வைக்கம் போராட்டமும் ஜெயமோகனின் அவதூறுகளும்

சமீபத்தில் நடந்த ஜெயமோகனின் புத்தகவெளியீட்டு விழாவிற்குச் சென்றிருந்தபோது ஒரு மலையாள எழுத்தாளர் (பெயர் நினைவில்லை) ஜெயமோகன் குறித்து மலையாளத்தில் புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அதைத் தமிழில் மொழிபெயர்த்தவர்... ... ஜெயமோகனேதான். அப்போது அந்த மலையாள எழுத்தாளர் ஒரு நண்டு கதை கூறினார். ஒரு அரசன் ஓவியர் ஒருவரிடம் ஒரு நண்டை வரையுமாறு பணித்தானாம். அதற்கு அந்த ஓவியர் எடுத்துக்கொண்ட காலங்கள் பல ஆண்டுகள். ஏனெனில் செய்நேர்த்தியோடு வரைய வேண்டுமென்பதற்காகவாம். இதைக் கலைஞர்களின் அடையாளமாகச் சொன்னார் அந்த எழுத்தாளர். கதையோ நண்டோ பிரச்சினையில்லை. இதை ஜெயமோகனை வைத்துக்கொண்டு சொன்னதுதான் பிரச்சினை. அந்த அரசன் ஜெயமோகனிடம் நண்டைப் பற்றி எழுதச்சொன்னால் என்ன செய்திருப்பார் ஜெயமோகன்? நண்டு எப்படி தமிழர்களின் பொது உணவாக மாறாமல் போனது, நண்டை உண்பது குறித்த வெறுப்பிற்கும் ‘பிராமண’ எதிர்ப்பிற்கும் உள்ள ஒற்றுமைகள், உணவுச்சமநிலையைக் குலைத்த திராவிட இயக்கத்தின் சதி, குறிப்பாக ‘ஈ.வெ.ரா’வுக்கு அதிலிருந்த பங்கு குறித்தெல்லாம் ஒரே நாளில் 30 பக்கங்களை எழுதிக்குவித்திருக்கமாட்டாரா? அந்த மலையாள எழுத்தாள்ர் ஜெமோவின் முன்னிலையே நண்டு கதை சொன்னதைப் போன்ற நகைச்சுவைதான் கேணி அமைப்பு, ஜெயமோகனுக்கு ‘நம்மால் ஏன் விவாதம் செய்ய முடிவதில்லை” என்று பேச தலைப்பு கொடுத்தது.

ஜெயமோகனிடம் விவாதிக்கும்போது இரண்டு பிரச்சினைகள் வரும். (பல பிரச்சினைகள் வரும் என்பது வேறு விஷயம்)அவர் சொன்ன ஒரு கருத்தை வைத்து நாம் ஒரு கேள்வி எழுப்பினால், அவர் சொல்கிற பதில் நம்மை இரண்டாவது கேள்வி கேட்கத்தூண்டும். முதல்கேள்வி அம்போ என்று நிற்கும். இப்படியாக விவாதத்தைக் கடத்துவதில் ஜெயமோகன் மன்னன். இரண்டாவதாக நாம் ஒருகட்டத்தில் உணர்ச்சிவசப்பட்டாலும் படுவோம், ஜெயமோகன் நிதானமாகவும் தந்திரமாகவும் அவதூறுகளை முன்வைக்கச் சளைக்க மாட்டார். இன்னும் சொல்லப்போனால் நமது உணர்ச்சிவசப்படலையே அவர் தன் ‘நியாயத்திற்கான’ சாதகமாகவும் ஆக்கிக்கொள்வார். வைக்கம் பிரச்சினை விவகாரத்திலும் அதுதான் நடந்தது, நடக்கிறது. முதலில் ஜெயமோகனின் ‘கருத்துக்களை’த் (அவரது வார்த்தைகளிலேயே) தொகுத்துக்கொள்வோம்.

* வரலாற்றை எவ்வகையிலும் பொருட்படுத்தாத தன்மை பரப்பியம் சார்ந்த எல்லா இயக்கங்களுக்கும் இருக்கும். திராவிட இயக்கம் என்பது முழுக்க முழுக்க ஒரு பரப்பிய இயக்கம். பரப்பிய இயக்கம் என்றுமே பொதுமேடைகளை மட்டுமே சார்ந்து இயங்குவது. சராசரி மக்களின் உணர்ச்சிகளைத் தூண்டிவிடுவதையே கருத்தியல் செயல்பாடாகக் கொண்டது.

*எப்போதுமே ஈ.வே.ரா அவர்கள் தர்க்கத்தின் மொழியில் பேசியதில்லை, முழுக்க முழுக்க மிகையான உணர்ச்சியின் மொழியிலேயே பேசினார்


*வரலாற்றியக்கத்தில் உள்ள சிக்கலான முரணியக்கங்களை அது பேசமுடியாது. அனைத்தையும் அது எளிமைப்படுத்தியாகவேண்டும். ஹீரோX வில்லன் என்ற நாடகத்தனம் அதற்கு தேவையாகிறது. எதிரிகளை உருவாக்கி அவர்கள் மீது உச்சகட்ட வசைகளைப் பொழிந்து அந்தக் கருமைச்சித்திரம் முன்பு தன்னை வெண்மையாக நிறுத்திக்கொள்ள வேண்டியிருக்கிறது அதற்கு. எல்லா தளங்களிலும் திராவிட இயக்கம் அதையே செய்கிறது என்பதைக் காணலாம்

* காந்தியை சாதியவாதி என்றும் சனாதனி என்றும் குற்றம்சாட்டியிருக்கிறார். காந்தி சனாதனிகளால் கொல்லப்பட்டபோது இந்தியாவுக்கே காந்தி தேசம் என்று பெயரிடவேண்டும் என்று உணர்ச்சிவசப்பட்டிருக்கிறார். காந்தியைப் பற்றிய ஈ.வே.ரா அவர்களின் கருத்துக்களைத் தொகுப்பவர்கள் அண்ணாத்துரை உட்பட பிறரைப்பற்றிய அவரது கருத்துக்களைத் தொகுத்து வரலாற்றை உருவாக்கினால் திராவிட இயக்கமே அடித்தளமிழந்துபோகும்

*வரலாற்றைப்பற்றிய புரிதலோ தன் கருத்துக்களின் விளைவுகளைப்பற்றிய புரிதலோ இல்லாமல் அவர் பேசினார். இன்று சில வரலாற்றாசிரியர்களால் செயற்கையாக உருவாக்கப்படும் சித்திரம்போலன்றி அவர் என்றுமே ஒரு மாபெரும் மக்கள்தலைவராக இருக்கவில்லை. அவரது கருத்துக்களுக்கு பரவலான சமூகச் செல்வாக்கும் இருக்கவில்லை. திராவிட இயக்கம் அவரது தலைமையில் ஒரு குறுங்குழுவாகவே இருந்தது. இப்போதிருக்கும் திராவிடர்கழகம் போல.

* (வைக்கம்) போராட்டக்குழு அதிகமான போராட்டக்காரர்களை கைதாக்கி அரசுக்கு நெருகக்டி கொடுத்தது. ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை

*ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை

பெரியார் குறித்தும் திராவிட இயக்கம் குறித்தும் ஜெயமோகன் வன்மத்துடன் உதிர்க்கும் கருத்துகள் குறித்தும் கட்டியெழுப்ப விரும்பும் பொய்கள் குறித்தும் பின்னால் பேசுவோம். முதலில் வைக்கம் போராட்டம் குறித்து...

ஜெயமோகன் உதிர்க்கும் அவதூறுகள் குறித்து தோழர் தமிழச்சி எழுதியுள்ள பதிவுகளே அவரை மறுக்கப் போதுமானவை.

''ஈவேரா அவ்வாறு கைதானவர்களில் ஒருவர் மட்டுமே. அவர் எவ்வகையிலும் அன்று முக்கியமானவராக கருதபப்டவில்லை. அப்போது அவருக்கு வயது நாற்பத்தைந்து தான். தமிழக அரசியலில் கூட அவரது இடம் என ஏதும் இருக்கவில்லை" என்கிற வரிகளை எழுதுவதற்கு ஒருவர் தமிழகத்தின் சமூக வரலாறு தெரியாத அடிமுட்டாளாக இருக்க வேண்டும் அல்லது பச்சைப்பொய்யைப் பரப்பித் திரியும் அயோக்கியத்தனம் கொண்ட அவதூறுவாதியாக இருக்க வேண்டும். ஆனால் ஜெயமோகனின் சிறப்பே இவை இரண்டுமாக இருப்பதுதான். வைக்கம் போராட்டத்தில் பெரியார் கலந்துகொண்டபோது அவர் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர். கேரளக் காங்கிரஸ் நடத்திய ஒரு போராட்டத்திற்கு அண்டை மாநில சக இயக்கத்தலைமையை அழைத்தது என்கிற வரலாற்றுப் புரிதல் கூட தன் வாசகனுக்கு இருக்காது என்பதில் ஜெயமோகனுக்குத்தான் எவ்வளவு அழுத்தமான ‘நம்பிக்கை’?

அந்த அதீத நம்பிக்கையில்தான் “அவர் தமிழ்நாட்டில் இருந்து எந்த ஓர் அமைப்பின் சார்பிலும் வரவில்லை. அவருக்கு தொண்டர்பின்புலமும் அன்று இருக்கவில்லை” என்று ஜெயமோகனால் எழுதமுடிகிறது. ஒரு இயக்கத்தின் தலைமைப்பொறுப்பில் இருப்பவர் எவ்வாறு எந்த அமைப்பின் சார்பும் இல்லாமல கலந்துகொள்ள முடியும்? அப்படி கலந்துகொள்ளவேண்டிய சுயவிருப்பம் அல்லது நிர்ப்பந்தம் பெரியாருக்கு எப்படி ஏற்பட்டிருக்க முடியும்? இன்னொரு நகைச்சுவையைப் பாருங்கள், பெரியாருக்குத் தொண்டர்பின்புலம் இல்லையென்றால் அவர் தலைமை வகித்த காங்கிரஸ் கட்சியே தமிழ்நாட்டில் இல்லை என்பதுதானே அர்த்தம்? தர்க்கம் குறித்தெல்லாம் ஜெயமோகன் பேசுவதை விடவும் அபத்தமானது வேறு எதுவும் இருக்க முடியுமா நண்பர்களே?

மேலும் ”கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை” என்று ஜெயமோகன் சொல்லும் பொய்க்கான மறுப்புகளாகத் தோழர் தமிழச்சி கேரளாவைச் சேர்ந்த வரலாற்றுப் பேராசியர் டி.கே.ரவீந்திரன் வைக்கம் போராட்டம் குறித்து எழுதியுள்ள ஆய்வுநூல், வைக்கம் போராட்டத்தின் தளகர்த்தாக்களில் ஒருவரான கே.பி.கேசவமேனன் பெரியார் குறித்து தன் சுயசரிதையில் எழுதியுள்ள விஷயங்கள், வைக்கம் போராட்டத்தை நேரில் பார்த்து பார்வையிட்ட ஆங்கிலேய அதிகாரி சென்னை மாகாணத்தின் தலைமைச் செயலாளருக்கு எழுதியுள்ள கடிதத்தில் பெரியார் குறித்துக் குறிப்பிட்டுள்ளமை, கேரள அரசு வைக்கம் பொன்விழாவைக் கொண்டாடியபோது பெரியார் பெயரால் வளைவுகள் அமைத்தது என பல செய்திகளை முன்வைக்கிறார். இதற்கெல்லாம் ஜெயமோகனின் பதில் என்ன தெரியுமா?

"அது ‘அதிகாரபூர்வ’ திக வரலாறு. அதற்கான பதிலாக, உண்மைவிளக்கமாக, மிக அடிப்படையான எளிமையான வரலாற்றுத்தகவல்களைக் கொண்டு என் கட்டுரை எழுதப்பட்டிருக்கிறது. வைக்கம் போராட்டத்தின் பின்னணி, நிகழ்ந்த விதம், அதன் தரப்புகள் என்னால் சொல்லப்பட்டிருக்கின்றன" என்பதுதான். தமிழச்சி தரவுகளாக முன்வைத்தது எல்லாம் கேரள ஆளுமைகள் மற்றும் ஆங்கிலேய அதிகாரியின் தரவுகள். இது எப்படி ‘அதிகாரப்பூர்வ’ திக வரலாறு ஆகும் என்பது ஒருபுறம் இருக்க, ‘பெரியார் எப்படி வைக்கம் போராட்டத்தில் முக்கியத்துவமில்லாத பத்தோடு பதினொன்று ஆனார்’, ‘பெரியாருக்கு வைக்கம் போராட்டத்தின்போது தமிழகத்து அரசியலில் எந்த இடமும் இல்லை, தொண்டர் பின்புலம் இல்லை’, ’எந்த அழைப்பும் தொடர்புமில்லாமல் பெரியார் எப்படி தானாக அனாமத்தாக ரயில் ஏறி வைக்கம் போராட்டத்தில் கலந்துகொண்டார்’, ‘இன்றைக்கு இருக்கும் திகவைப் போலவே தமிழ்நாட்டு சிவசேனா கட்சி உறுப்பினர்கள் எண்ணிக்கை அளவுக்கு அல்லது ஜெயமோகன் வாசகர் எண்ணிக்கை அளவுக்கே அவருக்கு இயக்கபலம் இருந்தது’, ‘பெரியார் எங்கே, எப்போது தர்க்கத்தைக் கழற்றிவிட்டு உணர்ச்சியின் மிகைமொழியில் பேசினார்’ என்பதற்கெல்லாம் ஜெயமோகன் எங்கேயும் ஆதாரங்களை வைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் வைக்கம் போராட்டத்தில் காந்தியின் எதிர்மறையான தலையீட்டைப் பெரியார் முன்வைத்ததை மறுப்பதற்குக் கூட ஜெயமோகன் எந்த ஆதாரங்களையும் முன்வைக்கவில்லை. ஆனால் தமிழச்சி ’யங் இந்தியா’இதழில் காந்தி எழுதியதையும் ஜார்ஜ் ஜோசப் மறுத்து எழுதிய கடிதத்தையும் ஆதாரபூர்வமாக முன்வைத்துள்ளார். வைக்கம் போராட்டத்தில் காந்தியின் நிலைப்பாடு என்ன என்று தெரிய காந்தியின் தொகுப்பு நூல்களிலேயே வைக்கம் போராட்டம் குறித்து காந்தி விரிவாகத் தன் ந்லைப்பாட்டை எழுதியுள்ளார். தயவுசெய்து ஜெயமோகன் வாசகர்கள் அதைப் படித்தால்கூட ஜெமோ எவ்வளவு பெரிய பொய்யர் என்பதைப் புரிந்துகொள்வார்கள்.

’பெரியார் வைக்கம் போராட்டத்தில் பெரியளவு பங்களிப்பைச் செய்தவரில்லை’ என்கிற ஜெயமோகனின் பங்கு வரலாற்றுக்கு இழைக்கப்படும் துரோகம். தனது வாசகர்கள் எதையும் பரிசோதித்து அறிந்துகொள்ள மாட்டார்கள் என்ற அவரது ஆணவம், அவர்களது வாசகர்கள் முன் வைக்கப்படும் சவால். பெரியாருக்கு மட்டுமில்லை நாகம்மைக்கும் வைக்கம் போராட்டத்தில் பிரதானப் பங்கு உண்டு. பெரியாருக்கு ஆறுமாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்ட பிறகு நாகம்மை, திருமதி. மாதவன், திருமதி.ஜோசப் போன்ற போராளிகளின் மனைவிகளோடு இணைந்து மகளிர் கமிட்டியை உருவாக்கினர். அவர்கள் கிராமங்கள் தோறும் சென்று சத்தியாக்கிரகத்திற்கு பெண்களைத் திரட்டியதோடு மட்டுமில்லாது போராளிகளுக்கான உணவையும் சேகரித்தனர். 1924, மே 20 அன்று அவர்கள் ஆரம்பித்த சத்தியாக்கிரகத்தின் விளைவாக நாகம்மையாரும் திருமதி மாதவனும் கைது ஆனார்கள். தான் வாழும் புலம் தாண்டி வந்து ஒடுக்கப்பட்ட மக்களுக்காக களமாடிப் போராடிய நாகம்மை என்னும் பெண்ணையும் தான் நம்பிய அரசியலுக்காக குடும்பத்தோடு அர்ப்பணித்த பெரியார் என்னும் மாபெரும் ஆளுமையையும் வ்ன்மத்தோடு கொச்சைப்படுத்துவது ஜெயமோகனின் வக்கிரமில்லையா?

‘எந்த முக்கியத்துவமில்லாமல் பத்தோடு பதினொன்றாகப் போராடினா ஈவெரா என்றால் அவரை ஏன் ஆறுமாத காலம் தனிமைச் சிறையில் அதுவும் கால்களில் சங்கிலியோடும் கைதி உடையோடும் சிறைவைப்பார்கள்?’ என்கிற கேள்வி அடிப்படை அறிவுள்ள யாருக்குமே தோன்றுமே, தன் வாசகனுக்கு அது தோன்றாது என்று ஜெயமோகன் கருதியது ஏன்? மேலும் ஒரு ஆதாரம்...

வைக்கம் வெற்றிக் கொண்டாட்டம்

"எங்களுக்குச் செய்த உபச்சாரத்திற்காக நன்றி செலுத்துவதோடு சத்தியாகிரக இயக்கத்தின் ஜெயிப்பைப் பற்றியும் தோல்வியைப் பற்றியும் பேசுவதற்கு அதற்குள்ள காலம் வந்துவிடவில்லை". தெருவில் நடக்க உரிமை கேட்பவர்களைச் சிறைக்கு அனுப்பிய அரசாங்கம், தெருவில் நடப்பதற்கு இப்போது நமக்கு வேண்டிய உதவி செய்ய முன் வந்திருப்பதைப் பார்த்தால் சத்தியாக்கிரகத்திற்கும், மகாத்மாவிற்கும் எவ்வளவு சக்தி இருக்கிறதென்பது விளங்கும். சத்தியாக்கிரக ஆரம்பத்தில் பிராமணர்கள் கட்சியில் இருந்த அரசாங்கத்தார், இப்போது பிராமணர்களுக்கு விநோதமாகவே தீண்டாதாரென்போரை கையைப் பிடித்து அழைத்துக்கொண்டு சர்க்காரர் செல்லுவதை நாம் பார்க்கிறபோது நமக்கே சத்தியாக்கிரகத்தின் தன்மையைப் பற்றி ஆச்சரியப்படத்தக்கதாய் இருக்கிறது.
சத்தியாகிரகத்தில் ஏற்பட்ட கஷ்டங்களை நாம் பொறுமையாய் அனுபவித்து வந்ததால் இவ்வித சக்தியை இங்கு காண்கிறோம். பலாத்காரத்திலோ, கோபத்திலோ, துவேஷத்திலோ, நாம் இறங்கியிருப்போமேயானால் இச்சக்திகளை நாம் ஒருக்காலும் கண்டிருக்கவே மாட்டோம். சத்தியாகிரகத்தின் உத்தேசம், கேவலம் நாய், பன்றிகள் நடக்கும் தெருவில் நாம் நடக்க வேண்டுமென்பதல்ல. மனிதனுக்கு மனிதன் பொதுவாழ்வில் வித்தியாசம் இருக்கக்கூடாதென்பதுதான் அந்த தத்துவம் இந்த தெருவில் நடந்ததோடு முடிந்துவிடவில்லை. ஆகையால், தெருவில் நிரூபித்த சுதந்திரத்தை கோவிலுக்குள்ளும் நிரூபிக்க வேண்டியது மனிதர் கடமை மகாத்மா காந்தியும், மகாராணியாரைக் கண்டு பேசிய காலத்தில் மகாராணியார் மகாத்மாவைப் பார்த்து இப்பொழுது தெருவைத் திறந்து விட்டுவிட்டால் உடனே கோயிலுக்குள் செல்ல பிரயத்தனப்படுவீர்களேயென்று கேட்டார்கள்.
மகாத்மா அவர்கள் ஆம், இதுதான் என்னுடைய குறியென்றும் ஆனால் கோயிலுக்குள் செல்ல உரிமை வேண்டி ஜனங்கள் போதுமான பொறுமையும், சாந்தமும் அவசியமான தியாகமும் செய்யத் தயாராயிருக்கிறார்களாவென்று நான் அறியும் வரையில் அக்காரியத்தில் பிரவேசிக்க மாட்டேனென்றும் அதற்கு வேண்டிய காரியங்களை அது வரையில் செய்து கொண்டிருப்பேனென்றும் சொன்னார்.
வைக்கம் சத்தியாக்கிரத்திற்கு விரோதியாயிருந்தவர்கள் பிராமணர்களே ஒழிய அரசாங்கத்தார் அல்லவென்பதை அரசாங்கத்தார் நிரூபித்துக் காட்டி விட்டார்கள். மனித உரிமை உடைய அந்நிய மதங்களுக்குப் போவது மிகவும் இழிவான காரியமாகும். அப்படி அவசியமாயிருந்தாலும் கிருஸ்துவ மதத்திற்காவது மகமதிய மதத்திற்காவது செல்லலாமேயழிய ஆரிய சமாஜத்திற்குப் போவது எனக்கு இஷ்டமில்லை. ஏனென்றால் ஆரிய சமாஜத்திற்குப் போவதனால் பொருளில்லாத அர்த்தமற்ற, பூணூல் போட்டுக் கொள்வதோடு பொருளறியாத சந்தியாவந்தனமும் செய்து கொள்ளவேண்டும்.
இப்படி ஒரு காலத்தில் பூணூல் போட்டுக் கொண்டு சந்தியாவந்தனம் பண்ணினவர்கள்தான் இன்றையத் தினம் நமது சுதந்திரத்திற்கும், சீர்திருத்தத்திற்கும் விரோதிகளாயிருகின்றார்கள் அந்த நிலைமைக்கு நீங்களும் வரக்கூடாதென்று நினைப்பீர்களேயானால் கண்டிப்பாய் அந்தக் கூட்டத்தில் சேராதீர்கள்.


மேற்கண்ட உரை, வைக்கத்தில் வெற்றிக் கொண்டாட்டத்தில் 29.11.25 ஆம் தேதி ஆற்றிய பெரியார் ஆற்றிய தலைமைச் சொற்பொழிவு. டிசம்பர் 6, 1925 குடியரசு இதழில் வெளியானது. ‘எந்த முக்கியத்துவமும் இல்லாத ஒருவரை’ போராட்ட வெற்றிவிழாக் கொண்டாட்டத்தில் தலைமை உரை ஆற்ற அனுமதிப்பார்களா என்கிற கேள்வியை - பெரியாரின் வார்த்தைகளிலேயே சொல்வதாயிருந்தால் - மானமும் அறிவும் அறிவுநாணயமும் உடையவர்களின் மனச்சாட்சிக்கே விட்டுவிடுகிறேன்.

இறுதியாக, இப்படியான கிடுக்கிப்பிடிக் கேள்விகள் எழ ஆரம்பித்ததும் ஜெயமோகனின் சமாளிப்பு இதுவாம், ‘பெரியார் வைக்கம் போராட்டத்தைத் தொடங்கியதாக பாடப்புத்தகங்கள் சொல்கின்றன’ என்பது. வைக்கம் போராட்டத்தைத் தான் தொடங்கியதாக பெரியார் எங்கும் சொன்னதில்லை. தான் போலிக்கையெழுத்து போட்டதை நீதிமன்றத்திலேயே ஒப்புக்கொள்ளும் நேர்மையும் அறத்துணிவும் பெரியாருக்கு உண்டு. ஜெயமோகன் தான் தனது நேர்மை குறித்த சுயவிசாரணையைத் தொடங்க வேண்டும்.

பாடப்புத்தகங்கள் என்பவை வரலாற்று ஆவணங்கள் அல்ல. அவை எப்போதும் முழு உண்மைகளைப் பேசியதில்லை. பெரியாரைப் பற்றி மட்டுமல்ல, ’1947 ஆகஸ்ட் 15 அன்று இந்தியாவுக்குக் கிடைத்தது சுதந்திரம் அல்ல, டொமினியன் அந்தஸ்துதான்’ என்பது தொடங்கி முழு உண்மைகளைச் சொன்னதில்லை. பெரியார் குறித்த பாடப்புத்தக ‘உண்மைகளை’ ஆராய வேண்டும் என்றால் காந்தி குறித்த பாடப்புத்தக ‘உண்மைகளை’யும் ஜெயமோகன் ஆராய வேண்டும். இரண்டாவதாக பாடப்புத்தகங்கள் மூலம் பெரியார் குறித்து மிகைப்பிம்பங்கள் எதுவும் எழுப்பப்பட்டதாகச் சொல்லமுடியாது.  இன்னும் சொல்லப்போனால் பெரியார் என்னும் கலக ஆளுமையின் பிம்பத்தைக் குறுக்கியமைத்தவையே தமிழ்ப்பாடப்புத்தகங்கள். மேலும் பெரியார் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவராக இருந்ததையே மறைக்கும் ஜெயமோகனுக்குப் பாடப்புத்தகங்கள் குறித்து விமர்சிக்க யோக்கியதை ஏதாவது இருக்கிறதா?

ஒரு உச்சகட்ட நகைச்சுவை கேளுங்கள், பெரியாரை ‘வைக்கம் வீரராக’ப் பிம்பம் கட்டியமைத்தவை திராவிட இயக்கங்கள், இன்னும் குறிப்பாக திமுக அரசும் அவற்றின் ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட பாடப்புத்தகங்களும்தான் என்பது அவரது கருத்து. பாவம் ஜெயமோகன், இதுவே அவரது ’வரலாற்று அறிவைக்’ காட்டுகிறது. உண்மையில் வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பைப் பாராட்டித் தீர்மானம் நிறைவேற்றியதும் அவருக்கு ‘வைக்கம் வீரர்’ பட்டம் அளித்ததும் 1925ல் காஞ்சிபுரத்தில் நடந்த சென்னைமாகாணக் காங்கிரஸ் மாநாடுதான்.

(தொடரும்)

21 உரையாட வந்தவர்கள்:

  1. மாடல மறையோன் said...

    நல்ல பதிவு. தொடரட்டும் உங்கள் பணி.

    செயமோகனுக்கு மறுப்பு எழுத்துகள் இல்லாவிட்டால், அவரின் பார்ப்பன ஆதரவாள்ர்கள் அதையே ஒரு சாக்காகச் சொல்லி கொக்க்ரிப்பார்கள்.

  2. வால்பையன் said...

    ஜெமோக்கு இந்துத்துவா ஆதரவு நிறைய தேவைப்படுது போல!

    இதுக்கு சாரு மாதிரி எதாவது ஒரு ஆனந்தருக்கு ஜல்லி அடிச்சிட்டு போகலாம்!

  3. ஜ்யோவ்ராம் சுந்தர் said...

    மிக முக்கியமான கட்டுரை இது சுகுணா. தரவுகளோடு ஜெமோவுக்கு மறுப்பு எழுதியிருக்கிறீர்கள். முழுமையாக நீங்கள் எழுதி முடித்தபின் என்னுடைய கருத்துகளைப் பகிர்ந்து கொள்கிறேன்.

  4. Ken said...

    மிகத்தேவையான கட்டுரை சுகுணா

  5. போராட்டம் said...

    தொடருங்கள். அவசியமான பதிவு.

  6. மிதக்கும்வெளி said...

    இதில் இரண்டு பின்னூட்டங்களை நிராகரித்திருக்கிறேன். ஒரு பின்னூட்டம் வழக்கமான ‘தாடிக்கார பொறுக்கியின் கைத்தடி’ என்று திட்டி வரும் பொறுமல் பின்னூட்டம். இன்னொன்று மதி இண்டியாவின் பின்னூட்டம். சுரேஷ்கண்ணன் ஜான் ஆபிரகாம் குறித்து எழுதிய பதிவு குறித்து அந்த பின்னூட்டம் பேசுகிறது. அந்த பதிவில் ஜான் ஆபிரஹாம் குறித்து எழுதப்பட்ட பல பதிவுகளுக்கு இணைப்பு கொடுத்திருக்கிறார். என்னுடையதும் ஜெயமோகனுடையதும் அவற்றில் உண்டு. நான் ஆபிரஹாமைக் கொண்டாடியிருப்பதாகவும் ஜெமோ ஆபிரஹாமை நிராகரித்திருப்பதாகவும் குறிப்பிடும் மதி இண்டியா என்னை நக்கலடித்திருக்கிறார். இந்த பதிவு ஆபிரகாம் பற்றியதல்ல. அதற்கு நான் பதில் சொன்னால் விவாதம் அதை நோக்கித் திரும்பும் . இதுதான் மதி இண்டியாவின் நோக்கம் மற்றும் ஜெயமோகன் வழக்கமாக கையாளும் உத்தி. அதற்கு நான் பலியாக விரும்பவில்லை. வைக்கம் போராட்டம், அதில் பெரியாரின் பங்களிப்பு, அதுகுறித்த ஜெயமோகனின் கருத்துகளை, அதை மறுப்பதற்கு நான் முன்வைக்கும் தரவுகள் இவைகளுக்கு அப்பாற்பட்ட எந்த பின்னூட்டத்தையும் நான் அனுமதிக்கப்போவதில்லை என்பதில் கறார்தன்மையுடன் இருக்கிறேன். நன்றி.

  7. நந்தா said...

    மிக அவசியமான பதிவு சுகுணா. தொடர்ச்சியாக படிக்க ஆவலாயிருக்கிறேன்.

  8. Ashok D said...

    சில பாராக்களை படிக்காமல் கடந்தாலும் படித்தவரை இனிமை... இதையே ஜெவிடம் கொடுத்தால் மணக்க மணக்க எழுதுவார் என்றே நினைக்கிறேன்

  9. வினவு said...

    ஜெயமோகன் தனது அகநிலைவாத சாக்கடைக்குள் மூழ்கி அவரே உருவாக்கிய தொப்பிக்கு ஏற்றாற்போல வரலாறு, சமூகம், அரசியல் என எல்லாத் தலைகளையும் தந்திரமாக வெட்டி வருகிறார். இந்த வெட்டுதலின்போது இரத்தம் தெரியாதபடிக்கு காட்டுவது அவரது சாமர்த்தியம். இந்த இரத்தக் கவிச்சியை காட்டுவதற்கு இந்த தொடர் பயன்பட வாழ்த்துக்கள்!

  10. சிறில் அலெக்ஸ் said...

    சுகுணா,
    பெரியார் தரப்பு வாதங்கள் அதிக நுணதகவல்களுடனும் ஆதாரங்களுடனும் இருப்பதை மறுக்க இயலவில்லை. வாழ்த்துக்கள் தொடருங்கள். ஆனால் நம்மால் ஏன் வாதம் செய்ய முடிவதில்லை என்பதற்கு உங்கள் பதிவு உதாரணமாக இருக்கிறது. ஜெயமோகன் பெரியாரின் வைக்கம் பங்களிப்பு குறித்த கேரள நம்பிக்கைகளின் ஒரு பகுதியை தன் கருத்தாக்கி பதிவு செய்திருக்கிறார் என்றே நினைக்கிறேன். அதிலுள்ள குறைகளை சுட்டிக்காட்டுவதோடு நின்றுவிடாமல் ஜெயமோகன் சொல்வதெல்லாமே பொய் என நிறுவப் பார்ப்பதுதான் நாம் வாதம் செய்ய இயலாமல் போவதற்குக் காரணம் என நினைக்கிறேன்.

    நம்மால் ஏன் விவாதம் செய்ய இயலவில்லை என்பதை தன்னையும் சேர்த்தே ஜெ சொல்லியிருக்க வேண்டும். ஆனால் என்னால் அவரோடு கிறீத்துவம் குறித்த பல விவாதங்களையும் செய்ய முடிந்தது. எனக்கு எந்த முன் முடிவும் கிடையாது. அடிப்படை கருத்திய நம்பிக்கைகள் கிடையாது. அது ஒரு காரணமாயிருக்கலாம்.

    நக்கலும் நிராகரிப்பும் இல்லாமல் நம்மால் மறுப்பு சொல்லவே முடிவதில்லை. நண்பர்களுக்கிடையேயான உரையாடல்கலிலும் கூட இது சாத்தியமாகவில்லை. ஆராயப்படவேண்டிய விஷயம்தான்.

  11. மதி.இண்டியா said...

    மதி இண்டியாவின் நோக்கம் அறிவுசீவிகளாக கட்டமைத்துக் கொண்டுள்ளவர்கள் எவ்வளவு போலிகளாக (மோசமான வார்த்தைகள் வேண்டாம் என்றுதான் , அதெல்லாம் வினவு தளத்துக்கு உரித்தானது) உள்ளனர் எனபதை எச்சரிக்கவே,

    இந்த கட்டுரையும் அதே ஜீவியால் எழுதப்படுவதால் ..

    ஜான் ஆப்ரகாம் படத்தை பார்க்காமலேயே காவியம் என்று கொண்டாடியதால் பெரியாரையும் தூக்கிவைத்து கொண்டாடலாம் என எச்சரிக்கவே,

    தொடர்புள்ளதா இல்லையா என வாசகர்கள் தீர்மானிக்கட்டுமே ?

    சுரேஷ்கண்ணன் - ஜான் ஆப்ரகாம் http://pitchaipathiram.blogspot.com/2010/01/blog-post_30.html

    மேற்கொண்டு ஜான் ஆப்ரகாம் பற்றி இங்கே பேசபோவதில்லை .

  12. மதி.இண்டியா said...

    //பாடப்புத்தகங்கள் என்பவை வரலாற்று ஆவணங்கள் அல்ல. அவை எப்போதும் முழு உண்மைகளைப் பேசியதில்லை. //

    என்ன கொடுமை ,

    நாங்கெல்லாம் பள்ளி புத்தகத்தில் வைக்கம் வீரர்தான் தனியாக போராடி வைக்கம் மக்களுக்கு “சுதந்திரமே” வாங்கி தந்தார்னு படிச்சோம் ,

    ஜெமோ சொன்னதற்ப்புறம்தான் அது காமடின்னு தெரிஞ்சது , நீங்க முழுசா சொல்லி முடியுங்க ,

    நாங்கென்னா படம்பாக்காமேயே உச்சிமுகரும் அறிவுஜீவியா? நீங்க சொல்றது சரின்னு தெரிஞ்சா ஒத்துக்குவோம் .

    தலைமை உரையில் காந்தியை அப்படி பாராட்டினவரு அதுக்கபுறம் ஏன் வைக்கம் துரோகி காந்தின்னாரு ?

    வைக்கம் கொண்டான் அதுக்கபுறம் ஏன் தமிழ்நாட்டில் எந்த கோவில்நுழைவுக்கும் போராடவில்லை ? முத்துராமலிங்கமும் வைத்தியநாதய்யரும் ராஜாஜியியும் செஞ்சதுதானே கடைசி ?

    50 வருடம் கழித்து தலித் இயக்கங்களும் , கம்யூனிச இயக்கங்களும்தானே இன்னிக்கு கோவில்நுழைவு போராட்டம் செய்கின்றன ? திராவிட எந்த கழகமும் அதற்க்கு போராடி வென்றதாக சரித்திரமே இல்லையே ?

    இதற்க்கான பதில்களையும் சேர்த்தே சொல்லி வைக்கம் மட்டும் ஏன் கொண்டார் என விளக்குவீர்கள் என நம்பும்

    விவாதத்தை திசை திருப்பாத மதி.இண்டியா

  13. Anonymous said...

    சிறில்,
    நீங்களும், ஜெயமோகனும் கிறித்தவம் குறித்த விவாதம் நடத்துவதற்கு முன்பே ஏதோ ஒரு காரணத்திற்காக உங்களிருவருக்கும் rapport உருவாகி விட்டிருந்தது. ஆகையால் விவாதத்தின் போது நக்கல், நையாண்டி இல்லாமல் கருத்துக்களை சொல்லும் நிர்பந்தம் உருவாகிவிட்டது. அவர் கூறியவற்றில் ஏதாவது பொய் அல்லது திரிப்பு இருந்திருந்தால் கூட அதை உங்களால் பொய், திரிப்பு என்று நேரடியாக கூறியிருக்க முடியாது.

    வைக்கம் போராட்டத்தில் பெரியாரின் பங்களிப்பு குறித்து ஜெயமோகன் சொல்லியுள்ள பொய்களை பொய்யென்று நிறுவுவதில் உங்களுக்கு என்ன பிரச்சினை என்று புரியவில்லை. அப்படி நிறுவப்படாத பட்சத்தில் (நிறுவினாலும் கூட), அவர் மீண்டும் அதே பொய்களை திரும்பச் சொல்லும் வாய்ப்புகள் உண்டு. ஏனெனில் எந்த ஒரு விவாதத்திலும் தான் சொல்வது தான் கடைசி வார்த்தையாக இருக்க வேண்டுமென்ற மனோபாவம் கொண்டவராக அவர் இருப்பது உலகறிந்த விஷயம்.

    உங்களுக்கு வேண்டுமானால் எந்த முன் முடிவும் இல்லாமல் இருக்கலாம். கருத்தியல் அடிப்படைவாதமும் இல்லாமலிருக்கலாம். ஜெயமோகனும் எந்த முன்முடிவும் இல்லாதவர், அடிப்படைவாதக் கருத்தியல் அற்றவர் என்று நீங்கள் நம்பினால் உங்களுக்கு என் அனுதாபங்கள்.

    முன்சாய்வும் கொண்டவர்களும், அடிப்படைவாதக் கருத்தியலில் ஊறியவர்களும், தங்கள் தரப்பை நியாயப்படுத்த பொய்களின் துணையையும் நாடுவது இயல்பு. அவை பொய்கள் என்று யாராவது நிறுவும்போது அமைதி காப்பது அல்லது அவற்றை தர்க்கமின்றி நிராகரிப்பதும் வழக்கம். ஜெயமோகன் செய்வதும் அது தான். தன்னிடம் ஒற்றை வரி கேள்வி கேட்கும் வாசகருக்கு தயாராக எழுதிவைத்திருப்பது போன்ற பத்து பக்க பதிலை இரண்டு பாகங்களில் வெளியிடக்கூடிய ஒருவருக்கு, ‘கேரளாவில் ஒரு ஆற்றுக்கு, தேசியப் பூங்காவிற்கு பெரியார் பெயர் வைத்திருக்கிறார்களே’ என்று முட்டாள்தனமான (அதைக் கேட்டவரின் நோக்கத்தையே நான் சந்தேகிக்கிறேன். பெரியாரைப் போற்றுபர்கள் முட்டாள்கள் என்று நிறுவ யாராவது ஒரு அதிபுத்திசாலி கூட அதைக் கேட்டிருக்கலாம்)கேள்விக்கு மிகுந்த பொறுப்புடன் தரவுகளோடு விளக்கமளிக்கக் கூடியவருக்கு, தன்னுடைய கருத்துக்களுக்கு வந்த மறுப்புக் கட்டுரைகளை பொருட்படுத்தக்கூட முடிவதில்லை என்பதை எப்படி விளக்குவீர்கள்? விவாதத்திற்கு தயாராக இருக்கிறார் என்றா? தனக்கு வசதியானவற்றை எடுத்துக்கொள்வது, வசதிப்படாததை நிராகரிப்பது என்ற மனநிலை கொண்டவர் என்றா?

    “பெரியார் தரப்பு வாதங்கள் அதிக நுணதகவல்களுடனும் ஆதாரங்களுடனும் இருப்பதை மறுக்க இயலவில்லை” என்று கூறியிருக்கிறீர்கள். தயவுசெய்து இதை அவரது பதிவிலும் பதிவு செய்யுங்கள். உங்களிருவருக்கும் இடையில் இருக்கும் rapport ஆவது அவரை பெரியார் தரப்பு வாதங்களை பரிசீலிக்கச் செய்கிறதாவென்று பார்ப்போம்.

  14. Anonymous said...

    The essence of jayamohans argument is that it only Annadurai and his devotees who by sheer propaganda propped up EVR in Tamilnadu and succeeded in creating an aura about EVR that is misplaced.

    it doesnt require a genius to understand this.For example EVR is a non entity in karnataka,Andhra and kerala where EVR is supposed to have contributed enormously to vaikkam and emancipation of dalits thus proving that EVR is a plain and simple phony a dubaakkur..hardcore fanatical periyarists must ponder over this.
    How long do they want tamils to fall for this illusory,filmy fraud.

  15. மதி.இண்டியா said...

    சிறில் , எப்பவாவது ஒரு கமண்ட் போடுமளவுக்கு இணைய விவாதங்கள் குறித்து நீங்கள் தெளிவடைந்துவிட்டாலும் இந்த கமண்ட் நிசமாவே நச் ,

    விவாதம் என்றால் இவர்கள் மொழியில் கண்டபடி திட்டுவது , சந்தேகமிருந்தால் வினவு தள பின்னூட்ட பக்கம் போய் பார்க்கவும் .

  16. Anonymous said...

    ஜெயமோகனுடம் வாதிட ஒன்று சிறிலாக இருக்க வேண்டும் அல்லது மதி இண்டியாகவா இருக்க வேண்டுமா :).கிறித்துவத்தை விட ஜெயமோகனுக்கு அச்சமூட்டுவது திராவிட இயக்கமும்,தலித் எழுச்சியும், குறிப்பாக சொன்னால் பெரியாரும்,அம்பேத்கரும்.அதனால்தான் அவர் மீண்டும் மீண்டும் பெரியார்,அம்பேத்கர் குறித்து எழுதும் போது அவர்களது பங்களிப்பினை குறைத்து மதிப்பிட்டு அல்லது அவர்களை மட்டம்தட்டி எழுதுகிறார்.
    காந்தி -அம்பேத்கர் என்று எழுதும் போது அம்பேத்கரை மட்டம் தட்டி எழுதியிருப்பதை எளிதாக புரிந்து கொள்ள முடியும்.ஜெயமோகன் அயன் ராண்ட் குறித்து எழுதி வாசகர்களிடம் வாங்கிக் கட்டிக் கொண்டார்,அத்துடன் அந்த கட்டுரையை தொடராமல் விட்டு விட்டார்.ஏன் அவரால் அதில் விவாதம் செய்ய முடியவில்லை.
    ஏன் நாகார்சுனனின் பதிவில் பின் நவீனத்துவம் பற்றி தமிழவன் எழுதியதற்கு பதில் இட்டு அவரால் விவாதிக்க முடியவில்லை. அங்கு போய் உளறினால் வாலை ஒட்ட நறுக்கி, நறுக்கப்பட்ட இடத்தில் மிளகாய் தடவி அனுப்பபடும் என்று தெரியும். ராஜதுரை,கீதா, நாகார்ஜுனன்,பெருந்தேவி இவர்களிடம் தன் பருப்பு வேகாது என்று அவருக்கு தெரியும்.எனவே அவர்கள் எழுதுவது குறித்து வாயே திறக்க மாட்டார்.

    மதி இண்டியா ஜெயமோகனின் பின்னூட்ட் அடியாளா? இல்லை ஜெயமோகனின் இணைய எடுபிடியா.

  17. சிறில் அலெக்ஸ் said...

    அனானி,
    'வாங்கி கட்டிக் கொண்டார்' என நீங்கள் சொல்வது அவர் தளத்திலேயே நடந்த விவாதமொன்றை. இதைத்தான் நான் சொல்ல் வருகிறேன். தவறான வார்த்தைகளை பயன்படுத்தி நானும் ரௌடிதான் ஸ்டைலில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது விவாதமல்ல. ஒரு சாமானியன் மனதில் ஆர்.எஸ்.எஸ் ஆளும் பெரியாரிஸ்ட்டும் ஒரே அளவீட்டில் இருப்பது இதுபோன்ற பேச்சுக்களால்தான். தன் கருத்தும் நம்பிக்கையும் திடமாயிருக்கையில் இதுபோன்ற வார்த்தைகளை பயன்படுத்த தேவையில்லை. நாம் வெறும் மனக்கசைப்பையும் காழ்ப்பையுமே பேசக் கர்றுக்கொண்டிருக்கிறோம். நம் சமூகத்தில் அபூர்வமாகவும் தீவிரமாகவும் எழுந்த முற்போக்கு இயக்கம் வெறும் அரசியல் இயக்கமாக முடிந்து போகிற புள்ளி இதுதான் என நினைக்கிறேன். அரிய கருத்துக்களின் பின்னணியில் அசிங்கமாகப் பேசிக் கொண்டிருப்பது.

  18. மதி.இண்டியா said...

    சிறில் , அவசியம் நீங்கள் இங்கே பதில் சொல்ல்த்தான் வேண்டுமா ? விவாதத்திற்காகவா இங்கே பதிவுகள் ? நேரில் செய்ய முடியாத வன்முறையை எழுத்தில் தீர்த்துக் கொள்ளவே .

  19. Anonymous said...

    சிறில்,
    ஒரு அனானி எழுதிய பின்னூட்டத்தில் ஒரு சொற்றொடரை வைத்து மீண்டும் "நாம் ஏன் விவாதம் செய்ய முடிவதில்லை" என்று சலித்திருக்கிறீர்கள். இன்னொரு அனானியாக உங்கள் பெயரை விளித்து எழுதியுள்ள பின்னூட்டத்தில் "தவறான வார்த்தைகள்" எதுவும் எழுதவில்லை. காழ்ப்போ, கசப்போ இல்லை. அது உங்களுக்காக நேரடியாக எழுதப்பட்டிருப்பினும் அதை தவிர்த்துவிட்டு "தவறான வார்த்தைகள்" கொண்ட இன்னொரு அனானியின் பின்னூட்டத்தை வைத்து உபதேசம் செய்கிறீர்கள். ஜெயமோகன் உத்தியும் இதுதான். எதிர்கருத்தாளார்களின் நாகரிகமான விவாதம் என்றால் நழுவுவது, உணர்ச்சிவசப்பட்ட எதிர்வினை என்றால் அதை தன் கருத்தை மீண்டும் வலியுறுத்த சாதகமாக்கிக் கொள்வது. நீங்கள் அந்த பின்னூட்டத்திற்கு பதிலளித்தால் பிறகு சொந்த பெயரில் விவாதத்தைத் தொடரலாம் என்றிருந்தேன். துரதிர்ஷ்டவசமாக அந்த வாய்ப்பு கிடைக்காது போலிருக்கிறது.

    விவாதம் நாகரிகமாக இருக்கவேண்டுமென்பது எவ்வளவு அவசியமோ அந்த அளவுக்கு நேர்மையாக இருக்க வேண்டுமென்பதும் அவசியம்.

  20. Anonymous said...

    ஜெயமோகன் எழுதியிருப்பதற்கு மறுப்பாக தமிழச்சி எழுதினார், சுகுணா திவாகர் எழுதுகிறார்.
    ஜெயமோகன் சில மிகைப்படுத்தல்கள் இருந்தன என்ற அளவில் நிற்காமல்
    பெரியாரின் பங்களிப்பே சிறியது என்று எழுதினார்.அதில் நக்கல்,கேலி கலக்காமல் அவர் எழுதவில்லையே.
    எனவே எதிர்வினைகளும் இப்படித்தான் இருக்கின்றன.
    ஜெயமோகன் எழுதியதில் பெரியார் அதில் பெரிதாக என்ன செய்து கிழித்துவிட்டார், இவர்கள்தான் இல்லாதை இட்டுக்கட்டி மிகைப்படுத்தி வைக்கம் வீரர் என்று சொல்லிக் கொண்டு திரிகிறார்கள், கேரளாவில்
    உள்ள கருத்து வேறு என்ற தொனி இல்லை என்கிறாரா சிறில்.

    இருப்பினும் இந்த நக்கல்களுக்கு அப்பாற்பட்டு இதை விவாதிக்க முடியுமே. ஜெயமோகன் எழுதியது இது, அதற்காக மறுப்புகள் இவை என்று இரு தரப்பையும் அலச முடியுமே.சிறில் அலெக்சை அப்படி வாசிப்பதிலிருந்து தடுப்பது எதுவோ?

    “தவறான வார்த்தைகளை பயன்படுத்தி நானும் ரௌடிதான் ஸ்டைலில் எல்லோரும் பேசிக்கொண்டிருப்பது விவாதமல்ல”

    நான் அறிஞன் என்று தன்னைத்தானே உயர்த்தி எழுதிக் கொண்டிருப்பது அறிவியக்கமா. ஜெயமோகன் தமிழச்சி,சுகுணா திவாகர் எழுதியுள்ளதை நேர்மையாக தன் வலைத்தளத்தில் விவாதிப்பார் என்று உறுதியாக சிறிலோ, மதி இண்டியாவோ சொல்லத் தயாரா.

  21. பாவூரான் said...

    //*ஈவேரா அவர்கள் வைக்கம் வீரர் என்று சொல்லப்படுவது குறித்து கேரள ஈழவ வரலாற்றாசிரியரகளே நமுட்டுச்சிரிப்புடன்தான் எதிர்வினையாற்றுவார்கள். கேரளத்தில் வைக்கம் குறித்த எந்த வரலாற்றிலும் ஈவேரா பெயர் முக்கியமாக குறிப்பிடப்படுவதில்லை//

    வைக்கத்திலும், இடுக்கி மாவட்டம் கட்டப்பனை என்ற இடத்திலும் நான் பெரியார் சிலைகளைப் பார்த்துள்ளேன்.

    அந்த சிலைகளை வைத்தது ஈழவர்கள் என்றே நம்பியிருந்தேன். ஒருவேளை அந்த சிலைகள் பெரியார் ஒன்றுமே செய்யாததைப் பாராட்டி பார்ப்பனர்கள் வைத்ததாக இருக்குமோ?