங்கள் கேட்பதற்கும் நான் சொன்னதற்கும் தொடர்பு இருக்கின்றதா எனத்தெரியவில்லை, ஏனெனில் வழக்கம் போல உங்கள் பின்னூட்டம் எனக்கு அரைகுறையாக மட்டுமே புரிந்தது. :-)

  5. RamaniKandiah said...

    குழலி,
    நீங்கள் சொல்வதோடு எனக்கேதும் மாறுபாடில்லை. தலித்தாக இருந்தால்மட்டுமே தலித்தின் வேதனையைப் புரிந்துகொள்ளமுடியுமென்று நான் எதிர்பார்க்கவில்லை. இதே வாதம் சுந்தரராமசாமிக்கும் தகழிக்குங்கூடப் பொருந்துமென்றாலுங்கூட, சில சமயங்களிலே ஏதோ முழுமையாக ஏற்கவிடாமற் தடுக்கின்றது; இதற்கு, அவர்கள் 'இறங்கி'ப் போராடவில்லை; தமக்கு இழப்பேதுமோ இறக்கமேதுமோ தராத - முரணாக ஏற்றத்தினையே தரவைக்கும் - எழுத்துப்போராளி/லிகளாகக் காணப்பட்டதும் காரணமோவென நினைக்கிறேன். சேகுவேரா, மாறன் போன்றோர் மாற்றாக இறங்கிப் போராடியவர்கள்.

    இங்கே நான் இக்குறிப்பிட்ட இடுகையிலே எனது பின்னூட்டத்தை எழுதியதற்கு உந்துதல், இக்கவிதையின் கருவும் பயன்படு பதங்களும். அண்மையிலே ஈழத்திலே பாலியற்றொழிலாளி என ஒரு பெண் கொல்லப்பட்டதாகச் செய்தி இணையத்திலே வந்திருந்தது; அவர் விடுதலைப்புலிகளாலே கொல்லப்பட்டார் என விடுதலைப்புலிகளுக்கு எதிரானவர்களும் அதற்கு எதிர்மாறாக விடுதலைப்புலிகளும் அறிக்கைப்போர் நிகழ்த்தியதையும் கண்டிருப்பீர்கள். பெண்ணியலூடகங்கள் இரண்டுக்கும் மாற்றான பார்வையினையும் வைத்திருந்தன. அவர் மின்கம்பத்திலே வைத்துக்கொள்ளப்படவில்லை. முன்னைய காலங்களிலே விடுதலைப்புலிகளைவிட மற்றைய இயக்கங்களும் காட்டுமிராண்டித்தனமான மின்கம்பத்தண்டனை அநியாயத்துக்கு கோழி களவெடுத்தவனுக்குக்கூடக் கொடுத்திருக்கின்றன. (அந்நேரத்தின் இந்தியாவின் இலங்கைத்தூதுவர் தீக்ஷித்தின் மனைவி விஜயா தீக்ஷித், "வரதட்சணை வாங்குகின்றவர்களுக்கு இத்தண்டனைதான் தரவேண்டும்" என இந்திய அமேதிப்படை ஈழத்திலேயிருந்தபோது, கருத்துக்கூறி எல்லாப்பக்கங்களிலும் வாங்கிக்கட்டிக்கொண்டார்.) ஆனால், இன்றைய நிலையிலே ||நானறிந்த வரையிலே|| மின்கம்பத்தண்டனையென்பது ஈழத்திலே வழக்கப்படுவதாகத் தெரியவில்லை. தமிழ்நாட்டிலே மாவீரர், துரோகி என்ற பதங்களும் மின்கம்பத்தண்டனை, (இராணுவத்துக்குத் தொடர்பான) பாலியற்றொழிலாளி என்பதாலே கொல்லப்படுதல் என்ற செயற்பாடுகளும் நடைமுறையிலே ஒன்றோடொன்று சம்பந்தப்பட்டிருப்பதில்லை என்பதென் புரிதல். அதனாலேயே இக்கவிதை (முன்னைய துவக்கினைத் தூக்கும் சாந்தனா கவிதைபோல ஈழம் குறித்ததென நம்புகிறேன்). அண்மையிலே வந்த 'மண்' படம் குறித்த திறனாய்விலே சுகுணா திவாகரும் அ. மார்க்ஸ் போலவே படத்தின் முரண்படும் பிரிவினரைத் தவறாகப் புரிந்து கொண்டாரென வாசித்தளவிலே கண்டேன். இதனால், இவரது பார்வை, ஷோபா சக்தி போன்றோர் ஊடாக (மட்டும்) ஈழத்தினைப் புரிந்துகொள்வதால், வரும் விளைவோவெனத் தோன்றியது. இந்தவிடத்திலேதான், நீங்கள் சொல்லும் தலித் படுகின்ற துயரைப் பார்த்துக்கொண்டிருக்கின்றவன், அவதானமாக, முழுமையான புரிதலோடு பார்க்கவேண்டுமெனத் தோன்றுகிறது. அவ்வாறு புரிந்து கொள்ளாவிட்டால், இரக்கம் வெறுமனே செய்துகாட்டும் பாவனையாகிவிடும். சுகுணா திவாகரின் ஈழம் பற்றிய புரிதல் பற்றி நான் எண்ணுவது முழுக்கவே தவறாகக்கூட இருக்கலாம். அதற்கும் வாய்ப்புண்டு. ஆனால், இக்கவிதை அப்படியாக, என்னைப் பொறுத்தமட்டில், துயரை முழுதாகப் புரியாமற் பேச வந்ததால், அங்கதமாகிவிட்ட ஒரு படைப்பெனப் பட்டது. மற்றவர்கள் சிறப்பானதாகப் புரிந்துகொண்டிருக்கலாம். மிகுதிப்படி, "இவ்வாரத்தின் தமிழ்மணத்தின் சிறப்பான இடுகை" என அவர் எழுதிய 'எதிர் அழகியல் - தமிழ்நதியின் சிறுகதையை பின் மற்றும...' இடுகைதான் எனக்கு அவர் இட்டபோதே தோன்றியது. நா சொல்ல வந்ததைப் புரியும்படி சொன்னேனா எனத் தெரியவில்லை. ஆனால், இதற்குமேலே தெளிவாக என் வலிமைக்குட்பட்டுச் சொல்லவும் தெரியவில்லை. :-(

    நான் எழுதியது உங்களுக்கு அரைகுறையாகப் புரிந்ததே பெரிது. எனக்கே ஒரு நாள் கடந்தால், என்ன எழுதினேன் என்பது புரிவதில்லை. :-) என்றாவதொருநாள் இருந்து திருத்தி ஒழுங்காக்கி எழுதும் ஒரு காலம் வராமலா போகப்போகிறது? :))

  6. மிதக்கும்வெளி said...

    அன்பின் இனிய பெயரிலி

    உங்கள் எதிர்வினைக்கு நன்றி. எனது மற்றைய எழுத்துக்கள் குறித்து என்ன நினைக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியவில்லை. இருந்தபோதும் ஈழப்பிரச்சினை தொடர்பான எனது எழுத்துக்களுக்கு மட்டும் எதிர்வினை செலுத்தியிருக்கிறீர்கள். மீண்டும் நன்றி.
    உங்களின் மய்யமான கேள்விக்க்குப் போவதற்கு முன்னால் சிலவைகள் :
    சாருநிவேதிதா குறித்து உங்களின் கருத்துக்களில் எனக்கும் பெரும்பாலும் உடன்பாடு உண்டு. சீரோடிகிரி போன்ற முக்கியமான பிரதிகளைத் தந்தவர் என்ற முறையிலும் அவரது எழுத்துகளின் அடிநாதமாகத் தொடரும் பகிடி குறித்தும் எனக்குத் தனிப்பட்ட விருப்பம் உண்டு. அதற்காக சாரு செய்யும் கோணங்கித்தனங்களையெல்லாம் நான் ஆதரிக்கிறேன் என்று அர்த்தமாகாது.
    உதாரணமாக எனது எதிர் அழகியல் குறித்த கட்டுரையில் சாருவின் 'ராசலீலா'வை உதாரணமாகச் சுட்டியிருக்கிறேன். ஆனால் அதைத்தாண்டி அந்தப் பிரதியில் செயற்கையாகக் காணப்படும் பாலியல் தொடர்பான விஷயங்கள், பெண் எழுத்தாளர்களைக் கொச்சைப்படுத்துவது, மனுஷ்யபுத்திரன் போன்ற சுஜாதா வியாபாரிகளை நியாயவான்களாகச் சித்தரிப்பது ஆகியவற்றில் எனக்கு விமர்சனங்கள் உள்ளன.
    இன்னொன்று சாருவை முழுமையாக நம்பமுடியாது. அவர் திடீரென்று 'குரு தமிழ்ச்சினிமாவின் மைல்கல்' என்று பல்டியும் அடிப்பார். துப்பட்டா சர்ச்சையிலும் குஷ்பு தொடர்பான விவகாரத்திலும் அவர் அடித்த ஸ்டண்ட்கள் உங்களுக்கு ஞாபகமிருகும். தினமலர் போன்ற தலித் விரோத முஸ்லீம்விரோத தமிழின விரோதப் பத்திரிகையை ஆதரிப்பது குறித்து அவருக்குக் கிஞ்சிற்றும் வெட்கமில்லை. சாரு, காலச்சுவடு கண்ணன் போன்றோரின் சன்டி.வியின் ஏகபோக ஆதிக்கத்திற்கெதிரான 'அறச்சீற்றம்' தினமலரின் நட்புபாற்பட்டதே. எனவே சாரு ஒரு சுவாரசியமான எழுத்தாளர். அவர் பொய் சொல்கிறார் என்று தெரிந்தே அவரை ரசிக்க முடியும். அவ்வளவே.
    எம்.ஜி.சுரேசின் பேட்டி உங்களுகு முக்கியமானதாகப் பட்டிருக்கிறது . மன்னிக்கவும் எனக்குக் காமெடியாக இருந்தது. பின்நவீனத்துவ விளக்கங்களால் மண்டை சூடேறித்தவிக்கும் பலருக்கும் ஆசுவாசப்படுத்த்த உதவுவது சுரேசின் காமெடிகள்தான். நீங்கள் குறிப்பிடும் நிர்நிர்மாணம் காமெடியோடுதான் பேட்டியே தொடங்குகிறது. அதைவிட சூப்பர் காமெடி 'பின்நவீனத்துவத்திற்கு இப்போது வயது முப்பத்தெட்டு'. ஆனால் இதற்கெல்லாம் காரணம் தீராநதி(அதென்ன விளிம்புநிலைச்சஞ்சிகை?)யோ பேட்டியெடுத்த கடற்கரையோ அல்ல. தனது 'பின்நவீனத்துவம் என்றால் என்ன?' என்ற நூலில் சுரேஷ்தான் என்ற வார்த்தைக்கு நிர்நிர்மாணம் என்ற பதத்தை அருளினார்.
    நீங்கள் சொல்வதுபோல குடிப்பது கலகசெயற்பாடு என்கிற சிறுபிள்ளைத்தனமான எண்ணம் எனக்கும் இருந்தது. ஆனால் தமிழகத்தின் மக்கள்தொகை ஆறுகோடியென்றால் இரண்டரைகோடி கலகக்காரகள் தேறுவார்கள் என்பதால் அந்த எண்ணத்தைக் கைவிடலாயிற்று. ஆனால் நீங்கள் குறிபிடும் ஜானைப் பற்றிய என் எதிர்வினையில் ஒரு அய்யமாகவே அதை முன்வைத்தேன். சிலநேரங்களில் மய்ய அறங்களுக்கு எதிராக இப்படிப்பட்ட கோமாளித்தனங்களைச் செய்யவேண்டியிருக்கிறது.
    ஷோபாவின் பேட்டிகளைப் பொறுத்தவரை நீங்கள் நினைப்பதுபோல அந்த இரண்டு பேட்டிகளையும் நான் நினைக்கவில்லை. ஆனால் சமீபத்தில் குமுதத்தில் வந்த அவரது பேட்டிதான் ஒரு நகைச்சுவைத் துணுக்கைக் கையளித்தது.
    வைகோ, நெடுமாறன், திருமாவளவன் ஆகியோரின் புலி ஆதரவு நிலைப்பாட்டிற்குப் பதில் அளிக்கும் ஷோபா முன்னிருவரையும் வியாபாரிகள் என்று புறமொதுக்கிவிட்டு திருமாவிடம் அரசியல் அறம் இருக்கிறது. புலிகள் அவரைப் பயன்படுத்திக்கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார். திருமா ஒரு தலித் தலைவர் என்பதால் ஷோபா இந்தச் சலுகையைத் திருமாவுக்கு அளித்திருப்பார் என்று தோன்றுகிறது.
    உண்மையில் தமிழ்நாட்டுச்சூழலில் இருப்பவர்களுக்குத்தான் தெரியும், திருமாவைவிட வைகோவும் நெடுவும் நூறுமடங்கு மேலானவர்கள் என்பது. வைகோ மீது எனக்கு ஆயிரம் விமர்சனங்கள் இருந்தபோதும் அவரது புலி ஆதரவு என்பது உணற்வின்பாற்பட்ட விஷயம். ஆனால் திருமாவுக்கோ அது மய்யநீரோட்ட அதிகாரத்தை நோக்கி நகரக்கூடிய ஒரு துருப்புச்சீட்டு, அவ்வளவே.
    தனிநபர் வழிபாடு, போலி சாகசவாதம், அதிகாரத்திற்கு வருவதற்குள்ளேயே ஊழல், கற்பு பற்றிய சர்ச்சையில் வெளிப்பட்ட ஆணாதிக்கத் தன்னிலை, மொழிச்சிறுபான்மையினர் மீது கக்கும் தூய்மைவாதக் காழ்ப்பு, அருந்ததியர்களைப் புறக்கணிக்கும் சாதிய உளவியல் எனப் பல அம்சங்களைக் கொண்டவர் திருமா. அவரை அரசியல் அறம் கொண்டவர் என்று சொல்வதைவிடவும் பகிடியானதும் துயரமானதும் வேறொன்றுமில்லை.
    மேலும் நீங்கள் 'ம்' நாவல் பற்றிக் குறிப்பிடுவது பற்றி... ஷோபாவின் 'கொரில்லா' நாவல் புலி ஆதரவுப்போக்கு கொண்டது என்று கற்சுறா விமர்சித்தது உங்களுக்கு நினைவிருக்கும் என்று நம்புகிறேன்.
    வரவணையான், பொட்டிக்கடை சத்யா, ராஜ்வனஜ், அசுரன், நான் ஆகியோரிடம் சில கருத்தொற்றுமைகள் உள்ளன. சாதி எதிர்ப்பு, தலித் ஆதரவு, ஏகாதிபத்திய எதிர்ப்பு, இடதுசாரி ஆதரவு, ஆணாதிக்க எதிர்ப்பு, பார்ப்பன எதிர்ப்பு ஆகிய பல. ஆனாலும் எங்களுக்குள்ளும் பல நுட்பமான வேறுபாடுகள் உள. உதாரணமாக வரவணையான் தீவிர ஈழ ஆதரவாளர்.
    நானும் ஒருகாலத்தில் அப்படித்தானிருந்தேன். பிரபாகரனின் புகைப்படத்தைச் சட்டைப்பையில் வைத்துப் பெருமையாகச்சுற்றித் திரிந்திருக்கிறேன். நான் பெரியாரியக்கங்களில் இருந்தவன். ஈழப்போராளிகளை ஆதரிப்பதிலும் அதற்காக இழப்புகளைச் சந்தித்ததிலும் பெரியாரியக்கத்தவர்கள் மட்டுமே அன்றும் இன்றும் முதன்மை ஆளாக நின்றனர். ஆனால் நாங்கள் இயக்கங்களில் இருந்தபோது எங்களுக்குச் சாகசக்கதைகளே கற்பிக்கப்பட்டன. சிலகாலத்திற்குப்பின் ஈழத்தின் சாதியப்பிரச்சினை உள்ளிட்ட பல பிரசினைகளில் ஒலிக்கத்தொடங்கிய மாற்றுக்குரல்களோடு அமைப்புகளை அணுகியபோது அவர்களிடத்தில் பதில் இல்லை. அதற்குப்பதிலாக ஒதுக்கும் அலட்சியமனோபாவமே பதிலாகக் கிடைத்தது. இயக்கத்திலிருந்து நாங்கள் வெளியேறினோம்.
    ஆனால் இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதாலேயே ஈழத்தமிழர்களின் மீது எனக்கு அக்கறை இல்லை என்று நீங்கள் நினைக்கமாட்டீர்கள் என்றே நான் கருதுகிறேன். எனெனில் சில நெருக்கமான ஈழத்து நண்பர்களும் 'நாங்கள் உயிருக்குப் பயந்து போராடிக்கொண்டிருக்கும்போது நீங்கள் சொகுசான வாழ்க்கையிலிருந்துகொண்டு விமர்சனங்கள் என்ற பெயரில் கதையடித்துக்கொண்டிருக்கிறீர்கள்" என்று எங்களை நோக அடிக்கின்றனர். தொப்புள்கொடி உறவு என்கிற மாய்மாலங்களையெல்லாம் தாண்டி உலகின் எம்மூலையில் எதுகாரணத்தினாலும் ஒடுக்கப்படுபவர்கள் மீது எனக்குக் கரிசனமும் அக்கறையுமிருக்கிறது. குஜராத்தில் முஸ்லீம்கள் இனப்படுகொலைகளால் பலியானபோது உறங்கவும் முடியாமல் சாப்பிடவும் முடியாமல் தவித்தவந்தவன் நான். அதற்காக இரங்கும் மனம் ஈழத்தமிழர்களுக்கு மட்டும் இரங்காதா என்ன? நான் இரண்டு வரிகளுக்கு முன்பு எழுதியதை மறுத்து 'நான் பேசும் மொழியும் அவர்கள் பேசும் மொழியும் ஒன்றாக இருப்பதால் அவர்களின் பிரசினைகளிலும் துயரங்களிலும் கூடுதலான அக்கறை இருக்கிறது' என்றும் சொல்லிக்கொள்ள விரும்புகிறேன்.
    தமிழ்கத்தில் ஈழத்து அகதிகளின் நிலையைப் பாருங்கள். இங்கு புலிவேசம் ஆடும் தமிழ்தேசியச் சாகசக்காரர்கள் நாயினும் கீழான வாழ்க்கையை வாழும் அகதிகளின் உரிமைகளை, உரிமைகளைக் கூட அல்ல, குறைந்தபட்சம் அடிபடை வசதிகளைக் கூடப் பெற்றுத்தருவதற்குப் போராடியிருக்கிறார்களா? அவர்களுக்குத் தேவையெல்லாம் போலிப்பெருமிதம்தான். சில நாட்களாக 'உணர்வுகளி'ன் பதிவுகளைப் படித்திருப்பீர்கள்தானே? ஜடாயு போன்ற இந்துப்பாசிஸ்ட்களுக்கு ராமன் இந்துப்பெருமிதம். உணர்வுகளுக்கோ ராஜராஜசோழன் தமிழ்ப்பெருமிதம். இத்தகைய விமர்சனங்களை முன்வைப்பதாலேயே என்னை நீங்கள் உங்களுக்கு எதிரியாகப் பாவித்தால் நிரூபிக்க என்னிடம் ஏதுமில்லாததால் உள்ளுக்குள் குமைவதைத் தவிர வேறு என்ன வழிதானிருக்கிறது?
    நீங்கள் என்னை இணையக்கலகக்காரன் என்று குறிப்பிட்டிருப்பது கஷ்டமாக இருக்கிறது. எனக்கு இந்த இணையம் இழவெல்லாம் ஒரு ஆறுமாதகாலம் அறிமுகமானதுதான். அதற்குமுன்பே இயக்கங்களில் செயல்பட்டது, சிறுபத்திரிகைகளில் எழுதியது எல்லாவற்றையும் ஒற்றைவார்த்தையிலே காலிபண்ணிவிட்டீர்கள். நீங்கள் முதலாவதாகவும் கடைசியாகவும் கேட்கும் கேள்விக்கு வருகிறேன். ஈழத்தமிழரல்லாத நான் ஈழப்பிரச்சினை குறித்து ஏன் எழுதுகிறேன் என்று கேட்கிறீர்களா என்று தெரியவில்லை. நீங்கள் குறிப்பிடுவதைபோலவே தமிழ்நாட்டில் ஈழத்தில் நடப்பதைப்போன்ற தூலமான வன்முறை இல்லை. அரூபமான வன்முறையே இருக்கிறது. இரண்டில் எது கொடூரமானது என்னும் விவாதத்தில் எனக்கு விருப்பமில்லை. ஆனால் ஒன்று புரியவில்லை. அபுகிரைப் சிறைக்கொடுமைகள் பற்றி எழுதவேண்டுமானால் நான் ஈராக்கியனாகத்தான் இருக்கவேண்டுமா என்பது விளங்கவில்லை.
    ஆனால் உங்கள் கேள்விக்கு இன்னொரு பரிமாணமும் இருக்கத்தான் செய்கிறது. குழலி சொல்வதைப்போல தலித்துகளின் எழுத்துகளைத் தலித்துகள்தான் எழுதவேண்டும் என்பதைப்போன்ற பிரச்சினையாக இருந்தால்? அது உண்மைதான். யாரையும் விட வலியையும் துயரத்தையும் பாதிக்கப்பட்டவர்களே விளக்கமுடியும். மற்றவர்களின் பார்வை என்பது என்னதானிருந்தாலும் வெளியிலிருந்து வேடிகை பார்த்து கருத்து சொல்லும் மனோபாவம்தான். நீங்கள் சொல்வதைப்போல அது தன்னை நியாயவானாகவோ அல்லது கலகக்காரனாகவோ நிறுவமுயல்கிற எத்தனமாக முடிந்துபோகலாம். உங்களுக்கு அத்தகைய உணர்வை எனது எழுத்துக்கள் அளித்திருந்தால் அதற்காக நான் வெட்கித்தலைகுனிகிறேன். என் நிலையை மறுபரிசீலனை செய்ய முயற்சிக்கிறேன்.
    நன்றி.
    பிரியங்களுடன்
    சுகுணாதிவாகர்.

  7. மிதக்கும்வெளி said...

    விடுபட்டது

    நிர்நிர்மாணம் -

    (எம்.ஜி.சுரேசின் 'பின்நவீனத்துவம் என்றால் என்ன? என்ற நூலிலிருந்து. இனிமேல் 'முப்பது நாட்களில் பின்நவீனத்துவவாதியாவது எப்படி?' போன்ற நூல்களை எழுதி சுரேஷ் 'பின்நவீனத்துவ சேவை' செய்வார் என்று எதிர்பார்க்கிறேன்.)

  8. -/பெயரிலி. said...

    அன்பின் சுகுணா திவாகர்,
    நேரம் செலவழித்துப் பதில் தந்ததற்கு நன்றி. உங்கள் இடுகைகள் பொதுவிலே பிடித்திருப்பதாலேதான், துணிந்து இங்கே வெளிப்படையாகக் கேட்டேன். (பாலபாரதியின் "இது அன்னையர் தேசமா?" என்னும் "வைத்தால் குடுமி; சிரைத்தால் மொட்டை" எளிமையான இருவகைப்பிரிப்புப்பதிவுக்கும் ஒரு பின்னூட்டலாமா என்று அவர் பதிவிட்டது தொடக்கம் பிளாஸ்டிக் பூவைக் கிள்ளிப் போட்டுப்போட்டுப் பார்த்துக்கொண்டிருக்கிறேன் ;-) பின்னவீனத்துவம் பற்றிய அம்மா கட்டுரையை அவருக்குக் கொடுத்த நீங்கள், அப்படியே முடிந்தால் அ. மார்க்ஸ் உயிர்நிழலிலோ எக்ஸிலிலோ எழுதிய, "தலித் ஆண்கள்.எதிர்.உயர்ஜாதிப்பெண்கள்" என்ற பார்வை பொருத்திய மேற்கின் "கறுப்பு ஆண்கள்.எதிர். வெள்ளைப்பெண்கள்" கட்டுரைத்தழுவலையும் கொடுங்கள். "இது அன்னையர் தேசமா?" எழுத முன்னால், அவர் அதை வாசித்திருந்தால், கொஞ்சம் பொட்'டீ'க்கடை சொன்னதுபோல, நிதானமாக எழுதியிருப்பார் ;-))

    உங்களின் ஈழம் தொடர்பான அக்கறையிலே நான் தவறான எண்ணமிருக்குமென்று சொல்லவரவில்லை; (அப்படி இருந்தாற்கூட, அதற்காக உங்களிடமொரு காரணமிருக்கலாம்; அக்காரணம் எனக்கோ இன்னொருவருக்கோ பிடித்திருக்கவேண்டுமென்பதும் கட்டாயமில்லைத்தானே?) நான் சொன்னது, ஈழத்தின் நிலை பற்றிய தவறான விபரமிருக்கலாமோ என்பதைக் குறித்தே. அந்நிலையிலே கவிதை வரும்போது, (குறைந்தபட்சம் எனக்கு) செயற்கைத்தன்மையானதாகத் தோன்றியது என்பதாலேதான். இவ்வகையிலேயே இது போல்மையாகத் தோன்றியது. மிகுதிப்படி, எனக்குங்கூட பாலஸ்தீனியர்களை, துருக்கிய குர்தீசியர்களை நெருக்கமாக உணரக்கூடியதாகவிருக்கின்றது. அதற்காக நான் அவர்கள் நாட்டிலே இருந்திருக்கவேண்டுமா என்றால் இல்லை; ஆனால், உணர்வுகளுக்கப்பால் அவர்களின் செயற்பாடுகளை வைத்து எழுதுமளவுக்குச் சூழ்நிலைப்புரிதல் எனக்கு இருக்குமாவெனத் தெரியவில்லை. அதுபோன்ற நிலையையே சொன்னேன். ஈழம் குறித்த ஒரு சாராரின் கருத்துகளைமட்டுமே வைத்து நிலைமையைப் புரிந்துகொள்கின்றீர்களோ என்ற சந்தேகத்திலேதான் கேட்டேன்.

    பெரும்பாலான புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்கள் (நான் உட்படவே) ஈழத்திலே பாதிக்கப்பட்டவர்களோடு ஒப்பிடும்போது, 'சொகுசாகவே' வாழ்கிறோம்; அதனால், எல்லாப்புலம்பெயர்ந்த ஈழத்தமிழர்களும் உங்களின் சொகுசு பற்றிக் கேட்க அருகதை கொண்டவர்களல்ல. தவிர, ஈழத்தமிழர்கள் பாதிக்கப்பட்டவர்கள் என்பதற்காக, அவர்களின் ஒவ்வொரு செய்கையையும் நியாயப்படுத்த வேண்டிய கட்டாயமுமில்லை. அதனால், நான் அப்படியாக எண்ணிக் கேட்டேன் என்று நீங்கள் தவறாகப் புரிந்துகொள்ளவேண்டாம். எனக்கு நீங்கள் சாருநிவேதிதா, ஷோபா சக்தி குறித்து முன்னர் எழுதியிருந்தவை ஞாபகம் வந்ததாலேயே அவர்களை உதாரணம் காட்டினேன். ஷோபா சக்தியின் எழுத்துநடை மிகவும் மிகவும் பிடித்ததொன்று - அவர் தமிழகத்திலே இப்போதெல்லாம் இலக்கிய அரசியல் செய்கிறாரோ என்ற சந்தேகம் வாசிக்கும்போதெல்லாம் எழுந்தபோதுங்கூட. சாரு நிவேதிதாவின் எள்ளல் நடையைப் புரிந்து கொள்ளுமளவுக்கு அவரின் அலட்டல்கள் பொறுத்துக்கொண்டு வாசிக்க விடுவதில்லை.

    'உணர்வுகள்' பதிவு ஆரூரனைப் பற்றி என்ன சொல்ல? ஈழத்திலே சாதி இன்னுமிருக்கின்றது என்று எதிர்த்துச் சொன்னதற்கே என் பின்னூட்டத்தை விடவில்லை. அதுவும் 'இராஜராஜன்காலத்திலேதான் வர்ணாச்சிரமம் மிகவும் கட்டிப்படுத்தப்படும் வகையிலே சதுர்வேதிமங்கலங்கள் உருவாகின' என்று சுட்டிய பின்னூட்டத்தினை.

    'நிர்நிர்மாணம்', எம். ஜி. சுரேஷ் பயன்படுத்திய பதமா? அவருடைய நீங்கள் சொல்லும் நூலை நான் வாசிக்கவில்லை. அதனாலே தீராநதியினர் புனலோடக் கண்டு பிடித்துக்கொண்டதென எண்ணிக்கொண்டேன். அவரச உய்த்தறிவு :-(

  9. மிதக்கும்வெளி said...

    நன்றி பெயரிலி. உங்கள் பதிலெனக்கு இதமாயிருந்தது. மற்றபடி பாலபாரதிக்கு அம்மா கட்டுரையை நான் கொடுக்கவில்லை. (வதந்திகளை நம்பவேண்டாம்). அ.மா எழுதிய நீங்கள் குறிப்பிடும் கட்டுரை எக்ஸிலில் வந்தது. அதை பாலபாரதி படித்திருப்பார் என்றே நம்புகிறேன்.

  10. குழலி / Kuzhali said...

    //நான் சொன்னது, ஈழத்தின் நிலை பற்றிய தவறான விபரமிருக்கலாமோ என்பதைக் குறித்தே.
    //
    பெயரிலி, இது இதை படித்தபின் தான் உங்கள் முந்தைய பின்னூட்டங்களே புரிந்தது....

    நன்றி

  11. இளங்கோ-டிசே said...

    கிட்டத்தட்ட மேலேயிருந்த கவிதையை முதலில் வாசித்தபோது -பெயரிலி கூறியதுபோல- ஒரு எண்ணந்தான் வந்தது. எனினும் எதையும் எழுதுவது எவரினதும் சுதந்திரம் என்றவளவில் எதுவும் பின்னூட்டமாய் இடவில்லை.
    .....
    இப்படி நீண்ட ஒரு விவாதம் நடந்தபின் இடைநடுவில் எப்படி குறுக்கிடுவது என்ற தயக்கமிருந்தாலும், ஈழவிடயங்களில் புலம்பெயர்ந்தவர்களினூடாக வருகின்றதை மட்டும் பொதுமையாக வைத்து எல்லாவற்றையும் வாசிப்புச் செய்கின்றார்களோ என்று அ.மார்க்ஸ், சுகுணா திவாகர் போன்றவர்களை வாசிக்கும்போது தோன்றுகின்றது. காலச்சுவடு கூட்டமோ, ஜெயமோகன் தரவழியோ இப்படி எழுதினால் சரிதான் என்று விலகிப்போய்க்கொண்டிருகிருக்கலாம். விரும்பி வாசிப்பவர்கள்/நமது கருத்துக்களுக்கு ஒத்த அலைவரிசையில் இருப்பவர்கள் அப்படிச் செய்யும்போது.... மீளவும் பாருங்கள் என்று சொல்வதில் தவறிருக்காதென்றே நினைக்கின்றேன்.
    ....
    மற்றும்படி அண்மைக்கால சோபா சக்தியின் நேர்காணல்களைக் காணும்போது, சேரன் தமிழகத்தில் ஒருகாலத்தில் செய்ததை ஷோபாசக்தி இப்போது செய்கின்றாரோ என்று யோசிக்கத் தோன்றுகின்றது. தங்களின் தத்துவ ஆசனாக வரித்துக்கொண்ட அ.மார்க்ஸ் மலந்துடைத்து அனுப்பிய இந்தியா ரூடேக்கே ஷோபாசக்தி நேர்காணல் கொடுத்துக்கொண்டிருப்பது எந்தவகையிலான அரசியல் என்பதும் புரியவில்லை.
    .....
    சாரு நிவேதிவாவின் கோமாளித்தனங்களைத் தாங்கிக்கொண்டு வாசிப்பதைப்போன்று எம்.ஜி.சுரேஷின் படைப்புக்களையும் வாசிக்கின்றேன் :-). அ.மார்க்ஸ் எழுதிய பின் நவீனத்துவ அரசியலையும், ரமேஷ்-பிரேமின் பின்நவீனத்துவ தொகுப்பையும் வாசித்தால் பின் நவீனத்துவம் குறித்த விரிவான புரிதல் பெறலாம் என்று நம்புகின்றேன். இவைகுறித்து வேறு நூல்கள் உண்டெனிலும் அறியத்தாருங்கள். நன்றி.

  12. கொழுவி said...

    இங்கே சோபாசக்தியைப் பற்றிய கதை வந்ததால் ஒரு குறிப்பு.
    அண்மையில் அவரெழுதிய கட்டுரையொன்றில் புலிகளின் நிர்வாகத்திலிருக்கும் நீதித்துறை பற்றிய குறிப்பொன்றில் போகிறபோக்கில் ஒரு அவதூறை எறிந்துவிட்டுப் போனார்.
    அங்கு எதுவும் நியாயமாக நடப்பதில்லையென்றும் அவர்களின் சட்டங்கள் மன்னர்காலத்துச் சட்டங்களென்றும் தவறுசெய்தவனை கழுதையிலேற்றி ஊரில் வலம்வர வைக்கிற சட்டங்கள் என்றும் திட்டித் தீர்த்திருந்தார்.

    அங்கிருக்கும் நிலைமைகள் தெரியாத ஒருவனுக்கு இதை வாசிக்கும்போது உண்மையென்றுதான் எண்ணத்தோன்றும். அப்படியொரு பொய்மையை - புலிகள் பற்றிய அவதூறைப் பரப்புவதுதான் சோபாசக்தியின் எண்ணமா? அவர் வழியாக (மட்டுமே) ஈழப்பிரச்சினையைப் புரிந்துகொள்பவர்களுக்கு இப்படியான வக்கிரத்தனமான அவதூறுகள் ஏற்படுத்தும் விம்பங்கள் என்ன விளைவைத் தரும்?

  13. Anonymous said...

    If I want to know completely about Tamil-Elam problem, Which book or blog or website i should read.

    please give me some clue.

    I am zero in this.

    -enbee