பவுத்த ராமாயணம் - அம்பேத்கரின் 'ராமனின் புதிர்' கட்டுரையை முன்வைத்து...





சமீபத்தில் அம்பேத்கரின் 'Riddle of the Rama' கட்டுரையையும் பவுத்த ஜாதகக் கதைகளில் காணப்படும் பவுத்த ராமாயணத்தையும் நீன்டநாட்களுக்குப் பின் ஒரேநேரத்தில் வாசிக்கநேரிட்டது. ராமனின் புதிர் கட்டுரையில் அம்பேத்கர் வால்மீகி ராமாயணத்தை முன்வைத்து ராமன் என்னும் புனிதப்பிம்பத்தின் மீது சில குறிப்பிடத்தக்க விமர்சனங்களை முன்வைக்கிறார்.

அதேநேரத்தில் பவுத்தம் தனக்கான ஒரு ராமாயணத்தை ஏன் உருவாக்கவேண்டும் என்ற கேள்வி எழுவது இயற்கைதான். ராமன் என்னும் பிம்பம் நெடுங்காலமாகவே இந்திய உளவியலில் பாரிய தாக்கத்தை நேர்மறையாகவும் எதிர்மறையாகவும் ஏற்படுத்திவந்திருக்கிறது. காலனிய ஆட்சிக்காலகட்டத்தின்போது தனக்கான சில மதிப்பீடுகளினடிப்படையில் காந்தி ஒரு ராமனைக் கற்பித்து ராமராஜ்ஜிய சுயராஜ்ஜியக் கதையாடல்களை விரித்தார்.

பாபாசாகேப் அம்பேத்கர் ராமனின் புதிரை அவிழ்த்தாரெனில் பெரியாரோ ராமனின் உருவப்படத்தை எரித்தார். 90களுக்குப்பிறகான இந்துத்துவப் புத்தெழுச்சி ராமனை முன்வைத்தே தனக்கான பாசிச அரசியலை உத்வேகத்தோடு கட்டமைத்தது. அதன் நீட்சியாகத் தற்போது கருணாநிதியின் தலைக்கு விலைபேசவைத்ததும் ராமன் தான். கருணாநிதியின் பழைய திராவிட உணர்வுகளை அவ்வப்போது மீட்டெடுக்க உதவுவதும் அதே ராமன் தான்.

கம்பராமாயணத்தைக் கொளுத்துவதற்காக இயக்கம் கட்டிய திராவிட இயக்கம்தான் ராவண காவியம் என்னும் எதிர்க்கதையாடல்ப்பிரதியொன்றை உருவாக்கியது. இப்படியாகவே ராமன் இந்தியப்பொது உளவியலில் செலுத்தும் செல்வாக்கைக் கணக்கில் கொண்டு பவுத்தமும் தனக்கான ஒரு ராமாயணத்தை உருவாக்கிக்கொண்டது எனப்புரிந்துகொள்ளலாம்.

புத்தஜாதகக்கதைகளில் பவுத்த ராமாயணம் ஒரு கதையாகவிருக்கிறது என்பதும் அக்கதையின்படி ராமனும் சீதையும் சகோதர - சகோதரிகள் என்பதையும் பலரும் அறிந்திருக்கலாம். ஆனாலும் அதன் கதையை முழுமையாகத் தெரியாத நண்பரகளுக்காக ஒரு கதைச்சுருக்கம் :

பெனாரசைத் தலைநகராகக் கொண்டு அரசாண்டுவந்தவர் தசரதச்சக்கரவர்த்தி. அவருக்கு ஒரு அன்பான மனைவியும் அழகான இரு ஆண்குழந்தைகளும் ஒரு பெண்குழந்தையுமுண்டு. ஆன்குழந்தைகளின் பெயர்கள் ராமபண்டிதன், லக்குவன் , பெண்குழந்தையின் பெயர் சீதா. இப்படிப்பட்ட காலகட்டத்தில் தசரதனின் மனைவி இறந்துவிட ஆளாத்துயரில் ஆழ்ந்தார் தசரதச்சக்கரவர்த்தி. அரசப்பிரதானிகளோ இரண்டாவது திருமணம் செய்ய வற்புறுத்தியதன்பேரில் இரண்டாவதாக ஒரு பெண்ணைத் திருமணம் செய்தார்.

அப்பெண்ணுக்கு ஒரு அழகிய ஆண்குழந்தைபிறக்க பரதன் என்று பெயரிட்டு மகிழ்ந்தனர். அப்போது அப்பெண்ணிடம் தசரதன் ஏதேனும் உதவி வினவ வேண்டுகிறார். அப்பெண்ணோ சிறிதுகாலம் கழித்து அவ்வுதவியை வேண்டிப்பெற்றுக்கொள்வதாகக் கூறுகிறார்.

பரதன் சிறிது வளர்ந்த காலகட்டத்தில் அப்பெண் தசரதனிடம் வந்து தன் மகனிடம் அரசாட்சியை ஒப்படைக்குமாறு வேண்டுகிறார். தசரதனோ மறுக்கிறார். மீண்டும் அப்பெண் வற்புறுத்த, அப்பெண்ணால் தன் குழந்தைகளுக்கு ஏதேனும் ஆபத்து நேருமோ என அய்யங்கொண்ட தசரதன் ராம்னையும் லக்குவனையும் அழைத்துச் சிலகாலம் காட்டில் தங்கியிருக்குமாறுப் பணிக்கிறார்.

அரசவை நிமித்திகர்களை அழைத்து தான் இன்னும் எவ்வளவுகாலம் உயிர்வாழ்வேன் என்று வினவுகிறார். நிமித்தகர்களோ இன்னும் தசரதன் 12 ஆண்டுகாலம் உயிர்வாழ்வார் என்றுகூற , 12 ஆண்டுகாலம் ராமனையும் லக்குவணையும் காட்டில் வசிக்குமாறு ஆணையிடுகிறார். சீதையோ தானும் சகோதரர்களுடன் காட்டிற்குச் செல்வதாகக் கூறிச்செல்கிறாள்.

காட்டில் ஒரு குடிலமைத்து வசிக்கும் சகோதரர்களில் லக்குவனும் சீதையும் ராமனிடம், 'நீங்கள் இப்போது எங்களுக்குத் தந்தையின் இடத்திலிருப்பதால், நாங்கள் போய் உணவு சேகரித்து வருகிறோம். நீங்கள் குடிலைப் பராமரித்து வாருங்கள்'; என்கின்றனர். ராமனும் சம்மதிக்கிறார். இடையில் ஒன்பதாண்டு காலத்திலேயே தசரதச்சக்கரவர்த்தி இறந்துவிடுகிறார்.

பரதனின் தாய் பரதனுக்கு முடிசூட்ட முயற்சிகள் மேற்கொள்ள, அரசவையினரோ அதைத் தடுக்கின்றனர். ராமனுக்கே அரசாளும் உரிமை உள்ளது என்கின்றனர். பரதன் தன் அண்ணனைச் சென்று அழைத்து வருவதாகக் கூறிச்செல்கிறான். காட்டிற்குச் சென்று ராமனிடம் தந்தை இறந்த செய்தியைக் கலங்கியவாறே தெரிவிக்கிறான் பரதன்.

ஆனால் ராமர் கலங்கவில்லை. அப்போது உணவு சேகரித்துவிட்டு லக்குவனும் சீதையும் அவ்விடத்திற்கு வருகிறார்கள். அவர்கள் தங்கள் தந்தை இறந்த செய்தியைக் கேள்விப்பட்டால் கடும் அதிர்ச்சி அடைவார்கள் என்பதால் ராமன் அவர்களிடம் பொய்க்கோபம் கொண்டவரைப் போல நடிக்கிறார். "நீங்கள் உணவு சேகரித்துத் திரும்ப வெகுநேரமாகிவிட்டது. எனவே இதற்குத் தண்டணையாக நீரில் சென்று நில்லுங்கள்' என்கிறார்.

இருவரும் நீரில் சென்று நின்றபிறகே தந்தை இறந்த செய்தியை அவர்களிடம் தெரிவிக்கிறார் ராமர். இருவரும் மயங்கிவிழுகின்றனர். இரண்டாவது முறை எழும்போது மீண்டும் சேதி கேட்டு மயங்கிவிழுகின்றனர். மூன்றாவதாக மயங்கி எழுந்தபின்பே அவர்களால் இயல்பான நிலைக்கு வரமுடிந்தது. இதைக்கண்ட பரதனுக்கோ ஆச்சரியம். ராமன் மட்டும் எப்படி இயல்பாக இருந்தாரென்று. ராமனிடமே கேட்க ராமன் கூறுகிறார்.

'உயிர்கள் அனைத்தும் மரணத்தை நோக்கியே செல்கின்றன. எல்லா இலைகளும் பழுத்து உதிரவே செய்கின்றன. மரணங்களில் உற்றார் மரணம், உறவினர் மரணம் என வேறுபடுத்திப் பார்ப்பதால்தான் நமக்குத் துக்கம் ஏற்படுகிறது' என்றவாறு நீண்டநேரம் அதுகுறித்துக் விளக்கமளிக்கிறார்.

பிறகு பெனாரசுக்கு வருமாறு ராமனை பரதன் வேண்ட, ராமனோ தான் தந்தைக்கு வாக்களித்ததைப் போல இன்னும் மூன்று ஆண்டுகள் காட்டிலிருந்துவிட்டு வருகிறேனென்றும் சீதையையும் லக்குவனையும் அழைத்துச்செல்லுமாறும் பணிக்கிறார். தனது அடையாளமாக தனது காலணிகளையும் பரதனிடம் கொடுப்பிக்கிறார்.

ராமன் வரும்வரை அரசனின் ஆசனத்தில் அப்பாதுகைகளை வைத்துப் பாதுகாக்கின்றனர். ஏதேனும் ஒரு வழக்கு விசாரணைக்கு வருமாறு அரசவை தவறான முடிவெடுக்க நேரிட்டால் அப்பாதுகைகள் தனக்குள் அடித்துக்கொண்டு அத்தீர்ப்பை மறுக்கும், சரியான தீர்ப்பெனில் அமைதிகாக்கும். இப்படியாக மூன்று ஆண்டுகள் கழிந்து பெனாரசிற்குத் திரும்பும் ராமன் அரசாட்சியை ஏற்றுக்கொள்கிறார். சகோதரியான சீதா பட்டத்த்கு ராணியாகிறார்.


அம்பேத்கரின் வால்மீகி ராமாயணத்தின் மீதான விமர்சனங்களுக்குத் திரும்புவோம். ராமன் என்பவன் புனிதப்பிம்பம் இல்லையென்றும் ராமனின் கதை பொதுவழக்கில் மீண்டும் மீண்டும் சொல்லப்படுவதற்கான அறவியல் அடிப்படைகள் ஏதும் கிடையாது என்று வாதிக்கும் அம்பேத்கர் தனது விமர்சனங்களைக் குவிக்கும் புள்ளிகள் :

1. முதலாவதாக வாலியின் பிரச்சினையில் ராமன் நடந்துகொண்டவிதம். ராவணனை வெல்வதற்காகவும் சீதையை மீட்பதற்காகவும் படைபலம் தேவைப்படுகிறது. இதற்காகவே சுக்ரீவன் இழந்த ராஜ்ஜியத்தைப் பெற ராமன் உதவுகிறான். இதற்காக யுத்த தருமங்களுக்கு அப்பாலான உத்தியின் மூலம் வாலியைக் கொல்கிறான். இங்கு ராமன் லட்சிய புருசனாகவோ அறவியல் அடிப்படையிலான முன்மாதிரியாகவோ கொள்வதற்கான எந்த அறவியல் நியாயங்களுமில்லை. தனது ஆதாயத்திற்காகப் பதிலுதவியின் பொருட்டு அறவியல் மதிப்பீடுகளை மீறுபவனாகவே ராமன் விளங்குகிறான்.

2. சீதையை ராமன் கையாண்டவிதம். ராவணனைப் போரில் வெற்றிகொண்டபின் ஆறுமாதங்களுக்கும் மேலாகப் பிரிந்திருந்த தன் அன்புமனைவியைக் காண ராமன் உடனே செல்லவில்லை. மாறாக நிதானமாக விபீடணின் பட்டமேற்பு விழாவில் பங்குகொண்டு பிறகு அனுமனை அனுப்பியே சீதையை அழைத்து வரச்சொல்கிறான். அப்போதும் தனது கன்னித்தன்மையை நிரூபிக்க சீதை தீக்குளித்துத் தன்னை மெய்ப்பித்தபிறகே சீதையை ஏற்றுக்கொள்கிறஆண்.

அதன்பிறகும் கூட நகரத்தார்கள் சீதையின் கற்பின் மீது அய்யங்கொள்ள ஒரு கர்ப்பிணிப்பெண்ணைக் கூசாது காட்டிற்கு அனுப்புகிறான். ( ஆகமொத்தம் ராமனை மணந்தபின் சீதை அதிகநாட்கள் வாழ்ந்தது காட்டில்தான் என்பது குறிப்பிடத்தக்கது.). அங்கு லவகுசா என்னும் இரு குழந்தைகளைப் பெற்றபிறகு வால்மீகி அவர்களை வளர்க்கிறார். பிறகு தனது அரசவையில் லவகுசாச் சகோதரர்களைக் கண்ட ராமன் சீதையை அழைத்து வருமாறு வால்மீகியை வேண்டுகிறான். அப்போது அரசவைக்கு வந்த சீதை மீண்டும் தன்னை 'நிரூபிக்க' பூமி விழுங்கி மீள்கிறாள். இங்கு முழுக்க ராமன் எவ்வித அறவியல் அடிப்படைகளற்ற ஒரு ஆணாகாவே நடந்துகொண்டதை விரித்துரைக்கத் தேவையில்லை. மேலும் இங்கு சீதையின் கற்பு நிரூபிக்கப்படுவதை விடவும் ஒரு கற்புள்ள பெண்ணுக்குத்தான் தான் கணவன் என்று நிரூபிப்பதே ராமனின் அவசியம்.

3. ராமன் சீதையோடு வாழ்ந்த காலங்களிலும் சரி, அவளைப்பிரிந்து அரசாண்டகாலங்களிலும் சரி, தினமும் தனக்கான ஓய்வு இல்லத்தில் மதுவும் மாமிசமும் உண்டு மகிழ்ந்தான். அப்போது அழகிகளின் நடனக்கேளிக்கைகளும் நடைபெறும். எனவே கேளிக்கைகளில் திளைத்து மகிழும் ஒரு அரசன் என்பதைத் தாண்டி ராமனுக்கான பாத்திரமில்லை.

மேற்கண்ட அம்பேத்கரின் வால்மீகிராமாயணத்தை அடிப்படையாகக் கொண்ட விமர்சனங்களைக் கவனித்தால் பவுத்த ராமாயணத்தில் இத்தகையக் கூறுகள் இல்லாததை விளங்கிக்கொள்ள இயலும்.

மேலும் பவுத்த ராயணத்தின்படி ராமன் ஒரு அவதாரப்புருசனோ, காவிய நாயகனோ நாடுபிடிக்கும் ஆசைகொண்ட அல்லது கேளிக்கைகளின் மீது நாட்டங்கொண்ட சராசரி மன்னனோ அல்ல. தனது வாக்குறுதியை நிறைவேற்றுவதற்காக ஆரண்யவாழ்க்கையை விரும்பி ஏற்றுக்கொண்டவன்.

மேலும் தசரதன் பன்னிரண்டு ஆண்டுகள் உயிர்வாழ்வார் என்று நிமித்திகர்கள் கூற தசரதனோ ஒன்பதாண்டுகளிலேயே இறந்துவிடுகிறார். இங்கு நிமித்திகத்தின் மீதான பவுத்தத்தின் மெல்லிய குரலினூடான கேள்வியை நாம் கேட்கவியலும். நிமித்தகம் உள்ளிட்ட வெளியிலிருந்து செலுத்தப்பட்ட காரணிகளல்ல நமது வாழ்க்கையைத் தீர்மானிப்பவை என்பதே இதன் சேதி.

இன்னும் முக்கியக் கூறு, வாலியைக் கொல்லும் கோழைத்துரோகம் மட்டுமில்லை, பவுத்த ராமாயணத்தில் ராவணன் என்னும் பாத்திரப்படைப்பே இல்லை. பவுத்த ராமாயணம் போரையும் உயிர்க்கொலையையும் நிராகரிக்கிறது. ராவணனும் இல்லாமல், போரும் இல்லாமல், பிறகு எதற்குத்தான் இந்த 'பவுத்த ராமாயணம்'?. இப்பவுத்த ராமாயணத்தின் உயிர்ப்பகுதியே மரணங்கள் குறித்து ராமன் பரதனிடம் பேசுவதாக வரும் பகுதிகள்தான்.

மரணம், வாழ்வின் அர்த்தம், துக்கம், துக்க்கத்தின் காரணம், மரணத்திற்குப் பின்னான வாழ்வு, அல்லது மரணத்தோடு வாழ்வு முடிந்துவிடுகிறதா என்னும் பெருங்கேள்வி இவை பவுத்தத்தின் அறவியல் தேடலின் அடிப்படை. இன்னும் சொல்லபோனால், சித்தார்த்தன் புத்தனாக மாறியதன் தொடக்கப்புள்ளி. இக்கேள்விகளை முன்வைத்து விரியுமொரு பிரதியே பவுத்த ராமாயணம்.

குறிப்பு : பவுத்தம் ஆன்மாவை மறுக்கிறது. ஆனால் மறுபிறப்பை ஏற்றுக்கொள்கிறது. ஆன்மாவே இல்லாதபோது மறுபிறப்பு என்பது எப்படிச் சாத்தியம் என்னும் கேள்வியை முன்வைத்து பவுத்தத்தின் மறுபிறப்புக்கொள்கை குறித்து விரிவாக ஆராய்கிறார் அம்பேத்கர். அவர் மட்டுமல்ல, தர்மானந்த கோசாம்பி தொடங்கி நம் தமிழகத்தைச் சேர்ந்த மயிலை சீனி வேங்கடசாமிநாட்டார் வரை மறுபிறப்புக்கொள்கை குறித்து முன்வைத்த விளக்கங்கள் குரித்து வாய்ப்பு கிடைக்கும்போது உரையாடுவோம்.

0 உரையாட வந்தவர்கள்: